search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Born Baby Care"

    • குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்
    • குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்

    பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம்.

    அனைத்து மாற்றங்களும், புதிய பொருட்களும் குழந்தையின் மனதில் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பய உணர்வை போக்க குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு எது கை எது வாய் என்று கூட தெரியாது; ஏதோ பயத்தில் தானாக இது மாதிரி வைத்துக் கொள்கின்றன.

    பய உணர்வை போன்று குழந்தைகளுக்கு பசி என்ற உணர்வு ஏற்பட்டாலும் குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்வர்; குழந்தைகளின் அழுகை, வயிற்றின் அளவு, இம்மாதிரி கையை வாயில் வைத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்; பசி நீங்கினால், குழந்தைகள் கையை வாயில் வைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும்.

    குழந்தைகள் தூங்கும் பொழுது கையை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வர்; ஏனெனில் அவர்களுக்கு தூங்கும் பொழுது ஒருவித பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்; நீங்கள் எத்தனை முறை கையை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் மனதில் உள்ள பயம், பசி போன்ற உணர்ச்சிகளே!

    குழந்தைகளை அதிக நேரம் தனித்து விட்டாலோ, அதிக நேரம் பிரிந்து வேறு எங்கும் சென்று விட்டாலோ குழந்தை பயம், பதட்டம் மற்றும் அன்னையை காணவில்லை என்ற ஏக்கம், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படல் போன்ற காரணங்களால் கையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும். இந்த உணர்வு தனித்து விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே! ஏன் இத்தனை வளர்ந்த நாமே தனித்து விடப்பட்டால் நகத்தை கடிப்பது, உதடை பிய்ப்பது என எதையாவது செய்து கொண்டிருப்போம்.

    குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் அதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; மெல்ல வேண்டும் போன்று இருக்கும்; அதனால் அந்த சமயத்தில் குழந்தைகள் தங்கள் கையை முழுவதுமாக வாய்க்குள் விட்டு கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளின் அர்த்தம் மற்றும் என்ன செய்வது என்று அறியாமல் குழந்தைகள் குழந்தைத் தனமாக செய்யும் விஷயம் தான். இதற்கு குழந்தைகளை அடித்து திட்டாமல் அன்பு காட்டி அவர்களின் பய மற்றும் மற்ற உணர்வுகளுக்கு நிவாரணம் அளிக்க முயலுங்கள்!

    குழந்தைகளின் இந்த கையை வாயில் வைக்கும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம்.

    குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க அவர்தம் கையில் ஏதேனும் பொம்மையை அளித்து, அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும்; தூங்கும் பொழுதும் குழந்தையின் கையில் பிடித்துக் கொள்ள பொம்மை அல்லது உங்களை கட்டி அணைத்துக் கொள்ளுமாறு குழந்தையை தூங்க வைக்கலாம். பல் முளைத்தலின் பொழுது குழந்தைக்கு அதற்கென விற்கப்படும் பொம்மைகளை குழந்தையின் கையில் அளிப்பது, பழங்களை அளித்து கடிக்க செய்வது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்; ஒரு செடியை நட்டு வைத்து அது நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்க எத்தனை கவனம், பராமரிப்பு தேவையோ அதைவிட பல நூறு மடங்கு கவனத்தை உங்கள் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்குவதில் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த தருணம் முதல் அவர்களின் செய்கைகளுக்கு அர்த்தம் அறிந்து செயல்படுங்கள்!

    • சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் புரியாது.
    • குளிர்காலத்தில், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை.

    குளிர்ந்த காலநிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குளிர் காற்று மற்றும் வீழ்ச்சி வெப்பநிலை பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளை நோய்வாய்ப்படாமல் அவர்களைப் பாதுகாப்பதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் முழுமையாக வளர்ச்சியடையாததால், மாறிவரும் வானிலை நிலையைச் சமாளிப்பது அவர்களுக்கு சவாலாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை அறிவது கடினம். சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் புரியாது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியாமல் போகலாம். எனவே, குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

    வறண்ட தோல், செதில் தோல், டயபர் சொறி, அசௌகரியம், கரடுமுரடான தோல், பொதுவான காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகள் இந்த குளிர்காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொந்தரவு செய்யலாம். இது நடக்காமல் இருக்க குழந்தைகளுக்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    குளிர்காலத்தில், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஸ்பாஞ்ச் துடைப்பால் மெதுவாக துடைப்பதன் மூலம் உடலை சுத்தம் செய்யலாம். உங்கள் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் என்றால், வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது குழந்தையின் தோலின் பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். குழந்தைகளை எப்போதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையை நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது.

