search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangalya Blessing"

    • கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத் திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரணையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • காரடையான் நோன்பை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
    • பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும்

    மாசி மாதமும், பங்குனி மாதமும் சேரும் நாளில் `காரடையான் நோன்பை' பெண்கள் கடைப்பிடிப்பார்கள். `கவுரி விரதம்', `காமாட்சி விரதம்', `சாவித்திரி விரதம்' என்று பல பெயர்களில் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. `மாசி கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதாவது இந்த விரதம் இருக்கும் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பது இதன் பொருள்.

    அஸ்வபதி என்ற மன்னர், மாலதி தேவி என்ற நல்ல குணங்கள் நிரம்பப்பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து கணவன்- மனைவி இருவரும், வசிஷ்ட மகரிஷியை சென்று பார்த்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த தம்பதியர்க்கு, சாவித்திரி தேவியின் மகா மந்திரத்தை வசிஷ்டர் உபதேசம் செய்தார்.

    சாவித்திரி தேவியின் அந்த மகா மந்திரத்தை மன்னனும், அவனது மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதன் பயனாக விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    தங்கள் தெய்வத்தின் ஞாபகமாக அந்த பெண் குழந்தைக்கு `சாவித்திரி' என்று பெயர் வைத்தார்கள். சாவித்திரி வளர்ந்து வருகையில் சிறிது தூரத்தில் உள்ள தேசத்தில் துயுமத்சேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சத்திய சேனன் என்ற மகன் இருந்தான். சத்தியசேனன் மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தான்.

    சத்தியசேனன் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட சாவித்திரி, அவனையே தன் கணவனாக நினைத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதே நேரத்தில் துயுமத்சேனன், தன்னுடைய பகைவர்களின் துரோகத்தால் ராஜ்ஜியத்தை இழந்து, தன் மனைவி, மகனுடன் ஒரு வனத்தை வந்தடைந்தான்.

    சாவித்திரி தன் தந்தையிடம் "சத்தியவானையே (சத்தியசேனன்) திருமணம் செய்வேன்" என்று கூறினாள். அப்பொழுது நாரத மகரிஷி அங்கு வந்து, "நீ நினைக்கும் சத்தியவான், தற்பொழுது நாட்டை இழந்து, கண்களை இழந்த தன் தந்தையுடன் காட்டில் வசித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் இன்னும் சரியாக 12 மாதத்தில் இறந்து விடுவான். அவனை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?" என்றார்.

    அதற்கு சாவித்திரி "என் மனதால் நினைத்த சத்தியவானை, இனி நான் மறக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சத்தியவானை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி படக் கூறினாள்.

    இதையடுத்து சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி, தன் மகளை அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தார். அங்கு வாழ்ந்து வந்த சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

     சரியாக 12 மாதம் முடியும் வேளையில், நடுக்காட்டில் விறகு வெட்டிக் கொண்டிந்த சத்யவான், திடீரென்று தன் மனைவி சாவித்திரியின் மடியில் சரிந்து விழுந்து தன் உயிரை இழந்தான்.

    அவனது ஆன்மாவை தன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றார், எமதர்மன். சாவித்திரி மேற்கொண்ட பதிவிரதை மகிமையால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தெரிந்தார். சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்து சென்றாள். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட எமதர்மன், "உன்னுடைய கண்ணுக்கு என் உருவம் எப்படி தெரிகிறது? நீ திரும்பிச்செல். சரீரத்துடன் யாரும் என் பின்னால் எமலோகம் வர முடியாது. இறந்த பின் தான் வர முடியும்" என்றார்.

    எமதர்மன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதையடுத்து எமதர்மன், "சரி.. உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ கேள்" என்றார். சாவித்திரியோ, "என் கணவனைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்க, அதற்கு எமதர்மன், "பறித்த உயிரை திருப்பித் தர மாட்டேன். பதிவிரதையே, வேறு ஏதாவது வரம் கேள்" என்று கூறினார்.

    உடனே சாவித்திரி, "என் மாமனார் தன் கண்களால் அவரது 100 பேரக் குழந்தைகளைக் காண வேண்டும்" என்று வரம் கேட்டாள். (சத்தியவான் துயுமத்சேனனுக்கு ஒரே மகன்). சாவித்திரி கேட்ட வரத்தை தருவதாக எமதர்மனும் வாக்கு கொடுத்தார்.

