search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை வளர்ப்பு"

    • குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல.
    • பெற்றோரும் குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம்.

    குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல. அதனால் அவர்களை பெற்றோரும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம். குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க, அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு, எது சரி? எது தவறு? என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் என்னவென்று புரிந்துகொண்டு, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

    'இந்த விஷயத்தை செய்யாதே' என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. உனக்கு காய்ச்சலாக இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் இப்போது சாப்பிட வேண்டாம். காய்ச்சல் குணமானவுடன் ஐஸ்க்ரீம் நானே வாங்கித் தருகிறேன். சரியா? என்பதுபோல் அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் சரியான வழிமுறை.

    குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் தாய், தந்தை இருவருமே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

    குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.

    'பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் கடுமையான முறையில் நடந்துகொள்கிறார்கள்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    குழந்தைகள் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் பதில்கள் இருக்காது. அதை சமாளிப்பதற்காக பலர் குழந்தைகளை கேள்வி கேட்க விடாமல் அடக்கி விடுவார்கள்.

    இது தவறான அணுகுமுறை என்று உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விகள் கேட்டு, தங்களது ஆளுமைப் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். பெற்றோர் பதில் அளிக்கத் தயங்கும் சில கேள்விகளை குழந்தைகள் கேட்கும்போது, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு: குழந்தைகள் அடிக்கடி பெற்றோரிடம் கேட்பது, "நான் எப்படி பிறந்தேன்? அல்லது ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்?" என்பதுதான். இந்த கேள்விகளை பல பெற்றோர்கள் தவிர்க்க நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய வாழ்வியல் விஷயங்களில் இதுவும் ஒன்று. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும். பிறப்பும், இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மற்றும் அடிப்படை வாழ்க்கை சுழற்சி என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

    உடற்கூறியல்: அறிமுகமானவர்கள் மற்றும் பிற பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் உயரம், எடை, நிறம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விகளை குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள். இதற்கு விளக்கப் படங்கள், கதைகள் மற்றும் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற திரைப்படங்களைப் பயன்படுத்தி, பாலினம் பற்றிய கருத்தை எளிமையாகவும், அறிவியல் ரீதியாகவும் தெரிவிக்கலாம். இந்த வகையில், குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    மதம்: குழந்தைகளுக்கு அதிக சந்தேகம் எழும் விஷயம் கடவுள், மதம், சம்பிரதாயங்கள் பற்றியதுதான். இது சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பல பெற்றோருக்கு சவாலானதாக இருக்கும். இந்தியா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட நாட்டில், குழந்தைகளுக்கு பல்வேறு மத பின்னணியைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை சமமாக பாவிக்கும் வகையில், கதை சொல்லி புரியவைக்கலாம். அடிப்படை மத நூல்கள் மூலம் ஒவ்வொரு மதத்தின் தனித்துவத்தைப் பற்றி பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். இருப்பினும், இதில் 'மனிதநேயம்' என்பதைத்தான் முதலில் போதிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரையும் சமமாகவும், அன்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை கற்பிப்பது அவசியம்.

    நிதி: வளர்ச்சியின் ஆரம்பத்தில், குழந்தைகள் பல்வேறு சமூகப் பின்னணியில் உள்ள நபர்களைச் சந்திக்கின்றனர். சாலையில் யாசகம் கேட்கும் நபர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, பலவிதமான பொருளாதார சூழலில் வாழும் நபர்களை பார்க்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கும்போது, யாரையும் ஏற்றத்தாழ்வுடன் அணுகாமல், சமநிலை நோக்குடன் அணுகச் செய்யும் வகையில், பதில் அளிக்க வேண்டும்.

    • வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.
    • வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும்.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றாகிவிட்ட இச்சூழலில், மிகவும் சவாலான ஒரு விஷயம் உண்டென்றால் அது டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பதுதான். தனிமைக்குடித்தனங்களால் ஏற்பட்டு விட்ட பெரியவர்களின் வெற்றிடம் பிள்ளைகளை அதிகம் தனிமைப்படுத்திவிடுகிறது.

    கவர்ந்திழுக்கும் டிஜிட்டல் உலகமோ பல வலைகளை விரித்து வைத்து, அவர்களை விழுங்க காத்திருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நம் டீன் ஏஜ் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எப்படி? பக்குவமாக கையாள்வது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.

    ''டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. வளரிளம் பருவம் என்பது இரண்டும்கெட்டான் பருவம். சிறுவயது வரை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வளரிளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அது அந்த வயதிற்கான உயிரியல் இயல்பு.

    இதன் காரணமாக அந்த வயதில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னிடம் இருக்கும் ஆடைகள் துவங்கி, தான் வைத்திருக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் கூட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

    தனக்கென்று ஒரு அறை இருக்க வேண்டும் தன்னுடைய அறையை இப்படி இப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் தன் நண்பர்கள் தன்னிடம் மரியாதையாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடிய வயது அது.

