search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு கொள்ளை"

    • எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார்.
    • நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர்.

    கோவை:

    கொடநாடு கொலை வழக்கில் விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.

    கொடநாடு வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது? என எனது தம்பி கனகராஜ் என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் சொல்கிறேன். கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள்.

    கொடநாடு சம்பவத்துக்கு பிறகு எனது தம்பியிடம் பேரம் பேசியபடி அவர்கள் பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது எனது தம்பியை தாக்கியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்.

    எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார். இதனை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

    எனது தம்பி சூட்கேசில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. அவன் எடுத்து வந்த 5 பைகளில் 3 பைகளை சங்க கிரியிலும், 2 பைகளை ஆத்தூரிலும் ஒப்படைத்துள்ளான்.

    என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். எனக்கு மனநிலை பாதிப்பு என கூறி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் என்னை மருத்துவ பரிசோதனைக்கு அல்லவா உட்படுத்தி இருக்க வேண்டும்.

    ஏற்கனவே சம்பவம் நடந்தபோது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் விசாரணை நடந்தது. அப்போது என்னை கடுமையான முறையில் தாக்கினர்.

    அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. இதுதொடர்பாக அப்போது என்னிடம் விசாரித்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் தற்போது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நான் தடயங்களை அழித்ததாக என்னை கைது செய்தனர். ஆனால் நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை.

    நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர். ஆனால் நான் உடன்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பேன். என்னை கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எதற்கும் தயாராக உள்ளேன். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர்.
    • எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த 24.4.2017 அன்று இந்த பங்களாவில் இருந்த சில பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.

    கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது. கொடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கூறி டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்தநிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் சாவில் மர்மம் உள்ளது என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தக வல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கோரினர். தனபாலிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி தேவையில்லை எனவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரே சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இன்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கூறி தனபாலுக்கு சம்மன் வழங்கினர். சம்மனை பெற்றுக்கொண்ட தனபால் இன்று காலை சேலத்தில் இருந்து கோவை வந்தார். கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முன்பு ஆஜர் ஆனார்.

    தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். அந்த கேள்விகளை கேட்டு தனபாலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த கேள்விகளுக்கு தனபால் அளித்த பதில்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    தனபால் கூறிய தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது தனபால் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனபால் அளித்துள்ள வாக்குமூலத்தின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    முன்னதாக தனபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • 2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.
    • கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி வருகிறார். அவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு பையை கொடுத்ததாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறி வருகிறார்.

    கனகராஜ் இறந்த விபத்து நடந்த இடத்தில் பேட்டி அளித்த தனபால் கொடநாடு கொள்ளைக்கும் எனது தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது தி.மு.க மற்றும் தி.மு.க.வின் பி.டீமான ஓ.பி.எஸ். அணியினர் தூண்டுதலின் பேரில் அவர் தவறான தகவலை கூறி வருகிறார்.

    அவர் ஊட்டி கோர்ட்டில் தனக்கு 2 ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி ஜாமின் கேட்டார். அதற்காக மருத்துவர்களின் சான்றிதழ்களையும் இணைத்து வழங்கியிருந்தார். அதன்படி ஊட்டி நீதிபதியும் அவருக்கு ஜாமின் வழங்கினார்.

    2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்போது அவரும் எனது கணவர் கடந்த 4ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளார். தற்போது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவரால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேச்சேரியில் பதிவான நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தபோது டாக்டர்களும் அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறினர்.

    மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து கொண்டு சிலரது தூண்டுதலின் பேரில் என் மீது தொடர்ந்து தவறான குற்றசாட்டு கூறி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே நான் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

    சூப்பிரண்டு இல்லாததால் அதிகாரிகள் மனுவை வாங்கி உள்ளனர். சூப்பிரண்டிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மணி, ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர் இருந்தனர்.

    • ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மூலை முடுக்கு முதல் கிராமம், பட்டிதொட்டி வரை சென்றடைந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சாமியை தரிசனம் செய்தேன்.

