search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Temple"

    • இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு.
    • இறைவியின் பெயர் மரகதாம்பிகை.

    எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.

    இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.

    கோவில் அமைப்பு

    நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிலின் சிறப்பு

    திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    அம்மனை வழிபடும் சூாியன்

    மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.

    முக்கிய திருவிழாக்கள்

    சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.

    • இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

    சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.

    கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது.

    இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, 'இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்' எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது.

    அன்று முதல் இந்தப் பகுதி 'கருந்தட்டான்குடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'கரந்தை' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.

    ஆரூண், பிள்ளையார்பட்டி.

    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.

    நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    வரலாற்றில் நீங்கா இடம்

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.

    சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.

    பல பெயர்கள்

    நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

    தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.

    சிதிலமடைந்த கோவில்

    காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.

    மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    திருப்பணி

    மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.

    சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ரூரல் பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் லூர்தம்மாள்புரம், ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து 1-ம் கேட் மற்றும் சிவன் கோவில் பகுதியில் நடைபெறும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளையும் துறைசார்ந்த அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த வடிகால்கள் தூர்ந்து போய் நீர் செல்வதற்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

    எனவே தேவையான இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கவும் உத்தரவிட்டு ள்ளேன், இதனால் இனிமேல் இந்த பகுதியில் மழை நீர் தேங்காது என்று உறுதி அளிக்கிறேன் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜஸ்பார், மண்டல தலைவர் நிர்மல்ராஜ்,மாநகர கவுன்சிலரும், பகுதி தி.மு.க. செயலாளருமான சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, அந்தோணிமார்சுலின், முன்னாள் கவுன்சிலர் வட்டசெயலாளர் ரவீந்திரன், மாணவரணி சோமநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது.
    • அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

    இங்கு பக்தர்களுக்கு காட்சி தரும் சுயம்பு வடிவ லிங்கத்தினை 'நெல்லையப்பர்' என்ற பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். லிங்கத்தின் மத்திய பகுதியில் அம்பாளின் உருவம் தெரிகின்றது. அபிஷேக சமயத்தின் போது அந்த காட்சியினை தரிசனம் செய்யலாம். சிவபெருமானும், சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை இந்த காட்சி உணர்த்துகிறது. இதை உணர்த்தும் மற்றொரு வகையில் பிரதோஷ சமயத்தின் போது இந்த கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரி அன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும், அம்பிகைக்கும் சேர்த்துதான் நான்கு ஜாம அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்படும். எந்தவிதத்திலும் சிவனையும், அம்பாளையும் இத்திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. சிவனும் சக்தியும் ஒன்று என்பதனை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமாகவே இது அமைந்திருக்கிறது.

    இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கென்று என்று தனி ராஜன் கோபுரம் இருக்கிறது. அம்பாளுக்கு என்று தனி இராஜகோபுரம் இருக்கின்றது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.

    பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.

    இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது .

    தல வரலாறு

    பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கி விட்டு, கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது. தினந்தோறும் நடந்தால்! இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறினார். மன்னர் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது. அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் திக்குமுக்காடிய சமயத்தில், ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோவிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.

    சிவனும் சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் இந்த கோவிலில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாக வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு இந்த கோவிலில் நவகிரகத்தில் உள்ள புதனை வழிபடுவது சிறந்தது.

    செல்லும் வழி பேருந்து மூலமாக செல்ல சென்னையிலிருந்து சுமார் 10 மணி நேரங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். மதுரையில் இருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது.

    முகவரி:

    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்,

    திருநெல்வேலி 627 001.

    திருநெல்வேலி மாவட்டம்.

    தொலைபேசி: +91-462-233 9910.

    • இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    • செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது.

    செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது. திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.

    சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

    இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், 'உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..' என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான 'வேண்ட வளர்ந்த நாதர்' சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    • இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது.
    • இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன.

    சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று, சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.

    இந்தக் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகிலுள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். மூலவர் இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான், சந்திரசேகர சுவாமி என்ற பெயர்களாலும், அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலின் முருகப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கர யந்திரம் இங்கே ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்து இக்கோவிலின் பழமையை உணர முடியும்.

    ஒரு முறை இந்தக் கோவிலின் வழியாக ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாகச் சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் செய்யும் தர்ப்பணக் காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள்.

    ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவனை, முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.

    தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது. பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னிதி உள்ளது. எனவே பழங்காலத்தில் 'காமத்தூர்' என்று பெயர் பெற்றது.

    கோவில் அமைப்பு:

    இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது. துவஜஸ்தம்பம், நந்தி மற்றும் விநாயகர் சன்னிதி நுழைவு வாசலுக்குப் பிறகு உடனடியாகக் காணலாம். அடுத்ததாக கருவறையில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை அமிர்தாம்பிகை அருளாசி தருகிறார். அவர் நின்ற தோரணையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் முருகன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு ஆறு முகங்களும், 12 கைகளும் உள்ளன. தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலிலும் இதேபோன்ற முருகன் சிலை உள்ளது. திருப்புகழ் பாடல்களில் இந்த முருகப்பெருமான் போற்றப்பட்டுள்ளார்.

    கோவில் வளாகத்தில் காமாட்சி தேவி சன்னிதி உள்ளது. இவளை 'திரிபுரசுந்தரி' என்றும் அழைப்பர். ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசங்கரர், இந்த அன்னையின் சன்னிதியில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி இருக்கிறார். இந்த அன்னை சன்னிதியின் துவாரபாலாகியின் சிலைகளில், பல இடங்களில் தட்டும்போது பல்வேறு இசைக் குறிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த அன்னையின் சன்னிதிக்கு எதிரே, பச்சைக் கல்லால் ஆன யாழியைக் காணலாம்.

    கோவில் வளாகத்தில் நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு நடராஜப் பெருமானின் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்டது. இங்கே அவரது இடது கால் தரையில் உள்ளது. வலது கால், இடது காலுக்கு பின்புறம் மடங்கிய வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான நடன முத்திரை 'சதுர தாண்டவம்' என்று அறியப்படுகிறது. நடராஜருக்கு அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் சகஸ்ர லிங்கமும் உள்ளது. இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.

    சிவாலய காவலரான பைரவர் கம்பீரமாக நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். உலகின் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் நவக்கிரக நாயகர்களின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார் சிவபிரான். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான்.

    சந்திரனின் கலைகளில் ஒன்றை தன் சிரத்தில் ஏற்று, சந்திரசேகரராகத் திருநாமம் கொண்டார் இந்த மூலவர். சோமவாரம் தான் சிவ வழிபாட்டுக்கு சிறந்த நாள். சோமன் (சந்திரன்) வழிபட்டுப் பலனடைந்ததன் காரணமாக, திங்கட்கிழமைகளில் சந்திரசேகரைத் தரிசித்து வழிபடுவது பெரும் பலன் அளிக்கும். சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

    இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காமக்கூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரர் பெருமானை, ஒருமித்த சிந்தனையுடன் கைகுவித்து தொழுதால் விருப்பம் அனைத்தும் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் யெ்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ஆரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, காமக்கூர் திருத்தலம். ஆரணியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.

    பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று கணபதி ஹோமத்துடன் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி சப்பர பவனி நடந்தது. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் செய்திருந்தார். விழாவில் தெரிசை அய்யப்பன், தொழில் அதிபர்கள் தவமணி, பெருமாள், நடராஜன், மண்டகப்படிதாரர் ஹரிகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.

    • சிவன், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.
    • ண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார்.

    சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்.

    தல வரலாறு:

    முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.

    எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், ""நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்," என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார்.

    முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் "ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?" எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். வயலில் வேலை செய்ததால் "விவசாயி" என்றும் பெயர் பெற்றார்.

    இசைக்கும் திருமால், பிரம்மா:

    நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இசைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் இருவரையும் "இசையமைப்பாளர்" என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

    தெட்சிணாமூர்த்தி சிறப்பு:

    பொதுவாக தெட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், இந்தக் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) உள்ள தெட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவரிடம் வேண்டிக்கொண்டால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

    சிவன் நீர் இறைத்த கலம்:

    சிவன், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. பங்குனி 20ம் தேதியில் இருந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனி சன்னதியில் இருக்கிறாள். சண்டிகேஸ்வரர் இங்கு, மனைவியுடன் இருக்கிறார். புடைப்பு சிற்பமாக உள்ள விநாயகரை, நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு துர்க்கைக்கு தனி சன்னதி இருக்கிறது.

    திருவிழா: வைகாசியில் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்.

    இருப்பிடம்: கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ்வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது.

    சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்,

    திருத்திணை,

    கடலூர் மாவட்டம்.

    • பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.
    • குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பாடலீஸ்வரருக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

    இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

    தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    • இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும்.
    • காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற சிவபெருமானின் 274 சிவாலயங்களில் இது 188-வது ஆலயமாகும். மேலும் தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124-வது தலமாகும்.

    சிவபெருமான், தேவலோகத்தில் வீற்றிருக்கும் வடிவமே, 'விடங்க வடிவம்' ஆகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டும் என்று சிவபெருமான் விரும்பினார். அதற்காக ஒரு திருவிளையாடலை அவர் நிகழ்த்தினார். அதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறாகவும் அமைந்திருக்கிறது. அதைப் பார்ப்போம்.

    தல வரலாறு

    தேவலோகத்தின் அதிபதியான இந்திரன், ஒரு முறை சிவபெருமானிடம் விடங்க வடிவத்தை யாசித்தான். அப்போது சிவன், "இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கடினம்" என்று கூறினார். இருப்பினும் இந்திரன் விடாமல் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், அந்த லிங்கத்திற்கு நல்ல முறையில் பூஜைகளை செய்வித்து வந்தான்.

    இந்த நிலையில் முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர், பூலோகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது மக்கள் பலரும் மிருகங்களால் துன்பப்பட்டனர். இதனால் அவர் வனத்திற்குள் வேட்டைக்குச் சென்று மிருகங்களை கட்டுப்படுத்த எண்ணினார். அதன்படி வேட்டையாடுவதற்காக காவிரி கரைக்கு வந்தாா்.

    ஒரு நாள் சிவராத்திரி இரவில் முசுகுந்த சக்கரவர்த்தி, வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சில முனிவர்கள் சென்றனர். அவர்களிடம் மன்னன், 'எங்கு செல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, அந்த முனிவர்கள், "நாங்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப் போகிறோம்" என்று கூறினர். சிவராத்திரி அன்று மிருகங்களை வேட்டையாட சாஸ்திரம் அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    இதனால் வருத்தம் அடைந்த முசுகுந்த மன்னன், தன்னுடைய ராஜ உடையை களைந்து, முனிவர்களின் உடையை தரித்து, அந்த முனிவர்களுடனேயே, சிவ பூஜை செய்வதற்காகச் சென்றார். தன் தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்தார்.

    அப்போது ஈசன், "இந்திரனிடம் இருக்கும் விடங்க வடிவ சிவலிங்கத்தை எப்படியாவது வாங்கி வந்து, பூலோகத்தில் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். அந்த சமயத்தில் வாலாசுரன் என்ற அசுரனை கொல்பவர்களுக்கு, தன்னிடம் உள்ள ஐராவத யானை, வெண்குடை தவிர எதைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் அறிவித்திருந்தான்.

    எனவே வாலாசுரனைக் கொன்று, விடங்க லிங்கத்தை இந்திரனிடம் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரும்படி, சிவபெருமானே மன்னனுக்கு யோசனையும் கூறினார்.

    உடனே முசுகுந்த சக்கரவர்த்தி, "இறைவா.. அப்படியே செய்கிறேன். ஆனால் இந்திரன் விடங்கரைப் போலவே உள்ள வேறு ஏதாவது ஒரு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது அல்லவா? எனவே எனக்கு முதலில் உங்களுடைய விடங்க வடிவம் எப்படி இருக்கும் என்பதை காண்பித்தருள வேண்டும்" என்று வேண்டினார்.

    சிவபெருமானும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு தன்னுடைய விடங்க லிங்க வடிவத்தைக் காட்டி அருளினார். அப்போது அங்கு பெரும் ஒளி வெள்ளம் தோன்றியது. முசுகுந்தன், அவருடன் இருந்த முனிவர்கள் மட்டுமின்றி தேவலோகமே அங்கு திரண்டு விட்டது.

    இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், "இறைவா.. தாங்கள் இந்திரலோகத்திலும் இருங்கள், இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உங்களுக்கு ஆலயம் எழுப்புகிறேன்" என்றார். முனிவர்களும், தேவர்களும் கூட ஈசனை மன்றாடியதால், கலியுக பக்தர்களுக்காக ஈசன் இங்கு விடங்க வடிவத்தில் தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

    மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிசுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், பைரவர் சன்னிதிகளும், கருவறை சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், மகாலட்சுமி ஆகியோரும் காட்சி தருகின்றனர். நடராஜர் சபையும் உள்ளது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக பலா மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள இறைவனைப் பற்றி சமயக்குரவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப் பாடல்களை பாடியுள்ளனர்.

