என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aditya L1"
- 2023ல் இஸ்ரோ சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது
- ஆதித்யா-எல்1 விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சென்ற வருடம், நிலவிற்கு சந்திரயான் எனும் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி ஏவுதளத்திலிருந்து ஆதித்யா-எல்1 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
சூரியனின் செயல்பாடுகளையும் வானிலையில் சூரியன் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்ய ஆதித்யா-எல்1 அனுப்பபட்டுள்ளது.
இதற்காக இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் செயல்படும்.
இந்த விண்கலத்தை பூமியிலிருந்து புறப்பட்டு 125 நாட்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் சூரியனுக்கு அருகே எல் 1 (Lagrange Point 1) எனும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முயற்சி நடந்தது.
இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
"இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடையும் வகையில் இந்தியா தொடர்ந்து பணியாற்றும். அற்பணிப்புடன் பணியாற்றிய விஞ்ஞானிகளை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அதில் அவர் தெரிவித்தார்.
India creates yet another landmark. India's first solar observatory Aditya-L1 reaches it's destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join the nation in applauding this…
— Narendra Modi (@narendramodi) January 6, 2024
- கடந்த செப்டம்பர் 2-ந்தேதி ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
- சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
பெங்களூரு:
சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று மாலை அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
இன்று மாலை சுமார் 4 மணிக்கு லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சூரியனின் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும்.
சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆதித்யா திட்டம் வெற்றி பெற்றால் அந்த வரிசையில் இந்தியா 5-வது நாடாக இணையும்.
- அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது.
- சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இதற்கான அறிவிப்பை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய விக்யான் சம்மேளன கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறும்போது, குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்.) முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது. 'பாரத் விண்வெளி நிலையம்' என குறிப்பிடப்படும் இந்த லட்சிய திட்டப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, 20 முதல் 1,215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை உருவாக்க உள்ளோம். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை கொண்டு செல்ல முடியும். 2035-ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலைய பணி அமைந்துள்ளது, என்று தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், சூரியனை ஒளிவட்ட சுற்றுப்பாதை எல் 1-ல் இருந்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூரிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான திட்டமாகும். எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டவுடன், ஆதித்யா எல்-1 அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும்.
இந்த தரவு, இந்தியாவிற்கு மதிப்புமிக்கது மட்டுமல்ல, உலகளாவிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும். தற்போதைய நிலையில் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ந்தேதி எல்-1 புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விண்கலம் எல்-1 புள்ளியை மிக அருகில் நெருங்கி உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
- வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும்.
அகமதாபாத்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்களில் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழையும். குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தேவையான மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி `பாரதிய விண்வெளி நிலையம்' என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.
- நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது.
- இந்த விண்கலத்தில் இருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரனில் சாதித்த சந்திரயான்
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வுசெய்ய இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி அனுப்பியது. விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது.
நிலவில் கால் பதித்த 4வது நாடு இந்தியா
நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விண்வெளித்துறையில் இந்தியா படைத்த முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
ஆதவனை நோக்கிப் பயணித்த ஆதித்யா எல்-1
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெற்றது.
- சூரியனை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா-எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
- இதில் உள்ள சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
பெங்களூரு:
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வுசெய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
2 நாட்களில் SWIS ஆல் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது.
ஆதித்யா எல்-1 விண்கலம் வரும் ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியைச் சுற்றி நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
- கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபட உள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகவே உள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.
இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
- விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.
சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
அதில் ஒருவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி. தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. 59 வயதான இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடம். 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம்.
பின்னர், திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தில் இருந்த ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.
அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக சூரியனின் ஆய்வுக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிகர் ஷாஜி இன்று மேடையேறி "கனவு நிறைவேறிவிட்டதாக" பெருமையுடன் கூறினார்.
இதுகுறித்து ஆதித்யா எல்1 வெற்றி குறித்து நிகர் ஷாஜி கூறுகையில், " நான் எட்டு ஆண்டுகளாக இந்த சிக்கலான திட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இது ஒரு சவாலான திட்டம். ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இன்று கனவு நிறைவேறிவிட்டது" என்றார்.
நிகர் ஷாஜியின் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், துபாயில் பணிபுரிகிறார். மகன் பிஎச்.டி படித்து நெதர்லாந்திலும், மகள் தகுதியான மருத்துவராகவும் முதுகலை படித்து வருகிறார்.
ஏற்கனவே, சந்திரயான்-2 திட்டத்தில் திட்ட இயக்குநர் எம்.வனிதா மற்றும் மிஷன் இயக்குநர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா ஆகிய இரு பெண்கள் முக்கியப் பங்காற்றினர். இதேபோல் சந்திரயான்-3 திட்டத்திலும் துணை இயக்குனர் கல்பனா முக்கிய பங்கு வகித்தார்.
- ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
- விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது.
பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.
சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.
அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
- சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், நாளை காலை 11:50 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "ஆதித்யா எல்1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்."
சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்