search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Self-confidence"

    • மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.
    • இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    பிரபலமான தொழில் அதிபர் டாட்டாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவர் தான் பயன்படுத்தும் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனாக்களை வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

    அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

    பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.பேனா மறதியை பற்றி விசாரித்தார்.

    அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்...

    1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

    2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

    3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

    4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

    5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

    6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

    மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    • தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது.
    • தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள்.

    உழைப்பு, கல்வி, விளையாட்டு, வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விட முடியாது. அதற்கு விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம்.

    துவண்டு விட கூடாது

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என்று தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமைபடுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.

    ஏமாற்றம்

    எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

    தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    வெற்றி தேவதை

    எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.

    எதிர்கால திட்டம்

    தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.

    தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

    ராஜேஸ்வரி, அரசு கலைக்கல்லூரி, மதுரை.

    • தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது.
    • சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.

    இன்றைய பெண்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது. ஏனெனில் ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரே பொழுதில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது என்கிறார்கள் தனியார் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்.

    பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்:

    * தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். மொழி அறிவும் இருக்க வேண்டும்.

    * தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

    * மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.

    * தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

    * ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

    * நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

    * நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

    * வழக்கமான செயல்களில் நிலைத்தன்மை இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

    • எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள்.
    • செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும்.

    வெற்றியை விரும்பாத மனிதரில்லை. எந்த ஒரு மனிதனாலும் தான் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைப்பான். ஆனால் பலரும் அதற்கான வழிகளை தேடுவதில்லை. குறிக்கோள் பற்றி சொல்லும் போது குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்பாதை எது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    எந்தவொரு மனிதனாக இருந்தாலும் முதலில் எதை பற்றியாவது சிந்திக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் போது தான் நாம் எதையாவது அடைய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்படும். படிப்பில் மந்தமாக இருந்து பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தனியாக இருந்த நேரத்தில் பலமணி நேரம் கற்பனையில் சூழ்ந்து இருந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கைக்கு ஓர் இலக்கு வேண்டும் என்பதை தீர்மானித்து வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. இவர் கருப்பின மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பேராடி வெற்றி கண்டார். நாமும் சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் வாழ்க்கையில் ஓர் லட்சியத்தோடு பயணித்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றியை தட்டி செல்ல முடியும். லட்சியம் இல்லா வாழ்வு-துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

    வாழ்வின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது படிப்பானாலும் சரி, வேலையானாலும் சரி எத்தனை இடர்கள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை. பணமோ, வயதோ, படிப்போ,ஊனமோ எதுவும் வெற்றிக்கு தடையில்லை என நம்ப வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தை கைவிட வேண்டும்.

    நல்ல மதிப்பீடுகளை வளர்த்து கொள்வதும் ஒருவகையில் நம் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைவதுண்டு. நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளியில் தெரியும் வகையில் நாம் நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கற்றுத்தருவதைவிட தம் ஆன்மாவை தீமைகள் எதுவும் அணுகாமல் தூய்மையாக வைத்திருப்பதும் ஒரு வகையில் வெற்றியின் ரகசியம்தான்.

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல் நாம் எடுத்த காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் விடா முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நினைக்கும் செயலில் வெற்றி காணும் வரை விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலந்தி வரை பின்னுவது போல் எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் கூட தங்களுடைய விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதனை படைத்து கொண்டிருப்பதை நாம் தினந்தோறும் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும் இருக்கிறோம்.

    உழைப்புக்கும் உயர்வுக்கும் இலக்கணம் என்றால் அது தாமஸ் ஆல்வா எடிசன் தான். உழைப்பில் தன்னை கரைத்து சமூகத்திற்கு பலவற்றை கண்டுபிடித்து கொடுத்தவர். முப்பத்தி எழு வயதில் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராகவும், 1929-ல் அமெரிக்காவின் உயர்ந்த பத்து மனிதர்களின் முதல் மனிதராகவும் திகழ்ந்தார். இத்தகைய உழைப்பு நம்மிடம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    கற்களில் உள்ளிருக்கும் தீப்பொறி பாறையை வேகத்தோடு தரையில் தேய்ப்பதால் உண்டாகிறது. அதுபோல் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி அவனை அழகுப்படுத்துகிறது. ஆர்வத்தோடு செய்யும் செயலே நம் வாழ்க்கையை மிகுந்த தைரியத்துடனும் மனவலிமையுடனும் நாம் எதிர்கொள்ள உதவும். எந்த செயலை தொடங்கும் போதும் மிகுந்த ஆர்வத்தோடு தொடங்குங்கள்.

