search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvizha"

    • பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடாய்களை வெட்டினார்கள்.
    • அங்கேயே சமையல் செய்யப்பட்டு அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சத்தியமங்கலம் கொமராபாளையம் தவளகிரி முருகன் கோவிலுக்கு கீழே மகா முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி வடக்குப்பேட்டை திருநீலகண்ட சாமி வீதியில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.

    பின்னர் மகா முனியப்பன் கோவிலுக்கு தாரை தப்பட்டை முழங்க மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக வந்தார்கள். அங்கு சிறப்பு அபிஷேகத்துடன், பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கிடாய்களை வெட்டினார்கள். பின்னர் அங்கேயே சமையல் செய்யப்பட்டு அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோவிலில் ஒரு பகுதியில் திருமணத்தடை நீங்கும் பாலமரம் ஒன்று உயரமாக வளர்ந்துஇருக்கிறது. இந்த மரத்திற்கு கீழே திருமணம் நடப்பது போன்ற ஒரு சிலையும் உள்ளது. இதன் முன்பு திருமணமாகாதவர்கள் வேண்டி பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினால் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்ற ஐதீகமாக உள்ளது. அதன்படி ஏராளமான இளைஞர்களும், பெண்களும் அந்த மரத்துக்கு கீழ் நின்று பயபக்தியுடன் வணங்கி திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பூஜை நடத்துவது வழக்கம்.
    • இந்த விருந்தில் வழக்கம்போல் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.
    • இந்த கிடா வெட்டு திருவிழா சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    ஒரத்தநாடு :

    தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள தளிகைவிடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லபெரமஅய்யனார், செம்முனி, முத்துமுனி கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கிடா வெட்டு பூஜைதிருவிழா கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வெட்டப்பட்டன.

    இவ்வாறு நேர்த்திகடனாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி கோவில் அருகே விரைவாக சமையல் செய்யப்பட்டது. இறைச்சி வெட்டுதல், சமையல் பணி மற்றும் உணவு பரிமாறுதலில் சுமார் 500 பேர் ஈடுபட்டனா்.

    பின்னர் கறிக்குழம்புடன், 100 மூட்டை அரிசி சாதமாக வடித்து, நேற்று காலை 9 மணி முதல் சிறுவர்கள் முதியவர்கள் வரை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த பூஜை விருந்தில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சாதத்தை வைத்துக் கொண்டு, 500-க்கும் மேற்பட்டவர்கள் உணவுகளை பரிமாறினர். இந்த பூஜை விருந்தில் பங்கேற்றவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தரையில் அமர்ந்து வாழை இலையில் மகிழ்ச்சியுடன் கறிக்குழம்புடன் அரிசி சாதத்தை சாப்பிட்டனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய கறி விருந்து மதியம் வரை நடந்தது. இதனால் கோவில் அருகே உள்ள திறந்த வெளி பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் ஆண்கள் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து கோவிலின் அறங்காவலர் குழுதலைவரும், ஊராட்சி தலைவருமான பொன்.முத்துவேல் கூறியதாவது:-

    எங்களது கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பூஜை நடத்துவது வழக்கம். இந்த கிடா வெட்டு திருவிழா சுமார் 200 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    இந்த விழாவில் பங்கேற்க கிராம மக்கள், மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுப்போம். நேற்று முன்தினம் இரவு ஆடு வெட்டும் பூஜை தொடங்கியது. இதில் நேர்த்திக்காக பக்தர்கள் வழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு கிடாய்கள் விடிய -விடிய வெட்டப்பட்டன. நேற்றுகாலை முதல் பக்தர்களுக்கு அன்னதானமாக கறி விருந்து வழங்கப்பட்டது.

    இந்த விருந்தில் வழக்கம்போல் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். சமையல் பணியிலும் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டனர்.

