search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தசாமி"

    • விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
    • 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.

    அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.

    குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.

    நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,

    எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.

    மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.

    கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.

    வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.

    அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.

    "அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.

    ×