    உடல்ரீதியான உணர்வு ரீதியான குழப்பங்கள், அச்சங்கள், கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் அப்போது உச்சகட்டத்தில் இருக்கும்.

    அதுமட்டுமில்லாமல் அந்த வயதில் தான் அவர்கள் தன் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதிலும் அம்மாவிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.படிப்பு, வேலை மற்றும் எதிர்காலம் குறித்தும் அவர்களுக்கு பயமும் குழப்பமும் இருக்கும்.

    இதனால் டீன் ஏஜ் காலத்தில் படிப்பு என்பதே பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. நிறைய படிக்க, எழுத வேண்டி இருக்கிறது. அத்துடன் நிறைய வேலை பளு (ப்ராஜெக்ட்ஸ், அசைன்மென்ட்ஸ்), புத்தக சுமை என கூடுதல் தொல்லைகள் வேறு. டீன் ஏஜ் என்பது அவர்களின் வாழ்வை சரியாக கட்டமைப்பதற்கான காலகட்டம். எனவே, இந்த வயதில் சரியான வளர்ப்பு முறை என்பது அவசியம்.

    வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்கவும் வேண்டும். அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் சில சுதந்திரங்களை வழங்கவும் வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் டியூஷன் போன்ற வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்கள் எந்த நேரத்திற்கு எந்த வகுப்பிற்குச் செல்கிறார்கள். எத்தனை மணிக்கு அது முடியும் என்ற அடிப்படைத் தகவல்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு போய் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.

    எப்போது பார்த்தாலும் வெளியே உணவுகளை வாங்கித் தராமல் எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சுவையாக செய்து தர வேண்டும். அதை அவர்கள் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். ஜங் ஃபுட் எனப்படும் உணவு வகைகள் அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கும். பிராய்லர் கோழிக்கறியும் கொடுக்காதீர்கள்.

    பிள்ளைகள் நம்மிடம் அன்பான பார்வை, ஸ்கின் டச் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள். இதுவும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகை. அவர்களிள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் கண்களை பார்த்து புன்னகையுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது என கேட்கலாம். தலையை தடவிக்கொடுக்கலாம். தோள்களை தட்டிக் கொடுக்கலாம். அந்த அன்பு மிகுந்த நிமிடங்களுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். தங்கள் உணர்வுகளை உங்களிடம் கொட்டுவதற்காக அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

    முக்கியமாக எந்நேரமும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி என மூழ்க விடாமல், உறவினர்களுடன் பழக விட வேண்டும். நம் உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும. பக்கத்து அக்கத்து மனிதர்களுடன் பழக விட வேண்டும். அப்போது தான் இயல்பான குணங்கள் வளரும். மற்ற பிள்ளைகளுடன் விளையாட விட வேண்டும்.

    ஏதாவது விளையாட்டு வகுப்புகளில் சேர்த்து விடலாம். இதனால் அவர்களுக்கு உடல்நலம் குறித்த கவனம் வரும். மனம் வேறு சிந்தனைகளில் சிதறாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என விளையாட்டானது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.

    அதேபோல் விளையாட்டில் தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் ஏற்படும். வெற்றி, தோல்வி எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விளையாட்டினால் மனம் உற்சாகமடையும். இந்த வயதில் அடிக்கடி ஏற்படும் கோபம் குறையும். யதார்த்தமாக மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்வார்கள்.

    பள்ளிகளில் ஒழுக்கத்திற்கான வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் தற்போது நடத்தப் பெறுவதில்லை. அதனால் நாம்தான் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, இந்த சமூகம் பற்றிய பொறுப்பு கலந்த உணர்வு இருக்க வேண்டும். இந்த சமூகம் முழுக்க பல நூறு கண்கள் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    திட்டிக் கொண்டிராமல், புலம்பாமல் அன்பாக அரவணைத்து உங்கள் அக்கறையை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதிகமாக நாம் அவர்களை பழித்துக் கொண்டே வந்தோமானால் நம்மை பழி வாங்குவதாக நினைத்து அவர்களே அவர்களை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைப் பேசி பேசி சண்டையிடாதீர்கள்.

    எல்லோரிடமும் அவர்களை பற்றி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சதா நாம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு சில பிள்ளைகள் தங்கள் உடலில் பிளேடால் அறுத்துக் கொள்வது போன்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். சரியான அரவணைப்பு இல்லாதபோது வெளியுலகிலும் அதாவது பள்ளி, கல்லூரிகளிலும் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தற்கொலை போன்ற விபரீதமான முடிவெடுப்பார்கள்.

    பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களும் ஒரு உயிர். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. எனவே, அவர்களின் வார்த்தைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மதிப்புக் கொடுங்கள். அது மிகவும் அவசியம்.

    ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கோபப்படுகிறார்கள்? வாதிடுகிறார்கள் என அவர்களின் பிரச்னைகளை உற்றுக் கவனித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் நிறைய பணத்தை அவர்கள் கைகளில் புழங்க விடாதீர்கள்.

    நாம் வீட்டில் இல்லாமல், அவர்களை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போகிறோம் என்ற குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவது கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவது எல்லாம் வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் வேலைக்குப் போகிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

    அவர்களின் நண்பர்கள், தோழிகள் யார்? யார்? என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களின் பின்புலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தீய சகவாசம் அவர்களை எந்த தீய எல்லைக்கும் கொண்டு விட்டுவிடும். சில வீடுகளில் அதிகப் பாசம் காட்டுகிறேன் என்று அதிகமாக பொத்தி பொத்தி வைப்பார்கள். நாய்க்குட்டியை எந்நேரமும் தடவிக் கொடுப்பது போல செய்வார்கள். அதுவும் தவறு. அது அவர்களை சோம்பேறியாக்கலாம். கோழைகளாக்கலாம். அதனால் அவர்களையும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.

    வீடு என்பது நிம்மதியான விஷயம். எங்கு சென்றாலும் என் அப்பா அம்மாவை நோக்கி, வீடு நோக்கி நேரத்திற்கு நான் சென்று விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வீட்டை உற்சாகமாக வைத்திருங்கள். குழந்தைகளை வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியே அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் முன் பெற்றவர்கள் சண்டையிடாதீர்கள். கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளின் முன் கடுமையான வார்த்தைகள், விவாதங்கள் வேண்டாம். அதேபோல் அந்தரங்கமும் அப்படித்தான்.

    எல்லாவற்றிற்கும் மேல் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கண்காணிப்பது வேறு. நம்பிக்கை இன்மை வேறு. அவர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். அதே சமயம் அவர்களை கவனித்துக் கொண்டும் இருங்கள். விட்டுப்

    பிடியுங்கள். பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாவது அழகான ரகசியமான ஒரு செயல்.

    அது போல் பல பல மாற்றங்கள் அவர்கள் மனதிலும் உடலிலும் ஏற்படும் இந்த காலகட்டம் மிக அழகானது. ஆச்சரியமானது. அவர்களை நாம் இந்த சமயத்தில் அழகாக அனுசரனையாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அவர்கள் நம் பிள்ளைகள் தானே. அவர்களை நாம் நேசிக்காமல் வேறு யார் நேசிப்பார்கள்.

    பெற்றவர்களாகிய நாம் அவர்களின் சின்ன சின்ன தவறுகளை நாம் பொறுத்துக் கொள்ளா விட்டால் யார் பொறுப்பார்கள். அந்த தவறுகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் பொறுப்புதானே. நாமும் இந்த வயதைக் கடந்து வந்திருப்போம். நாமும் சில தவறுகளை புரிந்திருப்போம் அதனை உணர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள்!''

    • ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் இவை எல்லாம் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
    • பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்று. வயதிற்கு ஏற்ப வளர்ச்சி இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவில் இருந்தே வளர்ச்சியின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வளர்ச்சிக்கான காரணங்களில் முதல் இடம் வகிப்பது மரபுவழி..பெண் குழந்தைகள் அப்பா வழி உடன் பிறந்தவர்கள் போல் இருப்பார்கள். ஆண் குழந்தைகள் தாய் மாமன் போல் இருப்பார்கள் என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்தது உணவு பழக்கம், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் இவை எல்லாம் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    எந்தெந்த உணவுகள் வளர்ச்சிக்கு உதவுகிறது?

    பால்

    பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். பாலில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. பால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்போது மாற்று உணவாக பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர், தயிர் இவற்றை கொடுத்து பழக்கலாம்.

    பச்சை காய்கறிகள்

    பீன்ஸ் அதிகமாக எடுக்கும் போது எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.முட்டைகோஸ் சாப்பிட்டால் நெட்டையாக வளரலாம்.இதர காய்கறிகள் அனைத்தும் உணவில் சேர்ப்பதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்த வேண்டும். நாவில் சுவை அரும்புகள் வளர்வதற்கு முன்பே அனைத்து காய்கறிகள் கொடுத்து பழக்கி விட வேண்டும். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும்.

    கீரைகள் மற்றும் பயறு வகைகள்

    கீரைகள் பல விதங்களில் நமக்கு பயன்படுகிறது. குறிப்பாக முளைக்கீரை குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதே போல் பயறு வகைகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாயங்கால சிற்றுண்டி சுண்டல், வாரம் இரு முறை கொடுக்கலாம்.