    கேள்வி:- கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுகிறது என்று தி.மு.க. அதிகாரப்பூர்வ முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார்களே? உண்மையை சொல்லத் தயார் என்று அவர் ஏன் சி.பி.சி.ஐ.டி.க்கு வரவில்லை? வந்திருந்தால் நம்பலாம்? என்று அதில் கூறி இருக்கிறார்களே?

    பதில்:- நான் சட்டசபையிலே இதுபற்றி கேட்டேனே? அப்போதே முதலமைச்சர் சொல்லியிருக்கலாம். பல கேள்விகள் எழுப்பினேன். அப்போது ஏன் வாய்மூடி இருந்தார்கள். இவர்கள் வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள்.

    ஒரு முதலமைச்சர் இருக்கிறபோது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோமா? திருப்பி கொண்டு வரமாட்டோமா?

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகிறது. இதை மட்டும் ஏன் மையமாக வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நான் இதுபற்றி அடிக்கடி தெளிவுபடுத்தி உள்ளேன். இதுபற்றி சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். ஏன் அவர்கள் அதைப்பற்றி மட்டும் குறிப்பிடவில்லை?

    அந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு. குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. வழக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றது. அப்போது அந்த குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்கு, ஆஜரானது தி.மு.க. வழக்கறிஞர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார். இதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்கள். நீங்களும் வெளியிடுவது கிடையாது. தெளிவுப்படுத்தியது கிடையாது.

    இதில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள். இதில்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

    நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த அரசுக்கு சொல்கிறேன். இதை ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது. சி.பி.ஐ.க்கு உத்தரவிடுங்கள். சி.பி.ஐ. விசாரிக்கட்டும். நீங்கள் தான் சந்தேகம் இருக்கிறது என்கிறீர்கள். சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படையுங்கள்.

    இந்த ஜாமீன்தாரருக்கும், கொலை குற்றவாளிக்கும் என்ன சம்பந்தம்? இந்த கொலை குற்றவாளிகள் எல்லோரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என இப்படி கொடும் குற்றம் புரிந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அப்படி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கொடும் குற்றவாளிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருவதற்கு என்ன காரணம்?

    தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஜாமீன்தாரராக இருப்பதற்கு என்ன பின்னணி, என்ன தொடர்பு இருக்கிறது? அதுதான் எங்களது கேள்வி. வழக்கு நடந்த சூழலில் இடையில் 15 மாத காலம் கொரோனா காலத்தில் நீதிமன்றம் நடைபெறவில்லை. அதுதான் காலதாமதம். பிறகு இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் இதை விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லி ஐ.ஜி. தலைமையில் விசாரணையை மேற்கொண்டனர்.

    அந்த ஐ.ஜி., அவருக்கு கீழ் டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., இத்தனை பேர் இருந்து விசாரித்து நீதிமன்றத்தில் சுமார் 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் 90 சதவீதம் வழக்கு முடிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல்.

    அப்படியிருக்கும்போது ஏன் மறுபடியும் சி.பி.சி.ஐ.டி.க்கு போகிறீர்கள். உங்கள் அரசாங்கம் தானே நியமித்தது? அதில் என்ன சந்தேகம்?

    ஒரு ஐ.ஜி. தலைமையில் இவ்வளவு விசாரணை மேற்கொண்ட பிறகு 10 சதவீதம் விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? ஆனாலும் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியவில்லை. அதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை அடிக்கடி இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதை அடிக்கடி நீங்களும் கேட்க நானும் பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    இதுபற்றி சட்டமன்றத்திலும் நேருக்கு நேர் முதலமைச்சரிடம் கேட்டுவிட்டேன். வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே? உங்கள் அரசாங்கத்தின் விசாரணை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

    இப்போது இவர் முதலமைச்சராக இருக்கிறார். ஒரு கொலை நடந்தால் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டினால் அவர் ஏற்றுக்கொள்வாரா?

    கேள்வி:- ஏன் பதறுகிறீர்கள் என்று கேட்கிறார்களே?

    பதில்:- நான் பதறவில்லை. நான் பலமுறை அறிக்கை வாயிலாக சொல்லிவிட்டேன். பேட்டியின்போதும் விளக்கமாக கூறியுள்ளேன். நீங்கள் ஏன் அந்த ஜாமீன்தாரரை விசாரிக்க மறுக்கிறீர்கள்? அதில் தானே உண்மை வெளிவரும்.

