search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tank"

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் அமுதா (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 மாதங்களாக தனது மகளுடன் வசித்து வந்தார்.

    இவர் நேற்று தனது மகள் அமுதாவை பள்ளியில் விட்டு விட்டு கட்டிட வேலைக்கு சென்றார். ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இதனையடுத்து அமுதா வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்புறம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் மீன்களை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி 7 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய மகேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது மகள் அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே கண்ணாம்மூச்சி விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அருகே உள்ள சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த மணிகண்டன் தனது மகள், மகனுடன் சேர்ந்து கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடி கொண்டு இருந்தார்.

    அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று ஒளிந்து கொண்டார். தேஜூ அஸ்வீன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் அருகில் ஒளிந்து கொள்ள சென்றார். அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியானான். குழந்தைகளை தேடி வெளியே வந்த மணிகண்டன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தனது மகன் தேஜூஅஸ்வின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் தனது மகனின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என மனவேதனை அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தந்தை மற்றும் தம்பியை தேடி மாடியில் இருந்து இறங்கி வந்த தேவதர்சினி தந்தை தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். குழந்தையின் சத்தம் கேட்டு சமையல் செய்து கொண்டு இருந்த பூவிதா ஓடிவந்து பார்த்த போது கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பூவிதாவை சமாதானம் செய்தனர். பின்னர் தேஜூ அஸ்வினை தேடினர். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேஜூஅஸ்வினை வீடு முழுவதும் தேடினர்.

    அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் மணிகண்டன், தேஜூஅஸ்வின் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புளியங்குடி அருகே தண்ணீர் எடுக்க சென்ற முதியவர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காந்திஜி தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனியாக மலையடிகுறிச்சி பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சிறு சிறு வேலைகள் செய்து அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார். 

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோமதி பாண்டியன் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் அவர் வீட்டின் அருகே செப்டிக் டேங்க் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதை மூடி போட்டு மூடி பராமரித்து கட்டுமான பணிக்கு பயன் படுத்தி வந்தார். சம்பவத்தன்று வேலுச்சாமி இயற்கை உபாதையை கழித்துவிட்டு கோமதி பாண்டியன் வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் தொட்டியின் மூடியைத் திறந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர் பாராதவிதமாக அவர் தவறி உள்ளே விழுந்து விட்டார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து வேலுச்சாமியின் அண்ணன் மகன் சரவணபாண்டியன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பேராவூரணியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த பொன்காடு பகுதியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி பொதுமக்கள் புகார் கூறியதை தொடர்ந்து அங்கு இன்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று காலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேராவூரணி ஆதிமுத்து சரோஜா சினிமா தியேட்டர் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உதவி செயற்பொறியாளர் ராதாகிஷ்ணன் பேராவூரணி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து குடிநீர் தொட்டிக்கு மின்இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

    வால்பாறை:

    வால்பாறை அருகே உள்ள சோலையார்எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி சித்ராதேவி(23).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. சித்ராதேவி சோலையார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். செல்லத்துரை சோலையார் எஸ்டேட் பள்ளிக்கூடத்தில் தற்காலிக இரவு காவலராக பணிபரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்லத்துரை சித்ராதேவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால் மனமுடைந்து எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சித்ராதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற வால்பாறை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சித்ராதேவியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் நிவேதா (வயது 15). இவர், கண்ணமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த மாணவி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி படுத்துக் கொண்டார்.

    இன்று காலையில் அவரது அண்ணன் பள்ளிக்கு சென்று மாணவியை சமரசம் செய்து கீழே இறங்குமாறு வற்புறுத்தினார். அடம்பிடித்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து கீழே குதித்தார்.

    இதில் இடுப்பு முறிவு ஏற்பட்டு மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சாமளாபுரம் தோட்டத்து பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது மகள் சுகன்யா ஸ்ரீ (வயது 2½).

    இன்று காலை வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமி சுகன்யா ஸ்ரீ பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் உடனடியாக குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுகன்யா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சுகன்யா ஸ்ரீயின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது விளை£டிய போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம் அருகே பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் சிவராமன், 18-ந் தேதியன்று காலை (நேற்று) செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் கட்டுமானப்பணிக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்தார்.



    இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாணவன் சிவராமனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிவராமனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடியில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது 5 வயது குழந்தை நந்தினி நேற்று வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தகரத்தை வைத்து மூடி இருந்தனர்.

    அதை கவனிக்காத குழந்தை நந்தினி தொட்டியின் மீது நடந்து சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். இதில் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதனிடையே நந்தினியை காணாமல் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது தண்ணீர் தொட்டிக்குள் நந்தினி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×