search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜுன் மோத்வாடியா"

    • ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன
    • எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை என்றார் அர்ஜுன் மோத்வாடியா

    வரும் ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014லிருந்து 2 முறை மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க., 3-ஆம் முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து, வெல்வதற்கு வியூகம் அமைத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று, குஜராத் மாநில போர்பந்தர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் மோத்வாடியா (Arjun Modhwadia), குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சிஆர் பாட்டில் (CR Paatil) முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.


    தனது முடிவு குறித்து அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்ததாவது:

    காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற நல்ல தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடிவில் நாட்டிற்கு கிடைத்துள்ளனர்.

    வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல பிரதமர் மோடியின் கனவை நனவாக்க பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.

    எனக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை.

    மக்களுடன் காங்கிரசிற்கு இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து விட்டது. உ.பி. மாநில அயோத்யாவில் நடைபெற்ற பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள தவறி விட்டது.

    இவ்வாறு மோத்வாடியா தெரிவித்தார்.

    முன்னதாக, "கனத்த இதயத்துடன்" காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தான் விலகுவதாக அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதினார்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அர்ஜுன் மோத்வாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

    ×