    முட்டை

    உயரமாக வளர முட்டை எடுத்து கொள்வது சிறப்பு. இது புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளின் இதர வளர்ச்சியிலும் இது பங்கு அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு பிடித்த வகையில் முட்டையை சமைத்துக் கொடுக்கலாம்.

    கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. கேரட்டை உணவில் சேர்ப்பது உடல் கால்சியத்தை மிகவும் திறமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது எலும்பு மறு உருவாக்கத்தை பாதித்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சாலட்களில் கேரட்டைச் சேர்க்கவும் அல்லது உங்கள் குழந்தைகளுக்கு புதிய கேரட் சாறு தயாரித்து நீங்கள் கொடுக்கலாம்.

    • உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும்.
    • பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    * பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

    * ஆண் குழந்தைகள் பார் என்று சொல்லப்படுகிற ஹேங்கிங் செய்யலாம். இது உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

    * கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம்.

    * அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அதிக தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    * சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி செய்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்...

    * நேராக நின்று கொண்டு பின் குனிந்து கால் பெருவிரல் தொடும் பயிற்சி உதவும். இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

    குழந்தைகளை வெயிலில் விளையாட செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். கால்சியம் நிறைந்த உணவு பொருள்களை உடல் எடுத்துகொண்டாலும் அதை உடல் உறிஞ்சுகொள்ள வைட்டமின் டியின் உதவி தேவை.

    எதுவாக இருந்தாலும் உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும். இதெல்லாம் ஒரு முயற்சிக்காக.

    • அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
    • பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

    பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்கள் உள்ளன. அதில் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது.

    * ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

    * கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.

    * ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

    • சிறிய வகை கணினி விளையாட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
    • விளையாட்டுக்களின் வடிவங்கள் இன்றைய சூழலில் மாறி வருகின்றன.

    குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்து விடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழு வளர்ச்சியை அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்தாகும். அதன் அடிப்படையில் கிட்ஸ் பிளே ஹவுஸ் என்று குறிப்பிடப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு வீடுகள் அமைக்கும் முறை மேலை நாடுகளில் பரவலாக இருந்து வருகிறது.

    நாகரிகம் மற்றும் அறிவியல் வளர்ச்சிகளுக்கு ஏற்ப சிறு குழந்தைகளின் கற்றல் திறனும், அறிவு வளர்ச்சியும் முந்தைய காலகட்டங்களை ஒப்பிடும்போது பல மடங்கு முன்னணியில் இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கேற்ப அவர்கள் விளையாடும் முறைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் அவசியம். அதற்கேற்ப விளையாட்டுக்களின் வடிவங்களும் இன்றைய சூழலில் மாறி வருகின்றன.

    கிட்ஸ் பிளே ஹவுஸ் எனப்படும் குழந்தைகள் விளையாட்டு வீடு மரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. அவை போன்ற பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய உபகரணங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

    பிளே ஹவுஸ் என்பது இரு வகைகளாக உள்ளன. முதலாவதாக உள்ள இன்டோர் பிளே ஹவுஸ் என்பது வீடுகளுக்கு உள் புறமாகவும், இரண்டாவதாக உள்ள அவுட்டோர் பிளே ஹவுஸ் என்பது வீட்டின் தோட்டப் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன.

    2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் செயல்திறனுக்கு ஏற்ப அறிவுத்திறனை மேம்படுத்தி, அவர்களின் கற்பனை திறனை வளர்ப்பதும் அவசியம். மேலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், மொழிகளை எளிதாக கற்கவும் விளையாட்டு வழியில் திறமைகளை மேம்படுத்தவும் பிளே ஹவுஸ் அமைப்பு உதவியாக இருக்கும்.

    இண்டோர் பிளே ஹவுஸ்

    வீடுகளின் உள்புறமாக அமைக்கப்படும் இன்டோர் பிளே ஹவுஸ் அமைப்புகளில் சிறிய படிப்பு மேசைகள், அழகான சிறு படுக்கைகள், சின்ன சின்ன பர்னிச்சர்கள் மற்றும் மினியேச்சர் இசைக்கருவிகள் போன்றவை இடம் பெறுகின்றன. அவற்றை குழந்தைகள் வெகுவாக ரசிப்பதுடன், குஷியாக அவற்றில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிறிய வகை கணினி விளையாட்டுகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.

    சின்ன ஊஞ்சல், குட்டி டேபிள், சேர்கள், சிறியதாக கிச்சன்செட், விளையாட்டு பொருட்கள், சிறிய இசைக்கருவிகள் போன்றவற்றை பிளே ஹவுஸில் அமைப்பதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை உடல் மற்றும் மன வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஆக்கப்பூர்வமாக மாற்றி அமைக்கலாம்.

