search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம்: சீராக குடிநீர் வினியோகிக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம்: சீராக குடிநீர் வினியோகிக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி ஊட்டி மஞ்சனக்கொரை ஜல்லிகுழி பகுதி பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ஜல்லிகுழி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள் வேலைக்கு சென்ற பின்னர் குடிநீர் விடப்படுவதால், அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் குடிநீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடிவது இல்லை. மேலும் தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஊட்டி பிங்கர்போஸ்ட் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குடியிருப்பை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பிங்கர்போஸ்ட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு வளாகத்துக்குள் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அவை குடியிருப்பின் முன்பகுதியில் அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகளை பிடித்து செல்லவோ அல்லது வளாகத்துக்குள் கட்டாமல் இருக்கவோ வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் குடியிருப்பை சுற்றி கால்நடைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 213 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முள்ளிகூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பீனாவிற்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 23 உலமாக்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் ரூ.33 லட்சத்து 32 ஆயிரத்து 385 மதிப்பில் ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 332 மானியத்துடன் கூடிய சுற்றுலா வாகனங்கள் பழங்குடியினர் 4 பேருக்கு வழங்கப்பட்டது.
    Next Story
    ×