search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Unavagam"

    • அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
    • சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலம் :

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

    சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

    இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்மா உணவகத்தில் கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
    • அம்மா உணவகத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ஏ.பி பத்ரா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு 11 மணி அளவில் வழக்கம் போல பணி முடிந்து ஊழியர்கள் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று காலை 5.30 மணி அளவில் உணவகத்தை திறக்க சூப்பர்வைசர் ரேகா வந்தார் அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.1500 ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. மேலும் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் மர்ம கும்பல் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரேகா கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.
    • முன்னெச்சரிக்கையாக தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செஞ்சிரோட்டில் அம்மா உணவகம் உள்ளது. இந்த அம்மா உணவகத்திற்கு காலை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்தனர்.

    அப்போது ஒருவர் சாப்பாடு தட்டில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அம்மா உணவகத்தில் இருந்த சாப்பாடுகளை எல்லாம் அப்புறப்படுத்தினர்.

    முன்னெச்சரிக்கையாக அந்த தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட 10 பேரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 400 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றவர்கள், ஏழை-எளியவர்கள், கூலி தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்வதால் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில அம்மா உணவகங்களில் உணவு இல்லை என்று ஊழியர்கள் சொல்வதால் தற்போது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் அங்கு வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது.

    அவர்கள் அனைவரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • இந்த உணவகம் மாற்று இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
    • இந்த உணவகத்தை இடிக்காமலேயே மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளலாம்.

    சென்னை :

    சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடித்து தள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக, இந்த உணவகம் மாற்று இடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் உள்பட எந்தவித வசதியும் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதனால் இந்த அம்மா உணவகத்தை தேடி வருவோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். நாடி வருவோர் சிரமப்பட கூடாது என்பதற்காக அக்கம்பக்கத்து வீடுகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அம்மா உணவக ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் உணவு சமைக்க வசதியில்லாத நிலையில் மாற்று இடத்தில் உணவு சமைத்து அங்கிருந்து நடையாய் சென்று உணவுகளை எடுத்து இங்கே வந்து வினியோகம் செய்கிறார்கள்.

    மேலும் அங்கு முறையான கழிவுநீர் செல்லும் வசதி ஏற்படுத்தப்படாத நிலையில் சாப்பிட்டு கை கழுவும் நீர் கூட வாசலில் தேங்கி நிற்கும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது. இதனால் சாப்பிட வருவோருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுகிறது.

    ஏதோ கடமைக்கு செயல்படுவது போல அம்மா உணவகம் இருப்பதாக ஏழை மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் ஊழியர்களும் தவிக்கிறார்கள். இதையெல்லாம் சரிகட்ட தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் பசியாறும் மையமாக செயல்பட்ட ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் முன்பு போலவே செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடிக்க இருக்கிறார்கள். இந்த உணவகத்தை இடிக்காமலேயே மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. இல்லையெனில் அருகேயுள்ள குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான காலியிடத்தில் கூட அம்மா உணவகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு குறுகிய இடத்தில் மாற்று இடம் ஒதுக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    ஒரே நேரத்தில் 100 பேர் சாப்பிடக்கூடிய இந்த இடம் எங்கே? 15 பேர் கூட சாப்பிட முடியாத அந்த புதிய இடம் எங்கே? இதையெல்லாம் அதிகாரிகள் எண்ணிப்பார்க்காதது ஏன்? மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு விரைவில் மூடுவிழா ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தையே இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகிறது.

    எனவே ஏழை மக்கள் நலன் கருதி, முன்புபோலவே ராஜமன்னார் சாலை அம்மா உணவகம் செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதை இடிக்க கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அம்மா உணவகம், காரிய மண்டபம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காரிய மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது.
    • அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்கையை ரத்து செய்து மாற்று வழி காண பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை:

    விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்ட போது அமைக்கப்பட்ட உணவகம். தனியார் உணவகம் போல் கட்டிட அமைப்பும் சரி, விற்பனையானாலும் சரி மிகுந்த பயனுள்ளதாக பொதுமக்களிடம் வரவேற்புடையதாகவும் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளியோர் முதல் தொழிலாளர்கள், முதியோர் பென்சன்தாரர்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்குள்ள அம்மா உணவகம், காரிய மண்டபம், ரேஷன் கடை ஆகிய கட்டிடங்கள் இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காரிய மண்டபம் இடிக்கப்பட்டு விட்டது. அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்கையை ரத்து செய்து மாற்று வழி காண பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அந்த பகுதியில் வசித்து வரும் அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பழனியப்பன் கூறியதாவது:- நான் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின் நானும் எனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம். இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். வயதான காலத்தில் எங்கள் வீட்டின் அருகே இருந்த இந்த உணவகத்தில் தான் நாங்கள் இருவரும் 3 வேளையும் சாப்பிட்டு வந்தோம்.

    இப்போது கட்டிடத்தையே இடிக்கப்போவதாக அறிந்தோம். இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் போல் பலரும் இந்த உணவகத்தால் பயன் அடைந்து வருகிறோம்.