    அவுட்டோர் பிளே ஹவுஸ்

    வீடுகளுக்கு வெளியே அல்லது தோட்டப்பகுதிகளில் அவுட்டோர் பிளே ஹவுஸ் அமைக்கும்போது அழகான குட்டி ஊஞ்சல்களை பொருத்தி குட்டிப்பசங்களின் உற்சாகத்தை அதிகமாக்கலாம். மேலும், சிறிய அளவிலான சறுக்கு விளையாட்டுகள், படிப்பு மேசைகள், மரக்கால் குதிரைகள், சிறிய படுக்கைகள், குட்டியான பர்னிச்சர் அமைப்புகள் போன்றவற்றையும் உள்ளடக்கமாக அமைக்கலாம்.

    அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் ஒன்றிணைந்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தைகள் விளையாட்டுக்களை சேர்ந்து விளையாட செய்யலாம். அவற்றில் பெற்றோர்களும் கலந்து கொள்வது விசேஷம். உறியடி விளையாட்டு, கண்ணாமூச்சி, பாண்டியாட்டம் போன்றவற்றை பலரும் சேர்ந்து விளையாடலாம். குடியிருப்புகளுக்கு பக்கத்தில் அல்லது உள்புறமாக குட்டி பசங்களை பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டச்செய்யலாம். இவற்றின் மூலமாக செல்போன் விளையாட்டு, வீடியோ கேம் ஆகியவற்றில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதிலிருந்து குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப இயலும்.

    • குழந்தைகள் நடக்கிற பொழுது, திடீரென விழுந்து விடுவார்கள்.
    • விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும்.

    குழந்தை பிறந்து (ஒரு வருடத்திற்குப் பிறகு) பதிமூன்று மாதங்கள் கழித்து நடக்கக் கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் தவழும் போதும், நடக்கும் போதும் எதுவும் குறுக்கே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி குழந்தை நடக்க ஆரம்பிக்கிற பொழுது கீழே விழுந்து விழுந்து தான் எழுந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

    குழந்தைகள் நடக்கிற பொழுது, திடீரென விழுந்து விடுவார்கள். அப்போது அவர்கள் நிதானமற்று இருந்தார்கள் என்றால், அந்த பதட்டத்தைத் தணிக்க சிறிய அளவில் மருத்துவ உதவி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்படி விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும். நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என பார்த்து மோசமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இவை எல்லாவற்றையும் விட, பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் நிதானமாக இருக்க வேண்டும்.

    குழந்தைகள் கீழே விழுந்தவுடன் காது, மூக்கு அல்லது வாயில் நிறமற்ற நீர் போன்று ஏதேனும் வெளியுறினால் அதை சலைவாய் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அது செரிப்ரோஸ்பைனல் திரவமாகும். இந்த திரவம் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியையே சூழ்ந்திருக்கும். இது மூளையை பாதுகாக்கும் ஒருவகை திரவம். அதனால் இந்த திரவம் வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த திரவம் வெளியேறினால் தலைவலி, கண் பார்வை குறைபாடு, காது கேளாமல் போவது போன்ற பிரச்சனை வரலாம்.

    தலையின் மண்டை ஓட்டில் அடிபட்டால் நான்கு விதத்தில் சோதனை செய்யப்படுகிறது.

    i. குழந்தையின் மண்டை ஓட்டு எலும்பில் ஏதும் பிரச்சனையா என பார்க்கப்படுகிறது.

    ii. தலையில் ஏதும் வெட்டுக்காயம் இருக்கிறதா? என பார்க்கப்படுகிறது.

    iii. டையாஸ்டிக் எலும்பு முறிவு சோதனை என்பது குழந்தைகளுக்கு மட்டுமே பார்க்கப்படும் ஒன்றாகும்.

    iv. கண் மற்றும் காதுகளுக்கு செல்லக்கூடிய அடிப்படை நரம்புகளும் சரிப்பார்க்கப்படுகிறது.

    குழந்தைகள் கீழே விழுந்தால் முதலில் சோதனையிட வேண்டியது அவர்கள் விடும் மூச்சு தங்குதடையின்றி இருக்கிறதா? என்பதையே ஆகும். உங்கள் குழந்தை மூச்சு விடும்போது வேகமாக விடுவார்கள் எனில் சில சமயத்தில் 10 முதல் 20 நொடி மூச்சு அடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி பிரச்சனைகளை பார்த்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது மிக நல்லது.

    கீழே விழுந்த உங்கள் குழந்தைகளின் கண்கள் வெளியில் வந்தால்... உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். தலையில் அதிர்ச்சி ஏற்படுவது என்பது மூளைக்கு அழுத்தத்தை தந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும். நரம்புகள் சேர்ந்து கண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் கண்கள் வெளிவந்து காணப்படக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. அருகில் உள்ள மருத்துவ வல்லுனரை அணுக வேண்டியது அவசியமாகும்.

