search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children Health"

    குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
    ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
     
    கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
     
    கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம்  உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது  தெரியவந்துள்ளது.
     
    மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு  இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
     
    மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின்  டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
     
    வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது  உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
     
    பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர்  மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
    குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.
    குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

    குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

    குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.



    குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

    பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.
    பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
    எல்லோரும் விரும்புவது தம்மக்களை நல்லமுறையில் வளர்க்க வேண்டும், அவர்களை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்பதை தான். ஆனால் பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

    கருத்தரிப்பிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை குழந்தை பராமரிப்பின் மிக முக்கியமான காலம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சிலவேளைகளில் குழந்தைகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.

    உதாரணமாக, கருத்தரிப்பு உறுதியானதுமே சில தாய்மார்கள் குழந்தை சிவப்பாக இருக்கவேண்டுமென்று குங்குமப்பூ சாப்பிடுவர். நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைப்போல கருப்பட்டி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. அதே வேளையில் இவற்றை சாப்பிடுவதால் ஒரு பலனுண்டு. தாய்க்கும் சேய்க்கும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

    அதைப் போன்று குழந்தை பிறக்க சரியான காலம் நிர்ணயித்து, அக்குறிப்பிட்ட நேரத்தில் மகப்பேறு பார்க்க மருத்துவரை கட்டாயப்படுத்துவது சிலநேரங்களில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உருவாக்கலாம். சரியான நேரம் என்று ஒன்றினை கணிக்கவே முடியாது. மருத்துவர் உத்தேசமாக சொல்வதுதான் நேரம்.

    பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குறைந்த எடை, குறைப்பிரசவம், உடற்குறைபாடுகள், தாயின் உடல்நிலை பாதிப்பு போன்றக் காரணங்கள் தவிர்த்து குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது தவறு. பிறந்த குழந்தையை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் மென்மையாக, மிதவெப்ப நீரில் குளிப்பாட்டுவதும் தலையைச் சுத்தம் செய்வதும் அவசியம்.

    ஆறுமாதங்கள் முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. பசும்பால், பவுடர் பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் குறையும் பட்சத்தில், தாய் அதிக அளவில் பசும்பால், தயிர், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உட்கொள்வதினால் பால் சுரக்கும். குறித்தக் காலத்தில் பால் ஊட்டுவது அவசியமற்றது. குழந்தை அழுதால் மட்டுமே புகட்டுவது சிறந்தது.

    தாய் அமர்ந்த நிலையில்தான் பால் ஊட்டவேண்டும். தாய்ப்பால் அருந்தும் தருணங்களில் குழந்தை மலம் கழிப்பது இயற்கை. இது வயிற்றுப்போக்கு அல்ல. இதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை.



    மலம் கழித்தபின் சுத்தம் செய்ய கையோ, பஞ்சோ, துணியோ உபயோகிக்காமல், நேரடியாக குளிர்ந்தநீரில் கழுவுவது அவ்விடத்தில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தை அதிக நேரம் தூங்குவது நல்லது. துணித் தொட்டிலைத் தவிர்த்து, தரையில் மெத்தை விரித்து தாய்க்கு அருகாமையிலோ அல்லது மார்பின் மீதோ தூங்க வைப்பது நல்லது.

    ஆறு மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். முதலில் தயிர், மசித்த வாழைப்பழம், பழச்சாறு என தொடங்கி, படிப்படியாக, தயிர்சாதம், பருப்பு சாதம், காய்கறிசூப், இளநீர், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    அந்தி சாய்ந்த நேரங்களில் குழந்தைகள் அழுவது இயற்கை. அதற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பதும், கிரைப் வாட்டர் மற்றும் நாட்டு மருந்துகள் தருவதும். எந்த பலனையும் அளிக்காது. தாயின் தாலாட்டு அல்லது பதிவு செய்யப்பட்ட தாலாட்டு இசை, மற்றும் குறைவான வெளிச்சம் தரும் மின்விளக்கு போன்ற சூழல் நல்ல பலனை அளிக்கும்.

    சில குழந்தைகள் விரல் சூப்பும். இதைத் தவிர்க்க தாய்மார்கள் விரலில் வேப்பெண்ணெய் தடவுவது உண்டு. இது தவறானது. விரல் சூப்புவது இயற்கை அளித்த நல்லதொரு வரம். இத்தகைய குழந்தைகள் மிக அமைதியாகவும், தெளிந்த சிந்தனையுடன் உருவாகுவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. விரல் சூப்புவதால் பசியின்மை, பல் அமைப்பில் குறைப்பாடு போன்றவை ஏற்படும் என்பது தவறான கருத்து.

