search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ilaiyaraja"

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • ‘புஷ்பா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 'புஷ்பா' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து இளையராஜா சாரிடம் சென்று ஆசிபெற்றேன். நீங்கள் கொடுத்த அனைத்து உத்வேகத்திற்கும் நன்றி இளையராஜா சார். அதுவே என்னை தேசிய விருதிற்கு அழைத்து சென்றது" என்று பதிவிட்டுள்ளார்.




    • ராமேஸ்வரம் கடலில் லட்சக்கணக்கானோர் இன்று கடலில் தர்ப்பணம் செய்தனர்.
    • 22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்கள் நினைவாக கடல் மற்றும் கோவில் குளங்களில் தர்ப்பணம் செய்தனர். ராமேஸ்வரம் கடலில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கானோர் கடலில் தர்ப்பணம் செய்தனர்.

    இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் உள்ளடங்கிய தீர்த்தத்தை இளையராஜா தலையில் தெளித்து புனித நீராடினார். அதன் பின்னர் சுவாமி பர்வதவர்தினி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

    ஆடி அமாவாசையையொட்டி திருமழிசை அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை நடிகர் செந்தில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். அங்குள்ள தெப்ப குளக்கரையில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தார்.

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
    • இப்படத்தை ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    அல்போன்ஸ் புத்திரன் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'கிஃப்ட்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




    • நடிகர் ராமராஜன் தற்போது ‘சாமானியன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து இவரின் 46-வது படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் 'சாமானியன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ராகேஷ் இயக்குகிறார். இந்த படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


    அந்த வகையில் 7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். ராமராஜனின் 46-வது படமான இந்த படத்தை 'சாமானியன்' படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் கார்த்திக் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'சாமானியன்' படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். 'சாமானியன்' படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார்.


    இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் கூறியதாவது, ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த 'சாமானியன்' கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் 'சாமானியன்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன். உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருடமாக 'சாமானியன்' படத்தில் கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குனர் போன்றே அவருடன் இணைந்து பயணித்து வந்துள்ளேன். அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.


    'சாமானியன்' படத்தின் கதை என் வாழ்க்கையில் 2018-ல் நான் சந்தித்த வலியை மையப்படுத்தி உருவானது. அந்த படத்திற்கு ராமராஜன் பொருத்தமாக இருந்தார். ஆனால் இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும். ஆனால் 'சாமானியன்' படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறாக இருக்கும்.

    இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளதுடன் நானே இயக்கத்தையும் கவனிப்பதால், வசனங்களை எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுக்கலாம் என பேசி வருகிறோம். அது உறுதியாகி, முழுமையான வசனங்கள் தயாரானதும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.


    இதற்கு முன்னதாக இந்த படத்தை பூஜையுடன் துவங்கி டீசருக்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த டீசரை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவை சந்தித்து போட்டு காட்ட இருக்கிறோம். அதன்பிறகு இந்த படத்தில் டைட்டில், முதல் தோற்ற போஸ்டர், டீசர் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா.
    • இவருக்கு சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.


    இளையராஜா

    இதையடுத்து சமீபத்தில் விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும், சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி.பதவி வழங்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.


    சீமான்

    இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இளையராஜாவை விட ஈடு இணையற்ற இசைமேதை இந்த நாட்டில் உண்டா..? உலக அளவில் எண்ணிக்கை எடுத்தோம் என்றால் பத்து பேரில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் எங்கள் மேதை இருப்பார். ஆனால், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கும் போது ஈடு இணையற்ற இசை கலைஞனுக்கு கொடுத்தோம் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தலித்திற்கு கொடுத்தோம் என்று கூறுகிறீர்கள். இவ்வளவு உயரத்திற்கு வந்தும் அந்த சாதி இழிவு ஒழியவில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை.
    • விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


    விடுதலை
    விடுதலை

    இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூரி, விடுதலை படம் குறித்தும் இளையராஜாவுடன் பணிபுரிந்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இளையராஜா சாரை நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து நேரில் பார்த்ததே கிடையாது. அந்த வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. விடுதலை படத்தின் மூலம் தான் அவரை அருகில் அமர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடல் தான் முதன் முதலில் இளையராஜா சார் புதிய ஸ்டியோவில் பதிவு செய்யப்பட்டது.



