search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை வளர்ப்பு"

    • மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது.
    • சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது.

    மகிழ்ச்சியான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை வளர்ப்பு எப்படி குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பங்காற்றுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

    சூழ்நிலைகள் தான் மனிதர்களை பல்வேறு அடையாளம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுப்பது பெற்றோரின் கடமை. அப்போதுதான், `மகிழ்ச்சியான ஹார்மோன்கள்' மூளையில் உருவாகும்.

    செரோடோனின், டோபமைன், எண்டோர்பின் மற்றும் ஆக்ஸிடோசின்... இவை நான்கும் தான் மகிழ்ச்சியான ஹார்மோன் என அறியப்படுகின்றன. இவை மூளையில் உற்பத்தியாகும் அளவை பொறுத்துதான், குழந்தைகளின் மனநிலையும், உணர்ச்சியும் வெளிப்படும். அவை குழந்தைகளை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் இயங்க வழிவகுக்கும். அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும்.

     செரோடோனின்: மனநிலை, தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. (சூரிய ஒளியில் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, பருப்பு வகைகளை உண்பதன் மூலம் இதை அதிகரிக்கலாம்.)

    டோபமைன்: இன்பம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. (ஆழ்ந்து தூங்குவது, பரிசுப்போட்டிகளில் கலந்துகொள்வது, மீன், முட்டை, பால் உணவுகளை உட்கொள்வதன் மூலம் அதிகரிக்கலாம்)

    எண்டோர்பின்: இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றன. (சிரிப்பு, சுவாச பயிற்சி, இசை, கார உணவுகள் மூலம் அதிகமாக்கலாம்.)

    ஆக்ஸிடோசின்: இது பிணைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கிறது. (அரவணைப்பு, பிணைப்புக்கு உதவும்)

    இந்த செயல்பாடுகளை பெற்றோர் தங்களது தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகளின் `மகிழ்ச்சியான ஹார்மோன்' அளவை அதிகரிக்கலாம். அது குழந்தைகளின் ஒட்டுமொத்த மனநிலையையும், நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு பெற்றோர் தங்களது வீட்டை குழந்தைகளின் மகிழ்ச்சியான இடமாக மாற்றும்போது, அவர்களது மூளை மேம்படும். திறமைகளுடன் தனித்துவமாக வளர்வார்கள். கல்வி, விளையாட்டு, பரிசுப்போட்டிகள் என எல்லாவற்றிலும் முதலிடம் பிடிப்பார்கள்.

    • 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
    • தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.

    உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.

    ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.

    தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

    தற்கொலை செய்வதற்கான காரணம்

    குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.

    அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.

    அறிகுறிகள்

    நடத்தையில் மாற்றம்

    தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.

    நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.

    போதை மற்றும் மது

    மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.

    மனநிலையில் மாற்றம்

    தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.

    இழந்ததை நினைத்து கவலைப்படுதல்

    மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.

    தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    தற்கொலை தடுப்பு

    தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

    • சீக்கிரம் படுத்து தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம் இருக்கும்.
    • தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும்.

    தூக்கத்திற்கும், மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமன் இல்லாதவர்களாகவும், சோம்பல் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.

    9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்படி இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் எடை கச்சிதமான அளவில் இருந்ததாம்.

    `சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்' என்கிறார், இந்த ஆய்வை நடத்திய கரோல் மகேர்.

    மேலும், `தாமதமாக தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு குறைவாகவே இருக்கும். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி. பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்' என்கிறார் டாக்டர் கரோல். ஆகவே 'முன் தூங்கி முன் எழுவதே உடலுக்கு நல்லது' என்கிறார் கரோல்.

    சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மையும் அதிகமாக இருக்கும்.

    • படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது.
    • 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல.

    படுக்கையை ஈரமாக்குவது, இரவு நேர அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. தூங்கும் போது அறியாமல் சிறுநீர் கழிப்பதை குறிக்கிறது. இது எல்லா வயதிலும் நடக்க கூடியது தான். குழந்தைகள் குறிப்பாக 7 வயதுக்குள் படுக்கையை நனைப்பது கவலைக்குரியது அல்ல. ஆனால் வளர்ந்த பிள்ளைகள், பதின்ம வயது பிள்ளைகள், டீன் ஏஜ் வயதினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    சிறு குழந்தைகள் அதாவது 7 வயதுக்குள் இருக்கும் குழந்தை படுக்கையை நனைப்பது இயல்பானது. இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பருவ வயது வந்த பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, குழந்தைப்பேறுக்கு பிறகு பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வது, மெனோபாஸ் காலத்தில் பெண்கள் இந்த பிரச்சனையை கொண்டிருப்பது என எல்லாமே கவனிக்க வேண்டிய ஒன்று. அதேபோன்று வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை எதிர்கொள்வது என வயதுக்கேற்றார் போல இந்த பிரச்சனையை எதிர்கொள்வதை பார்க்க முடிகிறது.

    தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது தன்னை அறியாமல் வெளியேறும் ஒரு நிகழ்வு தான். 7 வயதுக்குட்பட்ட குழந்தை சிறுநீர் கழிப்பதை நாம் நாளடைவில் அதில் இருந்து சரியான பழக்க வழக்கம் மூலம் விடுவிக்கலாம். குழந்தை தூங்குவதற்கு முன்பு அவர்களை சிறுநீர் கழிக்க சொல்லிய பிறகு படுக்க வைக்கலாம். நள்ளிரவிலும் ஒரு முறை குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லி படுக்க வைக்கலாம்.

    பெரியவர்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன் குறைவாக சுரப்பதுதான். தூக்கமின்மை காரணம் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணமாகிறது. தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்துகள் எடுப்பது, உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு மருந்துகள் எடுப்பது கூட படுக்கையை நனைக்க காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோயாளியாக இருக்கும் போது சர்க்கரை கட்டுக்குள் வைக்காத போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    மேலும் கட்டுக்கடங்காமல் சிறுநீர் வெளியேறவும் செய்யும். அதனாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். பெண்களாக இருந்தால் அவர்களுக்கு கருப்பை இறக்கம் இருந்தால் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழியலாம். சிறுநீரகப்பாதையில் தொற்று இருப்பவர்களுக்கு படுக்கையில் தங்களை அறியாமல் சிறுநீர் பிரிவது இருக்கும். பெல்விக் வலிமையாக இல்லாத பெண்களுக்கும் கூட சிறுநீர் தானாக வெளியேறலாம்.

    சிலருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். கீழே விழுந்து காயம் பட்டிருப்பார்கள். இதனால் சிறுநீரகப்பையிலும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கலாம். இதனாலும் சிறுநீர் தானாக வெளியேறலாம். இது போன்று பெண்களுக்கு கருப்பை வீக்கம், ஆண்களுக்கு புரோஸ்டேட் விரிவாக்கம், தூக்கமின்மை, சிறிய விஷயத்துக்கெல்லாம் பயம், மன அழுத்தம் , குடலில் பூச்சிகள் இருப்பது என இவையெல்லாம் தூக்கத்தில் தானாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாக சொல்லலாம். படுக்கையில் சிறுநீர் கழிக்க என்ன காரணமாக இருந்தாலும் அதை சரிசெய்ய சிறந்த மருந்து சித்தமருத்துவத்தில் சொல்லப்படும்

    அமுக்கிரா சூரணம். அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் இந்த சூரணம் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். இது நரம்புகளை வலுப்படுத்தக்கூடியது. சித்த மருத்துவத்தின்படி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அனைத்தும் இந்த அஸ்வகந்தாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குணப்படுத்த முடியும்.

    • `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.
    • வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. இளம் பருவத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நண்பர்களின் அழுத்தம், திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் காதல் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

    அந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு நம் சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

    இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப் படுவதால் தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

    பெற்றோர்களின் பங்கு

    பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    • பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம்.
    • வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள்.

    குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் உண்டு. அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் ஆழமாக பதிந்துவிடும். சில விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகலாம்.

    தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக பெற்றோரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட. சில கேள்விகளுக்கான பதில் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

    அதனை தெரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர குழந்தைகளுக்கு தவறான தகவல் கொடுக்கக்கூடாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அந்த கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    பெற்றோருக்கு தெரியாத சில விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கலாம். அவர்களிடம் இருந்து அந்த விஷயத்தை பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் அதுபற்றி விவாதியுங்கள். நிறை, குறைகளை அவர்களுடைய மனம் நோகாமல் தெரியப்படுத்துங்கள்.

    எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள், நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் விமர்சன கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக வளர்வார்கள். எதையுமே அலசி ஆராய்ந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள பழகிவிடுவார்கள்.

    பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம். அப்படி மனதில் உதிக்கும் சந்தேகங்களை நோட்டில் எழுதச் சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை அவர்களையே தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது சாத்தியம் என்பதால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். செல்போனை இதுபோன்ற பயனுள்ள தேடலுக்கு பயன்படுத்த கொடுங்கள்.

    வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள். தினமும் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். அன்று படித்த பக்கங்களில் இருந்து கேள்வி கேளுங்கள். சரியாக பதில் அளித்தால் பரிசு வழங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இது குழந்தைகளிடத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி செயல்படும் ஆர்வத்தை மேலோங்கச் செய்யும்.

    எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் தாங்கள் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    • தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
    • சிறு சிறு தவறுகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.

    குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அவர்கள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இதைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற விதத்திலேயே மற்ற குழந்தைகளும் வளர வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

    பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

    தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது. பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை அவர்களிடம் எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள்.

    கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிமுறைகளை பார்க்கலாம் மிகவும் கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்பவர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு.

    இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவர்களிடமும் அதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்லாமல், அடிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளின் மீது மதிப்பும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதனால் பெற்றோர்கள்-குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக, துணையாக இருக்க வேண்டும்.

    ஒரு நண்பனை போல் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் முன் கடுமையான வார்த்தைகளையோ அல்லது தகாத வார்த்தைகளையோ பேசுதல், நடந்து கொள்வது கூடாது. குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு சில வேலைகளை கொடுத்து அவர்கள் அதை செய்வதற்கும், செய்யும் வேலைகளில் அவர்களை துணைக்கு அழைத்து கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

    அவர்களே அவர்களுயைய வேலைகள செய்வதற்கு கற்றுக் கொடுப்பதற்கும், அதனை குறையேதும் சொல்லாமலும், நன்றாக செய்தால் பாராட்டுவதற்கும் தயங்க கூடாது. ஒவ்வொரு செயலின்போதும் பாராட்டுவதும், பரிசு பொருட்கள் அளிப்பதும் அவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்கு உதவும்.

    சில பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் கண்டுகொள்வதில்லை.

    இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். (உதாரணத்திற்கு அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் வளரும் குழந்தைகள்) குழந்தைகளின் செயல்பாட்டில் இன்னும் முயற்சி எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைகளை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக்கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் நல்லமுறையில் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே முயற்சி செய்யுங்கள்.

    அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தைகளை கூட்டி சென்று ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான விதத்தில் இருக்கும், அதேசமயம் வேறு சில செயல்களில் சிறந்த குழந்தையாகவும், நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். அந்த மாதிரி குழந்தைகளை அவர்களது விருப்பத்தை பொறுத்து அதில் சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

    • நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சில...

    * நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.

    * நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.

    * இலந்தைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

    * கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்துக்காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.

    * நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    * தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.

    * வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.

    * பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் வளரும்.

    * நினைவாற்றல் அதிகரிக்க செய்வதில் பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.

    • பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
    • குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.

    பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது

    உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.

    இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.

    மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.

    பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.

    • குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.
    • பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும்.

    "நீ அடம்பிடிச்சா உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துடுவேன்", "சாப்பிடாம இருந்தா டீச்சர்கிட்ட உன்னை அடிக்க சொல்லுவேன்" என்று சேட்டை செய்யும் பிள்ளைகளை பயமுறுத்தும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதைக்கேட்டு குழந்தை அமைதியானாலும், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது அவர்கள் மனதுக்குள் வெறுப்பு மற்றும் பய உணர்வு உண்டாகும். இதனால் பள்ளி செல்வதற்கு அடம் பிடிப்பார்கள். இத்தகைய குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்று பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் மனதில் பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும். ''பாப்பா! நீ பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகிறாய், அங்கு உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம். நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்'' என குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.

    உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய குழந்தைகளும் அதே பள்ளியில்தான் இப்போது படிக்கிறார்கள் என்றால், அவர்களை சந்திப்பது போல் உங்கள் குழந்தையை அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு பள்ளியின் சூழல் பழகி இருக்கும். புதிய இடம் போல தோன்றாது.

    உங்கள் குழந்தைக்கு பிடித்த புத்தகப்பை, அழகான புத்தகங்கள், கலர் பென்சில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் அழைத்து சென்று வாங்குங்கள். அவர்களுக்கானதை அவர்களே தேர்ந்தெடுக்கும்போது உற்சாகமாக பள்ளிக்கு செல்வார்கள்.

    இரவில் தூங்கச் செல்வது, காலையில் கண் விழிப்பது, காலைக் கடன்களை முடிப்பது போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும். காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு நேர பள்ளி என்றால், குழந்தைக்குப் பிடித்தமான உணவுகளை மதிய உணவாக கொடுத்து அனுப்புங்கள்.