    பதினோரு மாதத்தில் குழந்தைக்கு முடி எடுப்பது, மொட்டை அடிப்பது வழக்கம். பெரும்பாலும் இத்தகைய சடங்குகளை வீட்டிலோ அல்லது சுகாதாரமுள்ள இடங்களில் நடத்துவது நல்லது. பல குழந்தைகள் இச்சடங்குகளுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கைகால் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதை நீண்ட அனுபவத்தில் கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நீண்ட பயணம், சுகாதாரமற்ற நீரில் குளிப்பது, அசுத்தமான சூழல் போன்றவைதான்.

    பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கூட்டம் கூட்டி நடத்துவார்கள். கூட்டம், இரைச்சல் இவற்றால் குழந்தைகள் பயத்தினாலும் சோர்வினாலும் அல்லல்படுவதுண்டு. முதல் பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடிவிட்டு இரண்டாம் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து கொண்டாடுவது சிறந்தது.

    ஆரோக்கியமான குழந்தை வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் ஒளிவிளக்காய் திகழும்.

    டி.எம்.மாணிக்கராஜ்,

    குழந்தைகள் நல மருத்துவர்
    கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். விழுங்கிய பொருள் வெளியே வரும்வரை நம் உயிர் நம் கையில் இருக்காது. அந்தப் பதற்றமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாது.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.



    எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
    இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.

    பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.

    இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.

    பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

    * மரபணுக் குறைபாடு
    * பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
    * கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
    * கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
    * கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
    * ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.


    பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?

    * சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
    * ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
    * கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
    * பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

    உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம். 
    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலால் மிக அதிக அளவில் வலிப்பு வரும்.
    காய்ச்சலால் இளம் குழந்தைகளுக்கு வரக்கூடியது வலிப்பு நோய். சில குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் அல்லது உயிருக்கு ஆபத்தான சில விஷக்காயச்சல்களாலும் வலிப்பு ஏற்படலாம். அதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

    ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக 14 முதல் 18 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு வரும். சில குழந்தைகளுக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். குழந்தையின் தாய், தந்தை அல்லது உடன்பிறந்தவர்களுக்குக் காய்ச்சலால் வரக்கூடிய வலிப்பு இருந்தால் குழந்தைக்கும் வரக்கூடும்.

    ஏற்கெனவே ஒருமுறை வலிப்பு ஏற்பட்டிருந்தால், மீண்டும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். மூளை வளர்ச்சி முழுமை அடையாத குழந்தைகளுக்கு மிக அதிக அளவில் வலிப்பு ஏற்படும்.

    அறிகுறிகள்

    உடல் வெப்பம் அதிகரிப்பு
    கை, கால்களும், உடலும் வெட்டி வெட்டி இழுக்கும்.
    காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குள் வலிப்பு வரும்.

    அபாய நிலை

    * குழந்தையின் வயது ஆறு மாதத்துக்குக் குறைவாகவும், ஆறு வயதுக்கு அதிகமாகவும் இருத்தல்.
    * காய்ச்சல் குறைவாக இருக்கும்போது வலிப்பு.
    * பரம்பரையாக குடும்பத்தினருக்கு வலிப்பு நோய்.
    * மூளை வளர்ச்சி முழுமை அடைந்த குழந்தை.
    * ஒருமுறைக்கு மேல் வலிப்பு.
    * காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்துக்குப் பிறகு வலிப்பு.
    * ஒரு கை அல்லது கால் என உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் மட்டும் வலிப்பு.
    * 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் வலிப்பு.



    மீண்டும் வலிப்பு வரும் வாய்ப்பு உள்ள குழந்தைகள்

    * 30-50 சதவீத குழந்தைகளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
    * மூளை வளர்ச்சி முழுமை அடையாதவர்கள்.
    * குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு நோய் இருப்பது
    * அசாதாரணமான காய்ச்சலுடன் வரும் வலிப்பு

    கவனிக்க வேண்டியவை

    1. சாதாரண காய்ச்சலால் ஏற்பட்ட வலிப்புதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    2. மூளைக் காய்ச்சலோ, வலிப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
    3. நீண்ட நேரம் வலிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    4. மீண்டும் வலிப்பு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். (மூளை பாதிப்பு ஏற்படலாம்)
    5. வலிப்பு வரும்போது, குழந்தையின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
    6. குழந்தை அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    7. குழந்தையைக் காற்றோட்டம் உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
    8. உமிழ்நீரினால் மூச்சடைப்பு ஏற்படாமல் இருக்க, தலையை ஒருபுறமாகத் திருப்ப வேண்டும்.
    9. மயக்கத்தில் இருக்கும் குழந்தையின் வாயில் எதுவும் ஊற்றக் கூடாது.
    10. குழந்தையின் கையில் இரும்புப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது.
    11. துணியைத் தண்ணீரில் நனைத்து உடல் மீது போட்டு வெப்பத்தைக் குறைக்க வேண்டும்.
    12. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
    குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு ஆகும். இயற்கை முறையில் அஜீரண பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகளை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, ஜீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

    ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.

    மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :

    1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.

