search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "problem"

    வன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வன்னியன்விடுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டும், பழுதான மின்மாற்றிகளை சரிசெய்யகோரியும் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன், ஆலங்குடி மேற்கு மின்வாரிய பொறியாளர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மின்மாற்றிகளை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் இங்கு தெருவிளக்குகள் எரியவில்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாரகு, மணிமேகலை, முன்னாள் கவுன்சிலர்கள் பாத்திமாவாசு, கல்பனாஆனந்த், ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மேலும் திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு சென்ற செய்யாறு உதவி திட்ட அலுவலர் அரிகரன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாண்டியன் ஆகியோர் மாலையில் பையூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்கு கடந்த மாதம் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வேறு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு கூட தெருவிளக்குகள் மாற்றப்பட்டது. ஆனால் சில சமூக விரோதிகள் மின்விளக்குகளை சேதப்படுத்தி உள்ளனர். உடனடியாக குப்பைகளை அகற்றியும், தெருவிளக்குகள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 
    சீரான குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி ஈச்சம்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    கல்குறிச்சி ஈச்சம்பட்டியில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் மின்மோட்டார்கள் பழுதாகி விட்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு அறிவுறுத்தி, பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் கந்தம்பாளையம் அருகே உள்ள வானக்காரன்பாளையம் ராமதேவம் கிராமத்தை சேர்ந்த பெண்களும் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    ராமதேவம் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டார் பழுதாகி விட்டதால் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீரும் வாரம் ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சீரான குடிநீர் வழங்கக்கோரி இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
    சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி ஊட்டி மஞ்சனக்கொரை ஜல்லிகுழி பகுதி பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ஜல்லிகுழி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள் வேலைக்கு சென்ற பின்னர் குடிநீர் விடப்படுவதால், அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் குடிநீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடிவது இல்லை. மேலும் தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஊட்டி பிங்கர்போஸ்ட் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குடியிருப்பை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பிங்கர்போஸ்ட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு வளாகத்துக்குள் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அவை குடியிருப்பின் முன்பகுதியில் அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகளை பிடித்து செல்லவோ அல்லது வளாகத்துக்குள் கட்டாமல் இருக்கவோ வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் குடியிருப்பை சுற்றி கால்நடைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 213 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முள்ளிகூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பீனாவிற்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 23 உலமாக்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் ரூ.33 லட்சத்து 32 ஆயிரத்து 385 மதிப்பில் ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 332 மானியத்துடன் கூடிய சுற்றுலா வாகனங்கள் பழங்குடியினர் 4 பேருக்கு வழங்கப்பட்டது.
    மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் தேவைக்கு கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் நீண்ட நாட்களாக நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ள நிலையில் சமீபகாலமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்கும், ஒரு சில கிராமப்புறங்களுக்கும் கைகொடுத்து வந்தது. நகர் பகுதிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணை பகுதிகள் வறண்டு விட்ட நிலையில் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைப்பது வெகுவாக பாதித்து விட்டது.

    கிராமப்பகுதிகளில் 90 சதவீதம் கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பி உள்ள நிலையில் நீர் ஆதாரத்தில் வறட்சி, பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர்களால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.

    பல கிராம மக்கள் குடிநீர் கோரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையும் தாண்டி காலிகுடங்களுடன் கிராமத்து பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    நகர் பகுதிகளை பொறுத்தமட்டில் மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்த காரணத்தால் தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கிருந்து வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. பேரூராட்சி பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    மொத்தத்தில் தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தை ஏமாற்றி விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே குடிநீர் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்களை கலெக்டர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டு பெற்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்களுக்கு அவர்களது குடிநீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் கிராமப்பகுதிகளிலும் குடிநீருக்காக போராட்டங்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிடும். 
    கட்டுமான பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆதிவாசி மக்கள் ஜமாபந்தியில் குற்றம்சாட்டினர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை செங்குட்ராயன் மலை ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இங்கு 8 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேலூர் ஊராட்சியின் 14-வது வார்டுக்குட்பட்டதாகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக 4 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதி இரும்பு கதவு அமைத்து உள்ளதால் வாகனம் மூலம் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் செங்குட்ராயன் மலை ஆதிவாசி மக்கள் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் செங்குட்ராயன் மலை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதியில் இரும்பு கதவு அமைத்து உள்ளதால் கட்டுமான பொருட்கள்கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 3 மாதங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பியும் தனியார் எஸ்டேட் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பெரியார் காலனியில் பெரியார்நகர் குடியிருப்போர் சங்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை முழுமையாக செலுத்தி வீடுகளுக்கான பத்திரங்களை பெற்று கொண்டுள்ளனர். ஆனால் அந்த குடியிருப்புகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடியிருப்போர் சங்கம் சார்பில் பலமுறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கப்பட்டது.

    மேலும் உடனடியாக பட்டா வழங்கக்கோரி பெரியார்நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் கடந்த 2-ந்தேதி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் சங்கத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 185 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியார் காலனியில் நேற்றுகாலை நடைபெற்றது. இதில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு மாநகராட்சி பகுதிக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதேபோல் மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், 1-வது மண்டல முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

    நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    ×