search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலவு"

    • ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் லேண்டரை தரையிறக்கியது.
    • லேண்டர் 100 மீட்டர் தொலைவில் இருந்து தரையிறங்கியது.

    ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது.

    தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

    • விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2 முதல் 3 இந்திய விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவினரை குறைந்த தூரத்தில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பி மீண்டும் 3 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சோதனைக்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆளில்லா பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை முடித்துக்கொண்டு வருகிற 2025-ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2040-ம் ஆண்டுக்குள் முதல் முறையாக இந்திய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்படுகிறது.

    சூரியனின் மையப்பகுதி, சூரியனில் இருந்து வீசும் காற்று, சூரிய தீப்பிழம்புகள் மற்றும் கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புலங்களை அளவிடுவது உள்பட சூரியனுக்குள் பொதிந்துள்ள மர்மங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியாக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் (15 லட்சம் கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி (எல்.1) நோக்கி பயணித்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் ஹாலோ சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்படும்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்டு 23-ந் தேதி, இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக அன்றைய நாளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 14 புவி நாட்களில், இது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், கந்தகம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து நிலவு குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது.

    சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி.), மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனம் (ஆர்.எல்.வி.) திட்டம், எக்ஸ்ரே வானியல் பணி எக்ஸ்போசாட் (எக்போசாட்- எக்ஸ்-ரே போலரி மீட்டர் (செயற்கைகோள்)), விண்வெளி டாக்ஸி பரிசோதனை மற்றும் லாக்ஸ்-மீத்தேன் எந்திரம் ஆகியவை இதில் அடங்கும்.

    2023-2024-ம் ஆண்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள எக்போசாட் இந்தியாவின் முதல் அர்ப்பணிப்பு அறிவியல் பணியாகும். ஸ்பேடக்ஸ் (ஸ்பேஸ் டக்கிங் சோதனை) என்ற அறிவியல் பூர்வமான கருவிகளைப் பயன்படுத்தி பிரகாசமான வானியல் எக்ஸ்ரே மூலங்களை இது ஆராயும். இது ஜனவரி 3-வது காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    2035-ம் ஆண்டில் "இந்திய விண்வெளி நிலையம்" (பாரதிய அண்டாரிக்ஷா நிலையம்) தொடங்குவது மற்றும் உலக விண்வெளி அரங்கில் இந்தியாவின் இருப்பை மேலும் உறுதிப்படுத்த வெள்ளிக்கோளின் சுற்று வட்டப்பாதை ஆய்வு திட்டம் மற்றும் செவ்வாயில் ஆராய்ச்சி ஆகியவற்றைக் கொண்ட கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வது போன்ற லட்சிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார்.

    இந்தியாவின் விண்வெளி திட்டம் வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய உயரங்களை எட்ட தயாராக உள்ளது. தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணி மற்றும் ஒவ்வொரு கண்டுபிடிப்புடனும், இஸ்ரோ உலக அரங்கில் ஒரு சக்தியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    தேசிய பெருமையைத் தூண்டுகிறது. அத்துடன் இந்தியாவின் தொழில்நுட்ப சாதனையை விரிவுபடுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது.
    • நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

    அதன் பின்னா், புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி பயணம் செய்யும் பாதைக்கு மாற்றப் பட்டது.

    அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ந் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாகக் குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனா்.

    அதன்படி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தூரம் நிலவின் ஈா்ப்பு விசைக்குள் 2-வது முறையாக நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது, உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

    தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1,437 கி.மீ. தூரம் கொண்ட நிலவின் வட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இதே நுட்பத்தில் நிலவுக்கும் விண்கலத்துக்குமான தூரம் மேலும் இரு முறை குறைக்கப்பட்டு, அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும்.

    இதன்மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரம் குறைக்கப்படும். அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் வருகிற 14-ந் தேதி விடு விக்கப்பட்டு, திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று சந்திரயான்-3 விண்கலம் நிலவின் புதிய படங்களை அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியையும் சந்திரயான்-3 படம் பிடித்து உள்ளது. லேண்டர் கருவியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமிரா மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    நிலவின் மேற்பரப்பில் உள்ள கடல் போன்ற பகுதியை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் காட்டி உள்ளன. அந்த பகுதி நிலவின் வடக்கு, தென்கிழக்கு பகுதி யில் 2500 கி.மீ. பரப்பளவுக்கு பரவி உள்ளது.

    நிலவை நெருங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்தடுத்து லேண்டர் மூலம் தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். வரும் நாட்களில் நிலவுக்கு மிக அருகில் சென்று படம்பிடிக்கும். இதன் மூலம் சந்திரயானில் இருந்து பிரியும் விக்ரம் கருவியை மிக எளிதாக நிலவில் தரை இறக்குவதற்கு வழிவகை செய்யப்படும்.

    • இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும்
    • இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்

    எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு, இன்று வானில் நடைபெற போகிறது.

    சூப்பர் மூன் எனப்படும் இந்த நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

    நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.

    இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும்.

    வானியலில் பெரிஜி-சிஜிஜி (perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் "சூப்பர் மூன்" என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன், ஜூலை மாதம் தோன்றியது.

    2023-ம் ஆண்டின் 4-வது மற்றும் கடைசி சூப்பர் மூன் செப்டம்பர் மாதத்தில் நிகழும்.

    ஆகஸ்ட் மாதம் 2 சூப்பர் மூன் தோன்றும் நிகழ்வு, இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் நடந்தது.

    இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்.

    ஆகஸ்ட் 1-ம் தேதி சூப்பர் மூன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு அடிவானத்திற்கு மேலே எழும்போது முழுமையானதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 12.02 மணிக்கு இந்தியாவில் இதனை காண முடியும்.

    இந்த மாதத்தின் 2-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 31 அன்று நடக்கும். ஆனால், அது காலை 7.05 மணிக்கு உச்சம் அடையும் என்பதால் இந்தியாவில் அது தெரிய வாய்ப்பில்லை.

    • அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

    வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது.

    இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதன்பின் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

    இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இதில் நிலவுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் நிலவுக்கு அனுப்ப நான்கு விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச், கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜெர்மி ஹேன்சன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். இவர்கள் 4 பேரும், நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    கிறிஸ்டினா கோச், நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார்.

    ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.

    • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
    • இத்திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கண்டறியப்படலாம் என இஸ்ரோ தெரிவித்தது.

    டேராடூன்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூனில் ஆகாஷ் தத்வா மாநாடு நடந்தது. இதில் அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வக இயக்குனர் அனில் பரத்வாஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும்.

    இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என தெரிவித்தார்.

    ×