    2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

    3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

    4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
     
    உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.
    குழந்தை பராமரிப்பு ஒரு கலை என்பார்கள். ஆனால் இன்றைய பெற்றோர் பெரும்பாலும் அந்த கலையில் வல்லவர்களாக இருப்பதில்லை.

    குறிப்பாக குழந்தைகளை ஊட்டச்சத்துடன் வளர்க்க வேண்டிய விஷயத்தில் நாகரிக உலகின் பெற்றோர் பலரும் தோற்றும் விடுகிறார்கள். காரணம் நிகழ்கால உலகம் ஆரோக்கியத்தை விட நாவின் கோரிக்கைக்கு அடிபணிந்து ருசிக்குத் தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஆனால் பழையக் காலங்களில் குழந்தைகளை ஆரோக்கியம் நிறைந்தவர்களாக பெற்றோர் வளர்த்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுத்தனர். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவுகளை பார்த்து பார்த்து தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கினர். உடலுக்கு வலிமை தரும் கம்பு, சோளம், கேப்பை மற்றும் பயறு வகைகளை அன்றாட உணவுகளில் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணினர்.

    அதிலும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். தாங்கள் பெற்ற ஆரோக்கியத்தை குழந்தைகளும் பெற அவர்கள் பெரிதும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில் ஏற்பட்ட தொய்வு, நிகழ்கால தாய்மார்கள் பலருக்கும் ஆரோக்கியத்தை அட்சய பாத்திரமாய் அள்ளித்தரும் நம் பாரம்பரிய உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

    நவநாகரிக உலக பெற்றோர் பாக்கெட்டில் அடைத்த ‘ரெடிமேட்’ உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தான் பெரிதும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இல்லையென்றாலும், குழந்தைகள் அடம்பிடித்து கேட்டு நொறுக்குத்தீனிகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு விபரீதமானதாக இருக்கிறது.

    குழந்தைகளின் எடை வயதுக்கும், உயரத்துக்கும் தொடர்பற்றதாக இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பலரும் உடல் பருமனால் பெரிதும் அவதிபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து, நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதுதான் காரணம்.

    அதிலும் குறிப்பாக, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தினமும் உணவு உண்பதில் ஆர்வம் காட்டுவதை விட செயற்கை ரசாயன கலவைகளோடு தயாரித்து சந்தைப்படுத்தப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தம், கற்பதில் குறைபாடு போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கைவிடுக்கிறது.



    இன்றைய குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை விரும்புவதற்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. சிப்ஸ், பர்க்கர், பீட்சா, ரசாயன வகை குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்கள் வீடுகளில் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளை தூண்டுகிறது.

    ஒரு ஆய்வு தரும் தகவல்படி, உலகம் முழுவதும் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்தில் டி.வி., இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் (கிட்டத்தட்ட 2 கோடி முறை) அவற்றை ருசித்து பார்க்கும் ஆவல் அவர்களின் மனதில் உதிக்கிறது.

    அதிலும், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மாதத்தில் சுமார் 21 நாட்கள் வரை நொறுக்குத்தீனி தொடர்பான விளம்பரங்களை காண அதிகம் ஆர்வம்காட்டுகிறார்களாம். இதுவும் நொறுக்குத்தீனிகளை அவர்கள் அதிகம் சாப்பிடுவதற்கு காரணமாக இருக்கிறது.

    நொறுக்குத்தீனிகளின் விபரீதம் உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் அதிக அளவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அதுபோன்ற உணவு பொருட்களுக்கான விளம்பரங்களை தடை செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.

    இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை முக்கியம்தான். ஆனால் நாகரிக உலகின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அதை காட்டிலும் முக்கியமானது.

    நாம் உணவு விஷயத்தில் முன்னோக்கி செல்வதை காட்டிலும் பின்னோக்கி செல்வது சாலச்சிறந்தது. நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பாரம்பரிய உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க முன்வாருங்கள். அப்போதுதான் நம் பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மனிதனின் ஆரோக்கியம் தான் படிப்பு, வேலை, விளையாட்டு என அத்தனை அம்சங்களுக்குமான அடிப்படை.

    ஆக, உடலுக்கு தீமை தரும் உணவுகளை தள்ளிவைத்து, நலம் பயக்கும் உணவுகளை நாடி சென்று பிள்ளைகளுக்கு கொடுப்பதுதான் இனி பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.

    -மாசு 
    குழந்தைகளுக்கு அதிக நேரம் டயப்பர் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயப்பரை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
    குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.

    கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.

    `டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது



    * குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

    * வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.

    * இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    * ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

    * டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

    * குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.

     * இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.

    * டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள். 
    குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்துவிடுவது... இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.



    உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம் தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள். கல்லூரி பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

    சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமாக வாழலாம்.
    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.
    குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.

    வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

    உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

    வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.



    பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.

    கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.
    பூண்டு

    உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

    வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.
    ×