search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு
    X
    பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு- பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

    பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.  தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். தீர்மானம் வருமாறு:-

    தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது டாக்டர் ராமதாசால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.

    தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 1.1.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்  என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

    தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

    அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்கிறது என்றார்.

    இந்தத் தீர்மானத்தை வழிமொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித்தார்கள்.

    இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

    அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

    தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

    அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.

    பின்னர் தன்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்புமணி ஏற்புரை ஆற்றினார். நிறைவாக டாக்டர் ராமதாஸ் சிறப்பு பேருரை ஆற்றினார்.

    தொண்டர்கள் மத்தியில் அன்புமணி பேசும்போது, புதியதோர் தமிழகம் செய்வோம் என்று சூளுரைத்தார். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, இலவச தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, தொழில், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே எனது லட்சியமாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×