    குளிர்காலத்தில் வறண்ட சருமத்தைத் தவிர்க்க, புதிதாகப் பிறந்த குழந்தையை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இந்த எண்ணெய் மசாஜ்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குழந்தை மசாஜ் செய்ய உயர்தர இயற்கை எண்ணெய்களை மட்டும் தேர்வு செய்யவும். குழந்தைகளுக்கு பாதாம், ஆலிவ், அஸ்வகந்தா கலந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்

    குளிர் காலநிலை காரணமாக குழந்தைகளின் மூக்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நாசி சொட்டுகளைப் பயன்படுத்தவும். இது குழந்தை நாசியைத் திறப்பதை எளிதாக்குகிறது. எனவே, குளிர்ந்த காலநிலையில் நாசி சொட்டுகள் கிடைக்க வேண்டும், ஆனால் வழக்கமாக பயன்படுத்தக்கூடாது.

    குளிர்ந்த காலநிலையில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, பல ஆடைகளை அணிவதற்குப் பதிலாக குழந்தையின் தோலில் எரிச்சல் ஏற்படாத மென்மையான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். சூடான ஆடைகளுடன், அவர்களின் தொப்பி மற்றும் கையுறைகளை அகற்ற மறக்காதீர்கள்.

    குளிர்காலம் முழுவதும், உங்கள் குழந்தைக்கு குளிர்ந்த உணவுகளை ஊட்டுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அவ்வப்போது தயாரிக்கப்பட்ட உணவை ஊட்டவும். எஞ்சிய உணவை தர வேண்டாம், ஏனெனில் இது அவர்களுக்கு நோயை தரும். இந்தக் குளிர்காலத்தில், குழந்தை மீது சூரியக் கதிர்கள் ஒவ்வொரு முறையும் படுகிறதா என்பதை உறுதி செய்து, குழந்தையை அழைத்துக் கொண்டு பத்து நிமிடம் வெளியில் நடப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    • இன்றைய டிரெண்டுக்கு பொருந்துமாறு பலவிதமான பேபி கேரியர் கிடைக்கிறது.
    • கேரியரில் குழந்தை கீழே விழாமல் இருப்பதற்கு சீட் பெல்ட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.

    வெளியிடங்களுக்கு, சிறு குழந்தைகளை பாதுகாப்பாக அரவணைத்தபடி கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது பேபி கேரியர். அவரவர் வசதிக்கு ஏற்றவாறும், நவீன வடிவமைப்பிலும், இன்றைய டிரெண்டுக்கு பொருந்துமாறும் பலவிதமான பேபி கேரியர் கிடைக்கிறது. அதைப் பற்றிய தொகுப்பு இங்கே…

    முன் மற்றும் பின்புற கேரியர்: இந்த கேரியரில் முன் மற்றும் பின்புறத்தில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொள்ளலாம். இதில் குழந்தையின் பால்புட்டியை வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. 'ஹனிகோம்ப்' என்னும் துணி வகையில் நெய்வதால், இந்த பேபி கேரியர் குழந்தைக்கு இதமாகவும், மிருதுவாகவும் இருக்கும். பின்புற கேரியரில் குழந்தை கீழே விழாமல் இருப்பதற்கு சீட் பெல்ட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.

    ஹிப் சீட் பேபி கேரியர்: முன் மற்றும் பின்புறத்தில் கேரியரை பொருத்த இயலாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது 'ஹிப் சீட் கேரியர்'. இது பாதுகாப்பானது, எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது.

    ஸ்லிங் ரிங் பேபி கேரியர்: குழந்தைகள் தூங்கும்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பேபி கேரியர், மிருதுவான துணியால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு உருவாக்கப்பட்டது.

