என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர்.
    • சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தார்.

    தெலுங்கானா மாநிலம் கல்குவத்தியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி கவிதா (வயது 35).

    தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டும், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

    பின்னர் கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் 4 பேரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் ரெட்டி எழுதி வைத்த கடிதம் மூலம் அவர் கடன் தொல்லையால் மகன் மகளைக் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    • உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளில் பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளது.
    • உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதல் இடம் பிடித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர்-ன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது.

    அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.

    உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.

    அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.

    கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. குறிப்பாக பஞ்சாபில் நிலைமை பேரிடர் என அறிவிக்கப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

    மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தல் மற்றும் பள்ளிகளை மூடுதல் ஆகியவை அடங்கும்.

    சர்வதேச நுண்ணறிவு நிறுவனமான இப்சோஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் 10 பேரில் ஏழு பேர் புகைமூட்டம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.

    • சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
    • ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்

    400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.

    அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.

    அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.

    அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

     

    இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

    நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.

    இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

    • கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது.
    • ரூ. 18 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐ.பி.எல். 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது.

    • அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார்.
    • நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் அடுத்ததாக ஜோதிகா `டப்பா கார்டல்' என்ற நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடித்துள்ளார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயன், ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டெ, அஞ்சலி ஆனந்த் மற்றூம் கஜராஜ் ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரின் கணவனான சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது இதுக்குறித்து அவர் பேசியுள்ளார்.

    அதில் அவர் " நான் பல மோசமான திரைப்படங்களை பார்த்துள்ளேன் ஆனால் அந்த திரைப்படங்கள் பாக் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்று ஹிட்டடித்துள்ளது.

    ஆனால் அந்த திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அவ்வளவு மோசமாக எழவில்லை. ஆனால் என் கணவன் திரைப்படம் நடித்து வெளிவரும் போது விமர்சகர்கள் மிகவும் மோசமான கருத்துகளை முன் வைக்கின்றனர். இது நியாயமற்றது. கங்குவா திரைப்படத்தில் சில பகுதிகள் சரியாக இல்லைத்தான் ஆனால் அவர்கள் அப்படத்திற்கான கடுமையான் உழைப்பை செலுத்திருக்கிறார்கள். அப்படத்திற்கு பல ஆயிரம் பேர் வேலை செய்துள்ளனர்.

    சில மோசமான திரைப்படத்திற்கு கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள் கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்தது என்னை அது பாதித்தது. மீடியா துறை இப்படி பாரபட்சமாக நடந்துக் கொள்வது வருத்தமளிக்கிறது." என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர்.
    • கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது

    நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று கூறக்கூடாது 'பாரத்' என்றுதான் அழைக்கவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபாலே, "நம்முடைய நாட்டின் பெயர் பாரத். நாம் அப்படி தான் அழைக்கவேண்டும். இந்தியா என்பது ஆங்கில பெயர்.

    நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால், இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான 'இந்தியா'வை இன்னும் ஏன் பயன்படுத்துகின்றன. இதை நாம் பாரத் என்று மாற்றம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2024 மக்களவை தேர்தலின்போது எதிர்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதனையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
    • அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

    இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயகை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.

    ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

    • தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்றார் ஒன்றிய அமைச்சர் ஷோபா.
    • தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்றார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    2024-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா, "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்! என கூறினார்.

    2025-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!" என தெரிவித்தார்.

    இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.

    இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது.

    நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.

    • 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது நடிகை பிடிபட்டார்.
    • விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நடிகையின் தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் நெறிமுறைகளை பயன்படுத்தியது தொடர்பான உண்மையை கண்டறிய ராமச்சந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.

    தனது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தி வந்ததில் இவருக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இவரது பெயர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த உண்மையை கண்டறிய கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா விசாணை நடத்துவார். ராமச்சந்திரா ராவிடம் விசாணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மேலும் விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் வழங்குமாறு டிஜிபி, ஐஜி, செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரும்போது ரன்யா ராவ் பிடிப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
    • பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார்.

    குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.

    ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.

    இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.

    ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.

    பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.

    ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார். 

    • விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
    • விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .

    `நான்,' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.

    இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்கவுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் முதல் படமாக இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    அதில் விஜய் ஆண்டனி பண கட்டுகள் அடுக்கப்பட்ட குவியலின் மேல் உட்கார்ந்துள்ளார். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×