search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kulasekarapattinam"

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவில் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற விதம், விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், ‘முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு’ என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை. சில விஷயங்களில் மட்டும் மாற்றங்கள் வந்து விட்டன.
    முன்பெல்லாம் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள்.

    அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள்.

    ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள்.

    இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது. முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவார்கள். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

    முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன. முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். சிலர் விரத நாட்களில் வீட்டுக்கே வர மாட்டார்கள். உணவு, தூக்கம் மற்றும் தினசரி பழக்க வழக்கங்களில் கடும் கட்டுப்பாடுகள் உண்டு. குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது.

    முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருஷங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது.

    ‘அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்’ என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள். வறுமை காரணமாக காதில் கம்மலுக்கு பதில் வத்தலை கட்டி அணிந்திருப்பார்கள். இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள்.

    குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள்.

    இப்போது காணிக்கை கேட்டால் ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையை கூட பெற வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று வசதி வாய்ப்புகளுடன் செல்வ செழிப்பான நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அந்த கதை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குலசையில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் தவத்தில் சிறந்தவர். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக மகா முனிவரான அகத்தியர் வந்தார். அவரை பார்த்தும், பார்க்காதது போல் இருந்த வரமுனி ஆணவ செருக்கால் மதிக்கவில்லை. மாறாக அகத்தியரை அவமதிக்கவும் செய்தார். இதை கண்டு கோபம் அடைந்த அகத்தியர் வரமுனிக்கு கடும் சாபம் கொடுத்தார். ‘வரமுனியே! நீ உன் உருவம் இழந்து எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாய்!’ என்றார். அக்கணமே வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். முனிவர்களை கொடுமைப்படுத்தினார்.

    மகிஷாசுரனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். அவர்கள் வேள்வியில் தோன்றிய அன்னை ஆதிபராசக்தி மகிஷாசுரனை அழிக்க, விரதம் இருந்து அவனோடு போர் புரிய புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் தசரா விழாவின்போது பக்தர்கள் அம்மன், கடவுள் வேடங்களை தரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    காளிவேட மகிமை

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

    காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

    தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.
    அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

    பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

    முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

    ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால், பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

    பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    கனவில் தோன்றிய அம்மன்

    அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டார்.

    கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் தல மரம் ேவம்பு.

    தசரா விழா

    தசரா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மைசூர் தான். தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட வித, விதமான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேள வாத்தியங்கள் முழங்க ஒவ்வொரு குழுவினரும் ஆடி, பாடி ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைப்பர்.

    அம்பிகை 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது நவராத்திரி என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். அன்று மக்கள் கூட்டம் கடல்போல காட்சி அளிக்கும்.

    இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்


    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் இத்தலத்தை அடையலாம்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக்கட்டி வேடம் போடுபவர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் போடுபவர்கள் பெற முடியும்.

    வேடம் போடும் பக்தர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பிறகே வேடம் அணிதல் வேண்டும்.

    சமீபகாலமாக சில ஊர்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டிணத்தில் கொடி ஏறும் முன்பே மூக்குத்தி, கம்மல், வளையல், கொலுசு போன்ற அலங்காரங்களை செய்யத் தொடங்கி விடுவார்கள். இது ஆலய ஐதீக வழிபாட்டு முறைகளுக்கு எதிரானது.

    ‘‘காப்பு கட்டும் முன்பு ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘காப்பு கட்டிய தினத்தன்று காது குத்தினால் கம்மல் போடும் போது வலிக்கும். இப்போதே காது குத்தி கம்மல் போட்டு விட்டால் காப்பு கட்டி வேடமணிந்து ஆடும் போது வலிக்காது. கம்மல் போட்டிருப்பதும் பழகி விடும்’’ என்கிறார்கள்.
    வலியோடு ஆட முடியாது என்பதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே கம்மல் அணிந்து, சிவப்பு கலரில் வேட்டி உடுத்துவதாக சொல்கிறார்கள். அம்மனுக்காக நம்மையே நாம் தாழ்த்திக் கொண்டு வேடம் அணியும் போது, வலியை காரணம் காட்டி விதிகளை மீறுவது எந்த வகையில் தர்மமாகும்?

