search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணி திருவிழா"

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் மூலஸ்தானம் புற்று மண்ணால் உருவானது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இந்த ஆண்டு குடமுழுக்கிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் அம்மனுக்கு உகந்த நாளான ஆவணி மாத ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை காண அதிகளவில் திரண்ட பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசனம் செய்வதற்காக பொதுவழி, சிறப்புவழி என இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இருவழிகளின் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.

    கோவில் பிரகாரம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தன்னார்வலர்களும் ஏராளமானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதுமட்டுமின்றி முடிகாணிக்கை, மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடனை செலுத்தினர். அதுமட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா நடைபெறாததால் தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

    • இன்று ஆராட்டு விழா நடக்கிறது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனி நடைபெற்று வந்தது.

    9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாலை 5.45 மணியளவில் கோவிலில் இருந்து தட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் அமரச் செய்தனர். பின்னர் தேரை பக்தர்கள் 4 ரத வீதிகளில் இழுத்து வந்தனர்.

    இந்திரன் தேராகிய சப்பர தேர் மிகவும் பழுதாகி காணப்பட்டதால் அதை சீரமைக்க பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் இந்திரன் தேர் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேரோட்ட விழா நிகழ்ச்சியில் முன்னாள் கண்காணிப்பாளர் சோனாசலம், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தேர் மாலை 6.25 மணியளவில் நிலைக்கு வந்து நின்றது. தொடர்ந்து சாமிக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
    • விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 10-ம் நாளான நேற்று மாலை விறகு விற்ற திருவிளையாடல் லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார். அதை தொடர்ந்து விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

    புராண வரலாறு வருமாறு: வரகுன பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவர் பாண்டியநாட்டிற்கு வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவர் அரசன் முன் யாழ் மீட்டினார். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினார். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் சவால் விட்டார். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன் அரசவை ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். இறைவனும் முதியவர் உருவம் கொண்டு விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்து கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்து கொண்டிடே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று வரலாறு கூறுகிறது.

    • லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 9-ம் நாளான நேற்று பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது. இதையொட்டி சுந்தரேசுவரர் தங்க மண்வெட்டி, தங்க மண் கூடை அலங்காரத்தில் மீனாட்சியுடன் காட்சி அளித்தார். பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, பழைய சொக்கநாதர் கோவில், சிம்மக்கல் வழியாக பொன்னகரம் வைகை ஆற்றின் தென்கரையில் புட்டுத்தோப்பில் உள்ள கோவிலில் எழுந்தருளினார்கள்.

    அங்கு மதியம் 2.35 மணிக்கு மேல் பிட்டு மண் சுமந்த லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் சுவாமியாக ராஜா பட்டரும், பாண்டிய மன்னராக ஹலாஸ் பட்டரும் பிட்டு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காண்பித்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறவில்லை. எனவே நேற்று இறைவனை காணவும், அப்போது நடைபெறும் லீலையை காணவும் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி நேற்று களைகட்டி காணப்பட்டது. பின்னர் லீலை முடிந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாலை சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி ஒர்க்‌ஷாப் ரோடு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக இரவு கோவிலை வந்தடைந்தனர். பிட்டு திருவிழா நடைபெறும் தினம் மதுரையில் மழை பெய்வது வழக்கம். அதே போன்று நேற்று மதியத்தில் இருந்து மழை பெய்தது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    திருவிழா நடைபெறும் வைகை ஆற்றின் கரை பகுதியில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வரலாற்று காலத்தில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவேண்டும் என்று அரசன் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் புட்டு விற்று பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி தவித்தார். அவரது நிலை அறிந்த சிவபெருமான் அந்த மூதாட்டி முன்பு தோன்றி, உங்களுக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக சாப்பிட புட்டு தருமாறு கேட்டு மண் சுமந்தது சிவனின் திருவிளையாடலில் ஒன்றாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த சம்பவத்தை சித்தரித்து காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது. அதன்படி ஆவணி மாத மூல நட்சத்திரமான நேற்று காலை, காரைக்கால் கயிலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
    • பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். அதன்படி ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களில் குறிப்பிடத்தக்க 12 லீலைகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று நரியை பரியாக்கிய லீலை நடந்தது. சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று காலை பிரியாவிடை சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். அதன்பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளினர்.

    சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல், பழைய சொக்கநாதர் கோவில், திருமலைராயர்படித்துறை ரோடு, பேச்சி யம்மன்படித்துறை, ஒர்க்‌ஷாப் ரோடு வழியாக ஆரப்பாளையம் வைகை தென்கரையில் உள்ள புட்டுதோப்பு மண்டபத்துக்கு வந்தடைந்தது.

    வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் புட்டு தோப்பு மண்டபத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி-அம்பாள் புட்டுதோப்பு மண்டபத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. சுவாமி-அம்மன் கோவிலுக்கு திரும்பியபின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்.

    • அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆவணித் தபசு திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 3-ந் தேதி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    மாலையில் ஒப்பனையம்மாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 3.45 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சுவாமி தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர். 6.30 மணிக்கு அம்பாளுக்கு, முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

    விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜன், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் மற்றும் பக்தர்கள், மண்டகப்படிதாரர்கள் கலந்துகொண்டனர்.

    இரவு 9.30 மணிக்கு அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, பவுல் ஜேசுதாசன், கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    • இன்று(திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் இன்று நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் சுவாமியுடன் வீதிஉலா வருவதற்கு திருவாதவூரில் இருந்து மதுரைக்கு பல்லக்கில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்.

    மாணிக்கவாசகர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், இன்று(திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.

    மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று காலை புறப்பட்டார். செல்லும் வழியில் திருக்கண் மண்டபங்களில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்புரிந்தார்.

    பக்தர்கள் மாணிக்கவாசகரை வரவேற்று வழிபட்டு அன்னதானம் வழங்கினர். வழி நெடுக மண்டகப்படிகளில் அருள்பாலித்து இன்று மீனாட்சி அம்மன் கோவிலை அவர் வந்தடைவார்.

    அரிவர்தன பாண்டியன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரிடம், குதிரைகள் வாங்கி வரும்படி பொற்காசுகளை கொடுத்து மன்னர் அனுப்பியுள்ளார். ஆனால் மாணிக்கவாசகர் குதிரை வாங்கச்செல்லும் வழியில் சிவகங்கை அருகே ஆவுடையார்கோவில் என்னும் ஊரில் சிவன் கோவிலை கட்டுகிறார்.

    குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் கோவிலை கட்டியதால் கையில் பணம் இல்லாத மாணிக்கவாசகரின் நிலையை கண்ட சிவபெருமான் நரிகளை பரிகளாக(குதிரைகளாக) மாற்றி மாணிக்கவாசகரிடம் அனுப்பி வைத்தார். அந்த குதிரைகளை மாணிக்கவாசகர் மதுரைக்கு மன்னனிடம் அனுப்பியதாக புராண வரலாறு கூறுகிறது.

    • மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதம் மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம்.
    • ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமி ஆட்சி புரிவதாக ஐதீகம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை வளையல் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

    மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதம் மீனாட்சியும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமியும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி மீனாட்சி ஆட்சி முடிந்து சுவாமி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளதை முன்னிட்டு சுந்தரேசுவரர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு இரவு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், 2-ம் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார்.

    வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:

    தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குடன் இருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷி பத்தினிகளும் அவரது அழகிலேயே மயங்கி ஆடைகளையும், அணிகலன்களையும் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.

    அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் தீர்ந்து, சிவலோகம் சென்றதாக வரலாறு கூறுகிறது.

    • சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • நாளை புட்டு திருவிழா நடைபெறுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி மதுரையில் நடைபெறும் புட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நாளை புட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் இன்று காலை மதுரைக்கு பல்லக்கில் புறப்பட்டார்.

    சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனால் சுவாமி வரும் வழிகள் திருவிழாகோலம் பூண்டிருந்தது.

    • 12-ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
    • 12-ம்தேதி இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.

    அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், நாகம், சூரியன், பூபல்லக்கு, அன்னம், இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார்.

    பதினொரு நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு முழு நேரம் நடைதிறப்பு மற்றும் தினமும் மதியம் உச்சிபடிப்பு, அன்னப்பால் கஞ்சி தர்மமும் இரவு 7 மணிக்குமேல் அன்னதர்மமும் நடைபெறுகிறது. எட்டாம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பத்தாம் திருநாளன்று முந்திரி கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் மற்றும் சிறப்பு பணிவிடை நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி பதினோராம் திருநாளன்று மாலை 4 மணிக்கு சிறப்பு செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும்.

    11-ம் திருநாளன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யாபவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.

    • 10-ந்தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி முன்பு காலை 9.25 மணிக்கு மேள, தாள, பஞ்ச வாத்திய வெடி முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

    கொடிப்பட்டத்தை மாத்தூர் மடம் தந்திரி சஜித் நாராயணரூ கொடிமரத்தில் ஏற்றினார். பின்னர் கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், வட்டப்பள்ளி மடம் ஸ்தாணிகர் டாக்டர் பிரசாத், தெற்கு மண்மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மரபு படி கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிபட்டத்தை மேள, தாளத்துடன் கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனியும், 9-ம் திருவிழாவான வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அமர செய்து நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    10-ம் திருவிழாவான 11-ந் தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    ×