    • குழந்தைகளுக்கு இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
    • பெண் குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

    * தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    * நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

    * பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள்.

    * பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.

    • குழந்தை பராமரிப்பு மையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன.
    • தொடர்ந்து அழும் குழந்தைகளை பராமரிப்பாளர்கள் அடித்து துன்புறுத்துவது உண்டு.

    இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருவதுடன் சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். திருமணமான தம்பதியில், முன்பு ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டை நிர்வகிப்பார்கள். ஆனால் இன்று பெருநகரங்களில் திருமணமான கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை டே கேர், பிளே ஸ்கூல் என்று அழைக்கப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் சேர்த்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள்.

    இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தான் அதிகளவில் உள்ளன. இதற்கு கூட்டு குடும்பங்கள் என்ற வாழ்வியல் முறையை விட்டு இ்ன்றைய தலைமுறையினர் விலகி தனிக்குடித்தனத்தை தேர்வு செய்ததும், மற்றொன்று பொருளாதாரத்தை பெருக்க வேண்டும் என்று கணவன்-மனைவி வேலைக்கு செல்வதும் தான் காரணம் என்றால் மிகையல்ல. அதுதவிர சில நடுத்தர குடும்பத்தினரே, வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்வதாக கூறி, பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்க்கும் நிலையும் உள்ளது.

    பெங்களூருவில் இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. சுமார் 10 ஆயிரம் மையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளை கவனித்து கொள்ளுதல், பெற்றோர் வழங்கும் தின்பண்டங்கள், உணவை கொடுப்பது என்பது சிறிய அளவிலான பராமரிப்பு மையங்களில் நடைபெறுகிறது.

    கொஞ்சம் வசதியான பராமரிப்பு மையங்களில், டி.வி. வசதி, விளையாட்டு பொருட்கள், பராமரிப்பில் சிறப்பு கவனம், அவர்களே தின்பண்டங்கள், உணவு பொருட்கள் தயாரித்து வழங்குவதும் உள்ளது. இவ்வாறு வசதிக்கு ஏற்ப சொகுசு பராமரிப்பு மையங்களும் பெங்களூருவில் உள்ளன.

    இதில் பெரும்பாலான குழந்தை பராமரிப்பு மையங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டே கேர் மையங்கள் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட விசாலாமான அறையில் தான் செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல பராமரிப்பு மையங்கள் குறுகிய இடத்திலேயே இயங்கி வருகின்றன. சில பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துவிடுவதாகவும், அவர்களை முறையாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

    இதற்கு உதாரணமாக சமீபத்தில் பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். அங்கு யாரும் இல்லை. குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது ஒரு குழந்தை, மற்றொரு குழந்தையை தொடர்ச்சியாக முகம், முதுகு என சரமாரியாக தாக்கியது. ஆனால் இதை அந்த பராமரிப்பு மையத்தினர் பார்க்கவில்லை. குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர், குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அந்த பராமரிப்பு மையத்தினரிடம் கேள்வி எழுப்பினர். உங்களை நம்பி தானே இங்கே குழந்தையை விட்டு சென்றோம். எப்படி எங்கள் குழந்தையின் உடலில் காயம் வந்தது என்று உணர்வுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பிறகே பராமரிப்பு மையத்தினர், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான், அந்த குழந்தையை மற்றொரு குழந்தை அடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதையடுத்து அந்த பெற்றோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியுடன் பெங்களூரு மாநகர போலீசின் டுவிட்டர் பக்கத்தில் புகார் அளித்தனர். அவர்கள், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த சுப்பிரமணியபுரா போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவத்தால் குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து குழந்தை பராமரிப்பு மையம் நடத்துபவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:-

    குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம்

    சிவமொக்கா டவுன் கும்பார குந்தி பகுதியை சேர்ந்தவரும், தமிழ் பெண்கள் நல அமைப்பு நிர்வாகியுமான உமா மகேஷ்வரி கூறுகையில், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களிடம் விட்டு செல்ல முடியாத நிலையில் குழந்தை பராமரிப்பு மையத்தில் விட்டு செல்கிறார்கள். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த இதுபோன்ற மையங்கள் சிறிய நகரங்களிலும் அதிகரித்து விட்டது.

