search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eyes Care"

    • பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள்
    • குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், டி.வி., கம்ப்யூட்டரை எப்போதும் உற்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். 3 வயதை தொடாத குழந்தைகூட மொபைல் போனுடன் நேரத்தைக் கழிக்கிறது. நம் முந்தைய தலைமுறையில் இவ்வளவு அதிகமான குழந்தைகள், பார்வைத்திறன் குறைபாட்டால் கண்ணாடி அணியவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை?

    ஸ்மார்ட்போனின் திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப்போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    இதைத்தவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை சூரிய ஒளி அதிகமாக சுரக்க வைக்கிறது. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்தக்காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், நீண்டநேரம் வீட்டுக்கே வராமல் கூட விளையாடினார்கள். ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான நிலை இப்போது உள்ளது.

    எனவே கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    • கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.
    • மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்.

    கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்...

    பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.

    உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக உள்ளனர்.

    கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.

    உங்கள் கண்களின் அளவு கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அகலம் கொண்டது. எடை 0.25 அவுன்ஸ்.

    சிலர் இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒருவகை நோய். அதன் பெயர் ஹீடகோமியா.

    மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.

    80 சதவிகித கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெறக் கூடியதாகவும் உள்ளது.

    உலகில் பொதுவான கண் நிறம் பிரவுன். கண்களின் நிறம் கருவிழி படலத்தில் உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

    நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.

    கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது; பெரும்பாலும் அப்படி தும்ம முடியாது.

    தீக்கோழிக்கு அதன் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.

    புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும். குறிப்பாக இரவு கண் பார்வையை.

    பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும், இருட்டில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.

    டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.

    தேனீக்கு 5 கண்கள் உண்டு.

    மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    • கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.
    • நட்ஸ் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கண்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் 24 மணி நேரத்தில், குறைந்தது 12 மணி நேரம் கணினி திரைகளையே பார்த்து கொண்டிருப்பதால், கண்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். அத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு, கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.

    ஆரோக்கியமாக கண்களை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

    1. மீன்

    நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 ஆகியவை மீனில் அதிகம் நிரம்பி இருக்கின்றன. இவை கண் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு நன்மை தரும்.

    2. முட்டை

    லுடீன் மற்றும் வைட்டமின் ஏ உட்பட முட்டையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    3.முழு தானியங்கள்

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் நியாசின் ஆகியவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

    4. பச்சை காய்கறிகள்

    கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலார்ட் கீரைகள், புரோக்கோலி, பட்டாணி மற்றும் வெண்ணெய் ஆகியவை கண் தசை பராமரிப்புக்கான சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

    5. சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் பெர்ரிகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கும்.

    6. நட்ஸ்

    பிஸ்தா, வால்நட், பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அவை உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    7.பருப்பு வகைகள்

    கிட்னி பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை பயோ பிளவனாய்டுகள் மற்றும் துத்தநாகத்தின் நல்ல ஆதாரங்களாகும். இது கண் பார்வை மற்றும் பிற கண் தொடர்பான செயல்பாடுகளுக்கு உதவும்.

    8.கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆதாரமான வைட்டமின் ஏ-வை உற்பத்தி செய்ய உதவுகிறது.

    • ‘மெட்ராஸ் ஐ’-க்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.
    • நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    'மெட்ராஸ் ஐ' என்பது அடினோ வைரஸ் அல்லது ஸ்டெரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது. கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணீர் வடிதல் அல்லது கண்பீளை வெளியாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இதற்கான சித்த மருத்துவம்:

    1) "படிக பன்னீர்" ஒரு துளி வீதம் கண்களில் விடலாம். கண் சிவப்பு, பீளை வெளியேறுவது விரைவில் நிற்கும்,

    2) சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து, சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதில் நனைத்து, அந்த துணியை வைத்து கண்ணை துடைக்கலாம், மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி, 3 நந்தியாவட்டை பூச்சாற்றை பிழிந்து கண்களில் விட்டு வர கண் எரிச்சல், கண் வலி நீங்கும்.

