search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ருட்டி ராமச்சந்திரன்"

    • அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
    • அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.எ. ஆடிட்டோரியத்தில் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என கூறிய தி.மு.க. இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்றும் இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் 1-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.ம.மு.க. தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். உடன் இணைந்து டி.டி.வி.தினகரன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவர்கள் இருவரும் இணைவது பாராளுமன்றத் தேர்தலின் போது தேவர் சமுதாய வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் உத்தியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

    அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைக்கப்படாத சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனாலும் பா.ஜனதா தன்னுடனான உறவை முறித்துக் கொள்ளும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாகவே இருப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் வைத்துள்ள காரணத்தால் ஒ.பன்னீர்செல்வத்துடன் டி.டி.வி.தினகரன் இப்போது கைகோர்க்க தொடங்கி விட்டார்.

    சமீபத்தில் தினகரனை ஒ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசிய நிலையில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்பதால் இருவரும் பாராளுமன்ற தேர்தலின் போது கை கோர்ப்பார்கள் என்றே தெரிகிறது.

    இதன் மூலம் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் வலுவாக உள்ள 10 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை இவர்கள் இருவரும் நிர்ணயிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.சின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க தேவர் சமுதாய வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது.
    • எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

    திருச்சி:

    ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    1956-ல் அண்ணா திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த ஆண்டு தான் நான் தி.மு.க.வில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்கிற வாக்கெடுப்பு நடந்து தி.மு.க. தேர்தல் நடந்தது. 67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இது வரலாற்றை படைக்கும் மாநாடாக இருக்கும்.

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என கேட்ட போது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு.

    ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்மதமில்லை.

    அ.தி.மு.க. தனி தன்மை வாய்ந்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது.

    அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல, அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும், அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் இது.

    திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது. ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம்.

    அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறதா என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னமும் அவரது தரப்புக்கு உறுதியாகி உள்ளதால் அ.தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பெரும் பின்னடைவு என்று தொண்டர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன் இப்போது இருக்கின்ற சூழலை வைத்து ஒரு முடிவை எடுத்து அறிவித்து உள்ளனர். அவர்களாகவே எந்த முடிவையும் எடுக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு அனைத்தும் கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். எனவே இதை ஒரு வெற்றியாக அவர்கள் கருத முடியாது.

    ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று போட்டார்கள். இப்போது அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் என்று கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

    நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளை ஏறி கால்கள் தளர்ந்துவிட்டன. அதனால்தான் மக்கள் மன்றத்தை நோக்கி ஏப்ரல் 24-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம்.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. இறுதி வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும்.

    2024-க்குள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவேன் என்று சசிகலா நம்புகிறார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும்.
    • மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை :

    சென்னை கிரின்வேஸ்சாலையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    * ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது.

    * பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது.

    * அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்தில் சென்றால் தான் விலகும்.

    * அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்.

    * ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன.

    * ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும்.

    * மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    * எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்ஜிஆர் (ஈபிஎஸ்) செய்த சாதனை.

    இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    * எம்.ஜி.ஆர். வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

    * நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன்.

    * ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    * கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓபிஎஸ்.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைதனமானது. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும்.

    ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அதிமுகவை சீர்குலைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துக்கொடுத்த சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். இனி இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்தையும் விட்டுக்கொடுத்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை.

    மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். நமக்கான நேரம் வரும்போது, அதிமுகவை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
    • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

    இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
    • ஓபிஎஸ்சை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரனை ஏற்கனவே விமர்சித்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ச. ராமச்சந்திரன் (கழக அமைப்புச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே.
    • தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

    கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமைந்தது. பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையில் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உள்ளது.

    பலவீனமான நிலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் நேற்று இரவு அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியவர்.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற என்ன வழி என்று ஓ.பி.எஸ். ஆலோசனை கேட்டு உள்ளார். நிர்வாகிகள் அதிக அளவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் பலம் தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

    கட்சி விதிகள், கட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

    ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பு முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடு பட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தோம்.

    நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே. தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்று தான் எங்கள் இதய பூர்வமான எண்ணம். எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×