    • மசாஜ் செய்வதால் குழந்தைகளின் சரும ஆரோக்கியம் மேம்படும்.
    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    சில தலைமுறைகள் முன்புவரை கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது. வீட்டில் இருந்த பெரியவர்களே புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, மருந்து ஊட்டுவது என அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்கள். சிலர் இதற்கெனத் தாதிகளை (குழந்தை பராமரிப்பாளர்) நியமித்துப் பராமரித்தார்கள். கருப்பையில் வளரும் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மென்மையாக இருக்கும்.

    பிரசவத்தின் போது பிறப்புப் பாதை வழியாக சிரமப்பட்டு வெளியே வருவதால் குழந்தையின் தலைப்பகுதி நீண்டு இருக்கும். பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும். குழந்தையைப் பாயில் படுக்க வைத்து தூங்கச் செய்வது மற்றும் விளையாடச் செய்வதன் மூலம் அதன் நீளமான தலைப்பகுதி உருண்டையான வடிவம் பெறும்.

    குழந்தையை அதன் தாய் உபயோகப்படுத்திய சேலையைக் கொண்டு தூளி கட்டி அதில் படுக்க வைப்பார்கள். இது குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு உணர்வை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் தலைப்பகுதி இயல்பாக உருண்டை வடிவம் பெறுவதற்கும் உதவும். குழந்தையை ஒரே நிலையில் படுக்க வைக்காமல், வெவ்வேறு நிலைகளில் மாற்றிப் படுக்க வைக்கலாம்.

    தலைப்பகுதிக்குத் துணிகளை அடுக்கி தலையணை போல அமைப்பதைத் தவிர்க்கவும். குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன், குளிப்பாட்டுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். குழந்தை நடை பழகும் வயதில் கட்டை வண்டியில் கைப்பிடித்து நடக்கும் போது, கால் தசைகளுக்கு வலிமை கிடைக்கும். பாயில் படுக்க மற்றும் விளையாட வைப்பது, தூளியில் தூங்க வைப்பது போன்ற முன்னோர்களின் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், குழந்தையின் தலைப் பகுதியை சரியான வடிவத்திற்கு கொண்டு வர முடியும்.

    அதேநேரம், இயல்பிலேயே நீண்டு இருக்கும் தலைப்பகுதியை உருண்டையாக மாற்றுவதற்காக தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் பலன்கள்

    குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும். சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    • குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது.
    • ‘பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம்.

    டிஜிட்டல் யுகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, பெரியவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்பான பிரச்சினைகள், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் கண் பாதிப்புகளை எப்படி குறைப்பது?... போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார். இவர் கண்கள் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.

    * ஸ்மார்ட்போன், குழந்தைகளின் கண்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

    * குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகளை எப்படி கண்டறிவது?

    இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    * குழந்தைகளுக்கு கண் பரிசோதனை எப்போது செய்யலாம்?

    மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம், வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் உடல் வளர்ச்சியை போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் அவசியம். அதை கண்காணிக்கவும், குறைபட்டிருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக, 10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் 'பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு 'ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா... போன்றவற்றை ஆரம்பத்திலேயே சோதித்துவிட வேண்டும்.

    * ஐ.டி. துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?

    ஐ.டி.யில் வேலைபார்ப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது கணினியை பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கண் வறட்சி ஏற்படும். தலைவலி மற்றும் கண் வலி பிரச்சினைகளும் உண்டாகும். இப்படி அதிக நேரம் கணினியில் வேலைபார்ப்பவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க நன்றாக தூங்கவேண்டும். கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கூடவே 20-20-20 முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.

    20-20-20 என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளையோ அல்லது வாசகங்களையோ 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதன்மூலம், கண்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவையின்றி, கணினி பார்ப்பதில், அசவுகரியங்கள் இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் மருந்துகளை பயன்படுத்தலாம்.

    * பார்வை குறைபாடு பெற்றோர்கள் மூலமாக வருமா?

    ஆம்..! 'ரிஃபிரக்டிவ் எரர்' எனப்படும் 'ஒளி விலகல் பிழை' மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வர 80 முதல் 90 சதவிகிதம், சாத்தியம் இருக்கிறது.