    மேலும், ஒவ்வொரு முறை கண்ணை துடைக்கும் போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    • நோய் பாதிக்கப்பட்டவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும்.
    • கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

    வடகிழக்கு பருவமழையான தற்போது தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 'மெட்ராஸ்- ஐ' நோய் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் உள்ளிட்ட சில இடங்களில் பரவ தொடங்கி உள்ளது.

    இந்தநிலையில் இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவமழை காலத்தில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகுகிறது. 'மெட்ராஸ் ஐ' கண்வலி என்பது ஜலதோசத்தை உண்டாக்கும் அடினோ வைரஸ் மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகிறது. இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது. 50 சதவீத மக்களுக்கு தானாகவே சரியாகி விடும். அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே டாக்டர்களை பார்க்க வேண்டியிருக்கும். இந்த நோய் தாக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 முதல் 15 நாட்கள் வரை நீடிக்க கூடும். இதன் அறிகுறிகள் சிவப்பு நிற கண்கள், கண்களில் நீர் வடிதல், கண்களில் லேசான வீக்கம், எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு ஆகும்.

    இந்த நோயானது கண்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்ப்பதால் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும். பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன் கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது, அந்த இடத்தை மற்றொருவர் தொடுவதால் நோய் பரவுகிறது.

    கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். பிறரது பொருட்களை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களை கைகளால் தொடவோ, கசக்கவோ கூடாது.

    பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை.
    • ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

    மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, 'மெட்ராஸ் ஐ'. கண் வெண்படல அழற்சி எனப்படும் இந்த கண் நோய், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாக்டீரியா தொற்றாகவும் பரவும். சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. கண் பார்வை திறனை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே மெட்ராஸ் ஐ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எப்படி பரவும்?

    மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் தொடுவது, பயன்படுத்துவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர் கைகளால் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலம் இந்த கண் நோய் பரவக்கூடும்.

    நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் டவல்கள், தலையணை உறைகள், ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதையோ, பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் யாருக்கேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றவர்களும் அடிக்கடி கை கழுவ வேண்டும். அவர்களுக்கு மருந்து போட்டால் உடனே கைகளை கழுவி விட வேண்டும்.

    மெட்ராஸ் ஐ வருவதற்கு காரணங்கள்?

    வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தொற்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் ஒரு சில வைரஸ் மாறுபாடுகள்தான் கருவிழியை பாதிக்கும் தன்மை கொண்டவை.

    ஒரு சிலருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டதுமே கண்கள் மங்கலாக தொடங்கிவிடும். சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

    வைரஸ்கள் மாறுபாடு கொண்டவை என்பதால் கடைகளில் விற்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள்:

    கண் சிவப்பு நிறத்துக்கு மாறுதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண் எரிச்சல், கண்களில் பூழை ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறி குறிகள் தென்படும். வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தால் கண்களில் வீக்கம், பார்வை மங்குதல், வெளிச்சத்தை பார்ப்பதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் அதிகமாக தென்படும்.

    எப்போது குணமாகும்?

    ஒருவருக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் நான்கு முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வெளிப்படும். முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் சரியாகிவிடும்.

    கணினியில் வேலை பார்ப்பது உள்பட வழக்கமான வேலைகள் அனைத்தையும் பார்க்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அது மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும்.

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

    ஒருசில அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துவிட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று ஒரு வாரத்துக்குள்ளேயே சரியாகிவிடும். வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் கண் இயல்புக்கு திரும்புவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகக்கூடும்.

    • நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
    • கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

    சிலரது கண்கள் திடீரென சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். பொதுவாக தூக்கமின்மை, உடல் சோர்வு காரணமாக கண்களின் நிறத்தில் மாற்றம் தென்படும். எனினும் ஓரிரு நாட்களில் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். சில சமயங்களில் நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். கண்களில் எரிச்சல், காயம், நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

    கொரோனா தொற்று

    நுரையீரல் மற்றும் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டால், அதன் பாதிப்பு இதயம் மற்றும் கண்களிலும் வெளிப்படும். மருத்துவர்களின் கருத்துப்படி கண்கள் சிவப்பு நிறத்தில் தொடர்ந்து காட்சி அளித்தால் அது கொரோனா அறிகுறியாகவும் இருக்கலாம். வைரஸ் கண்கள் வழியாக உடலுக்குள் நுழையும்போது இது நிகழும்.

