என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
    X

    இந்தியாவில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
    • அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    சென்னை:

    நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.

    அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.

    நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.

    மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.

    நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×