search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் உயர் நீதிமன்றம்"

    • குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார்

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்" என உத்தரவிட்டது.

    இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

    இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான, ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இன்று அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, கடந்த பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்
    • 6 பேரை சம்பவ இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்து கம்பத்தில் கட்டினர்

    குஜராத் மாநில கேடா (Kheda) மாவட்டத்தில் மடர் தாலுக்காவில் உள்ளது உந்தேலா கிராமம்.

    உந்தேலாவில் கடந்த 2022 அக்டோபர் அன்று குஜராத்தின் பிரபலமான நவராத்திரி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொருட்கள் சேதம், கல்லெறிதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது.

    உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர்.

    மோதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் 6 பேரை தேடி கைது செய்தனர். அவர்களை மீண்டும் மோதல் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்து அங்குள்ளவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு மின்சார கம்பத்தில் கட்டி வைத்து ஒரு கம்பால் அடித்தனர்.

    காவலர்கள் அடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    பாதிக்கப்பட்ட அந்த 6 பேரும் தங்களை அடித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் அளிக்க முன் வந்த இழப்பீட்டையும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.

    இச்செயலுக்காக காவல்துறையினர் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுஃபேயா மற்றும் கீதா கோபி தமது தீர்ப்பை அறிவித்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

    நடந்தது ஒரு மனிதாபிமானமற்ற செயல். காவல் ஆய்வாளர் பர்மர், துணை ஆய்வாளர் குமாவத், தலைமை கான்ஸ்டபிள் லக்ஷ்மண்சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராஜுபாய் தாபி ஆகியோர் குற்றவாளிகளே. அந்த 4 காவல்துறையினரும் 14 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் மேலும் 3 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீர்ப்பை அளித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளது.

    காவல்துறையினரின் அத்துமீறலுக்கு இந்த தண்டனை போதுமானதல்ல என பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×