என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
- தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.
மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.
நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
- சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
- இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே துப்பாக்கி வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட அவர் மேடையில் சரிந்து விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் கூரையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து குதித்து தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் இருந்து ஒரு உயர் சக்தி கொண்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக FBI சிறப்பு முகவர் ராபர்ட் போல்ஸ் தெரிவித்தார்.
இது தவிர, அங்கிருந்து ஷூ ரேகைகள் மற்றும் கை ரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர் கல்லூரி பயிலும் வயதுடையவராகத் தோன்றியதாகவும், அவரது பல காட்சிகளைப் போலீசார் பெற்றுள்ளதாகவும் உட்டா டிபிஎஸ் ஆணையர் பியூ மேசன் தெரிவித்தார்.
மேலும் புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 100,000 டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு கிராம் ரூ.140
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
- இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
- மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும்.
இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நேதன்யாகு கையெழுத்திட்டார். மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.
இதன் பின் பேசிய நேதன்யாகு, "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.
இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.
சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும்.
தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர்.
- அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது.
- குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம்.
நரேந்திர மோடி 'இலவச ரீசார்ஜ் திட்டம்' பற்றிய தகவல்கள் தவறானவை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.
"SaoudKiTech" என்ற யூடியூப் சேனலில் பரவும் ஒரு வீடியோ, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களும் ஒரு வருட இலவச ரீசார்ஜ் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த கூற்று முற்றிலும் போலியானது என்பதை பத்திரிகை தகவல் பணியகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை எக்ஸ் வழியாகவோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ நேரடியாக பத்திரிகை தகவல் பணியகத்துக்கு புகார் அளிக்கலாம்.
குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம் என்றும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்தி உள்ளது.
- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
- இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது
ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.
இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.
வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.
இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
* தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
* மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.
* சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது, திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
* ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை.
* விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.
* தி.மு.க அரசியல் எதிரி என்றால் அ.திமு.க. அரசியல் எதிரி இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
- ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது.
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று கூடியிருந்தனர்.
அப்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
இந்த தாக்குதல் கோழைத்தனமானது என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முன்னதாக கண்டித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், தாக்குதலின் மூலம் நேதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார்.
இஸ்ரேலால் ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது. இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
- பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.
இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-
பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
- அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
சென்னை:
நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.
அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.
நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.
மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும்.
- பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.
மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட 10 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.