    சூரி
    சூரி

    அந்த பாடல் பதிவு செய்யும் பொழுது இளையராஜா சார் என்னை பார்த்து உறைந்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி பதட்டமாகிவிட்டது. எனது 45 ஆண்டு கால அனுபவத்தில் என்னுடைய கதாநாயகனை எதிரே அமரவைத்து டியூன் போட்டு காட்டியதே இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை நீங்க முதல் படத்திலே அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது எல்லாம் என்னுடைய தாய் தந்தை செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.

    • தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் நேற்று காலமனார்.
    • இவரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.விஸ்வநாத் ஐதராபாத் இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

     

    இரகல் தெரிவித்த இளையராஜா

    இரகல் தெரிவித்த இளையராஜா


    இந்நிலையில்  கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
    • 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் இளையராஜாவுடன் ராமராஜன் கைகோர்த்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.


    சாமானியன் படக்குழு

     

    இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. ராமராஜன் படங்களுக்கு வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு 'சாமானியன்' என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.


    சாமானியன் படக்குழு


    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் வி.மதியழகன் இயக்குனர் ஆர்.ராகேஷ் ஆகியோருடன் நடிகர் ராமராஜன் சென்று இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இளையராஜா கேட்டு அறிந்துகொண்டுள்ளார். அப்போது மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார். விரைவில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நான்கு நாட்களில் நிறைவடைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில், நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசியதாவது, சிவாஜி அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று நேரம் தவறாமை. இன்றுவரைக்கும் என்னுடைய ஸ்டுடியோவில் என் கார் சரியாக ஏழு மணிக்கு நுழைந்து விடும். ஒரு நாள் நான் தாமதமாக வந்து விட்டேன். என்ன ராசா நீயுமா லேட்டு என்று கேட்டார். இல்லண்ணே நான் சரியாகத்தான் வந்தேன். நீங்க முன்கூட்டியே வந்து விட்டீங்க என்றேன்.

     

    உண்மையில் நான் தாமதமாக வரவில்லை. நான் சரியான நேரத்திற்குத் தான் வந்திருந்தேன். அவர் தான் சீக்கிரம் வந்துவிட்டார். ரிக்கார்டிங்கில் உள்ளே வந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

     

    ஒருமுறை திரையுலகம் சார்பில் சிவாஜிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று இருக்கும் நடிகர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கிறது. அவருக்குக் கொடுக்கப்படும் பரிசில் யார் பெயரும் இருக்கக்கூடாது அதற்கு ஆகும் முழு பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.

    இளையராஜா

    இளையராஜா

     

    அதனைத் தெரிந்து கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்து விட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் ‘பாடு நிலாவே’ பாடல்” என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.
    • ‘ராஜபார்வை’ படத்தில் ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார்.

    ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா.

    திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...

    "என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.

    "இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக் குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல்" என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.

    'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த்திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.

    வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வர வைத்தவர் இசைஞானி. அதனால்தான் அந்தக் கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள் போஸ்டர்களில் 'இசைஞானி இசையில்' என்று இருந்தால், கண்களை மூடிக்கொண்டு படங்களை வாங்கி திரையிடத் தயாராக இருந்தார்கள். இளையராஜா இசையினால் புகழோடு ஓடிய படங்கள் வரிசையில் கரகாட்டக்காரன் தொடங்கி சிந்து பைரவி, முதல் மரியாதை, புன்னகை மன்னன், தேவர் மகன், நாயகன், தளபதி என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு. வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

    அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.