    நீங்கள் வேலைக்குச் செல்பவர் என்றால், பள்ளி நேரம் முடிந்த பிறகு குழந்தையை யார் வீட்டுக்கு அழைத்து வருவது? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்யுங்கள். மழலையர் பாதுகாப்பகத்தில் உங்கள் குழந்தையை விடுவதென்றாலும், அதற்கு தேவையான விஷயங்களையும் முன்பே திட்டமிடுங்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள். பிறகு வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லுங்கள். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

    அப்போதுதான் குழந்தையின் கற்றல் சார்ந்த நடவடிக்கைகள் உங்கள் கவனத்திற்கு வரும். ஒருவேளை உங்கள் குழந்தை இதற்கு முன்பு மழலையர் பள்ளி சென்று பழகி இருந்தாலும், இப்போதைய பள்ளி நேரம் அதிகம் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு பள்ளியைப் பற்றிய பயமும், பதற்றமும் ஏற்படும். அடம் பிடிக்காமல் பள்ளிக்கு சென்று வந்தாலும் திடீரென்று சில நாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அத்தகைய நேரங்களில் பதற்றமடையாமல், அவர்களை மென்மையாக அணுகி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

    • நீண்ட நேரம் உட்கார்ந்து புத்தகம் படிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது.
    • புத்தகம் படிப்பதற்கென்று நேரத்தை வரையறை செய்யுங்கள்.

    மாணவர்களை பொறுத்தவரை வாசிப்பு பழக்கத்தை அவசியம் பின்பற்றியாக வேண்டும். வாசிப்பு என்பது கல்வி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. தனிப்பட்ட வளர்ச்சிக்கும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும், நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கும், தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்வதற்கும், சொல் அகராதி மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்கும், சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்ப்பதற்கும் வாசிப்பு பழக்கம் உதவும்.

    கற்பனை கதைக்களம் கொண்ட நாவல்கள், திரில்லர் கதைகளை படிக்கும் மாணவர்களிடம் மொழித்திறன் மேம்பட்டிருப்பது ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய புத்தகங்களை படிப்பது அடுத்து நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும். சம்பந்தப்பட்ட மொழியை புரிந்து கொள்வதற்கும் உதவும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் பிரிட்டிஷ் கவுன்சில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.

    * நீண்ட நேரம் உட்கார்ந்து புத்தகம் படிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பொறுமையும் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு பக்கங்களாக படிக்க தொடங்கலாம். பின்பு படிப்படியாக பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

    * வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை விருப்பமான விஷயங்களை படிப்பதுதான். அது புனைக் கதையாகவோ, சுய சரிதையாகவோ, சிறுகதையாகவோ இருக்கலாம். உங்களுக்கு பிடித்தமான துறை சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க தொடங்கலாம். உங்கள் கவனத்தை ஈர்க்கும், உங்களை படிக்கத் தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். அது சார்ந்த புத்தகங்களை தேடிப்பிடித்து படிப்பது இயல்பாகவே வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடும்.

    * புத்தக கிளப்புகள், வாசிப்பு குழுக்களில் சேருவது வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கு உதவும் மற்றுமொரு சிறந்த வழிமுறையாகும். அவை புத்தகங்களை விமர்சனம் செய்யவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒருமித்த சிந்தனை கொண்ட புத்தக ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல்களுக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க எந்தவொரு இடையூறும் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யவும். அது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * வாசிப்புக்கு தொந்தரவு தரக்கூடிய மின் சாதனங்களை அணைத்து வைக்கவும். அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தியும் கவனச்சிதறலை உண்டு பண்ணும்.

    * புத்தகம் படிப்பதற்கென்று நேரத்தை வரையறை செய்யுங்கள். அந்த நேரம் நெருங்கியதும் 'இது படிக்க வேண்டிய நேரம்' என்பதை மூளைக்கு உணர்த்தும் வழக்கத்தை உருவாக்குங்கள்.

    * வாசிப்பு சுவாரசியமாக இருக்க வேண்டுமே தவிர அது வேலையாக இருக்கக்கூடாது. நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக அமர்ந்து வாசிக்கும் பழக்கத்தை தொடரலாம். திரைப்படம் பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்வது போன்ற பழக்கங்களுக்கு மாற்றாக அந்த நேரத்துக்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதற்கு பரிசு வழங்கும் வழக்கத்தை பின்பற்றலாம். அது வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    • அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை
    • சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம். பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும். நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவதனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும். இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும். சாப்பிடும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம். முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

    * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

    * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

    * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

    * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

    * காலையில் குளிக்கின்றார்களா?

    * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

    * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

    * குறிக்கோள் இருக்க வேண்டும்.

    * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

    * கடினமாய் உழைக்க வேண்டும்.

    * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

    * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

    * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

    ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம். இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

    ×