search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதவணை"

    • நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • கதவணை கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத்துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலந்து வருகிறது.

    இந்த உப்பனாறு மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. ரூ. 30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவனை கட்டும் பணிகள் தொடங்கியது.

    இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாததால் கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

    அவற்றின் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள், கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.இதனிடையே இப்பணிகளை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பி.வி. பாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது திருநகரி உப்பனாற்றில் கதவனைக் கட்ட நிதி ஒதுக்கீடு பெற்று கடந்த 2020 ஆகஸ்டு மாதம் பணிகள் தொடங்கியது.

    ஆனால் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே வரும் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இதில் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அக்செப்ட் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஜெக.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
    • கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.

    எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.

    வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
    • அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ஆதனூர் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1064 மீட்டர் தூரத்திற்கு ரூ.465 கோடி மதிப்பில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கதவணை கட்டுமான பணியில் சீபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன் (வயது 35) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் கதவணை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சற்று தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் அறிவழகன் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றியதுடன் அணை கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அறிவழகனின் உறவினர்கள் மற்றும் சீப்புலியூர் கிராம மக்களும், பா.ம.க. வினரும் திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுக்கவிடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வந்தது.

    அறிவழகனை ஜேசிபி வாகனத்தால் மோதி கொலை செய்து புதைத்துவிட்டு மறைப்பதாகவும், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அறிவழகன் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    அவர்களிடம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜ்குமார், தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய இழப்பீடு தொகையை தருவதாக கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்டதாலும், விதவைகள் மறுவாழ்வு திட்டத்தில் அறிவழகன் மனைவிக்கு அரசு வேலை பெற்றுத் தர ராஜகுமார் எம்.எல்.ஏ, தாசில்தார் மகேந்திரன் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×