    வேடம் அணிபவர்கள் அது எந்த வேடமாக இருந்தாலும் அது புனிதமானது என்பதை முதலில் உணர வேண்டும். அந்த வேடத்துக்குரிய புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும். சமீப காலமாக பல பக்தர்கள் அந்த புனிதத்தை காப்பாற்றுவதில்லை என்ற வேதனை தசரா குழுக்களில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் காணப்படுகிறது.

    விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்கள் வெளி இடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்ற கடுமையான விதிமுறை முன்பொரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக ஓட்டல்களில் டீ குடிக்கிறார்கள்.

    சிலர் புகை பிடிக்கும் தவறை செய்கிறார்கள். தற்காலிகமாக மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, புகை பிடிக்கிறார்கள். பிறகு மாலையை மீண்டும் போட்டுக் கொள்வார்களாம். இது மிகப்பெரிய பாவமாகி விடும் என்று ஆன்மிக பெரியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    வேடம் போடுபவர்கள் எப்போதும் அன்னையின் திருநாமங்களை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். அன்னைக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தல் வேண்டும். அதுதான் முத்தாரம்மனின் பேரருளைப் பெற்றுத் தரும்.

    குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். முத்தாரம்மன் தன் உருவத்தை காட்டி சிலை செய்ய சொன்ன வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர்.

    அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். ‘எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிறிய ஊர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும்’ என்று கூறினாள்.

    மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர்.
    இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.

    அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள். பின்னர், தனது மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.

    தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.

    அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார். முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரி யார் என்று விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.

    முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்திஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

    இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும்.

    இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது. 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், வி‌ஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிரு‌ஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் நாளான நேற்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    10-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம். காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள். காளி இல்லாத தசராக் குழுக்கள் இருக்காது.

    வரும் 19-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு நடத்தப்படும் சூரசம்ஹாரத்தன்று காளி வேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்ல புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள். இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள் அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

    அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் - இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.  காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாகப் பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது. எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது.

    காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்தபோது, குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது. அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்குடி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.
    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 7-ந் திருநாளன இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவில் 7-ந் திருநாளன இன்று (16-ந் தேதி) மாலை 4 மணிக்கு மகிசாசூரன்,வீதியுலா, இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

    திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்களும், பகல் 1 மணிக்கு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டி மன்றம், இன்னிசை கச்சேரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    10-ந் திருநாளான வருகிற வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.திருவிழாவிற் கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.
    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    11. குலசையில் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    12. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    13. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    14. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    15. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    16. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடை பெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    17. அம்மை போட் டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    18. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    19. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குலதெய்வமாக கருதுகிறார்கள்.

    20. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    21. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    22. குலசை கோவிலுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    23. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    24. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    25. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.



    26. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    27. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    28. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    29. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    30. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    31. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக் தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    32. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    33. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2-வது இடத்தில் உள்ளது.

    34. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    35. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம் மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    36. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    37. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    38. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    39. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    40. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    41. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    42. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    43. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    44. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    45. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    46. குலசையில் தீயில் இறங்கும் பூக்குழி விழா நடத்தலாமா என்று ஆலோசித்தனர். பக்தர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்றாலும் ஆறுமுகநேரியில் தசரா குழுவினர் பூக்குழி விழாவை நடத்துகிறார்கள்.

    47. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    48. காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து, புடவை எடுத்து கொடுப்பதை மிகச் சிறந்த நேர்ச்சையாக கருதுகிறார்கள்.

    49. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    50. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கைநிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தசரா விழாவிற்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் தவலிமை மிக்கவராக இருந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமதியாதையும் செய்தார்.

    மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக குலசேகரன் பட்டினத் தில் எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினார். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார்.

    மகிசாசுரனின் இடையுறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி, மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம்.
    தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதம், விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.

    திருமஞ்சணை பிரசாத மகிமை

    குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும்.

    அன்னதானம்

    குலசை முத்தாரம்மன் கோவிலில் மதியம் தினமும் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.

    நோய் தீர்க்கும் வேப்பிலை

    குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மாவிளக்கு பூஜை

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
    ×