    இந்த திருத்தலத்தில் சூரிய பகவானும் வழிபாடு செய்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மற்றும் இறைவியை தன்னுடைய கதிர்களால் சூரியன் வழிபடும் நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவது அதிசயமானது. இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது மற்றொரு விசேஷம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது அமர்ந்திருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

    காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர். அவர்களை வழிபட்டால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர். மூலவருக்கு தெற்கு பக்கம் தியாகராஜா்- நீலவிடங்கராகவும், வடக்கே வேதாரண்யேஸ்வரரும் உள்ளனர். கோவிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைனை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம். செல்வ வளம் பெருகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலில் சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, வைகாசி விசாகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

    இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்குவளை என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும் திருவாய்மூர் திருத்தலம் இருக்கிறது.

    • இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • இத்தலம் வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

    நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் பெருமானாலும், திருஞானசம்பந்த பெருமானாலும் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமை போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவில் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இக்கோவில் இறைவன் மாணிக்க வண்ணர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

    5 நிலை ராஜகோபுரம்

    வடமொழி பெயராக இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த கோவில் அன்னைக்கு வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயரும் உள்ளது.

    கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் இரு பிரகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ்ந்த திருத்தலமாக உள்ளது. இத்தலம் மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பகுதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் என பெயர் ஏற்பட்டது.

    தற்கொலைக்கு முயன்ற மன்னன்

    முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடந்தபோது, சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்க திருமேனியின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதை அறிந்த மன்னர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இறைவன் இருப்பதை அறிந்தார். பின்னர் அந்த இடத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் மழையில்லாததால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளை புறந்தள்ளினர். இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியை போக்க முடியாமல், மக்களை நீதி நெறியுடன் நடத்த முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் எனக் கருதி தூக்கிட்டு் தற்கொலைக்கு முயன்றார்.

    தன்னலம் கருதாமல், தன் குடிமக்களின் நலனுக்காக தன்உயிரையும் துறக்க துணிந்த மன்னனைத் தடுத்து, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாணிக்க மழை பெய்ய செய்து மக்களின் வறுமையை போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பாம்பு தீண்டியது

    வைப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகன் இல்லாத அவர், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். மேலும் தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவர் வாக்களித்திருந்தார். காலப்போக்கில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த வணிகர் தனது 7 மகள்களில் 6 மகள்களை செல்வந்தர்களை தேடிப்பிடித்து மணம் செய்து வைத்தார்.

    தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-வது பெண், தன் தந்தை தன்னையும் தன் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் என அறிந்து தன் அத்தை மகனுடன் மதுரைக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதன்படி அவர்கள் சென்றபோது வழியில் இக்கோவிலின் தெற்குவீதியில் அவர்கள் தங்கி இருந்தபோது பாம்பு தீண்டி மணமகன் உயிரிழந்தார். இதனால் பெரும் துயரம் அடைந்த மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

    திருமணம்

    அந்த பெண்ணின் அழுகுரல், அங்கு தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது துயரை கேட்ட திருஞானசம்பந்தர், மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடி இறந்து கிடந்த மணமகனை உயிர் பிழைக்க செய்தார்.

    பின்னர் இறைவன் திருவருள்படி வண்டுவார்குழலி-மாணிக்கவண்ணர் முன்னிலையில் வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

    புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கை கரையில் வேள்வி மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூன்று உலகங்களுக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச்செய்ய முடிவெடுத்தனர்.

    திருமால் மார்பில் உதைத்த முனிவர்

    அதன்படி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். உடனடியாக பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியை போக்க கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்து விட்டார்.

    தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.

    பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோவிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்ற தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.

    வரலட்சுமி நோன்பு

    ஆவணி மாதம் பவுர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம்.

    இதன்படி இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.

    குடமுழுக்கு

    மேலும் மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபட்டால் மீண்டும் கூடி வாழ்வது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    இக்கோவிலின் முக்கியப் பெருவிழா, சித்திரை திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி உள்ளன.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையி்ல் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து நாகூர் திட்டச்சேரி வழியாக திருமருகலை அடைந்து ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று தாிசனம் செய்யலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    ×