    இதுபோன்ற பராமரிப்பு மையங்களில் வயதான பெண்மணி இந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டு நேரத்தோடு உணவு, தண்ணீர் வழங்கி மாலையில் பெற்றவர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த பராமரிப்பு மையத்தை விட்டு வெளியே குழந்தைகள் செல்லாத வகையில் பாதுகாப்பது இவர்களுடைய முக்கியமான கடமை. ஆனால் சில பாதுகாப்பு மையங்களில் அழும் குழந்தைகள், அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் நாம் அடிக்கடி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து படித்து தெரிந்து கொள்கிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. அதற்காக அனைத்து பராமரிப்பு மையங்களையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் இதுபோன்ற பராமரிப்பு மையங்கள் முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா? என்பது தெரியவில்லை. அதுபோல் அரசு விதிகளை கடைப்பிடித்து இந்த மையங்கள் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எப்படி இருந்தாலும் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கண்காணிப்பையும், கூடுதல் கவனிப்பையும் மேற்கொள்வது பராமரிப்பு மையங்களை நடத்துவோரின் பொறுப்பு. அதுபோல் கல்வித்துறை அதிகாரிகளும், சமூகநலத்துறையினரும் அவ்வப்போது பராமரிப்பு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கல்வித்துறை அனுமதி அவசியம்

    பெங்களூரு ராஜாஜிநகரில் செயல்பட்டு வரும் ஜானவி குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர் ஷில்பா கூறியதாவது:-

    குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்துவதற்கு சமூக நலத்துறை, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அவர்கள் வந்து ஆய்வு செய்வார்கள். சரியான அடிப்படை வசதிகள் இல்லையென்றால் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடந்த அனுமதி வழங்க மாட்டார்கள். குறிப்பாக ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தவேண்டும் என்றால் 3 முதல் 4 படுக்கையறைகள் அளவு இடம் இருக்கவேண்டும். அதாவது 2 ஆயிரம் சதுர அடி அளவு இடம் இருக்க வேண்டும். அங்கு தனி கழிவறை, கண்காணிப்பு கேமரா, குழந்தைகளை தூங்க வைப்பதற்காக வசதி, பராமரிப்பாளர்கள் இருக்க வேண்டும்.

    அதாவது கட்டாயம் ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஒருவர் (பராமரிப்பாளர் அல்லது உதவியாளர்) இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு எது நடந்தாலும் அவர்கள்தான் பொறுப்பு. தற்போது பல இடங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது. அங்கு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை.

    இதனை கல்வித்துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்தால்போதும், அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்பட்டுவிடும். பள்ளியுடன் சேர்ந்து செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், குழந்தைகள் மீது தாக்குதல் நடப்பது குறைவு. ஒரே அறையில் குழந்தைகளை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாக நடமாட விடவேண்டும். பெற்றோரை தவிர குழந்தைகளை வேறு யாருடனும் அனுப்ப கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் மீதான தாக்குதல், குழந்தைகள் கடத்தலை தடுக்க முடியும். அதே நேரம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் எந்த தவறுகள் நடந்தாலும், அதற்கு அந்த பள்ளி நிர்வாகிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதுகாப்பு இல்லை

    பெங்களூருவில் பணியாற்றி வரும் கர்நாடக அரசு கல்வித்துறையின் தமிழ் வளமை அதிகாரி மெர்லின் கூறியதாவது:-

    நகரங்களில் வீட்டில் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் அவர்களின் குழந்தைகளை வீட்டில் கவனித்துக்கொள்ள யாரும் இருப்பது இல்லை. அதனால் அவர்கள் குழந்தையை குழந்தை பராமரிப்பு மையங்களில் விட்டு செல்கிறார்கள். மாலையில் வந்து குழந்தையை அழைத்து செல்வார்கள். அங்கு குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடையாது.

    தொடர்ந்து அழும் குழந்தைகளை பராமரிப்பாளர்கள் அடித்து துன்புறுத்துவது உண்டு. அத்தகைய குழந்தைகளை ஏதாவது ஒரு தவறான மயக்கம் ஏற்படுத்தக்கூடிய உணவை கொடுத்து தூங்க வைக்கும் சம்பவங்களும் நடைபெறும். இத்தகைய விஷயங்கள் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் தற்போது தொழில்நுட்பங்களின் வருகையால், பெற்றோர் எங்கிருந்தும் தங்களின் குழந்தைகளை கண்காணிக்க முடியும். குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பெற்றோர் தங்களின் பணி இடத்தில் இருந்தபடியே குழந்தைகளின் செயல்பாடுகளை பார்த்துக்கொள்ளலாம். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு மெர்லின் கூறினார்.

    சூழலுக்கு ஏற்றவாறு பராமரிப்பு

    மங்களூரு நகரில் கத்ரி பகுதியில் பிளே ஸ்கூல் நடத்தி வரும் ஆசிரியை சேத்தனா கூறியதாவது:-