    * இந்தியாவில் நிறையபேர் எத்தகைய பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

    'ஐ-பால்' எனப்படும் கண் பந்தின் வளர்ச்சியை பொறுத்து, குறைபாடு மாறுபடும். கண் பந்து பெரிதாக இருந்தால் 'மைனஸ்' குறைபாடும், சிறியதாக இருந்தால் 'பிளஸ்' குறைபாடும் உருவாகும். அந்தவகையில், நம் இந்தியாவில் பெரும்பாலானோர், 'மைனஸ்' குறைபாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

    * குழந்தைகளின் பார்வை குறைபாட்டிற்கு, நிரந்தர தீர்வு இல்லையா?

    மருத்துவ தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண முடியும். 18 வயது வரை, பார்வை திறன் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவது மட்டுமே தீர்வாகும். 18 வயதை எட்டியபிறகுதான், அவர்களது பார்வை திறன் ஒரு நிலையை அடையும். அந்த சமயத்தில், அவர்களது கருவிழி திரையின் தடிமனுக்கு ஏற்ப, அவர்களது பார்வை திறன் மதிப்பீட்டிற்கு ஏற்ப... லாசிக் சிகிச்சையோ அல்லது ஸ்மைல் சிகிச்சையோ செய்து, பார்வை குறைபாட்டை மீட்கலாம். 'மைனஸ் 9.5' இப்படி அதீத பாதிப்பு உள்ளவர்கள், ஐ.சி.எல். எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் பார்வையை நிரந்தரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கண்ணாடிக்கு குட்பை சொல்லலாம்.

    * முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்பை தவிர்க்க முடியாதா?

    இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். நம் கண்களில் உள்ள லென்ஸ் பாகம், மறைக்கப்படும்போது பார்வையின் தரம் குறைய தொடங்குகிறது. வயது மூப்பு காரணங்களால், தலை முடி நரைப்பது போல, தோல் சுருங்குவது போல, 'காட்ராக்ட்' எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு. முன்பை போல கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே எளிமையாகிவிட்டது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தில் வலி இல்லாமல், மைக்ரோ மினிமம் (1.5 மி.மி.) நுட்பத்திலேயே அகற்றிவிடலாம்.

    * கண்களில் கட்டி வந்தால் என்ன செய்வது?

    கெலோசியன் (chalazion) மற்றும் ஹார்டியோலம் (hordeolum) என்ற இரு வகையான கட்டிகள், கண்களில் வரும். இதில் ஹார்டியோலம் வலி மிகுந்தது. இமைகளின் ஓரத்தில் வரும். கெலோசியன், வலி இல்லாதது. இரண்டையும் கரைக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகள் மூலமாக கரையாத கட்டிகளை, மருத்துவர் துணையோடு இன்டிவிஷன் டிரைனேஜ் முறையில் அகற்றலாம். கண் கட்டி விஷயத்தில், நீங்களாகவே சிகிச்சை எடுப்பது ஆபத்தானது. கூர்மையான பொருட்களை கொண்டு நீங்களே சுத்தப்படுத்த நினைத்தால், பார்வை இழப்புகளை சந்திக்க நேரலாம்.

    * சர்க்கரை நோயாளிகள் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

    சர்க்கரை அளவை சரிவர பராமரிக்காவிட்டால், 'டயாபெடிக் ரெட்டினோபதி' எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். டயாபெடிக் ரெட்டினோபதி என்பது, கண் விழித்திரையில் நடக்கும் ஒழுங்கற்ற மாற்றம். மருத்துவர்களால் மட்டுமே கண்டறியமுடியும், மற்றபடி ஆரம்பத்தில் இதை அறிகுறிகளால் கண்டறியமுடியாது. இவை, முடியைவிட மெல்லியதாக இருக்கும் கண் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கி, ரத்த கசிவு (retinal haemorhage) மற்றும் நீர் கசிவு (vitreous haemorhage) ஏற்படுத்தும். பார்வை திறனையும் குறைக்கும். இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், லேசர் சிகிச்சை, இன்ட்ராவிட்ரியல் இன்ஜெக்‌ஷன், அறுவை சிகிச்சை ஆகியவை வழியாக பார்வையை காப்பாற்றலாம். பறிபோன பார்வையை திரும்ப பெறுவது சவாலானது. அன்றாட தேவைக்கேற்ற இன்டராக்குலர் லென்சுகளையும் பொருத்தலாம்.

    • தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது.
    • குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள்.

    பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.

    அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

    சில வீடுகளில் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில், குளிக்க வைத்த பிறகு, வாயோடு வாயாக வைத்து ஊதுவார்கள். பால் எடுக்கிறோம் என்ற பெயரில், நெஞ்சை அழுத்துவார்கள். மூக்கில் எண்ணெய் விடுவார்கள். குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள். எனவே, இவற்றை மறந்தும் செய்யக் கூடாது.

    பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில், இளம் தாய்மார்களின் உடல்நலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவார்கள். பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள். பால் புகட்ட வேண்டும் என்பதற்காக, சரியாக தூங்க மாட்டார்கள். இளம் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சத்தான உணவுவகைகளை நிறைய சாப்பிட வேண்டும். பத்திய சாப்பாடு என்ற பெயரில் களி சாப்பிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் அடிக்கடி எரிச்சல் படுவார்கள். தூக்கம் இன்மையால் வரும் இடையூறுகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிற இந்த நிலையில், இது எல்லாக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் பற்றி பலவிதமான ஆலோசனைகள் கூறுவார்கள்.

    ஆனால், டாக்டரிடம் குழந்தையைக் காண்பித்து, அந்தப் பாதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத்தவறாமல் போட வேண்டும்.

    • கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி.
    • குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.

    குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை 'அழுகை' என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.

    குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.

    பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

    அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்' என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

    தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.

    குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.

    சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.

    குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.

    குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.

    வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.

    • பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.
    • ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    குழந்தைகளைக் குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு, எந்தவித ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

    பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்.

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே.... குறிப்பாக மஞ்சள்... இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    • பிறந்த குழந்தையை அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம்.
    • பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும்.

    பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம். பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள். குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டாலும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்வார்கள்.

    தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளிதானதே.

    • குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.
    • குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும்.

    குழந்தை வளர்ப்பு Ht125 பத்துமாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது.

    எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.

    குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும் இரவில் அதைத் தவிர்க்கவும் உங்களுக்கு வசதியான நேரத்ததில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.

    சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு பவுடர் போட்டு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனத்தில் ஏற்படுத்தும்.

    குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.

    சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.

    தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.

    குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலிருந்தே அதன் தூக்கப் பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினம் ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போதுமென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம்.

    குழந்தை தானாகத் தூங்கட்டும் என்று விட வேண்டாம். சாப்பாடு கொடுத்த சில நிமிடங்களில் தூங்க வைப்பதே சிறந்தது. தூங்குமிடம் காற்றோட்டமாக, அமைதியானதாக இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில் குழந்தையை அணைக்க வேண்டாம். குழந்தையின் தூக்கம் கெடும்.

    • குழந்தையின் மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது.
    • குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

    பெரியவர்களை போல குழந்தைகளால் தாங்களாகவே மூக்கை சுத்தம் செய்துகொள்ள முடியாது. அழுக்காகதான் இருக்கும். சில குழந்தைகள் தன் கைகளால் மூக்கைத் தேய்க்கவும் செய்வார்கள். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. இது குழந்தைக்கு நல்லதல்ல. அழுக்கு அடைத்துள்ள மூக்கால் குழந்தை மூச்சு விட மிகவும் சிரமப்படும். மூக்கில் உள்ள அழுக்கால்,

    மூச்சு விடுவதில் சிரமம்

    சத்தமான மூச்சு

    தூக்கம் சரியாக வராமல் தவிப்பார்கள்

    தொற்றுக்கள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.

    குழந்தையின் மூக்கை அடிக்கடி, தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகள் முழுக்க முழுக்க பெற்றோரை சார்ந்திருப்பதால் அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பெற்றோரின் கையிலே இருக்கிறது. ஆகையால், குழந்தையை முறையாக கவனிக்கத் தவறி விடாதீர்கள். சுத்தமான குழந்தை என்றும் ஆரோக்கியமான குழந்தை என்பதை நினைவில் வையுங்கள். ஆரோக்கியமான குழந்தை என்றும் மகிழ்ச்சியான குழந்தையாக இருக்கும்.

    குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

    கடையில் விற்கும் வேப்பரைசர் (Vapourizer) வாங்கிப் பயன்படுத்துவதற்கு, அவற்றால் எப்படி சுத்தம் செய்வது என மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தை மூக்கில் உள்ள அழுக்கு, மிகவும் கடினமானதாக இருந்தால், மூக்கில் ஊற்றப்படும் டிராப்ஸ்களை (Saline drops) பயன்படுத்தலாம். மூக்கில் உள்ள அழுக்கை உங்களால் வெளியே எடுக்க முடியவில்லை என்றால், சிறிதளவு வேப்பர் ரப்பை மூக்கு, கழுத்து பகுதியில் லேசாகத் தடவி விடுங்கள்.

    இதனுடன் உள்ளங்காலிலும் வேப்பர் ரப் தடவி சாக்ஸ் அணிந்து விடுங்கள். காலையில், மூக்கடைப்பு நீங்கி, அழுக்கு மூக்கில் நீர் போல வழிந்து ஒழுகிவிடும். நீங்கள் அதை எளிதில் சுத்தம் செய்து விடலாம். குழந்தைக்கு எப்போதும் அளவான வேப்பர் ரப்பை பயன்படுத்துங்கள். அதிகமாகப் பயன்படுத்த கூடாது. குழந்தைக்கு எரிச்சல் உண்டாகலாம்.

    • அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
    • சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது.

    குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் முன், உங்களது கைகளை நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். சமையல் வேலை, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு கைகளை சரியாக கழுவாமல் குழந்தைக்கு அருகில் வருவது சரியல்ல. சாஃப்ட் பருத்தி துணி அல்லது பஞ்சை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து, கண்களை சுற்றி மெதுவாக துடைக்கவும்.

    கண்களில் அதிக நீர் வழிந்திருந்தாலும், அழுக்கு இருந்தாலும் மென்மையாகத் துடைத்து எடுக்கவும். குழந்தையின் சருமம் மிகவும் சென்ஸிடிவ் என்பதால், சோப், லிக்விட் சோப், ஃபேஸ்வாஷ் போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம். வெறும் தண்ணீரே போதுமானது. குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் சமயத்தில், குழந்தையிடம் பேசுவது அல்லது பாடுவது போன்றவற்றை செய்யலாம். இதனால் குழந்தையின் கவனம் உங்கள் மீது இருக்கும். நீங்கள் எளிதில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்திட முடியும்.

    பஞ்சு அல்லது வெள்ளை பருத்தி துணியால், குழந்தையின் மூக்கு அருகில் உள்ள கண்ணின் ஓரப் பகுதியிலிருந்து குழந்தையின் கண்களின் வெளிப் பகுதியில் உள்ள ஓரப்பகுதி வரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இரு கண்களுக்கும் இரண்டு பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்துங்கள். ஒரே துணி அல்லது பஞ்சால் சுத்தம் செய்தால், இந்த கண்களில் உள்ள தொற்று அடுத்த கண்ணுக்குப் பரவலாம். எனவே, இருவேறு துணிகள் அல்லது பஞ்சை பயன்படுத்துவது நல்லது.

    சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது. வேண்டாம் என்ற எதிர்ப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் நீங்கள் இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து முடித்து விடலாம். குழந்தைகளும் அழுக மாட்டார்கள். சாதாரண தண்ணீரால் அவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்ய முடியாது.

    அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை தொற்றோ காயமோ கண்களில் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யும் போது சுத்தமான பஞ்சை பயன்படுத்தி, அதை தூக்கி எறிந்து விடுங்கள். குழந்தையின் கண்களுக்கு உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். வெளிப்புறம், உள் ஓரம், வெளி ஓரம் சுத்தம் செய்தாலே போதுமானது. எப்போதும் இளஞ்சூடான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள். வெந்நீர் பயன்படுத்த கூடாது.

    6 + மாத குழந்தைகளுக்கு சமச்சீரான சத்துகள் உள்ள உணவுகளைக் கொடுக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். விட்டமின், தாதுக்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ள உணவுகளை அன்றாடம் கொடுக்க வேண்டும். கண்களும் பார்வை திறனும் அப்போதுதான் நன்றாக இருக்கும். குழந்தைநல மருத்துவரிடம் சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையை காண்பியுங்கள். சில குழந்தைகளுக்கு அதிகமாக கண்ணீர் வழியலாம். அதே முறையாகத் தொடர்ந்து சுத்தம் செய்து வருவது நல்லது.

    ×