search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NASA"

    • உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் :

    எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

    ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
    • நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

    • பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது.
    • ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்த இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.

    வாஷிங்டன்:

    பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது.

    மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர். இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

    இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்டகால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
    • புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் வியப்பூட்டும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

    தற்போது நியூ ஹரிசான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் சூரியனை சுற்றி வரும் 9-வது பெரிய கோளான புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு, பள்ளங்கள் மற்றும் சமவெளி பகுதிகள் அமைந்து இருப்பது போன்று உள்ளது. புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது அற்புதமான புகைப்படம். இதை படம் எடுத்த நியூ ஹரிசான்ஸ் விண்கலத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

    வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது.

    இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதன்பின் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

    இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இதில் நிலவுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் நிலவுக்கு அனுப்ப நான்கு விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச், கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜெர்மி ஹேன்சன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். இவர்கள் 4 பேரும், நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    கிறிஸ்டினா கோச், நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார்.

    ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.

    • சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும்.
    • கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.

    புதுடெல்லி:

    சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது 'கொரோனல் ஓட்டை' என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது.

    பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது.

    இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

    கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

    சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து நாசா அதிகாரிகள் கூறுகையில், கொரோனல் துளைகள் என்பது அதிவேக சூரிய காற்றின் ஒரு ஆதாரமான காந்த பகுதிகளாகும். தீவிர புறஊதா ஒளியின் பல அலை நீளங்களில் பார்க்கும்போது அவை இருட்டாக தெரியும் என்றனர்.

    • செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.
    • செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.

    இதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது.

    அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது அழகாகவும், நீளமாகவும் உள்ளது. அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது. இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது இயற்கையாக ஏற்பட்ட குழி ஆகும். அது கரடியின் முகத்தை போல் தோன்றுகிறது. மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் உள்ளது.

    இது அதிநவீன கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன. பெண் ஒருவர் பாறை மீது அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
    • ஏசி சரனியா விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

    • மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
    • சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்தது.

    வாஷிங்டன்

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

    சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

    அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி 'ஆர்டெமிஸ்-1' ராக்கெட் மூலம் 'ஓரியன்' விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.

    பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

    சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    • சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
    • ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதில் சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் கடந்த மாதம் 16-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு சுற்றியது.

    இந்த நிலையில் நிலவின் மேலே ஆய்வை முடித்துக் கொண்டு ஓரியன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்கலம், அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்றப்படும். ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு அதன் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்டெமிஸ்-2 திட்டம் தொடங்கப்படும்.

    • ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
    • 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.

    நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது.

    ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16ம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.

    பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் புமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

    இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவை அடைந்துள்ளது. அதன் சுற்றுவட்டப்பாதை அருகே விண்கலம் சென்றடைந்து இருக்கிறது. நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது.

    சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 25ம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். அதன்பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். அதன்பின் ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

    நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.

    • பூமியை சுற்றி ஏராளமான சிறுகோள், விண்கற்கள் சுற்றி வருகின்றன.
    • விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை சுற்றி ஏராளமான சிறுகோள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவைகள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர். இந்த அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு 'டார்ட்' என்ற விண்கலத்தை விண் வெளிக்கு அனுப்பியது.

    இந்த விண்கலம், பூமியை நோக்கி டிடிமோஸ் பைனரி என்ற விண்கல் வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது.

    டிடிமோஸ் பைனரி விண்கல், பூமி மீது மோது வதை தடுத்து அதை திசை திருப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி அந்த விண்கல் மீது டார்ட் விண்கலத்தை கடந்த மாதம் 26-ந்தேதி நாசா மோத வைத்தது.

    விண்கலம் வெற்றிகரமாக விண்கல் மீது மோதியதால் அதன் திசையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப்பாதையானது விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விண்கல்லால் ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விண்வெளியில் முதல் முறையாக வான் பொருளின் சுற்றுப்பாதை மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×