    'ராஜபார்வை' படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போன்ற உணர்வு ஏற்படும்.

    'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.

    தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.

    தேநீர் விடுதிகளில் அந்தக் கால கட்டங்களில் சப்தமாக இசைத்தட்டுகள் இரவு நேரங்களில் பாடவிடப்படும். எல்லாம் இளையராஜாவின் அருளாசி தான். அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, செம்பருத்தி, தர்மயுத்தம், மெல்லத் திறந்தது கதவு, சொல்லத் துடிக்குது மனசு, நீங்கள் கேட்டவை, மறுபடியும், இளமைக்காலங்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களின் பாடல்களைக் கேட்பதற்கு என்றே நண்பர்கள் குழுவுடன் பலமுறை தேநீர் அருந்தச் சென்று, நின்று, தலையாட்டி மணிக்கணக்கில் பாடலையும் ரசிப்போம், ருசிப்போம்!

    'நாயகன்' படத்தில் 'தென் பாண்டிச் சீமையிலே' பாடலின் இழைப்பில் தெறிக்கும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகத்தின் பிழிவு, கதையின் ஆவேச பகுதிக்கேற்ற பாவங்களோடு வாணி ஜெயராம் குரலில் ஒலித்த "கவிதை கேளுங்கள்" (புன்னகை மன்னன்) பாடலின் அசாத்திய இசைக் கலவை, துள்ளாட்டம் போடும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' (மௌன ராகம்), மெல்லென்ற தென்றலாக வீசும் 'என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி), நெகிழ வைக்கும் 'ஒன்ன நெனச்சேன் பாட்ட படிச்சேன்' (அபூர்வ சகோதரர்கள்) என்று அவரது இசையில் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனது இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்தத் தலைமுறைகளும்தான்.

    கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.

    1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.

    கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.

    அற்புதமான பாடகர்களின் மிக அருமையான பாடல்கள் ராஜாவின் இசையில் மிதந்து வந்தது ரசிகர்களது பொற்காலம். பாலமுரளி கிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' (கவிக்குயில்) , கே.ஜே.ஜேசுதாஸின் 'கலைவாணியே ..' (சிந்து பைரவி), டி.எம். சவுந்திரராஜனின் 'அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்' (தீபம்), பி.சுசீலாவின் 'ராகவனே ரமணா' (இளமைக்காலங்கள்),

    எஸ்.ஜானகியின் 'ராசாவே உன்னை நம்பி' (முதல் மரியாதை), வாணி ஜெயராமின் 'நானே நானா..' (அழகே உன்னை ஆராதிக்கிறேன்),எஸ்.பி.பியின் 'இளைய நிலா பொழிகிறதே' (பயணங்கள் முடிவதில்லை) என்று சொன்னால், இதைப்போலவும் இதைவிடவும் இனிமையான வேறு பல பாடல்களது பட்டியலை வேறொரு ரசிகர் சொல்லக் கூடும். அதுதான் இளைய ராஜா!

    பத்ரகாளி படத்தின், 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடல் மொத்தத்தையும் இந்த முதல் வரியை வைத்தே பாடி விட முடியும்.

    அப்படியான ஒரு மெட்டு அது. தாளக் கட்டின் நயத்தை, 'வளையோசை கலகல' (சத்யா), 'பூவை எடுத்து ஒரு மாலை' (அம்மன் கோவில் கிழக்காலே), 'மணியே மணிக்குயிலே' (நாடோடி தென்றல்) போன்ற பல நூறு பாடல்களில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். பனி விழும் மலர் வனமும் (நினைவெல்லாம் நித்யா), தென்றல் வந்து தீண்டும் போதும் (அவதாரம்), மழையும், சாரலும், பனியும், வெயிலும் எல்லாமே இசையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!

    -அம்ரா பாண்டியன்

    இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    முத்து விழா ஆண்டில், 80-வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

    இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.

    மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.

    இந்தியாவின் 2-வது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    ×