search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dasara thiruvizha"

    • அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.
    • செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர்.

    முத்தாரம்மன் கோவில் அமைப்பு

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மற்ற பழைய கோவில்களை போல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிட அமைப்புகளுடனோ அல்லது உயர்ந்த கோபுரங்கள் மற்றும் மாடவீதிகள் கொண்டதாகவோ அமையவில்லை. அந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் முத்தாரம்மனின் அருளாட்சி வரையறுக்க முடியாத எல்லையாக பரவியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மத வேறுபாடின்றி குலசை முத்தாரம்மனை குலதெய்வம் போல வழிபடுகின்றனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குலசை முத்தாரம்மனின் நாமத்தை உச்சரிக்கத் தவறுவதில்லை. இத்தகைய சிறப்புடைய முத்தாரம்மை குலசையில் ஒரு தெருவில் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். அவள் அருள் செய்யும் கருவறை சிறிய அறையாக உள்ளது.

    கர்ப்பக்கிரகத்தினை அடுத்து அர்த்த மண்டபமும், அதனையடுத்து மகாமண்டபமும் அமைந்துள்ளன. இந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் பேச்சியம்மனும், இடது புறம் கருப்பசாமியும் அருள் பாலிக்கின்றனர். பைரவர் தெற்குமுகமாக மகாசன்னதியை எதிர்நோக்கி காட்சி தருகிறார்.

    அடுத்து கொடி மர மண்டபம் உள்ளது. இதன் நடுவில் 32 அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் அமைக்கப்பட்டு கம்பீர மாக உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்புற செப்புத் தகட்டின் வடப்பக்கத்தில் அம்பாளும், சுவாமியும் அருள் பாலிக்கின்றனர். தென்பக்கத்தில் அஸ்திர தேவரும், கீழ்ப்பாக்கத்தில் விநாயகரும், மேற்கில் பாலசுப்பிரமணியரும் காட்சி அளிக்கின்றனர்.

    கொடிமர மண்டபத்தின் கன்னிமூலையில் மகா வல்லப விநாயகர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். தென்புறம் நோக்கி இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    இக்கோயிலுடன் இணைந்து அருள்மிகு சிதம்பரேஸ்வரர் ஆலயம், விண்ணவரம் பெருமாள் திருக்கோவிலும் அமையப் பெற்றுள்ளன.

    • பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
    • உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.

    முத்தாரம்மன் பெயர்க் காரணம்

    அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.

    "பாண்டி நாடு முத்துடைத்து" என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.

    பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.

    முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள்.

    சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக் கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்து ஜுவ முக்தர்களாக மாற்றுகிறாள்.

    இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.  இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.

    • சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் ரசிக்கிறார்கள்.
    • முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள்.

    மாலை போடும் மரபு

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல., சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழாவுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, "இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்" என்றனர். அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    டிஸ்கோ டான்ஸ் ஆதிக்கம்

    தசரா குழு நடத்துபவர்கள் முன்பெல்லாம் வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு தசரா குழு ஊருக்குள் வருகிறது என்றால் முதலில் காளி வேடம் போட்டு இருப்பவர் வீடு, வீடாக வந்து திருநீறு கொடுத்து செல்வார். சிலருக்கு அருள் வாக்கும் கிடைக்கும்.

    காளியைத் தொடர்ந்து மற்ற வேடங்கள் அணிந்து இருப்பவர்கள் ஆடியபடி வருவார்கள். அவர்களை ஊர்க்காரர்கள் பக்தியுடனும் ஆச்சரிய பரவசத்துடனும் பார்ப்பார்கள். ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் அல்லது ஊர் கோவில் முன்பு அந்த வேடக்காரர்கள் அனைவரும் வட்டமாக சுற்றி வந்து ஆட்டம் போடுவார்கள். ரவுண்டு கட்டி அவர்கள் போடும் ஆட்டம் காலத்துக்கும் மறக்காது. பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளேயே நிழலாடியபடி இருக்கும். வெளியூர்களுக்கு போய் செட்டிலாகி விடுபவர்கள் கூட இன்றும் தசரா குழுவினர் ஆட்டத்தை மெய் சிலிர்க்க சொல்வார்கள்.

    தசரா குழுவைத் தொடர்ந்து கரகம் ஆடுபவர்கள் ஆடியபடி செல்வார்கள். இவர்கள் தசரா குழுவுக்கு மெருகேற்றுவது போல இருப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தசரா குழுக்களுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் வந்து ஆடுகிறார்கள். இது தசரா குழுக்களில் புதுவிதமான கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முத்தாரம்மனுக்காக வேடம் அணிபவர்கள் மீதான மக்களின் கவனம் குறைந்து விட்டது. அதற்கு பதில் மக்களின் பார்வை டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் பக்கம் திரும்பி விட்டது என்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் இளைஞர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய டிஸ்கோ டான்சை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தசரா குழுக்களின் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ற புதிய வரவாக டிஸ்கோ டான்சை பெரும்பாலான தசரா குழுக்கள் ஏற்றுக் கொண்டு விட்டன. எத்தனை டிஸ்கோ டான்சர்கள் வந்தாலும் அம்மனுக்காக வேடம் அணிபவர்கள் புனிதம் ஒரு போதும் குறையாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.

    தசரா குழு அன்றும் & இன்றும்

    தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள். இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இதுபற்றி மாதவன்குறிச்சி ஊர்த் தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஏ.டி.கருப்பசாமி கூறியதாவது,

    எங்கள் ஊர் தசரா குழுவுக்கு ஈஸ்வரி தசரா குழு என்று பெயர். இந்த குழு தொடங்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த குழுவின் தலைவராக எஸ்.கார்த்திகேயன் இருக்கிறார். நான் 11 வயது முதல் சுமார் 40 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்துள்ளேன். பெண் வேடம், ராஜா ராணி வேடம், இன்ஸ்பெக்டர் வேடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய சிறு வயதில் தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது.

    முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவோம். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன.

    முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது. முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அப்போது உடல் உழைப்பு முக்கியமாக இருந்தது. இப்போது பொழுது போக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.

    • விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
    • 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.

    அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.

    குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.

    நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,

    எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.

    மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.

    கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.

    வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.

    அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.

    "அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.

    ×