    குழந்தைகளை வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தான் எங்களிடம் விட்டு செல்கிறார்கள். நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்வதுடன் பாட்டு, நடனம் சொல்லிகொடுக்கிறோம். மேலும் அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வழங்குகிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் நடைபெறும் தவறுகளை வைத்து பொத்தம் பொதுவாக குற்றம்சாட்ட கூடாது. அனைத்து குழந்தைகளையும் நாங்கள் காலை முதல் மாலை வரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை நாங்களே தயார் செய்து கொடுக்கிறோம். பெற்றோர்களும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தேவையான விளையாட்டு உபகரணங்களும் எங்கள் மையத்தில் உள்ளன. அவற்றை வைத்து குழந்தைகள் விளையாடுவார்கள். உறங்கும் நேரத்தில் உறங்க வைப்போம். கற்பிக்கும் நேரத்தில் கற்பிக்க வைப்போம். உடற்பயிற்சிகள் மனஅழுத்தமின்றி சூழலுக்கு உகந்தவாறு அந்த குழந்தைகளை பராமரித்து நாங்கள் தயார்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முறையாக செயல்பட நடவடிக்கை

    மங்களூரு நகரில் கொட்டார சவுக்கியை சேர்ந்த குப்புசாமி கூறியதாவது:-

    எனது மகனை குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்த்துள்ளேன். அங்கு பாதுகாப்பு என்பது குறைபாடு இல்லை. தினமும் காலை 10 மணிக்கு மகனை பள்ளியில் விட்டால் மாலை வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். மதிய வேளையில் நாம் கொடுத்து அனுப்பும் உணவை உட்கொள்ள வைக்கிறார்கள். எந்தவிதமான புகார்களும் இதுவரை இல்லை. தங்கள் வீட்டு குழந்தைகளை போன்று கவனித்துக் கொள்கிறார்கள். அதுபோல் வீடு போன்றே குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களும் அங்குள்ளதால் அது விளையாட்டு பயிற்சியும் உடற்பயிற்சியுடன் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது இந்த மையத்தின் சிறப்பு அம்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எது, எப்படியோ குழந்தைகளை பராமரிப்பு மையத்தினர் பெயருக்கு ஏற்ப கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது அவர்களின் கடமை. பெருகிவரும் குழந்தை பராமரிப்பு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், இதுபோன்ற குழந்தை மையங்கள் முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.

    • பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
    • பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம்.

    புதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நிறைய குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது தங்கள் பெற்றோரிகளிடம் இருந்து முதல் முறையாக நீண்ட நேரம் தள்ளி இருப்பார்கள். அதுமட்டுமல்லாது பள்ளியில் சுற்றிலும் அந்நியர்கள் உடன் இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கையாள உங்கள் குழந்தையை மனதளவில் பள்ளிக்கு தாயார் படுத்துவது மிக முக்கியமானது.

    பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம். இவையெல்லாம் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவை. பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார வேண்டி வரும். இதையெல்லாம் குழந்தைக்கு பரிச்சயப்பட சில காலம் ஆகும் எனினும், நீங்கள் முன்னதாகவே அவர்களை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம்.

    1 உங்கள் மகன் / மகளுக்கு இன்று முதல் புதிய அட்டவணை ஆரம்பிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அவர்கள் நேரத்துக்கு எழுந்து / உறங்க வேண்டும் என்றும், தினமும் சில மணிநேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .

    2 பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் ஆசிரியரை பார்க்கவும்.

    3 பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.

    4 முடிந்தால், உங்கள் குழந்தையை சக வகுப்பு மாணவன் / மாணவியுடன் சந்திக்க வையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு பள்ளி துவங்கும் பொழுது ஒரு தோழன் அல்லது தோழி கிடைத்திருப்பர்.

    5 உங்கள் குழந்தை இதற்கு முன் பால்வாடி பள்ளியில் படித்திருந்தால், தங்கள் பெற்றோரிடம் இருந்து அதிக நேரம் தள்ளி இருப்பது அவர்களுக்கு கடினமாக இருக்காது.

    6 பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.

    7 உங்கள் குழந்தையை சுயமாக நடந்துகொள்ள ஊக்குவியுங்கள், அதனால் அவர்களுக்கு பள்ளியில் உதவி தேவைப்படாது. உதாரணத்திற்கு, உதவியின்றி கழிப்பறையை உபயோகிக்க கற்றுக்கொடுத்தல், பாட்டில் இருந்து தண்ணீர் குடிக்க கற்றுக்கொடுத்தல் மற்றும் தங்கள் உடைமைகளை பாதுகாக்க கற்றுக்கொடுத்தல்.

    8 யாரவது அவர்களின் பெயரை அழைக்கும் போது எவ்வாறு புரிந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். ஆசிரியரிடமும் மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றுகொடுங்கள்.

    9 கடைசியாக, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிங்கள். அவர்களுக்கு அது மோசமாக நாளாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்துங்கள். பள்ளிக்கு செல்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எடுத்து சொல்லுங்கள்.

    • குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
    • பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

    குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.

    அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:

    இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.

    காது கொடுத்து கேளுங்கள்:

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:

    குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

    தினமும் நேரம் ஒதுக்குங்கள்:

    குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.

    கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:

    பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.

    ×