search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parihara Temple"

    • இங்கு எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
    • இக்கோவிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

    சென்னை அருகே உள்ள போரூர் - குன்றத்தூர் சாலையில் உள்ளது கெருகம்பாக்கம். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இது கேது பகவானுக்குரிய தலமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் திருநாமம், நீலகண்டேஸ்வரர், அம்பிகையின் திருநாமம் ஆதிகாமாட்சியம்மை என்பதாகும். சுவாமி கருவறையின் வலது பக்கம் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.

    இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் 'காளிங்க நர்த்தன கண்ணன்'போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.

    ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. வெளிச்சுற்றில் கேது பகவான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். புடைப்புச் சிற்பமாக இருக்கும் பின்னிப் பிணைந்த இரண்டு சர்ப்பங்களின் நடுவில் உள்ள நடன கோபாலன், கேதுவாக கருதப்படுகிறார்.

    கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.

    • இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
    • அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.

    இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

    • இந்த கோவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.

    திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் கிராமம், 5-வது வார்டுக்குட்பட்ட கூலிபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பழமையான கோவிலாகவும், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.

    வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் வல்ல தெய்வமாக விளங்கும் மாகாளியம்மனின் அருளை பக்தர்கள் பெறவும், அம்மனின் பிரசித்தியை உலகம் அறிந்து கொள்ளவும், கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    உலகில் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் எந்நாட்டிலும் பொன் நாடாகவும், நமது கொங்குநாட்டின் சிறந்த பகுதியாகவும் ஸ்ரீபுரி என்னும் மஹாலட்சுமி வாசம் செய்கின்ற தொழில் நகரமாம் திருப்பூர் நொய்யல் நதியின் வடபால் அமைந்துள்ள திவ்யமான கூலிபாளையம் எனும் பகுதியில் 130 ஆண்டுகளுக்கும் பழமையான தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறைகள் நீங்கிடவும், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பாலிக்கும் கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.

    இந்த ஆலயத்தில் புதிதாக கல்ஹார திருப்பணிகள் செய்வித்து, துவார சக்திகள் ராகு, கேது, குதிரை, சிலா உருவ திருமேணிகள் அமைக்கப்பட்டு தை மாதம் 12-ம் நாள் அதாவது இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவில் பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு, மாகாளியம்மனை வணங்கி, இம்மையிலும், மறுமையிலும் நீங்காத செல்வம் பெற கோவில் திருப்பணி குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

    • தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.
    • தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை.

    தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள்.

    இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    • ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம்.
    • சிறந்த பிரார்த்தனைத்தலம்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது, அரியக்குடி என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கிறார். இத்தல லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.

    மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.

    காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது.

    • ஈரோட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.
    • இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது.

    இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    • திண்டுக்கல் மேலக் கோட்டையில் உள்ளது இந்த கோவில்.
    • இந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்தால் திருமண தடைகள் அகலும்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக் கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.

    மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும்.

    விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.

    • காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.
    • இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.

    அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.

    இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார்.

    மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.

    அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்லும் வழி

    அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் ரெயிலில் தஞ்சை வந்து அங்கிருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சையை அடைந்து மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து கோவிலை அடையலாம்.

    • தென்காசி கடையநல்லூர் தாலுகாவில் உள்ளது இந்த கோவில்.
    • ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

    உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட் திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

    இக்கோவிலில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை 'ஜெய்பவானி' என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.

    • பெண்களுக்கான சாம்ராஜ்யம் இந்த ஆலயம்.
    • பாலாவின் தேன் பிரசாதம் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

    வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்வெளி பகுதிகள். நேர்த்தியான தெருக்கள் கொண்ட இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோவில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது அந்த ஊருக்கே கிடைத்த பெருமை.

    ஒரு பிரமாண்ட அரண்மனை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அம்பாள் குழந்தை, குமரி, தாய் என மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    * குழந்தைகள் கல்வி, கலை, ஞானம், வெற்றி, ஞாபக சக்தி பெறுவதற்காக வித்யா அபிவிருத்தி அர்ச்சனை ஹோமங்கள் நடைபெறுகின்றன.

    * குழந்தைகளின் பரதநாட்டிய அரங்கேற்றம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், சலங்கை பூஜைகள் நடைபெறுகின்றது.

    *கல்வியில் மேம்பட வெண் தாமரை அல்லது வெள்ளை நிறமலர்களால் அர்ச்சனையும் நெய் தீபமும் ஏற்றி வழிபடுகின்றனர். படிக்கும் குழந்தைகள், பேனா, பென்சில், புத்தகம், நோட்டு வைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டு செல்கின்றனர். பாலாவின் தேன் பிரசாதம் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

    * திருமணம் கைகூட ஸ்ரீ பாலா சந்நிதியில் கல்யாண ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை வைத்து, சிவப்பு மாலைகள் சாற்றி மாவிளக்கு தீபமேற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும்.

    * பெண்களுக்கான சாம்ராஜ்யம் இந்த ஆலயம். இங்கு அனைத்தும் பெண் சக்திகளே. குழந்தை, குமரி, தாயாக, மந்திரியாக, தளபதியாக, காவலாளியாக, இளவரசியாக திரிபுர சுந்தரி எழுந்தருளியுள்ள ராஜ தர்பார்.

    * குழந்தைகளின் பிறந்த நாளில் அபிஷேகம், அர்ச்சனை, அன்னதானம் செய்து வழிபடுகின்றனர்.

    * நோயுற்றவர்கள் குணமடைய மூலிகை யம்பாள் பவுர்ணமி அருட்பிரசாதம் பெற்று பயன் பெறுகின்றனர்.

    * மாதம் தோறும் பவுர்ணமியில் ஸ்ரீ பாலா மூல மந்திர ஹோமம் படிக லிங்கத்திற்கு அபி ஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    அமைவிடம்

    ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,

    திருப்போரூர் (ஓ.எம்.ஆர்)- செங்கல்பட்டு சாலை,

    செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா,

    செங்கல்பட்டு மாவட்டம்-603 108.

    (திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)

    • ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம்.
    • மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றினால் பலன் நிச்சயம்.

    வக்கிர தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் மூன்று கால பூஜைகளுடன் காலை6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்ரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.

    மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வக்கிர தோஷ ) புத்திர தோஷங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

    வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.

    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை 'வக்கிரகதி' என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால் துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    • இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
    • திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.

    இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது

    அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    ×