search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote Counting"

    அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் நாதன், தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன்ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63பேர் போட்டியிட்டனர்.

    மொத்தமுள்ள 2 லட்சத்து 5ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து73ஆயிரத்து 115 பேர் வாக்களித்துள்ளனர். இது 84.33 சதவீதம் ஆகும். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

    அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


    இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையை ஆய்வு செய்தார். அப்போது அந்த அறை மிகச்சிறியதாக இருந்தது. இதனால் கூடுதல் அறை ஒதுக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில், அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை மிகச்சிறியதாக உள்ளது. இதனால் அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் யாரும் நிற்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே பெரிய அறையோ அல்லது இடவசதிஉள்ள அறைகளையோ ஒதுக்கி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டது. மேலும் இடப்பற்றாக்குறை உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது. செந்தில்பாலாஜி புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ள 23 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் எண்ணப்படுகிறது.

    காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகளும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டே‌ஷனிலுள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளுக்கான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் 15 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அறைகள், டேபிள்கள் அமைப்பது, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு 24 மணி நேரமாகும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் வெயிலின் காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை கால தாமதத்தை கருத்தில் கொண்டும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் முழுவதுமாக ஏ.சி. வசதி செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஏ.சி. பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடவும், முறைகேடுகளை தடுக்கவும் 12 பேர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

    தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடை பெற்றது. 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

    நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

    மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள்.

    பதட்டமான ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் இருந்தே 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சுழற்சி முறையில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும்.

    இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும்.

     


    ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள்.

    அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகை சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நாடு முழுவதும் வாக்குப்பதிவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளன.

    அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை விட 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஆளும்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுமா? இல்லை எதிர்க்கட்சியான தி.மு.க. கூடுதல் இடங்களை கைப்பற்றுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்துக்கும் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    பொதுமக்கள் இடையிலும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியே அமையுமா? அல்லது மத்தியில் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    7-வது கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வருகிற 19-ந் தேதி மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விவிபாட் என்று சொல்லக்கூடிய ஒப்புகை சீட்டு முறை அனைத்து தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபாட்டில் பதிவான ஓட்டுகளும் சமமாக இருக்க வேண்டும். இதில் வேறுபாடு ஏற்பட்டால் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதாக கருதப்படும்.

    எனவே வாக்குப்பதிவு எந்திரம்-விவிபாட் எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகள் ஒரே எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்கா ஆகியோர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் துணை கமி‌ஷனர்கள் பாலாஜி, ராஜதுரை, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, இயக்குனர் நிகில்குமார், டைரக்டர்ஜெனரல் திலீப் சர்மா மற்றும் புதுச்சேரி, குஜராத், லட்சத்தீவுகள் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் 38 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும், 18 தொகுதி இடைத்தேர்தல்களை நடத்திய தேர்தல் அதிகாரிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    வாக்கு எண்ணும் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் மின்னணு எந்திரங்களையும், விவிபாட் எந்திரங்களையும் முறையாக கையாள வேண்டும். விவிபாட் எந்திரத்தில் வித்தியாசம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு துணை ஆணையர்கள் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார்கள்.

    இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
    ×