search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Arunachaleswarar Temple"

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் வெயில் தாக்கத்தை குறைக்கவும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் வருண யாகம் போன்ற பூஜைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் வருண யாகம் நடந்தது.

    மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் வருண யாகம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி யாக தண்ணீரை பிரம்ம தீர்த்தத்தில் தெளித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக, 10-வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது.

    பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.

    பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.


    அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிலுக்குள் வந்த பக்தர்கள் பரணி தீபத்தை தரிசனம் செய்தனர். கிளி கோபுரம் உட்புறம், மூலவர், அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர்.

    புரவி மண்டபத்தில் இருந்து கிளி கோபுரம் வரை இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீபத்தை தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் பரணி தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக அர்த்த நாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் பருவத ராஜகுல சமுதாயத்தினர் மகா தீபம் ஏற்றுவார்கள்.

    அப்போது கோவில் கொடி மரம் எதிரேயுள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    மகா தீபம் ஏற்றப்படும் போது கோவிலில் குவிந்திருக்கும் பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்குவர். பவுர்ணமி நேற்று 12 மணிக்கு தொடங்கியதால் நேற்று முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று மதியம் 12 மணியளவில் பவுர்ணமி முடிந்தாலும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இருந்தாலும் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேலூர், சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருச்சி, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை தத்தளிக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.

    கிரிவலப்பாதை கோவிலுக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மகா தீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் யாரும் மின் விளக்குகளை போட மாட்டார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகே, அனைவரும் மின்விளக்குகளை போடுவார்கள்.

    அப்போது திருவண்ணாமலை நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும். கோவிலில் நடக்கும் வாண வேடிக்கை பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். பரணி தீபத்தை போலவே மகா தீப தரிசனமும், மெகா திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #AnnamalaiyarTemple #BharaniDeepam
    திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

    தீபத்தை காணவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் அன்றைய தினம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபத்திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மகாதீப திருவிழாவுக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு இன்று திருவண்ணாமலை வந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 700 போலீசார் சென்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைதம்பி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) தலைமையில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 போலீசார் இன்று காலை வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

    பரணி தீபம், மகா தீபத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. செல்போனுடன் வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேலும் கிரிவலப்பதை, கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. குட்டிவிமானங்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகின்றது.

    கிரிவலப்பாதையில் கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் 5 லட்சம் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன.

    கேமராவில் அவர்கள் நடமாட்டம் பதிவானால் கண்டுபிடித்து பிடிக்கும் வகையில் தொழில் நுட்ப வசதிகள் செய்யபட்டுள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையான வந்தவாசி திண்டிவனம் சாலை, கீழ்பென்னாத்தூர் சாலை, வேட்டவலம், ஆரணி, செங்கம், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தீபத் திருவிழாவுக்கு வரும் அனைத்து வாகனங்கள் தணிக்கை மற்றும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.  #KarthigaiDeepam #ArunachaleswararTemple

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது.



    இந்த விழாவை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள்.

    அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் இருந்து வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி (சனிக்கிழமை) வரை திருவண்ணாமலைக்கு 2,609 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதற்காக திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், சென்னைக்கு 666 பஸ்கள் இயக்கபட உள்ளது.

    அத்தியந்தல் முனை பகுதியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர், பெங்களூரு, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, கோவைக்கு 662 பஸ்களும், அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, செய்யாறு பகுதிகளுக்கு 336 பஸ்களும் இயக்கபடுகிறது.

    எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சீபுரத்திற்கு 140 பஸ்களும், அபய மண்டபம் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சி, மேல்சோழங்குப்பத்திற்கு 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    அதேபோல வேட்டவலம் புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரத்திற்கு 58 பஸ்களும், கம்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூருக்கு 242 பஸ்கள் இயக்கபட உள்ளன.

