

2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்ற சீனாவின் லட்சியத்தில் ஒரு முக்கிய படியாக, சீனா தனது ஷென்சோ-23 திட்டத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவியது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு சீன விண்வெளி வீரர் முழு ஓர் ஆண்டையும் சுற்றுப்பாதையில் செலவிடுவார்.
சீனாவின் வடமேற்கு கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் ஏவுதள மையத்தில் இருந்து, லாங் மார்ச் 2-F ராக்கெட், இரவு 11:08 மணிக்கு (1508 GMT) திட்டமிட்டபடி தீப்பிழம்புகள் மற்றும் புகை மண்டலத்துடன் சீறிப் பாய்ந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை, அரசு ஒளிபரப்பு நிறுவனமான CCTV வெளியிட்டது.
சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்ததாக சீன விண்வெளி நிறுவனம் (CMSA) சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது. "விண்வெளி வீரர்கள் நலமாக உள்ளனர், மேலும் இந்த ஏவுதல் முழு வெற்றி பெற்றுள்ளது," என்று அது மேலும் கூறியது.
இந்தத் திட்டம், ஹாங்காங்கை சேர்ந்த ஒரு விண்வெளி வீரர் மேற்கொண்ட முதல் விண்வெளி பயணமாகும்: இவர், முன்பு ஹாங்காங் காவல்துறையில் பணியாற்றிய 43 வயதான லி ஜியாயிங் (காண்டனீஸ் மொழியில் லை கா-யிங்) ஆவார்.