search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ajay thakur"

    புனேரி பல்டான் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். #ProKabaddi2018 #AjayThakur
    புனே:

    அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 7-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் புனேரி பல்டானை நேற்று எதிர்கொண்டது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அஜய் தாகூர் அபாரமாக விளையாடி ரைடு மூலம் 12 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதேபோல அனுபவம் வாய்ந்த ஜஸ்வர்சிங்கும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் 8 புள்ளிகள் எடுத்தார். வீரர்களை மடக்கி பிடிப்பதில் மஞ்சித் சில்லார் நன்றாக செயல்பட்டார்.

    இந்தப்போட்டியில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். அவர் 87 ஆட்டத்தில் 609 ரைடு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் சவுத்ரி 700 புள்ளிகளும், பர்தீப் நர்வால் 671 புள்ளிகளும் ரைடு மூலம் எடுத்தனர்.

    ஒட்டு மொத்தமாக டேக்கிள் பாயண்டையும் சேர்த்து 630 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் ரைடு மூலம் 81 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

    தமிழ்தலைவாஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 3-வது இடத்தில் இருக்கிறது.அந்த அணி 8-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்சுடன் வருகிற 26-ந்தேதி மோதுகிறது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலாஸ் (இரவு 8 மணி), புனேரி பில்டான்- உ.பி.யோதா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #AjayThakur
    புரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi
    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    அதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.



    அஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.
    சென்னையில் நேற்று தொடங்கிய புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. #ProKabadi #TamilThalaivas #PatnaPirates
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42 - 26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார். #Prokabaddi2018
    புரோ கபடி லீக் போட்டிக்கு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக தயாராகி இருக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் தெரிவித்தார். #ProKabaddileague #AjayThakur
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. சோனாபட், புனே, பாட்னா, நொய்டா உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதி நடக்கிறது.

    புரோ கபடி லீக் போட்டி தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி எதிர்பார்த்தபடி ஜொலிக்காமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. 22 லீக் ஆட்டங்களில் ஆடிய அந்த அணி 6 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 2 ஆட்டங்கள் டையில் முடிந்தது. இந்த சீசனில் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் புதிய சீசன் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணி பின்னடைவை சந்தித்தது பற்றி?

    பதில்: கபடி இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. மேலும் பல நாடுகள் கபடியை ஒரு தீவிரமான விளையாட்டாக எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளில் கபடி ஒரு முக்கிய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. எனவே கபடியில் முன்பு போல் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது கடினமாகிறது. புரோ கபடியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களும் நமக்கு இணையான பலத்துடன் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    கேள்வி: கடந்த தொடர் தமிழ் தலைவாஸ் அணியினருக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்த தொடர் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: கடந்த ஆண்டு எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆண்டு எங்கள் அணியில் மூத்த மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான விகிதத்தில் சேர்க்கப்பட்டு நாங்கள் ஒரு சிறந்த அணியாக வந்துள்ளோம். இந்த ஆண்டு எங்களுக்குரியது என்பதை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம்.

    கேள்வி: கடந்த தொடருடன் ஒப்பிடும்போது இந்த சீசனில் உங்கள் அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: இந்த தொடரில் எங்கள் அணியில் பயிற்சியாளர் உட்பட பல்வேறு புதுமுகங்களை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும் தற்போதைய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரனை 2014-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோதில் இருந்தே எனக்கு நன்கு தெரியும். மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்பதிலும், அவர்களை எப்போதும் முழு உத்வேகத்துடன் தயார் நிலையில் வைத்திருப்பதிலும் அவர் சிறந்த அனுபவம் கொண்டவர். அணிக்கு பல புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூலம் நாங்கள் புதிய யுக்திகளையும், நுட்பங்களையும் கற்றுக்கொள்கிறோம்.

    கேள்வி: இந்த ஆண்டு போட்டிக்கு எப்படி தயார் ஆகி இருக்கிறீர்கள்?

    பதில்: போட்டிக்கு மிகச்சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். சமீப காலமாக கபடியை பெருவாரியான மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த தொடரை எங்களது திறமையை வெளிப்படுத்த மிக சிறந்த மேடையாக கருதுவதுடன், பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க ஆர்வமாக உள்ளோம்.

    கேள்வி: புரோ கபடி லீக் இந்திய கபடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

    பதில்: நாங்கள் முன்பு சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. புரோ கபடி வருகையால் இந்திய கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்துள்ளது. தற்போது அணியின் வீரர்கள் பலரும் உள்ளூர் மக்களுக்கு மிகுந்த பரிச்சயமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இது எங்களை மேலும் நன்றாக செயல்பட தூண்டுகிறது. அத்துடன் இது எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் உதவுகிறது. புரோ கபடி அறிமுகத்துக்கு பின்னர் கபடி ஆட்டம் குறித்த மக்களின் சிந்தனை வெகுவாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறோம்.

    கேள்வி: தமிழ் தலைவாஸ் அணியின் இலக்கு என்ன?

    பதில்: இந்த சீசனில் எங்களது முதற்கட்ட இலக்கு ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைவது ஆகும். அந்த நிலையை எட்டிய பிறகு அடுத்த கட்டம் குறித்து திட்டமிடுவோம். கபடியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி ஒவ்வொரு குழந்தைக்கும் கபடி விளையாட்டில் ஆர்வம் உண்டாக்க வேண்டும் என்பது தான் தமிழ் தலைவாஸ் அணியின் விருப்பமாகும். அடுத்த தலைமுறை வீரர்களால் இந்திய கபடி இன்னும் உயர்வான இடத்தை அடையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.  #ProKabaddileague #AjayThakur
    ×