    100 மூட்டை அரிசி சாதமாக வடிக்கப்பட்டது. சாதத்தை டிராக்டர், மற்றும் லோடு ஆட்டோவில் வைத்துக் கொண்டு 500-க்கும் மேற்பட்டோர் உணவுகளை பரிமாறினர். இந்த கோவில் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இந்த கிடா வெட்டு பூஜை திருவிழாவை நாங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு தலைமுறை தலைமுறையாக நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கோவிலில் திருவிழா தொடங்கியது. அப்போது கோவில் சன்னதியில் இருந்து மின்னொளி ரதத்தில் சாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். உடன் பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமி, அந்த ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கோவில் முன்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வரிசையாக தரையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது கோவில் பூசாரி 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷத்தை முழங்கியபடி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். அதன்பின்னர் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றன. மேலும் பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாங்கி தந்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதனை உடுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • 12-ந்தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து சாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று முதல் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி ஆகிய கிராமத்து மக்கள் சேர்ந்து தினமும் ஒவ்வொரு ஊர் மக்கள் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்து சாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 12-ந்தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலு, 4 கிராமங்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் இருக்கன்குடி செந்தாமரை, என்.மேட்டுப்பட்டி பாண்டியம்மாள் கருப்பசாமி, கே.மேட்டுப்பட்டி முத்துமாரியம்மாள் மாரிமுத்து, நத்தத்துப்பட்டி சூரியா பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் 5-ந்தேதி நடக்கிறது.
    • 9-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

    கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செடல் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 7.30 மணி அளவில் கோவிலில் உள்ள கொடி மரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலா மற்றும் சிவலிங்க பூஜை நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் பூத வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    மேலும் 7-ந் தேதி தெப்பல் உற்சவமும், 8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 9-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • புரவி எடுக்கும் பக்தர்கள் ஒரு வாரமாக விரதம் இருந்தனர்.
    • புரவி எடுப்பதற்கு கோவில் வளாகத்தில் மண் எடுக்கப்பட்டு புரவி செய்யப்படும்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நடுவக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு காவேரி கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் 150-வது ஆண்டாக புரவி எடுக்கும் திருவிழா இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. முன்னதாக புரவி எடுக்கும் பக்தர்கள் ஒரு வாரமாக விரதம் இருந்தனர். புரவி எடுப்பதற்கு கோவில் வளாகத்தில் மண் எடுக்கப்பட்டு புரவி செய்யப்படும்.

    கோவில் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட புரவியை ஊர் மந்தையில் வைத்து கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் புறவியை ஊர் மந்தையிலிருந்து எடுத்துக்கொண்டு கோவில் வளாகத்திற்கு மேளதாளங்களுடன் கிராமப் பொதுமக்கள் வீட்டில் உள்ள அனைவரும் தாம்பூலம் தட்டுக்களுடன் புரவியின் முன்னே சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து கோவிலுக்குச் செல்லப்பட்ட புரவியை இறக்கி வைத்து அங்கு சக்தி கெடா வெட்டப்பட்டு பின் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நேத்தி கடனாக கொண்டு வந்த கடாயினை அவர்கள் சமைத்து உறவினர்களுடன் விருந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகளை நேர்த்திக்கடனாக விடுவார்கள்.
    • இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு.

    மணப்பாறையை அடுத்த ஆணையூரில் கரை முனியப்ப சாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவு கொடுக்கும் திருவிழா நடைபெறும். சுண்டக்காம்பட்டி, கருமகவுண்டம்பட்டி, ஆணையூர் உள்ளிட்ட 3 கிராம ஊர் நாட்டாண்மைகள் முன்னிலையில் கிராம மக்கள் சார்பில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகளை நேர்த்திக்கடனாக விடுவார்கள். வேண்டுதல் நிறைவேறிய பின் எந்த பகுதியில் உள்ளார்களோ அந்த பகுதியில் இருந்து ஆடுகளை வாங்கி கோவிலுக்காக நேர்ந்து விட்டு விடுவார்கள்.

