search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி , மேலான்மை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் போன்றவைகளை முன் நிறுத்தி கட்சியை வழி நடத்துவேன், அதைபோலவே கட்சி நிர்வாகிகளும் நடந்துகொள்வார்கள்.

    சேலத்தில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளது. 20 ஆண்டுகாலமாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    ஆண்டுதோறும் 40 டி.எம்.சி.யில் இருந்து 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அதை மேட்டூரில் இருந்து ஆத்தூர் வரை கொண்டு செல்ல திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    சேலம் மாநகர குப்பைகள் நாள்தோறும் 500 டன் குப்பைகள் எறியூட்டப்படுவது முட்டாள் தனம். குப்பைகளால் மாநகர மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். குப்பைகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. 9 மாதத்தில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு நிலத்தை திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள்.

    அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் கொண்டு வந்த நோக்கமே கல்வி வியாபாரம் ஆக கூடாது என்பதே, ஆனால் இந்தியா முழுவதும் 1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது,

    அது போக மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் என கல்வி வணிகம் ஆக்கப்பட்டது.. நீட் தேர்வு வந்த பிறகும் தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிவிவருகிறது.

    கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை, அதனால் சிறிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆளுநருக்கும் முதல்-அமைச்சருக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். அதில் இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்.

    தமிழகத்திற்கு சாபகேடாக அமைந்துள்ள மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம். தமிழகத்தில் அரசியல் செய்து வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று அதை தடுத்து நிறுத்துவாரா. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான். பாரதிய ஜனதா கிடையாது.

    அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தனர். ஆனால் அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதி அமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றமுடியாது என அறிவித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், விஜயராசா, ராஜசேகரன், பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    இனிமேல் யாரும் பா.ஜனதா பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும், அதேபோல் பா.ம.க.வும் களம் இறங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து அந்த பதவியை உதறிவிட்டு தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றவர் அண்ணாமலை. அவர் தலைவர் பதவிக்கு வந்த பிறகு தனது அதிரடி அரசியல் மூலம் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜனதாதான் பெரிய கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    அதற்கு ஏற்றார்போல் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். அவர் தலைமையில் நடக்கும் போராட்டங்களுக்கும் கூட்டம் அதிக அளவில் திரட்டப்படுகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க.வை கண்டித்து எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டது.

    ஒரு பக்கம் போராட்டம், விமர்சனங்களை முன்னெடுக்கிறார். இன்னொரு புறத்தில் மற்ற கட்சிகளில் பதவிகள் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை கட்சிக்கு இழுக்கும் வேலைகளும் ஜரூராக நடக்கிறது.

    அதேபோல் மத்திய அரசு வழங்கும் வங்கி கடன், இலவச கியாஸ், வீடுகட்டி கொடுக்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை மாவட்ட வாரியாக கட்சியினர் மூலம் வீடுவீடாக தேடி சென்று கொடுக்கிறார்கள். அதோடு அந்த பயனாளிகளை தங்கள் ஆதரவாளர்களாக மாற்றி வருகிறார்கள்.

    அதேபோல் அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்களும், இளைஞர்கள் மத்தியில் எடுபடுகிறது. இதனால் மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா பக்கம் சாய்ந்து வருகிறார்கள். இதனால் அரசியல் களத்தில் எல்லா கட்சிகளுமே பா.ஜனதாவை உற்றுநோக்கி வருகின்றன.

    பாஜக

    தங்கள் கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு செல்பவர்களை தடுக்கவும், பா.ஜனதாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் எல்லா கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றன.

    அதற்கு முதல் அம்பை அ.தி.மு.க. எய்துள்ளது. அந்த கட்சியின் அமைப்பு செயலாளரான பொன்னையன் கூறும்போது, ‘சில நூறு பேரை திரட்டி போராட்டத்தை நடத்துவதால் பா.ஜனதா எதிர்க்கட்சியாக மாறவும் முடியாது. வளரவும் முடியாது. மாநில உரிமைகளை பறித்துவிட்டனர். கொள்கைகளை மாற்றாத வரையில் அந்த கட்சி தமிழகத்தில் வளர வாய்ப்பே இல்லை’ என்றார்.

    இதற்கும் அண்ணாமலை உடனடியாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘இது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா வளர்ந்து வருகிறது. எங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது’ என்றார்.

    பா.ம.க. தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி என்ற இலக்கை நோக்கி செல்கிறது. இந்த சூழ்நிலையில் பா.ஜனதா வளர்ச்சியை கட்டுபடுத்தவும், தங்கள் கட்சியினர் அந்த பக்கம் செல்வதை தடுக்கவும் பா.ம.க. தீவிரம் காட்டி வருகிறது.

    பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகமுள்ள வட மாவட்டங்களில் அரசு உதவிகளை பெற்றுக்கொடுத்தும், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தும் பா.ம.க.வில் உள்ள இளைஞர்களை பா.ஜனதாவினர் தங்கள் பக்கம் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏற்கனவே ‘பிள்ளை பிடிக்கும் கும்பல்’ போல் சிலர் வருகிறார்கள். பாட்டாளி சொந்தங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் எச்சரித்து வந்தார். ஏற்கனவே பா.ம.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள் சிலர் பா.ஜனதாவில் இணைந்து உள்ளனர்.

    இனிமேல் யாரும் பா.ஜனதா பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, ‘இட ஒதுக்கீடு பெற்று தந்தது, தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவது போன்ற பா.ம.க.வின் நிலைப்பாட்டை இளைஞர்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    முத்து விழா ஆண்டில், 80-வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

    இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.

    மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.

    இந்தியாவின் 2-வது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    தான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தி.நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஆலோசனை வழங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சியின் துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றி ஆலோசித்தனர்.

    முன்னதாக டாக்டர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவராக பொறுப்பேற்றதையொட்டி மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். அந்த வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அவரும் மனதார வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

    முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சமூக பிரச்சினைகள் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    முக்கியமாக கிடப்பில் உள்ள நீர் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன.

    இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது. இது நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2019-2020-ல் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடியாக இருந்தது. இது தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 131 சதவீதம் கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டு வருமானத்தை விட தி.மு.க. அதிக அளவு செலவு செய்துள்ளது.

    தி.மு.க. மொத்தம் ரூ.218.49 கோடி செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.70 கோடியும், அ.தி.மு.க. ரூ.42.36 கோடியும் செலவிட்டு உள்ளது.

    தி.மு.க.வுக்கு அடுத்த படியாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 2-வது இடத்தையும் ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 13 சதவீதமும் வருமானம் அதிகரித்து உள்ளது.

    அ.தி.மு.கவுக்கு வருமானம் குறைந்துள்ளது. 2019-2020-ல் 89 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.

    ஆனால் பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.

    இந்த வருமானம் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை அன்புமணி சந்தித்து வருகிறார் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.

    நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.

    நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.

    இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

    பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.  தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். தீர்மானம் வருமாறு:-

    தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது டாக்டர் ராமதாசால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.

    தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 1.1.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்  என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

    தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

    அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்கிறது என்றார்.

    இந்தத் தீர்மானத்தை வழிமொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித்தார்கள்.

    இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

    அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

    தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.

    பின்னர் தன்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்புமணி ஏற்புரை ஆற்றினார். நிறைவாக டாக்டர் ராமதாஸ் சிறப்பு பேருரை ஆற்றினார்.

    தொண்டர்கள் மத்தியில் அன்புமணி பேசும்போது, புதியதோர் தமிழகம் செய்வோம் என்று சூளுரைத்தார். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, இலவச தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, தொழில், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே எனது லட்சியமாக இருக்கும் என்றார்.

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவேற்காட்டில் நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த பொதுக்குழுவில் அன்புமணி பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கினார். சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகிறது.

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற யெரில் 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டும் வெற்றி பெற முடியவில்லை.

    இளைஞர் அணி தலைவராக இருக்கும் அன்புமணி எம்.பி. மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பெயர் பெற்றார்.

    சமீப காலமாக அன்புமணியின் ‘ஹைடெக்’ தேர்தல் பிரசாரங்களும், புள்ளி விவர பேச்சுக்களும் அரசியல் அரங்கில் அவரை பேச வைத்துள்ளது.

    தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை டாக்டர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் 20 மாவட்டங்களில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பா.ம.க.வின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ள அன்புமணியை கட்சியின் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் ஆட்சியை பிடிப்பது எளிது என்று பா.ம.க.வின் அனைத்து மட்டத்திலும் கருத்து நிலவுகிறது. தொடர்ந்து நிர்வாகிகளும் டாக்டர் ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

    அன்புமணியின் செயல்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வந்த டாக்டர் ராமதாஸ் திருப்தி அடைந்த நிலையில் இப்போதுதான் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாளை நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணிக்கு தலைவர் பதவி என்பதே முக்கிய தீர்மானமாக கொண்டு வரப்பட உள்ளது.

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சென்னை திருவேற்காட்டில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கு சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார்.
    சென்னை:

    சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை போன்று தீவிரமாக பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘பா.ம.க. சிறந்த செயல் வீரர்கள் விருது’ கடந்த 2020-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பாராட்டு பத்திரம், ஒரு பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2021-ம் ஆண்டுக்கான பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுக்கு 5 பேரை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.

    பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி, பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராம.முத்துக்குமார், பசுமை தாயகம் பொதுச்செயலாளர் அருள் ரத்தினம், கடலூர் முன்னாள் மாவட்ட தலைவர் தட்டானோடை செல்வராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

    மேலும் சமூக முன்னேற்ற சங்க தலைவர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் மீ.கா.செல்வகுமார், மாநில துணைத்தலைவர் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், பா.ம.க. மகளிர் அணி மாநில தலைவர் நிர்மல் ராசா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

    சென்னை திருவேற்காட்டில் நாளை (28-ந்தேதி) பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 10 பேருக்கும் சிறந்த செயல்வீரர் விருதுகளை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்குகிறார். 2022-ம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளை பெற அனைத்து நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து நியாயவிலைக் கடை அரிசி மிகப்பெரிய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இயலாமையை அண்டை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிருப்பது அரசுக்கு அவப்பெயர் ஆகும்.

    தமிழ்நாட்டில் நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

    அதற்கு பிறகும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள்.

    அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும். அதைக் கடந்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

    ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான ஜி.கே.மணிக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க வில் சாதாரண உறுப்பினராக செயல்படத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயர்ந்து தலைவர் ஸ்தானத்தை அடைந்தவர். கட்சியினருக்கு நம்பிக்கையும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. பா.ம.க.வின் வளர்ச்சிக்காக, தொண்டர்களின் உயர்வுக்காக, தமிழக மக்களின் நலன் காப்பதற்காக பா.ம.க வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றும் பணிக்கு, தலைவராக ஜி.கே. மணி மேற்கொள்ளும் பணி மென்மேலும் வளர, சிறக்க, உயர-நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நாளை பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு பாராட்டு விழா தொடங்குகிறது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×