search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Thalaivas"

    புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் 5 போட்டியில் 60 புள்ளிகள் குவித்து அசத்தியுள்ளார். #ProKabaddiLeague
    தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 5 ஆட்டத்தில் 60 புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளார். இதில் ரைடு மூலம் 59 புள்ளகளை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அவரது அணி முன்னேற்றம் காண முடியவில்லை. அஜய் தாகூருக்கு அடுத்தப்படியாக தமிழ் தலைவாஸ் அணியில் அதுல் 24 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    டேக்கிள் பாபிண்டில் மஞ்சித் ஷில்லா முன்னிலையில் உள்ளார். அவர் 16 புள்ளிகளை பெற்றுள்ளார். மஞ்சித் மொத்தம் 19 புள்ளி எடுத்துள்ளார். அருண், தர்‌ஷன் ஆட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதில் அருண் இதுவரை 1 புள்ளி கூட பெற்றது கிடையாது. தர்‌ஷன் 4 புள்ளிகளை எடுத்துள்ளார்.
    புரோ கபடி லீக்கில் இன்றைய பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் எழுச்சிபெறும் என்று பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார. #ProKabaddiLegaue
    புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. தனது தொடக்க சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தான் மோதிய 22 ஆட்டத்தில் 6-ல் மட்டுமே வென்றது. கடைசி இடத்தை பிடித்து பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    இதைததொடர்ந்து இந்த ஆண்டுக்கான புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியில் வீரர்கள் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னையில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான சீசனில் முதல் லெக்கில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி எதிர் பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை 42-26 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தியது.

    ஆனால் அதை தொடர்ந்து 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. உபி. யோதாவிடம் 32-37 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்சிடம் 28-33 என்ற கணக்கிலும், பெங்கால் வாரியர்சிடம் 37-48 என்ற கணக்கிலும், பெங்களூர் புல்சிடம் 27-36 என்ற கணக் கிலும் தோற்றது.

    5 ஆட்டத்தில் 1 வெற்றி, 4 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி மோதும் 6-வது போட்டி இன்று நடக்கிறது.

    சோனிபட்டில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெற்று முன்னேற்றம் காணும் என்று தலைமை பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விசே‌ஷ பேட்டியில் கூறியதாவது:-

    வீரர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், தொடர்ந்து போட்டிகளில் ஆடியதாலும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தொடர்ச்சியாக தோல்வி ஏற்பட்டது. மேலும் வீரர்களை மடக்கி பிடிப்பதில் முன்னேறி சென்று மிகவும் அவசரம் காட்டியதாலும் அணிக்கு பாதகமான நிலை ஏற்பட்டது.



    எதிர் அணி வீரர்களின் ஆட்டத்திறனை தொடக்கத்திலேயே அறிய முடியாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும். டேக்கிள் (வீரர்களை மடக்கி பிடித்தல்) செய்வதில் முன்னேற்றம் அடைவது அவசியம். பயிற்சியின்போது வீரர்களின் தவறுகளை சுட்டி காட்டியுள்ளோம்.

    இனிவரும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடி எழுச்சிபெறும். 6 நாள் ஓய்வு வீரர்கள் இடையே புத்துணர்வை அளித்துள்ளது. காயம் காரணமாக சுகேஷ் ஹெக்டே ஆடாதது அணிக்கு பாதிப்பே. இதேபோல சுர்ஜித்சிங் 2-வது ஆட்டத்திலேயே காயம் அடைந்தார்.

    ரைடு செய்வதில் சிறந்தவர்களான இந்த இருவரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது பலமே. கேப்டன் அஜய்தாகூர் தனது சிறப்பான ரைடு மூலம் புள்ளிகளை குவித்து வருகிறார். இந்த இருவரும் அவரது நெருக்கடியை குறைப்பார்கள்.

    ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் ஒருங்கிணைப்புடன் ஆடி வெற்றியை தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர் அணி வீரர்களை பற்றி தற்போது நன்கு அறிந்து வைத்து இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடும். தொடர் தோல்வியில் இருந்து மீண்டு இனி வரும் ஆட்டங்களில் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியை தழுவியது. #ProKabaddi
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    ‘பி’ பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் மல்லுகட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 8-9 என்று இருந்த போது வரை மட்டுமே சற்று தாக்குப்பிடித்து ஆடுவது போல் தெரிந்தது.

    பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் தனி வீரராக தமிழ் தலைவாசை சூறையாடினார். தொடக்கத்தில் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுத்த அவர் முதல்பாதி ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருந்த போது ஒரே ரைடில் தமிழ் தலைவாசின் 5 வீரர்களை காலி செய்தார். இதனால் பெங்களூரு அணியின் புள்ளி எண்ணிக்கை கிடுகிடுவென எகிறியது. முதல் பாதியில் அவர்கள் 28-12 என்ற புள்ளி கணக்கில் மிக வலுவான முன்னிலை பெற்றனர்.

    இதனால் பிற்பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடினார். வழக்கம் போல் 2-வது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் கடும் போராட்டம் கொடுத்தாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    முடிவில் பெங்களூரு புல்ஸ் அணி 48-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு புல்ஸ் வீரர் பவான் செராவத் ரைடு மூலம் மட்டும் 20 புள்ளிகளை அள்ளினார். தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் 19 புள்ளிகள் சேர்த்தார்.

    தொடக்க ஆட்டத்தில் பாட்னா பைரட்சை வென்ற தமிழ் தலைவாஸ் அணி, அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே உ.பி.யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளிடம் மண்ணை கவ்வியிருந்தது.

    முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி முதல் பாதியில் 15-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.

    பிற்பகுதியில் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். 10-வது நிமிடத்தில் ஆல்-அவுட் செய்து ஜெய்ப்பூரின் புள்ளியை (22-23) நெருங்கினர். அதன் பிறகு இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்த வண்ணம் இருந்தனர். 30-27 என்று முன்னிலை பெற்றிருந்த ஜெய்ப்பூர் அணியினர் கடைசி கட்டத்தில் ‘பிடி’யை நழுவ விட்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது. சித்தார்த் தேசாய் (13 புள்ளி), ரோகித் பாலியன் (7 புள்ளி) ஆகியோர் மும்பை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.

    இன்றுடன் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi
    புரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi
    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    அதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.



    அஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.
    புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி வீழ்ந்தது. #ProKabaddi #TeluguTitan #TamilThalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்தில் சற்று ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி அதன் பிறகு தனது பிடியை தளரவிட்டது. 8-8 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்த பிறகு தெலுங்கு அணியின் கை மேலோங்கியது. எதிராளியை மடக்கி பிடிக்கும் யுக்தியில் தமிழ் தலைவாசை விட தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.



    முதல் பாதியில் 17-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த அணி இரண்டு முறை ஆல்-அவுட் ஆன போதிலும், அவர்களின் வீறுநடையை தடுக்க முடியவில்லை. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 28-33 என்ற புள்ளி கணக்கில் பணிந்தது. அதிகபட்சமாக அஜய் தாகூர் (தலைவாஸ்), ராகுல் சவுத்ரி (தெலுங்கு) ஆகியோர் ரைடு மூலம் தலா 9 புள்ளிகள் சேகரித்தனர்.

    தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வென்று இருந்த தமிழ் தலைவாஸ் அணி, அடுத்த ஆட்டத்தில் உ.பி. யோத்தாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

    முன்னதாக தபாங் டெல்லி-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் (டை) முடிந்தது. ஒரு கட்டத்தில் 28-24 என்ற கணக்கில் குஜராத் முன்னிலை வகித்த நிலையில் கடைசி 5 நிமிடங்களில் டெல்லி அணியினர் நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர்.

    சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi #TeluguTitan #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகளும் மற்றோரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. #ProKabbadi #tamilthalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவிடம் போராடி தோற்றது.

    ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளியுடன் இருக்கும் தமிழ் தலைவாஸ் 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சை சந்திக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள சுனில்குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- ஜோகீந்தர் சிங்நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. #ProKabbadi #tamilthalaivas
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை உ.பி. யோதா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #Prokabaddi2018
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதா அணிகள் மோதின.

    முதல் போட்டியில் வென்ற உற்சாகத்தில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. ஆனால், 37-32 என்ற கணக்கில் உபி யோதா அணி வெற்றி பெற்றது.



    முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 4-18 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. அதன்பின், கேப்டன் அஜய் தாகூர் மற்றும் அதுல் ஆகியோர் புள்ளிகள் பெற்றனர். இறுதியில், 37-32 என்ற கணக்கில் நெருங்கி வந்து தோல்வியை தழுவியது.