    பின்னர் சாவித்திரி, "என் கணவனின் உயிரை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டால், எப்படி எனக்கு குழந்தை உண்டாகும்" என்றாள். எமதர்மன், சாவித்திரியின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்து, சத்தியவானின் உயிரைத் திருப்பித் தந்ததுடன், துயுமத்சேனன் இழந்த ராஜ்ஜியத்தையும் திரும்பப் பெறுவான் என்று வரம் கொடுத்தார்.

    சாவித்திரிக்கு அவளது கணவனைத் திரும்பித் தந்தது, அவள் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான். அதைத்தான் நாம் `சாவித்திரி விரதம்' என்கிறோம்.

    விரதம் இருக்கும் முறை

    பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு இலையாக எண்ணி கோலத்தின் மீது வைப்பார்கள். இலையின் நூனி வடக்கு நோக்கி இருக்குமாறு போட வேண்டும். கார் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு அடை, மற்றும் உப்பு அடை செய்து பின் நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து அம்பாளை பூஜிப்பார்கள்.

    கலசத்திற்கு பூச்சரம் அல்லது மாலை அணிவித்து, ரவிக்கை துண்டு வைத்து, கும்பத்தை அலங்காரம் செய்வார்கள். பின்னர் கும்பத்திற்கு தூப, தீபங்கள் காட்டி அம்பாளை வழிபடுவார்கள்.

    இந்த இலையின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். வயதானவர்கள் இந்த இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்வார்கள்.

    ஒற்றைப்படையில் இலை வந்தால், ஒரு இலையை அதிகப்படுத்துவார்கள். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என இருந்தால் அதை மாற்றி, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப் படையில் வருமாறு இலைகளைப் போடுவார்கள்.

    வீட்டில் உள்ள வயதான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், ஒவ்வொரு இலையின் முன்பாக நின்று கொண்டு நீரை எடுத்து மூன்று முறை இலையை சுற்றி விட்டு, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் நான் தருவேன். ஒரு காலும் என்னை விட்டு என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என சொல்லுவார்கள். பிறகு வீட்டில் உள்ள வயதான பெண், பூஜை அறையில் நின்று முதலில் சரடு ஒன்றை எடுத்து அம்மனுக்கு கட்டிவிட்டு அல்லது படத்திற்கு சாற்றி விட்டு, தோராம் என்னும் சுலோகத்தை சொல்லி, தன் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அது போல் கட்டி விடுவார்கள்.

     அடையில் ஒன்றை தன் கணவருக்காக தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின் அடையை சாப்பிடுவார்கள். இரண்டு அடையை எடுத்து தனியாக வைத்து விட்டு, மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். 'ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வார்' என்று பழமொழி. எனவே அன்று முழுவதும் மோர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    காரடையான் நோன்பை கடைப்பிடிப்பதால் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் விலகும். மேலும் சிலருக்கு திருமணத்திற்குப்பின் ரஜ்ஜு தோஷம் இருந்தால், அந்த தோஷமும் விலகும். கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

    அங்க பூஜை

    * ஓம் காமாக்ஷ்யை நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் கல்மஷக்ன்யை நம: குல்பே பூஜயாமி (முன்கால்)

    * ஓம் வித்யாப்ரதாயின்யை நம: ஜங்கே பூஜயாமி (நுனிக்கால்)

    * ஓம் கருணாம்ருத ஸாகராயை நம: ஜாநுநீ பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் வரதாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் காஞ்சீ நகர வாஸின்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் கந்தர்ப்ப ஜனன்யை நம: நாபிம் பூஜயாமி (நாபி)

    * ஓம் புரமதனபுண்யகோட்யை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)

    * ஓம் மஹாக்ஞான தாயின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)

    * ஓம் லோகமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் மாயாயை நம: நேத்ரே பூஜயாமி (கண்)

    * ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ஏகாம்பரநாதாயை நம: கர்ணம் பூஜயாமி (காது)

    * ஓம் காமகோடி நிலயாயை நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஓம் காமேச்வர்யைநம: சி'குரம் பூஜயாமி (முன் முடி)

    * ஓம் காமிதார்த்ததாயின்யை நம: தம்மில்லம் பூஜயாமி (நெற்றிச்சுட்டி)

    * ஓம் காமாக்ஷ்யை நமஸர்வாணி அங்கானி பூஜயாமி (முழுவதும்)

    • அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றினால் விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
    • நாக பிரதிஷ்டைசெய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர்.

    தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்று, பழங்காமூர் காசிவிசுவநாதர் ஆலயம். ஈசனின் இடப்பாகம் பெற நினைத்த அம்பிகை, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைத்தார். பின்னர் அங்கேயே மணல் லிங்கம் அமைத்து ஈசனை வழிபட நினைத்தார். ஆனால் அதற்கு நீர் தேவைப்பட்டது. உடனே தனது மைந்தர்களான கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டுவர கட்டளையிட்டார்.

    அதன்படி கணபதி மேற்கு நோக்கிச் சென்றார். அங்கே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். குண்டலிபுரம் என்று முன்பு போற்றப்பட்ட படைவீட்டில் வாழ்ந்த இந்த முனிவர், கடுமையான தவசீலர்.

    ரிஷி பத்தினிகளில் ஒருவரான ரேணுகையின் கணவர். அத்தகைய ஜமதக்னி முனிவரிடம் வந்த கணபதி, காக வடிவம் எடுத்து, அந்த முனிவர் அருகில் இருந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அதில் இருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர், நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. (அகத்தியரின் கமண்டலத்தை கணபதி காகமாக வந்து தட்டிவிட்டு காவிரி நதி உருவான கதை வேறு). அந்த நதியே கமண்டல நதியானது. இந்த தீர்த்தமானது, கங்கையை விடவும் கால் மடங்கு புண்ணியம் மிகுந்தது.

    தர்மாரண்ய ஷேத்திரம் என்னும் ஆரணி வழியே இந்த கமண்டல நதி பாய்ந்து, வாழைப்பந்தலில் கந்தனால் ஏற்படுத்தப்பட்ட செய்யாற்றுடன் கலக்கின்றது. தர்மாரண்ய ஷேத்திரத்தின் வடபுறம், கமண்டல நாகநதியின் வடகரையில் காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்று இங்கும் காசி விசுவநாதர் - விசாலாட்சி அம்மனோடு கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    திரேதா யுகத்தின்போது இத்தலத்தில் ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் பன்னெடுங்காலமாக கமண்டல நதியில் நீராடி, வடகரையில் உள்ள காசி விசுவநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். அப்போது ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைக்கு (கமண்டல நதியின் தென்கரைக்கு) அவரை அழைத்துச் சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்தார்.

    மேலும் தசரதரின் விருப்பப்படி புத்திரகாமேஷ்டி ஈசுவரரையும் நிறுவி வழிபாடு நடத்தினார். ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டல நதியின் வடகரையில், தானாக தோன்றியப் பெருமானாக காசி விசுவநாதர் வீற்றிருந்து அருள்பாலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

     பழங்காமூர் ஊரின் மையத்தில் கிழக்கு பார்த்தபடி காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கருவறைக்குள் சற்றே இடதுபுறம் சாய்ந்த நிலையில் லிங்கத் திருமேனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார், காசி விசுவநாதர். ஆலயத்தின் தென்புறமாக அரசும் - வேம்பும் இணைந்து காணப்படுகிறது. அதன் கீழே நாகர் சிலைகள், அருகே சமயக்குரவர்கள் நால்வர் உள்ளனர். நிருதி திசையில் தல கணபதி சன்னிதி கொண்டுள்ளார். மேற்கில் வள்ளி - தெய்வானையுடன் சண்முகர் எழுந்தருளியுள்ளார்.

    அம்பிகையாக விசாலாட்சி புன்னகை ததும்ப புன்முறுவலுடன் தனி சன்னிதியில் அருள்மழை பொழிகிறாள். ஏனைய சிவாலய தெய்வங்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இத்தல அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக்கொள்ள விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.

    நாகதோஷத்தால் பாதிப்படைந்தவர்கள், இங்கு நாக பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர். சிறந்த வேலை வேண்டுவோர் பிரதோஷத்தை நடத்திட, நல்ல வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி - அம்பாளுக்கு தேன் கலந்த பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து பலன் அடைகின்றனர்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் ஆரணியில் இருந்து ௩ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர் திருத்தலம்.

    ×