    செயல்களில் உள்ள ஆர்வம் உங்களை முன்னிலைப்படுத்தும். கற்றுக்கொள்வதை சுலபமாக்கும். போட்டியில் கலந்து கொள்வது என்பது பாதி வெற்றிக்கு சமம். எப்போதும் உற்சாகம், ஊக்கம், நம்பிக்கை வெற்றி போன்றவகைளையே பேசுங்கள். தோல்வி போன்ற வார்த்தைகளே நினைத்து கூடப்பார்க்காதீர்கள்.

    இந்த உலகமே இந்தியர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் தாம் நம்மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது தான் கொடுமை. எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள், நம்பிக்கையுமன் முடியுங்கள், நம்பிக்கை குணமாக்கும், நம்பிக்கை நம்மை செம்மைப்படுத்தும், நம்பிக்கை இப்பொழுதே வெற்றி தரும்.

    நீங்கள் மிகவும் திருப்தியடைந்த ஒரு நாளை பாருங்கள். நீங்கள் செயல் எதுவும் செய்யாமல் சுற்றி திரிந்த நாளாக அது இருக்காது. மாறாக நீங்கள் பல செயல்கள் செய்ய வேண்டியிருந்து அந்த செயல்கள் அனைத்தையும் திருப்தியுடன் செய்து முடித்திருந்த நாளாகவே அது அமைந்திருக்கும். முன்பு வானமே எல்லை என்று கூறுவார்கள். உண்மையில் வானம்கூட எல்லையில்லை.

    தேடலே வாழ்க்கை அந்த தேடலை மாணவர்களாகிய நாம் தாம் அதை தேடிக் கண்டு கொள்ள வேண்டும். ஆன்மிக வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் உட்கார்ந்து கண்களை மூடி உள்ளே தேட வேண்டும். ஒவ்வொரு செயலின் உள்ளேயும் வெற்றியின் விதை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகுந்த முனைப்புடன் உழைத்தால் இப்போதே வெற்றி சாத்தியமான ஒன்றுதான். விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த மனிதனாக இருந்தாலும் சரி ஆணோ, பெண்ணோ, எந்த வயதிலும் சாதனை புரிந்து வெற்றிவாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

    வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அடித்தளமாகும்

    விடா முயற்சியே வெற்றியை தரும்.

    • சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
    • தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் பள்ளியின் தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் பி.எம்.கே பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக முன்னணி பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் கேட்கும் பொருட்களை உடனடியாக பெற்றோர்கள் வாங்கித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காலதாமதம் ஆகும் பட்சத்தில் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கின்றன. சிறிய ஏமாற்றங்கள் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே இதில் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறையை மாற்றி வளர்க்க வேண்டும் என்றார். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி தேவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் ராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி, குன்னம் சத்திரம் சேரன் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
    • சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம்.

    வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?

    நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. 'இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?' -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.

    வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.

    நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.

    இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது "தான்" என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .

    லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.

    தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். 'நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!' என மனந்தளரக் கூடாது. 'நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.

    சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி? 'என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.

    நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.

    எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . 'நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது', 'நம் தலையெழுத்து இதுதான்', 'வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்' என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.

    முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, 'தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது' என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.

    உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

    நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.

    நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.

    நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.

    வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!

    கட்டுரை:

    ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    சமூக ஆர்வலர்,

    மதுரை.

    • தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.
    • தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும்.

    'சிவப்பழகுதான் அனைவரையும் ஈர்க்கும். கருப்பாக இருப்பது அழகு அல்ல' என்று சருமத்தின் நிறத்தை தங்களின் அடையாளமாக எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெண்கள் பலர் உள்ளனர். தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அங்கு இருப்பவர்களின் சரும நிறமும் வேறுபடுகிறது.