    இதையடுத்து, உபி யோதா அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  #Prokabaddi2018
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை யோதை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. #Prokabbadi #tamilthalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    ஜனவரி 5-ந்தேதிவரை நடைபெறும் இந்த புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    அவை 2 பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளது. ‘ஏ’  பிரிவில் புனே பில்தான், யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும், ஒவ்வொரு அணியும் 22 ‘லீக்‘ ஆட்டத்தில் விளையாடும்.

    தொடக்க ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. 42-20 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவை எளிதில் வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 14 புள்ளிகளும், காஜித்சிங் 7 புள்ளிகளும், அமித் ஹோடா 7 புள்ளியும், ஜஸ்விர்சிங், மன்ஜித்சில்லார் தலா 3 புள்ளியும் எடுத்தனர். பாட்னா அணியில் பிர்தீப் நார்வால் 11 புள்ளியும், மன்ஜித் 8 புள்ளியும் பெற்றனர்.

    புனே- மும்பை அணிகள் மோதிய 2-வது ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டையில் முடிந்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் உ.பி.யோதாவை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழும் தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது. ரெய்டில் கேப்டன் அஜய் தாகூர், சர்ஜித்சிங் ஆகியோரை மடக்கி பிடிப்பதில் அமித் ஹூடா, மன்ஜித், தர்‌ஷன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உ.பி. யோதா அணியில் கேப்டன் ரிஷாங்க் தேவதிகா, சாகர் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கிரிஷ் தலைமையிலான புனே- சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #tamilthalaivas
    சென்னையில் நேற்று தொடங்கிய புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. #ProKabadi #TamilThalaivas #PatnaPirates
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42 - 26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார். #Prokabaddi2018
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டத்தில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. #Prokabaddi2018
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை சென்னை, சோனிபட், புனே, பாட்னா, கிரேட்டர் நொய்டா (உ.பி.), மும்பை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் தாக்கூர், மன்ஜித் ‌ஷலாங், அமித் ஹூடா, ஜஸ்விர்சிங் தர்‌ஷன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து 3 முறை பட்டம் வென்றுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக கேப்டன் பர்தீப் நார்வால் உள்ளார்.

    மேலும் தீபக் நார்வால் ஜெய்தீப், விகாஸ் காலே போன்ற வீரர்கள் உள்ளனர். பலம் வாய்ந்த பாட்னாவுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இரவு 9 மணிக்கு மற்றொரு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை- புனேரி பல்தான் மோதுகின்றன. #Prokabaddi2018
    புரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் தெரிவித்தார். #ProKabaddileague #AjayThakur
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. சோனாபட், புனே, பாட்னா, நொய்டா உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது.

    புரோ கபடி லீக் போட்டி தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி எதிர்பார்த்தபடி ஜொலிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. 22 லீக் ஆட்டங்களில் ஆடிய அந்த அணி 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 2 ஆட்டங்கள் டையில் முடிந்தது. இந்த சீசனில் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் புதிய சீசன் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணி பின்னடைவை சந்தித்தது பற்றி?

    பதில்: கபடி இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. மேலும் பல நாடுகள் கபடியை ஒரு தீவிரமான விளையாட்டாக எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளில் கபடி ஒரு முக்கிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. எனவே கபடியில் முன்பு போல் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது கடினமாகிறது. புரோ கபடியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் நமக்கு இணையான பலத்துடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    கேள்வி: கடந்த தொடர் தமிழ் தலைவாஸ் அணியினருக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்த தொடர் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: கடந்த ஆண்டு எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆண்டு எங்கள் அணியில் மூத்த மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான விகிதத்தில் சேர்க்கப்பட்டு நாங்கள் ஒரு சிறந்த அணியாக வந்துள்ளோம். இந்த ஆண்டு எங்களுக்குரியது என்பதை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம்.

    கேள்வி: கடந்த தொடருடன் ஒப்பிடும்போது இந்த சீசனில் உங்கள் அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: இந்த தொடரில் எங்கள் அணியில் பயிற்சியாளர் உட்பட பல்வேறு புதுமுகங்களை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும் தற்போதைய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரனை 2014-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பதிலும், அவர்களை எப்போதும் முழு உத்வேகத்துடன் தயார் நிலையில் வைத்திருப்பதிலும் அவர் சிறந்த அனுபவம் கொண்டவர். அணிக்கு பல புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூலம் நாங்கள் புதிய யுக்திகளையும், நுட்பங்களையும் கற்றுக்கொள்கிறோம்.