    காண்டாக்ட் லென்ஸ்

    காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது பிரச்சினை அல்ல. அதனை முறையாக உபயோகிக்க வேண்டும். சரியாக சுத்தம் செய்யாமலோ, சரியான முறையில் கண்களுக்குள் பொருத்தாமலோ இருந்தால் கண்களுக்கு அசவுகரியம் உண்டாகும். தூங்க செல்வதற்கு முன்பு காண்டாக்ட் லென்ஸை மறக்காமல் அகற்ற வேண்டும்.

    அவற்றை வெளியே எடுக்காமல் அப்படியே தூங்குவது, காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே மழையில் நனைவது கண்களில் தொற்று ஏற்பட காரணமாகிவிடும். கண்களில் காயம், கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

    பிளேபரிடிஸ்:

    இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது கண் இமைகளின் அடிப்பகுதி வீக்கமடையக்கூடும். கண்களும் சிவப்பு நிறமாக மாறும். காலாவதியான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் தொற்று ஏற்படக்கூடும்.

    ஒவ்வாமை:

    காய்ச்சல் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கண்களின் நிறம் மாறக்கூடும். தூசுகள், விலங்குகளின் முடிகள் கண்களில் பட்டாலும் ஒவ்வாமை காரணமாக எதிர்வினை புரியும்.

    நோய்த்தொற்று:

    கண்களில் வீக்கம் மற்றும் பாக்டீரியா போன்ற வைரஸ் தொற்றுகள் காரணமாக கண்களில் இருந்து நீர் வெளியேறும். மஞ்சள் நிறத்திலும் காணப்படும். கண் மருத்துவரை அணுகி பரிசோதிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.

    • பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
    • இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள்.

    நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

    எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.

    இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக, நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

    ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

    முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது. இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.

    ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.

    • இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
    • சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

    ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு

    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

    கண் சுருக்கங்கள்

    ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.

    தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

    • கண்களில் ஏற்படும் வறட்சி தலைவலியை உருவாக்கும்.
    • அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம்.

    நவீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக நமது கவனம் சிதறுவதுடன், தலைவலியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து விடுபட கீழ்கண்ட எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இவை பொதுவான வழிமுறைகள் மட்டுமே. முறையான ஆலோசனைக்கு மருத்துவரை தொடர்பு கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

    இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், கணினி, செல்போன், டி.வி., பார்த்து விட்டு தூங்குவது போன்ற செயல்களால் கண்கள் மிகவும் பாதிப்படைகின்றன. அதனால், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஏற்பட்டு வறட்சி ஏற்படுகிறது. தினமும் எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, ஓய்வு ஆகிய மூன்றையும் சரியாக கடைப்பிடித்தால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

    எதிர்பாராத சூழ்நிலையில் கண்களில் தூசி விழுந்தால், தூய்மையான குளிர்ந்த நீரால் மட்டுமே கண்களை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் கண்களில் எண்ணெய் அல்லது சுய மருத்துவ முறையில்ஏதாவது சொட்டு மருந்தை விடுவது போன்றவை ஆபத்தானது. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றை போதிய புற வெளிச்சம் உள்ள சூழ்நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

    இருட்டில் பார்க்கும்போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு விழிப்படலத்தை பாதிக்கும். கணினியின் திரையை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ்ப்புறமாக அமையும்படி வைக்க வேண்டும். தொடர்ந்து கணினியை இயக்குபவர்கள் 20/20 என்ற முறையை கடைப்பிடிக்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டுவதாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

    கோடை காலத்தில் உடலிலும், கண்களிலும் வறட்சி ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். மருத்துவர் ஆலோசனைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு விலகி, கண்கள் குளிர்ச்சி அடையும். கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

    சிக்கன், மட்டன் போன்றவற்றை தவிர்த்து கடல் உணவுகளான மீன், இறால், போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். மீன் உணவுகள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன. அதனால் கண் பார்வை குறைபாடுகள் குணமாகும். பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.

    வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட் களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை கீரையை சமைத்து சாப்பிடலாம். பல்வேறு நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    • குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது.
    • ‘பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம்.

    டிஜிட்டல் யுகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, பெரியவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்பான பிரச்சினைகள், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் கண் பாதிப்புகளை எப்படி குறைப்பது?... போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார். இவர் கண்கள் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.

    * ஸ்மார்ட்போன், குழந்தைகளின் கண்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

    * குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகளை எப்படி கண்டறிவது?

    இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    * குழந்தைகளுக்கு கண் பரிசோதனை எப்போது செய்யலாம்?

    மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம், வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் உடல் வளர்ச்சியை போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் அவசியம். அதை கண்காணிக்கவும், குறைபட்டிருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக, 10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் 'பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு 'ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா... போன்றவற்றை ஆரம்பத்திலேயே சோதித்துவிட வேண்டும்.

    * ஐ.டி. துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?

    ஐ.டி.யில் வேலைபார்ப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது கணினியை பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கண் வறட்சி ஏற்படும். தலைவலி மற்றும் கண் வலி பிரச்சினைகளும் உண்டாகும். இப்படி அதிக நேரம் கணினியில் வேலைபார்ப்பவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க நன்றாக தூங்கவேண்டும். கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கூடவே 20-20-20 முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.

    20-20-20 என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளையோ அல்லது வாசகங்களையோ 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதன்மூலம், கண்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவையின்றி, கணினி பார்ப்பதில், அசவுகரியங்கள் இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் மருந்துகளை பயன்படுத்தலாம்.

    * பார்வை குறைபாடு பெற்றோர்கள் மூலமாக வருமா?

    ஆம்..! 'ரிஃபிரக்டிவ் எரர்' எனப்படும் 'ஒளி விலகல் பிழை' மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வர 80 முதல் 90 சதவிகிதம், சாத்தியம் இருக்கிறது.

    * இந்தியாவில் நிறையபேர் எத்தகைய பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

    'ஐ-பால்' எனப்படும் கண் பந்தின் வளர்ச்சியை பொறுத்து, குறைபாடு மாறுபடும். கண் பந்து பெரிதாக இருந்தால் 'மைனஸ்' குறைபாடும், சிறியதாக இருந்தால் 'பிளஸ்' குறைபாடும் உருவாகும். அந்தவகையில், நம் இந்தியாவில் பெரும்பாலானோர், 'மைனஸ்' குறைபாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

    * குழந்தைகளின் பார்வை குறைபாட்டிற்கு, நிரந்தர தீர்வு இல்லையா?

    மருத்துவ தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண முடியும். 18 வயது வரை, பார்வை திறன் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவது மட்டுமே தீர்வாகும். 18 வயதை எட்டியபிறகுதான், அவர்களது பார்வை திறன் ஒரு நிலையை அடையும். அந்த சமயத்தில், அவர்களது கருவிழி திரையின் தடிமனுக்கு ஏற்ப, அவர்களது பார்வை திறன் மதிப்பீட்டிற்கு ஏற்ப... லாசிக் சிகிச்சையோ அல்லது ஸ்மைல் சிகிச்சையோ செய்து, பார்வை குறைபாட்டை மீட்கலாம். 'மைனஸ் 9.5' இப்படி அதீத பாதிப்பு உள்ளவர்கள், ஐ.சி.எல். எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் பார்வையை நிரந்தரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கண்ணாடிக்கு குட்பை சொல்லலாம்.

    * முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்பை தவிர்க்க முடியாதா?

    இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். நம் கண்களில் உள்ள லென்ஸ் பாகம், மறைக்கப்படும்போது பார்வையின் தரம் குறைய தொடங்குகிறது. வயது மூப்பு காரணங்களால், தலை முடி நரைப்பது போல, தோல் சுருங்குவது போல, 'காட்ராக்ட்' எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு. முன்பை போல கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே எளிமையாகிவிட்டது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தில் வலி இல்லாமல், மைக்ரோ மினிமம் (1.5 மி.மி.) நுட்பத்திலேயே அகற்றிவிடலாம்.

    * கண்களில் கட்டி வந்தால் என்ன செய்வது?

    கெலோசியன் (chalazion) மற்றும் ஹார்டியோலம் (hordeolum) என்ற இரு வகையான கட்டிகள், கண்களில் வரும். இதில் ஹார்டியோலம் வலி மிகுந்தது. இமைகளின் ஓரத்தில் வரும். கெலோசியன், வலி இல்லாதது. இரண்டையும் கரைக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகள் மூலமாக கரையாத கட்டிகளை, மருத்துவர் துணையோடு இன்டிவிஷன் டிரைனேஜ் முறையில் அகற்றலாம். கண் கட்டி விஷயத்தில், நீங்களாகவே சிகிச்சை எடுப்பது ஆபத்தானது. கூர்மையான பொருட்களை கொண்டு நீங்களே சுத்தப்படுத்த நினைத்தால், பார்வை இழப்புகளை சந்திக்க நேரலாம்.

    * சர்க்கரை நோயாளிகள் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

    சர்க்கரை அளவை சரிவர பராமரிக்காவிட்டால், 'டயாபெடிக் ரெட்டினோபதி' எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். டயாபெடிக் ரெட்டினோபதி என்பது, கண் விழித்திரையில் நடக்கும் ஒழுங்கற்ற மாற்றம். மருத்துவர்களால் மட்டுமே கண்டறியமுடியும், மற்றபடி ஆரம்பத்தில் இதை அறிகுறிகளால் கண்டறியமுடியாது. இவை, முடியைவிட மெல்லியதாக இருக்கும் கண் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கி, ரத்த கசிவு (retinal haemorhage) மற்றும் நீர் கசிவு (vitreous haemorhage) ஏற்படுத்தும். பார்வை திறனையும் குறைக்கும். இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், லேசர் சிகிச்சை, இன்ட்ராவிட்ரியல் இன்ஜெக்‌ஷன், அறுவை சிகிச்சை ஆகியவை வழியாக பார்வையை காப்பாற்றலாம். பறிபோன பார்வையை திரும்ப பெறுவது சவாலானது. அன்றாட தேவைக்கேற்ற இன்டராக்குலர் லென்சுகளையும் பொருத்தலாம்.

    • நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும்.
    • ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம்.

    செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான். ஆனால் இந்த ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.

    நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் போனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும். ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும்.

    நீல நிற ஒளி

    எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி எவ்வாறு ஒரு நபரை பாதிக்கிறது என்பதைப் பற்றி புதிதாகக் கூற எதுவுமே இல்லை. ஆனால் இது பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நல்ல தூக்கம், கண்கள் ஆரோக்கியம், நடத்தை, ஆற்றல் ஆகியவற்றுக்கு இரவுநேரத்தில் அனைத்து சாதனங்களையும் ஸ்விச் ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. பெரியவர்களை பாதிப்பதை விட இந்த செல்போன்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி குழந்தைகளை 45% அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

    வெடிக்கும் ஆபத்து

    சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டிருப்பது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்பாடு என்ற பல்வேறு காரணங்களால் செல்போன் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு பேட்டரிகள் செயலிழந்து போவது, அல்லது தவறான சார்ஜர்களை பயன்படுத்துவது அல்லது சார்ஜ் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய மின்சார கோளாறு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பல முறை செல்போன் வெடித்து அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். எனவே செல்போன் பேட்டரிகள் ஆரோக்கியமாக இருப் பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அதுமட்டு மில்லாமல் குழந்தைகளின் அருகில் எப்பொழுதும் செல்போன் சார்ஜ் செய்யக்கூடாது.

    ×