என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஎம்ஆர்எல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம் சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்.
கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவானதிட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும்.
வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும்வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
• வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ
• உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13
• மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட).
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் 'ஹார்ட்டின்'
- மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் 'ஹார்ட்டின்'
தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.
'மகான்', 'பேட்ட', 'ஜில் ஜங் ஜக்' புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு 'ஹார்ட்டின்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த திரைப்படத்திற்கு 'சுழல்' இணையத் தொடர் மற்றும் 'கொலைகாரன்' புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'நேரம்', 'பிரேமம்', 'கோல்டு' உள்ளிட்ட சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பை 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' புகழ் பரத் விக்ரமன் கையாள, கலை இயக்கத்தை ஜி துரைராஜ் ('கருடன்', 'அயோத்தி' புகழ்) மேற்கொண்டுள்ளார். 'விடுதலை 2' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்த உத்தரா மேனன் 'ஹார்ட்டின்' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
திறமைமிக்க கலைஞர்களின் பங்களிப்போடு டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிப்பில் உருவாகி வரும் 'ஹார்ட்டின்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரிலான மாநாட்டுக்காக கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு அதன் விளம்பரத்திற்காக பெற்றோரையும், ஆசிரியர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு 7 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் குறைந்தது 50 பெற்றோர்களை அழைத்து வர வேண்டும்; அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து வர வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதேபோல், தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.
பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவதற்காக தனியார் பள்ளிகள் அவற்றிடம் உள்ள பேருந்துகளை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும்; விழா செலவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்; பெரிய பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தில் நடந்த பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி தோல்வி அடைந்து விட்டதாலும், இது தான் கடைசி மண்டல பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாடு என்பதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை. பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சரோ, அமைச்சர்களோ நினைத்தால் பள்ளிகள்தோறும் சென்று பெற்றோரை சந்திக்கலாம். அதை விடுத்து 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகோடி எல்லைக்கும் இடையிலான தொலைவு 170 கி.மீ ஆகும். மாநாடு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும், பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3.00 மணிக்கு பெற்றோர்கள் புறப்பட வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெற்றோர் விரும்பாத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது நியாயமல்ல.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில் புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை. விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பரப்புரைக்கான வாய்ப்பாகவே இந்த மாநாட்டை ஆளும் திமுக பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது.
அதற்காக ஆசிரியர்களையும், பெற்றோரையும் அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, விருத்தாசலத்தில் வரும் 22-ஆம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்மித் 29, ஜோஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 101, அசலங்கா 78, நிஷான் மதுஷ்கா 51 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது.
மேத்யூ ஷாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 9 ரன்னில் ஹெட் 18 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்மித் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஸ் பொறுப்புடன் விளையாடினர். ஜோஸ் 22 ரன்களிலும் ஸ்மித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார்.
- நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல.
இந்தியாவில் இருந்து ஏஐ மாநாட்டிக்கு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று நேற்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதற்கிடையே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார். இது இந்தியா மீது வரிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால் டிரம்ப் சந்திப்பின்போது, சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவதாக மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையே மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நீங்கள் சத்தமாகப் பேச வேண்டும். அவர் சொல்வதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அது அவரின் உச்சரிப்பு(ascent). எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று கூறி அவரின் கேள்வியைத் தட்டிக் கழித்தார்.
மற்றொரு இந்திய நிருபர், அமெரிக்காவில் செய்லபடும் குருபத்வந்த் சிங் பண்ணுனை மேற்கோள் காட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனையில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுமா என்று கேட்டார்.
மேலும் இந்தியத் தொழிலதிபர்கள்(அதானி) மீது முந்தைய பைடன் அரசின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த கருத்தையும் கேட்டார்.
இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் டிரம்ப், பைடன் நிர்வாகத்துடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை என்று சுற்றிவளைத்துக் கூறினார்.
அதானி மீது வழக்குபதிவு செய்யப்பட்டவெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் (FCPA) சட்டத்தை டிரம்ப் நேற்று முன் தினம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ஆப்கனிஸ்தான் பெண் நிருபர் ஒருவர், அமெரிக்கா மீண்டும் ஆப்கனிஸ்தான் தாலிபான் அரசில் தலையிட்டு, அங்கு பெண்கள் மீது நிகழும் தீவிர அடக்குமுறையைத் தடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
முன் வரிசையில் நின்று அவர் தெளிவாக கேள்வி எழுப்பியபோதும் அவர் கூறுவது தனக்கு புரியவில்லை என அதை டிரம்ப் தட்டிக் கழித்தார். இது குறித்து பல நிருபர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.
- செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்.
- கதிரியக்கம் வெளியாகாமல் இருக்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கூரை தீப்பற்றி எரிந்தது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது. இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.
- பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
- அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி.
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பழனி பெரியார் சிலை அருகே நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் பென் சியர்ஸ் இடம் பெற்றிருந்தார்.
- பென் சியர்ஸ்-க்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜேக்கப் டஃபியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
- திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதரவு வெற்றியாய் எதிரொலிக்க உங்களில் ஒருவனான நான் நம்புவது உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பைத்தான். அந்த உழைப்பே தி.மு.க.வை ஆறாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்தது.
ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. உடன்பிறப்புகளின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை.
நமக்கான திட்டங்களை பா.ஜ.க. அரசு முன்னெடுப்பதில்லை. தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சித்தாலும், தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.
இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதைவிட இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எல்லாத் துறைகளிலும் எட்டுவதே நமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு ஏழாவது முறையும் தி.மு.க.வின் ஆட்சி தொடரவேண்டும்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் பின்னோக்கித் தள்ளப்பட்ட தமிழ்நாட்டை மீட்டு, வலிமையும் செழிப்புமிக்க மாநிலமாக மாற்றிடுவதற்கான தி.மு.க.வின் 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டுகள் தேவை என்பதைக் குறிப்பிட்டு, அந்த வாய்ப்பைத் தி.மு.க.வுக்கு வழங்குங்கள் என்று கேட்டேன். முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், நமது திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிர்வாகத்தையும், சிறப்பான திட்டங்களையும் உணர்ந்து தொடர்ச்சியான வாய்ப்பை வழங்கிடத் தயாராக இருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கழகத்தின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.
அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.பழனிவேல், நீலகிரி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.கே.எம்.ராஜு, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களாக மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி, மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி, திரு.செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, திரு.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., திரு என்.நல்லசிவம், திரு.தோப்பு வெங்கடாசலம், திரு.கௌதமசிகாமணி, திரு.இல.பத்மநாபன், திரு என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும்.
உங்களில் ஒருவனான என்னைப் பற்றி கழக நிர்வாகிகள் நன்கறிவீர்கள். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கழகத்தின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கழகத்தின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும்.
இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கழகத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எப்போதும் போல நாம் எல்லோரும் கலைஞரின் உடன்பிறப்புகள்தான்.
முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.
இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. தி.மு.கழகம் எனும் 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு.
தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
- சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றிணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை இன்று [பிப்ரவரி 14] அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் 60% பங்குகளை வைத்துள்ளது. டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது.