    பின்னர் திருவிழாவின் போது ஆடுகளை பிடித்து கோவிலுக்கு கொண்டு வருவார்கள். இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முனியப்பசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன் பின்னர் நள்ளிரவில் ஒரு ஆட்டை கரை முனியப்பனுக்கு பலியிட்டு காவு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. இதனால் ஏராளமான ஆண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதன்பின் பலியிடப்பட்ட ஆடுகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் வைத்து சமைக்கப்பட்டன. பின்னர் சமைக்கப்பட்ட ஆட்டுக்கறி சாப்பாடு நேற்று காலையில் அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் வயதான பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

    • புனவாசல் கிராம மக்கள் இந்த அம்மனை தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள்.
    • ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    திருவாரூர் அருகே வடகட்டளை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அம்மனுக்கு உரல், உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் கோபித்துக்கொண்டு வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் சென்றுவிட்டதாக ஐதீகம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து ஐம்பொன்னாலான 1½ அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மரப்பெட்டியில் வைத்து கிராம மக்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வடகட்டளை கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள். இந்த வினோத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    புனவாசல் கிராம மக்கள் இந்த அம்மனை தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். வட கட்டளை மாரியம்மனின் பிறந்த ஊர் புனவாசல் என்று கருதப்படுவதால் அந்த கிராம மக்கள் சீர்வரிசை அளிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக தற்போது விழா நடந்து வருகிறது.

    நேற்று அம்மனை மரப்பெட்டியில் சுமந்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விநோதமான திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

    • களிமண்ணால் 33 அடி துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது.
    • பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக கோவில் முன்பு களிமண்ணால் 33 அடி துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது. பஞ்ச வர்ணம் பூசி நாடக நடிகர்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • இன்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
    • நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி மலை, வடக்கு சொக்கலிங்கபுரத்தில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. மேலும் இங்கு பாலகணபதி, பாலமுருகன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இங்கு 25-ம் ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 10-ந் தேதி இரவு பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த குடங்கள், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தினர். இரவு 7 மணி அளவில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.

    தொடர்ந்து காலை 11 மணியளவில் கோவில் முன்பு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை காலை கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    • இரவில் கோவில் வளாகத்தில் உள்ள முத்தால ராவுத்தர் பீடத்துக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் இரவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. 10-ம் நாளான நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

    இரவில் கோவில் வளாகத்தில் உள்ள முத்தால ராவுத்தர் பீடத்துக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், அஜரத் ஆதம் தலைமையில், திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு, முத்தால ராவுத்தர் பீடத்துக்கு மலர்போர்வை போர்த்தியும், பூக்களால் அலங்கரித்தும், பொரி, அப்பம், போளி, சர்க்கரை, மாவு போன்றவற்றை வைத்தும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    நள்ளிரவில் திரவுபதி அம்மன், கிருஷ்ணர், அர்ச்சுனருக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் முத்தால ராவுத்தர் வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடை பெறுகிறது.
    • 9-ந்தேதி நள்ளிரவில் அம்மனை பேழையில் மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

    காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம், ஆயிரமாக படைக்கப்படுவதால் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடை பெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பூஜை விழா இன்று இரவு பேழையிலிருந்து (பெட்டி) அம்பாளை எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று மதியம் 1,000 மண் பானைகளில் பக்தர்கள் பொங்கல் வைத்து, கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு திரு-பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோவிலிலிருந்து, ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வரிசை பொருட்களை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பழங்கள், பலகாரங்கள், சித்திரானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் ஆயிரம், ஆயிரமாய் எடுத்து வரப்பட் டன. தொடர்ந்து பொங்கல், வரிசைப் பொருட்கள் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) அதிகாலை அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    9-ந்தேதி நள்ளிரவில் அம்மனை பேழையில் மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. காரைக்கால் ஆயிரங்காளியம்மன் பூஜை விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    ×