    நமது நாடு வெப்பம் நிறைந்தது என்பதால், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதாகவே நம்முடைய நிறம் அமைந்துள்ளது. தனது ஆளுமையை உயர்த்திக் காட்ட நினைக்கும் பெண்களில் பலர், தங்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் போவதற்கு நிறம் ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கின்றனர். அவ்வாறு கருதுவதால் அவர்களை அறியாமலே தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. அதுவே அவர்கள் நினைத்த இலக்கை எட்ட முடியாதவாறு தடுத்துவிடுகிறது.

    அதிகமான நிறங்களை வகைப்படுத்துவதில் ஆண்களை விட, பெண்கள் சிறந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பல வண்ணங்களில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கூட, 'தன் நிறம் கருப்பு, அதனால் இந்த நிறம் பொருந்தாது, அந்த நிறம் பொருந்தாது' என்று தானாகவே ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நிறங்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அணிகிறோம். இது பல இடங்களில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும். நம் தோற்றம், நம்மை விட மற்றவருக்கு 20 சதவீதம் கூடுதல் அழகாகத் தெரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

    அழகான தோற்றத்துக்கான ஆலோசனைகள்:

    1. நிறத்திற்கு தகுந்த ஆடை அணிவதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நாகரிகமான ஆடையை அணிய பழகுங்கள். அவ்வாறு அணியும்போது உங்களை அறியாமலே மகிழ்ச்சி கூடும். அது தானாகவே உங்கள் முகத்தில் புன்முறுவலையும், மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்தும் பாராட்டு பெறுவீர்கள்.

    2. அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்குப் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகரியம் ஏற்படாது.

    3. எப்பொழுதும் புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். புன்னகையே பல சமயம் சிறந்த அலங்காரமாகும்.

    4. நிறத்தை பற்றிய கவலையை விடுத்து, உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை முழுமையாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பழகத் தொடங்குங்கள்.

    5. தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. உங்கள் நிறத்தைப் பற்றிய விமர்சனத்தை யாராவது முன் வைக்க நேர்ந்தால், சற்றும் தளராமல் 'அது ஒரு குறை அல்ல' என்று ஆணித்தரமாக உணர்த்துங்கள். நாளடைவில் உங்களை விமர்சித்த கூட்டம் குறைந்து, உங்களை முன்மாதிரியாக பின்பற்றும் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    • இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம்.
    • இலக்கை அடைய தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும்.

    வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும், பலருக்கு முன்னேற்றம் எட்டாக் கனியாகவே இருக்கும். சரியான இலக்கை நிர்ணயித்து செயல்படாததும் இதற்கு காரணமாகும். நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இலக்குகள் வரையறுக்கக் கூடியதாக, அளவிடக் கூடியதாக, அடையக் கூடியதாக, கால வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

    அவற்றை மூன்று படிநிலைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். நீண்டகால, குறுகியகால, மத்திய கால இலக்குகள் என்று எல்லாவற்றையும் பிரித்து, அதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நம்முடைய இலக்கை எளிதாக அடைய முடியும். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

    நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் உயர்கல்வி கற்பது, விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெறுவது, தொழில்முனைவோர் தனது தொழிலில் வெற்றி பெறுவது, பணி புரிபவர்கள் அவர்களது துறையில் முதன்மை பதவிக்கு செல்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்து பயணிக்கலாம்.இதன் மூலம் நேரத்தையும், திறமையையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த முடியும்.

    இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம். நம்முடைய தனிப்பட்ட குறிக்கோளாக, குடும்பம், சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது அந்த இலக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கினை தீர்மானம் செய்த பிறகு, 'இதை நம்மால் செய்துவிட முடியுமா?' என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிடுதல் கூடாது. அது நம்முடைய ஊக்கத்தைக் குறைக்கும்.

    நம்முடைய பலவீனமே, எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நினைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று நினைப்பது தான். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு, சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும். நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

    இலக்குகளை நிர்ணயித்த பின்பு, அதில் உள்ள சிக்கல்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்த தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்த தெளிவான முடிவுகளை ஆராய்ந்து, அவற்றில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.

    இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
    பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

    நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

    குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
    தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
    நம்மால் முடியாதது என்று ஒன்றுமில்லை. கொஞ்சம் முயற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் சிறு தொழிலில் கூட கோடீஸ்வரனாகி விடலாம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். அத்துடன் அந்த வியாபாரத்தை தொடங்கி அதை வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல இடர்பாடுகளையும், கடினமான முயற்சியும் இருந்தால் தான் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும்.

    தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.

    வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதலில் பொறுப்பேற்று இடர்பாடுகளை யூகித்து வியாபார யுத்திகளை கையாண்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது தான் நிர்வாகத்திறமை. முன்னோக்கு பார்வையுடன் முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள், புதிய தயாரிப்பு செயல்முறை, முதலீட்டை பெருக்குதல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துதல், மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும்.

    சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்யும் நபரே தொழில் முனைவோர் ஆவார். இவர் நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்பாடுகளையும், ஆபத்துகளையும் மேற்கொண்டு தனது இலக்கை அடைவார். புதுமைகளை உருவாக்குபவர், விடா முயற்சியுடன் செயல்படுபவர், உறுதியான தனித்தன்மையுடன் பிரதிபலிப்பவர் தான் தொழில் முனைவோர். புதிய உற்பத்தி முறை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல், இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கும் மனப்பாங்கு படைத்தவர், நிறுவனத்தை ஒழுங்கு படுத்துதல் ஆகியவை தான் தொழில் முனைவோரின் பண்புகள் ஆகும்.

    புதுமைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள், அதிரடி பரிசோதனை செயல்பாடுகளில் தீவிரமும் மற்றும் கவனிக்கத்தக்க சாத்தியங்களை நடைமுறை படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், மற்றவர்களின் பாணியை பின்பற்றி முன் உதாரணத்தை கடைபிடிப்பவர்கள், நல்ல நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் என தொழில்முனைவோர்களை பிரிக்கலாம். எந்த ஒரு தொழிலில் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.
    பெண்கள் உடைத்தெறிய வேண்டிய சில பழக்கங்கள், செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த கட்டுரை வாயிலாக அதை தெரிந்து கொள்வோம்.

    1. வலைதள உலாவல்

    நம்மில் பலருக்கும் இன்று விரல் நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால்கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘தேடி ஆராய’ ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும். இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.

    2. ஒரே நேரத்தில் பல வேலைகள்

    இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2 சதவிகித மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.

    3. மெசேஜ், ஈ-மெயில்களை கண்காணிப்பது

    இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    4. காரணம் தேடுதல்

    ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே நமக்கு பெரிய தடையாக அமைந்திருக்கும்.

    5. அநாவசிய சந்திப்புகள்

    ஆன்லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் நவீன டெக்னாலஜி காலத்தில், தேவையில்லாத நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

    6. ஒத்திவைத்தல்

    அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்து விடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கிய பழக்கமாகும்.

    7. உட்கார்ந்திருப்பது

    வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலாற நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியை தரும்.

    8. முக்கியத்துவம் அளித்தல்

    நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

    9. பொய் தூக்கம்

    படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று எழுந் திருக்க மனமில்லாமல் புரள்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனையை வழங்கும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண் விழிப்பும் சிறந்ததொரு நாளை தரும்.

    10. ஓவர் பிளானிங்

    லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாக பிளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கல் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.

    11. திட்டமிடல் இல்லாமை

    எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்று விட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரசியமற்றதாகிவிடும்.

    12. செல்போனை சார்ந்திருத்தல்

    எல்.இ.டி. ஸ்கிரீன்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    13. எல்லாம் பெர்பெக்ட்

    எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதை காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லோராலும் ‘மிஸ்டர். பெர்பெக்ட்’ ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
    உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது.
    உலகம் உன்னை மதிக்க வேண்டும் என்றால் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். உழைப்பவனையே உச்சியில் வைத்து ஆடும் இந்த உலகம். தொடர்ந்து, கடினமாக உழைத்தால் குறிக்கோளை அடைய முடியும். உழைப்பு பிழைப்புக்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். இடையில் ஏற்படும் தடைகள் உன்னை கண்ணீர் வடிக்க செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்க தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

    உழைத்துத்தான் வழியை தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்று பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும். உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள்.

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காக்ஸ்டன், அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்பகாலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர் உழைப்பு. ரெயில் எந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பினால் மட்டுமே.
    ×