    குற்றம் புரிந்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். கொடும் குற்றம் புரிந்த இவர்களுக்கு தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் எதற்கு ஜாமீன்தாரராக இருக்கிறார்? அதுதான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது.

    கேள்வி:- உண்மை வெளி வந்துவிடும் என சி.பி.ஐ. விசாரணைக்கு தி.மு.க. தயங்குகிறார்களா?

    பதில்:- அப்படித்தான் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர்.
    • என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து கொடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக, அவரது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் மேச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

    இன்று அவர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    நில மோசடி வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை, ஆனால் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் 10 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனை நான் கொடுக்காததால் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அது மட்டும் இல்லாமல் என்னை தனி அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததுடன் இரும்பு ராடால் பல்லையும் அடித்து உடைத்து புடுங்கினர்.

    இதே போல ஜாமினில் இருந்து வெளிவர மேச்சேரி இன்ஸ்பெக்டர் எனது சான்றிதழ் வழங்காமல் அலைகழித்தார். மேலும் அதற்காக 50ஆயிரம் பெற்றுக்கொண்டு பின்னர் தான் ஜாமீன் வழங்கினார்.

    கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர். ஆனால் நான் தடயங்களை அழித்ததாக என் மீது அந்த வழக்கிலும் பொய் வழக்கு போடப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதுவரை போலீசார் என்னை அழைத்து விசாரிக்கவில்லை. இனிமேலாவது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அப்போது என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

    முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக சந்திப்பேன், கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேக்குகளில் இருந்த ஆவணங்களை சங்ககிரியில் ஒரு நபரிடம் 3 பேக்குகளும் சேலத்தில் உள்ள ஒருவரிடமும் 2 பேக்குகளையும் எனது சகோதரர் கொடுத்ததாக என்னிடம் கூறினார். அப்போது சயனும் உடன் இருந்தார்.

    இதற்கிடையே 2 நாட்களில் மர்மமான நிலையில் அவர் இறந்து விட்டார். முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கில் இந்த கால தாமதம் ஏன்? என்று தெரியவில்லை. எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வழக்கு விசாரணையை முறையாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். கனகராஜை கைது செய்வதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் கடந்த வாரம் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு இன்று இதய அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சேலத்தில் இருந்து தனபாலனை போலீசார் ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது தனது 2 மகன்களையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுதார்.

    • சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விசாரணை தொடங்கியது.

    பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார்? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.

    தி.மு.க. அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் நாளை (1-ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை காலை 10-மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. வினர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

    இதையொட்டி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் அ.ம.மு.க. நிர்வாகிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் முன்னிலை வகிக்கிறார். மகிழன்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், எம்.எம்.பாபு, ராயபுரம் பி.எஸ்.சிவா, வழக்கறிஞர் எம்.வி.சதீஷ், ரெட்சன் அம்பிகா பதி, என்.கே.அச்சுதன் ஆகியோர் ஏற்பாட்டில் நடக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம்-டி.டி.வி.தினகரன் இருவரும் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடந்துள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் கோர்ட்டில் இருந்து வாங்கப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் சயான் ஆகியோர் தலைமையிலான கேரளாவை சேர்ந்த கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    கோவை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் முதலில் இருந்து தங்கள் விசாரணையை தொடங்கினர். கொலை, கொள்ளை எப்படி அரங்கேறியது என்பதை அறிய சம்பவம் நடந்த இடமான கொடநாடு பங்களா, எஸ்டேட் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பங்களாவின் மேலாளர், ஊழியர்கள், இந்த சம்பவத்தில் சாட்சி அளித்தவர்கள் என பலரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் பல முக்கிய தகவல்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனை கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஏற்கனவே போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்து இருந்த 8 செல்போன்களை தங்களிடம் தரும்படி மனு போட்டு இருந்தனர்.

    அந்த செல்போன்களில் ஏதாவது தகவல்கள் உள்ளதா என்பதை அறிய அதனை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் முக்கியமான தகவல்கள் ஒன்று கிடைத்துள்ளது.

    கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்த மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாளான 25, மற்றும் 26-ந் தேதிகளில் சயானும், கனகராஜூம் ஆந்திராவில் இருந்துள்ள தகவல் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கொலை, கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே 2 பேரும் கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றதும், அங்கு அந்த மாநிலத்தில் மிக முக்கியமான தொழில் அதிபர் ஒருவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் கோர்ட்டில் இருந்து வாங்கப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ததில் செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

    சயான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆந்திரா சென்றதும், அங்கு 1 அரை நாட்கள் தங்கியிருந்ததும் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து அதிகாரிகள், சயான் மற்றும் கனகராஜ் ஆந்திராவில் சந்தித்த தொழில் அதிபரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    அங்கு அவரிடம், இவர்களின் பழக்கம் உங்களுக்கு யார் மூலம் கிடைத்து. யார் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் உங்களை சந்தித்தபோது கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஏதாவது தகவல்களை தெரிவித்தனரா? அல்லது ஆவணங்களை ஏதாவது கொடுத்து சென்றனரா என்றும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆந்திரா வரைக்கு சென்றுள்ளது இந்த சம்பவத்தில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

    கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்னும் சிலர் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    எனவே, கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில், ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதில் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என கூறிய தி.மு.க. இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்றும் இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 1-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். உடன் இணைந்து டி.டி.வி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவர்கள் இருவரும் இணைவது பாராளுமன்றத் தேர்தலின் போது தேவர் சமுதாய வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் உத்தியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

    அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாத சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனாலும் பா.ஜனதா தன்னுடனான உறவை முறித்துக் கொள்ளும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாகவே இருப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் வைத்துள்ள காரணத்தால் ஒ.பன்னீர்செல்வத்துடன் டி.டி.வி.தினகரன் இப்போது கைகோர்க்க தொடங்கி விட்டார்.

    சமீபத்தில் தினகரனை ஒ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசிய நிலையில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    இதன் மூலம் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் வலுவாக உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை இவர்கள் இருவரும் நிர்ணயிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க தேவர் சமுதாய வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர்.
    • புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர்

    ஆத்தூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 45, எடப்பாடியை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மர்மமாக இறந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கனகராஜ் இருந்ததால் இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீலகிரி, சேலம் மாவட்டத்தில் கனகராஜ் இறந்தது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆத்தூர் நகர சபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள் நகர சபை அலுவலகத்தில் இருந்த என்ஜினீயர் மலர் கொடியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையை இணைக்கும் கடைவீதி, கோட்டை, உப்பு ஓடை வழியே செல்லும் சாலையில் வேகத்தடைகள் எத்தனை உள்ளன. வேகத்தடைகள் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டதா? வேகத்தடை அமைத்தபோது பணிபுரிந்த நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உள்பட அலுவலர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தவர்கள் குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் ஏன் வேகத்தடை அமைக்கப்பட்டது என்பது, அதற்கான ஆவணங்கள் நகராட்சியில் உள்ளதா ? என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து புறவழிச்சாலை இணைப்பு சாலையில் உள்ள வேகத்தடை தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,

    ஆத்தூர் புறவழிச்சாலையின் இணைப்பு சாலையான ஆத்தூர் நகரில் இருந்து கோட்டை வழியாக செல்லும் சாலையில் வேகத்தடையில் கனகராஜ் இறந்த நாளில் வேறு ஒருவர் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த வேகத்தடை அனுமதியுடன் அமைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
    • தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு அணியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மருது அழகுராஜ் மற்றும் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று வரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.

    இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இணையதளத்தில் புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை மறைத்து எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என கூறி கட்சியினரை ஏமாற்றி வருகிறார். இனிமேல் அவர் அ.தி.மு.க. கொடியை பற்றி பேசினால் பொடிப்பொடியாகி விடுவார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து நடத்தக் கோரி ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து நடத்துவோம். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கட்சி கொள்கையின்படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம் என்கிறார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகனை வைத்துக் கொண்டு தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை.

    தி.மு.க.வின் ஊழல் குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் முழு தகுதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×