search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigilance raid"

    • காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது.
    • முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.

    இதுபற்றி நிருபர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை சோதனையிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை. 3-வது முறையாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.7100 மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது.

    இது தவிர எனது அம்மாவின் சிறு நகைகளை எடுத்து சென்றுள்ளனர். வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அதிகாரிகளே எழுதி கொடுத்து விட்டு சென்று உள்ளனர்.

    காவல் துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வரவுள்ள நிலையில் எங்களை பழி வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரை ஏவி சோதனை நடத்துகிறார்.

    மின் கட்டண உயர்வை திசை திருப்பவும் அண்மையில் கோவை, திருப்பூர் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் இருந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் அடையாறில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்பு துறையினர் என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து கைபேசிகள் இரண்டையே எடுத்து சென்றுள்ளனர்.

    முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. என்னுடைய குடும்பத்தாரின் ஆதார் அட்டைகள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றையே எடுத்து சென்று உள்ளனர். அவை முக்கியமான ஆவணங்களாக இருக்கலாம்.

    எடப்பாடி பழனிசாமியுடன் துணை நிற்போரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை மத்திய அரசே வழங்குகிறது. மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்குகிறது.

    மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்ததற்காக என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எல்லாம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    • சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    • எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை:

    எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனைக்கு பிறகு எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள்; ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

    எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடப்பது பற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டுக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
    • அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீடு உள்பட கோவையில் 9 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு சோதனை நடைபெறும் தகவல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது.

    தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வாசலில் அமர்ந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். சோதனை நடப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

    இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.க்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

    தொடர்ந்து தொண்டர்கள் வாசலில் நின்றபடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு இருந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    • ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது.
    • எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் துயர் துடைக்க, வருகிற 16-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

    ஏற்கனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது இந்த விடியா தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

    தி.மு.க. அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள தி.மு.க. அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க. அமைச்சர் கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா?

    எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

    ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா தி.மு.க. அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா தி.மு.க. அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. தி.மு.க. மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பசுமை நகரில் பால்வள துணை ப்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பால் உற்பத்தி யாளர்கள் சங்கங்கள் பதிவு செய்வதிலும், புதுப்பித்தல், கட்டணம் வசூலித்தல் மற்றும் பால் கொள்முதலுக்கு காசோலை வழங்குவதில் முறைககேடு நடப்பதாக சென்னை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழு ஆய்வாளர் சத்தியசீலன், துணை மேலாளர் ரவி, செயல் அலுவலர் கோபி ஆகியோர் கொண்ட குழுவினர் பழனிசெட்டி பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

    இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், ரசீதுகள், அலுவலர்கள் கையெழுத்திட்ட கோப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர். இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில், முறைகேடுகள் குறித்து புகார் வந்ததால் இந்த சோதணை நடத்தப்பட்டடது.

    ஆய்வுக்காக சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளோம். விசா ரணை முடிந்தபிறகு உண்மை நிலவரம் வெளிவரும் என்றனர்.

    சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் புரோக்கர் அலுவலகங்களில் விடிய-விடிய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியுள்ளது. #RTOoffice

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டியில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் புதிய லைசென்ஸ், வாகன தகுதி சான்று, லைசென்ஸ் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    உடனே அலுவலகத்தின் கேட்களை பூட்டிய அவர்கள் உள்ளே இருந்த புரோக்கர்கள், ஆர்.டி.ஓ. கதிரவன், ஆய்வாளர்கள் பதுவை நாதன், லோகநாதன் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு நின்ற புரோக்கர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அலுவலக கேட்களை மூடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    அப்போது அலுவலக நாற்காலி இடுக்குகள் மற்றும் அந்த அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத 2 லட்சம் சிக்கியது. லஞ்சம் பெற்றது தொடர்பாக சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் எப்போதும் புரோக்கர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நிற்பார்கள் என்பதால் அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி புரோக்கர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் உள்ள 3 அலுவலகங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புரோக்கர்கள் அலுவலங்களில் இருந்தும் 1 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 2-வது நாளாக இன்று காலையும் சோதனை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஆர்.டி.ஒ. கதிரவன் மற்றும் ஆய்வாளர்கள் லோகநாதன், பதுவைநாதன் மற்றும் புரோக்கர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

    திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×