    கேள்வி: இந்த ஆண்டு போட்டிக்கு எப்படி தயார் ஆகி இருக்கிறீர்கள்?

    பதில்: போட்டிக்கு மிகச்சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். சமீப காலமாக கபடியை பெருவாரியான மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த தொடரை எங்களது திறமையை வெளிப்படுத்த மிக சிறந்த மேடையாக கருதுவதுடன், பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க ஆர்வமாக உள்ளோம்.

    கேள்வி: புரோ கபடி லீக் இந்திய கபடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

    பதில்: நாங்கள் முன்பு சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. புரோ கபடி வருகையால் இந்திய கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்துள்ளது. தற்போது அணியின் வீரர்கள் பலரும் உள்ளூர் மக்களுக்கு மிகுந்த பரிச்சயமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இது எங்களை மேலும் நன்றாக செயல்பட தூண்டுகிறது. அத்துடன் இது எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகிறது. புரோ கபடி அறிமுகத்துக்கு பின்னர் கபடி ஆட்டம் குறித்த மக்களின் சிந்தனை வெகுவாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறோம்.

    கேள்வி: தமிழ் தலைவாஸ் அணியின் இலக்கு என்ன?

    பதில்: இந்த சீசனில் எங்களது முதற்கட்ட இலக்கு ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைவது ஆகும். அந்த நிலையை எட்டிய பிறகு அடுத்த கட்டம் குறித்து திட்டமிடுவோம். கபடியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி ஒவ்வொரு குழந்தைக்கும் கபடி விளையாட்டில் ஆர்வம் உண்டாக்க வேண்டும் என்பது தான் தமிழ் தலைவாஸ் அணியின் விருப்பமாகும். அடுத்த தலைமுறை வீரர்களால் இந்திய கபடி இன்னும் உயர்வான இடத்தை அடையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.  #ProKabaddileague #AjayThakur
    ‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்படும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார். #TamilThalaivas #Bhaskaran
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், மும்பை (ஏ பிரிவு), பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.



    லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். சென்னையில் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், பயிற்சியாளர் கே.பாஸ்கரன், அணியின் தூதுவர் நடிகர் விஜய் சேதுபதி, தலைமை செயல் அதிகாரி வீரென் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு சீருடையை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய சீருடையுடன் போஸ் கொடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் (கேப்டன்), அனில் குமார், அமித் ஹூடா, மன்ஜீத் ஷில்லார், ஜஸ்பிர்சிங், சுகேஷ் ஹெக்டே, சுர்ஜீத் சிங், சுனில், அருண், தர்ஷன், கோபு, அதுல், பிரதாப், ஜெயசீலன், அபிநந்தன் சண்டேல், ஆனந்த், விமல் ராஜ், ஜா மின் லீ, சான் சிக் பார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    விழாவில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரன் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை தவற விட்டது எதிர்பாராததாகும். ஈரானுக்கு எதிரான அரைஇறுதியில் நமது ஆட்டம் சரியாக அமையவில்லை. வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போவது எப்போதாவது நடக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் 2010-ம் ஆண்டு முதலே ஈரான் அணி ஆசிய விளையாட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. ஆசிய விளையாட்டு போட்டியில் நடந்த தவறு மீண்டும் நடக்காது. வருங்காலங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். தமிழ் தலைவாஸ் அணியில் சீனியர் மற்றும் இளம் வீரர்கள் போதுமான அளவில் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் தான் போட்டியில் சறுக்கியது. அஜய் தாகூர் ஆட்டம் இழந்தால், அதன் பிறகு அணியை வழிநடத்த அனுபவம் மிக்க வீரர்கள் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி மிகச்சிறப்பாக செயல்படும்’ என்று தெரிவித்தார்.

    தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில், ‘நமது பாரம்பரிய ஆட்டமான கபடி வேகம், விவேகம் நிறைந்ததாகும். மக்களின் மனம் கவர்ந்த இந்த போட்டிக்கு நாம் எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டை தாண்டி கபடி புதிய உச்சத்தை எட்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  #TamilThalaivas #Bhaskaran
    ×