இரண்டு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகளை இனி ஒரே தளத்தில் பார்க்கலாம். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் ஷோக்கள் போன்றவற்றை இலவசமாகப் பார்க்கலாம். இடையில் வரும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
இரு தளங்களிலும் ஏற்கனவே சந்தா கட்டியுள்ள பயனர்களுக்கு அவர்களின் சந்தா காலம் முடியும் வரை இந்த சேவை தொடரும். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிதாக சந்தா கட்ட தேவையில்லை.
ஜியோ சினாவில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் சந்தா முறைக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் சில நிமிடங்களுக்கு பின் வீடியோ லாக்- இன் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சந்தா செலுத்தினால் மட்டுமே விளம்பரம் இன்றி அதிக குவாலிட்டியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

புதிய பயனர்களுக்கு 149 ரூபாய் முதல் பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, சூப்பர் திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கூடுதலாக NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகிய சேனல்களின் படங்கள் மற்றும் தொடர்கள் இதில் காணக்கிடைக்கும்.
மேலும் IPL, WPL மற்றும் ICC நிகழ்வுகள் போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ISL போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்யும்.

- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக ஜெயலலிதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் 1991-96 வரை ஜெயலலிதாமுதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஜெயலலிதா வசித்த வீட்டில் சோதனை நடத்தியதில், தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நகைகள், பொருட்கள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, பிப். 14, 15ல் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி சட்டமன்ற தேர்தல் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்பது குறித்து பாஜக முடிவு எடுக்கவில்லை.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் யார்? அவருடைய அமைச்சரவையில் இடம் பெறுவது யார்? என்பதை இன்னும் பாஜக மேலிடம் முடிவு செய்யவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா (இவர் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மேலும் 4 பேர் முதலமைச்சர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில்தான பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவையில் இடம பெறுபவர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 15 பேர் கொண்ட பட்டியலை பாஜக மேலிடம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இருந்து 9 பேரை தேர்வு செய்ய வேண்டுமாம். இந்த 9 பேரும் பிரதமர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதனால் பிரதமர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக பாஜக மேலிடம் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்தியா திரும்பியதும், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லி முதல்வர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் டெல்லி மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி தேர்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட உடன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 17 அல்லது 18-ந்தேதி நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 20 அல்லது 21-ந்தேதி புதிய முதல்வர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.