    அன்பு நகரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு 264 பஸ்கள் இயக்கபடும். மணலூர்பேட்டை புறவழிச் சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, திருக்கோவிலூருக்கு 22 பஸ்களும், நல்லவன்பாளையம் புறவழிச்சாலை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தண்டராம்பட்டு, தானிப்பாடி, அரூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு 199 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் கார்களை நிறுத்த 77 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்த www.tvmpournami.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மகாதீப மலையில் ஏறும் பக்தர்கள் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 22-ந் தேதி அனுமதி சீட்டு பெறவேண்டும். #KarthigaiDeepam #ArunachaleswararTemple



    ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நடத்திய ஆய்வில் அன்னதான திட்டத்தில் குறைபாடு உள்ளதையும், வருகைப் பதிவேடு சரிவர பராமரிப்பு இல்லாததையும் கண்டறிந்தார்.
    திருவண்ணாமலை:

    இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகனம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கோவில் ராஜகோபுரத்தின் முன்பு கடைகள் உள்ள இடத்தை பார்வையிட்டபோது அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. மேலும் பக்தர்களின் பொருட்கள் வைப்பு அறையை பார்வையிட்டபோது அங்கு 3 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மோட்டார்சைக்கிளில் பதிவெண் இல்லாமல் இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

    பின்னர் ராஜகோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நீதிபதிகள் வந்தனர். கோவில் முன்பகுதியில் ஒரு நாய் படுத்து இருந்தது. மேலும் அங்கு பலர் படுத்து கிடந்ததை அவர்கள் பார்த்தனர்.

    அதே பகுதியில் அன்னதானத்திற்காக பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்னதான திட்டத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்த நீதிபதிகள், அன்னதானம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர்களிடம் போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா, சாப்பாடு தரமாக உள்ளதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்று நீதிபதிகள் கேட்டனர். பின்னர் சமையல் செய்யும் அறையை பார்வையிட்டனர்.

    அதைத் தொடர்ந்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு இணை ஆணையர் ஞானசேகரிடம் கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை டி.வி.யில் காண்பிக்க கூறினர். அப்போது “கோவில் ராஜகோபுரத்தின் முன்பு நாய் படுத்து இருப்பதையும், சிலர் படுத்து தூங்குவதையும் காண்பித்து மக்கள் நடமாடும் பகுதியில் இப்படி உள்ளது. இதை நீங்கள் கவனிக்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஊழியர்களின் வருகை பதிவேட்டை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். வருகைப் பதிவேட்டில் உள்ள நபர்களின் பெயர்களை கூறி நீதிபதிகள் அழைத்தனர். அப்போது வந்தவர்கள் அடையாள அட்டையின்றியும், சீருடை அணியாமலும் இருந்து உள்ளனர். இது குறித்து கோவில் இணை ஆணையரிடம் நீதிபதிகள் விசாரித்தனர்.

    பின்னர் அன்னதான திட்டத்திற்கான பதிவேடுகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அந்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாததை பார்த்த நீதிபதிகள், கோவில் இணை ஆணையரிடம் அது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். கோவிலில் உள்ள கோசாலை, பிரசாதம் வழங்கும் இடம், அம்மணி அம்மன் கோபுரத்தின் வெளிப்புறம், கோவிலில் உள்ள கருணை இல்லம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பக்தர் ஒருவர் “அன்னதான திட்டத்தில் சாப்பிடுபவர்களுக்கு சரியாக சாப்பாடு வழங்குவதில்லை” என்று புகார் கூறினார். அதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து கோவிலில் பக்தர்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா? என்றும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறுகையில், “ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் சுகாதாரம் சரி செய்யப்படவில்லை. பெண்கள், பெண் குழந்தைகள், முதியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும் கோவில் அன்னதான திட்டத்திற்கான பதிவேடுகள், வருகைப் பதிவேடுகள் போன்ற ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இது குறித்து உயர்நீதிமன்றத்திற்கு வருகிற 30-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது” என்றார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள 152 சிலைகளின் நீளம், அகலம் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்றார்.

    புதிய இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள அனைத்து ஆவணங்கள், கோவிலுக்கு சொந்தமான நகைகள், சிலைகள் குறித்த குறிப்பேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் சென்னையை சேர்ந்த தொல்லியியல் துறை அலுவலர் சேகர் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகள் நீளம், அகலம் மற்றும் எடை ஆகியவை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து இணை ஆணையர் ஞானசேகரன் கூறியதாவது:-

    புதிதாக இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள சிலைகளின் நீளம், அகலம் குறித்து பார்வையிடுவது வழக்கம். இதில் கூடுதலாக சிலைகளின் எடை பார்க்கப்பட உள்ளது. இதன் மூலம் சிலைகள் மாற்றப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படலாம்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) சோமாசிபாடி முருகன் கோவில், சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கோவிலிலும் சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 152 சிலைகள் கணக்கெடுக்கப்படுகிறது. கோவிலில் சில இடங்களில் உள்ள பழைய பூட்டுகள் மாற்றப்பட்டு புதிய பூட்டுகள் போடப்படுகிறது. மேலும் கோவில்களில் சிலை பாதுகாப்பிற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×