    அம்மா உணவகம் அப்புறப்படுத்துவதை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 136-வது வார்டு ராஜமன்னார் சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை இடித்து அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்த அம்மா உணவகத்தில் அந்த பகுதியில் வசிக்கின்ற ஏழை எளிய குடும்பத்தார்கள் மற்றும் முதியோர், விதவை ஆதரவற்றவர்கள் தினமும் காலை, மதியம், இரவு 3 வேளையும் இந்த அம்மா உணவகத்தில் உணவருந்தி வருகிறார்கள். இந்த தொகுதியிலே அதிக அளவில் விற்பனை நடைபெறும் அம்மா உணவகம் இதுதான். இந்த உணவகத்தை நம்பி முதியோர்கள், முதியோர் பென்சனை பெற்றுக்கொண்டு இந்த உணவகத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அம்மா உணவகத்தை அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டம் தனியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை.
    • தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு மும்முரமாக நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னையில் முதலில் காலை உணவு திட்டம் வட சென்னை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மண்டலங்கள் 1, 3, 4, 5 ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2 சமையல் கூடம் எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. 5 அம்மா உணவகங்களில் இருந்தும் ஒரு பள்ளியில் இருந்தும் உணவு தயாரித்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்பட்டு உள்ள இந்த இடங்களில் இருந்து மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று கருதப்படுகிறது.

    காலை உணவு தயாரிக்க தாழங்குப்பம் அம்மா உணவகம், அன்னை சிவகாசி நகர், மாதவரம் புதிய பஸ் நிலையம், ஜெ.ஜெ.நகர், எஸ்.என்.ஷெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகங்களிலும் ஆறாநகரில் உள்ள பள்ளிகூடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அங்கு விசேஷ சமையல் கூடம் இதற்காக அமைக்கப்படுகிறது. அம்மா உணவக தற்போதைய சமையல் கூடத்தை பயன்படுத்தாமல் காலை சிற்றுண்டிக்காக தனி சமையல் கூடம் கட்டப்படுகிறது. அதுபோல உணவு பொருட்களை பாதுகாத்து வைக்க தனி அறையும் அமைக்கப்படுகிறது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டம் தனியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை. தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படுகின்றன.

    சமையல் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அம்மா உணவகங்களில் பணிபுரியும் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள். உணவு தயாரிக்கக் கூடிய நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    விரைவில் சமையல் கூடம் அமைக்கும் பணி தொடங்கும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என்பதை அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
    • சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னையில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கிறது.

    இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. ஆனால் வருவாயாக ரூ.20 கோடி மட்டுமே கிடைக்கிறது. மீதம் ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அம்மா உணவகத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது.

    அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், 'அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா? நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா?' என கேள்வி எழுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.
    • அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 3 உணவகங்களும் செயல்பட்டு வந்தன. இதில் வார்டுகளில் செயல்பட்ட 3 உணவகங்கள் மூடப்பட்டன.

    இதையடுத்து தற்போது 400 அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்த அம்மா உணவகங்களில் கடந்த சில வருடங்களாக விற்பனை சரிந்தது. இதனால் வருவாய் இழப்பை அதிகம் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து ஊழியர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.

    ஒரு சில அம்மா உணவகங்களில் ஊழியர்களின் சம்பளத்திற்கு கூட விற்பனை நடைபெறாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் அம்மா உணவகங்களில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்து செயல்படாமல் இருந்தது. அதனை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் விற்பனை இலக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.

    அம்மா உணவகங்களை கண்காணித்து நிர்வகித்து வரும் 15 மண்டலங்களுக்கும் இலக்கு முடிவு செய்யப்பட்டது. மண்டலத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு உணவகத்திற்கும் வாரத்திற்கு ரூ.1.5 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து அதற்கேற்ப விற்பனையை ஊழியர்கள் செய்ய தொடங்கினர்.

    ஒவ்வொரு கடையிலும் தினமும் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதனால் தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 3-ந்தேதி வரை ஒரு வாரத்தில் 400 அம்மா உணவகங்களில் மொத்தம் ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 460-க்கு விற்பனை நடந்துள்ளது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

    இந்த மாதம் 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் ரூ.37 லட்சத்து 3 ஆயிரத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 5 லட்சத்து 33 ஆயிரமாகும். ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அளவிற்கு விற்பனை உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் அம்மா உணவகங்களை நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுசெய்ய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.98 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளது.

    • சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.

    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பசியாற கடந்த 2013-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகங்களை திறந்தார்.

    இங்கு குறைந்த விலையில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

    ஆரம்பத்தில் அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சென்னையில் அம்மா உணவகங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டது. இப்போது 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இவற்றால் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் பலர் குறைகூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னையில் செயல்படும் 400 அம்மா உணவகங்களிலும் வழக்கம்போல் உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் இருந்ததால் சப்பாத்தி தயாரிப்பது தடைபட்டது. அதன் பிறகு அதனை சரி செய்து மீண்டும் சப்பாத்தி வழங்கினோம்.

    சில நாட்களுக்கு முன்பு சப்பாத்தி மாவு மிஷின் ரிப்பேர் ஆனது. அதையும் சரிசெய்து தடையின்றி சப்பாத்தி தயாரித்து வழங்குகிறோம். எனவே அம்மா உணவங்களில் சப்பாத்தியை நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை. சிலர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள்.

    அம்மா உணவகங்களை கண்காணிக்கவும், தரமான உணவு வழங்குவதற்காகவும் மாநகராட்சியில் தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் தாமரைச்செல்வி வேலை பார்த்து வருகிறார்.
    • இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், “இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை” என்று கூறி கண்டித்தார்.

    போரூர்:

    விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. சாலிகிராமம் வி.வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த சூப்பர்வைசர் ராதிகா என்பவர், "இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை" என்று கூறி கண்டித்தார். இதில் தாமரைச்செல்விக்கும், ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தாமரைச்செல்வியின் காதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×