என் மலர்
நீங்கள் தேடியது "Panruti Ramachandran"
- விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
- தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் தனது ஆதரவாளர் களோடு ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகுவதாகவும், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கும் புதிய கட்சியில் இணைவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளராக முத்தியால் பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமாரை நியமிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டு கட்சியின் தொடக்க விழா அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் நிறுவன தலைவராக இருந்து எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை தொடங்கி வைத்தார்.

பொதுச் செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கட்சியின் தொடக்க விழாவில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை மத்திய அரசின் தணிக்கைக்குழு மூலம் முடக்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் என்பது அரசியலில் இடையில் வரும் ஒரு சடங்கு மட்டுமே என்றும், தற்போதைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்றும் கூறினார்.
எனினும், விஜய்யின் கொள்கைகளைத் தாங்கள் மதிப்பதாகவும், மக்களைச் சாதி, மதப் பாகுபாடின்றி சமமாகப் பாவிக்கும் தலைவரான அவரை சட்டமன்ற தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய் தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால், தங்களது இயக்கத்தைச் சேர்த்தவர்கள் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும், எவ்வித பேரமும் இன்றி மக்கள் நலனுக்காகவே இந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
கட்சி தொடக்க விழாவில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூறுகையில், இக்கட்சியில் இணையும் தொண்டர்கள் வயது மூப்பு அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இருவர் சமீபத்தில் இறந்தவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
விழாவில் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அம்மாள், கவுரி, ஜோதிராமன், ஏ.வஜ்ரவேலு, ஜெ.காமாட்சி கான் ஜெயகாந்தன், டபுள்யூ. எஸ்.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தேர்தலில் போட்டியிடமாட்டோம்.
- எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு புதிய இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். சாதி சமயம் மதத்தை தவிர்த்து புதிய சமுதாயத்தை அமைப்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.
திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த இயக்கம் செயல்படும்.
சமத்துவம் சம வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு அறநிலை அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடமாட்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம். மக்களைத் தொடர்ந்து சந்திப்போம். சுற்றுப்பயணம் செய்வோம். விஜய்க்கு கூட்டம் கூடுவது அவரது உழைப்பும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான்.
ஆனால் அவர் எம்.ஜி.ஆர். போல வர முடியுமா செயல்பட முடியுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. வருகின்ற 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் புதிய கட்சி தொடக்க விழா நடைபெறும் என்றார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், பிரேமலதா ரஞ்சித் குமார், ஜோதி ராமன், ஜோதி அம்மாள் உடன் இருந்தனர்.
- பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள், 100 தலைமை நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்ட உள்ளார். இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.
இந்நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை நேற்று இரவு நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது.
- அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னமும் அவரது தரப்புக்கு உறுதியாகி உள்ளதால் அ.தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பெரும் பின்னடைவு என்று தொண்டர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன் இப்போது இருக்கின்ற சூழலை வைத்து ஒரு முடிவை எடுத்து அறிவித்து உள்ளனர். அவர்களாகவே எந்த முடிவையும் எடுக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு அனைத்தும் கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். எனவே இதை ஒரு வெற்றியாக அவர்கள் கருத முடியாது.
ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று போட்டார்கள். இப்போது அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் என்று கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளை ஏறி கால்கள் தளர்ந்துவிட்டன. அதனால்தான் மக்கள் மன்றத்தை நோக்கி ஏப்ரல் 24-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.
தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. இறுதி வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும்.
2024-க்குள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவேன் என்று சசிகலா நம்புகிறார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
- ஓபிஎஸ்சை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரனை ஏற்கனவே விமர்சித்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
- பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ச. ராமச்சந்திரன் (கழக அமைப்புச் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே.
- தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமைந்தது. பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையில் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உள்ளது.
பலவீனமான நிலையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியவர்.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை கைப்பற்ற என்ன வழி என்று ஓ.பி.எஸ். ஆலோசனை கேட்டு உள்ளார். நிர்வாகிகள் அதிக அளவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் பலம் தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
கட்சி விதிகள், கட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடு பட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தோம்.
நாங்கள் முழுமையாக நம்புவது அ.தி.மு.க.வின் தொண்டர்களை மட்டுமே. தொண்டர்கள் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் எனது அரசியல் பயணம் இருக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்று தான் எங்கள் இதய பூர்வமான எண்ணம். எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






