என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
    • குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சுனன் தபசு பின்புறம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாகத்தில் பல்வேறு குடவரை சிற்பத்தூண்கள், பாறை வடிவிலான குளியல் தொட்டிகள் என பல்லவர் காலத்து சிலைகள் கற்களுடன் கூடிய மலைப்பகுதி உள்ளது. இங்கு மயில், குரங்கு, கீரிப்பிள்ளை, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.

    இவை சில நேரங்களில் உணவுக்காக வெளியே ஊருக்குள் வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை தின்னும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழக்கம். தற்போது குரங்குகள் நகரப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் வனத்துறையிடம் கூறுங்கள் என சொல்வதாகவும், வனத்துறையினர் திருக்கழுக்குன்றம் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து இவைகளை கண்காணிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதனால் வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாக மலைப்பகுதியை கண்காணித்து அங்கிருந்து குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
    • தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பேசும்.

    ஆனால் இந்த முறை கடந்தசில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்துக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    இதனால் புதுவையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. செயல்பாட்டுக்கு நாராயணசாமி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பி உள்ள கேள்விகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2014 லோக்சபா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

    அவரது எக்ஸ் தள பதிவில், "கூட்டணியில் 8 சதவீதம் வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது 26 சதவீதம் உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர். ராதா கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் வி.நாராயணசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகளைப் பெற்று, 34.57 சதவீதம் வாக்கு சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தார்.

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாராயணசாமி 1,94,972 வாக்குகளைப் பெற்று (26.35 சதவீதம்) 2-ம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் 1,32,657 வாக்குகளுடன் (17.93 சதவீதம்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.எச். நஸீம் 60,580 வாக்குகளைப் பெற்று (8.19 சதவீதம்) நான்காம் இடத்தைப் பிடித்தார். இந்த புள்ளி விவரங்களை பதிவு செய்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வருகிற சட்டமன்றத் தேர்தல்களில், அதிக வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை விட, குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட தி.மு.க கூட்டணியில் தலைமை வகிக்க முயற்சிப்பதாக மறைமுகமாக அவர் சாடியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இழிவாகப் பேசும் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

    தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில், புதுச்சேரியில் கூட்டணி தலைமை குறித்த மாணிக்கம் தாகூரின் கருத்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
    • முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.

    ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்து நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் சென்னை–கொசஸ்தலையாறு வடிநிலைப் பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நிறுவன வலுப்படுத்தல் மற்றும் சீர்திருத்த ஆலோசகர் (ISRC) இணைந்து, "தூய்மைப் பணியாளர்களுக்கான மழைநீர் வடிகால் பராமரிப்பு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சி" என்ற தலைப்பில் பயிற்சி நிகழ்ச்சியை சென்னை மணலியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்–II அலுவலகத்தின் கவுன்சில்ஹாலில் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. இதை மண்டலம்–II (மணலி) மண்டல அலுவலர் தேவேந்திரன் வெளியிட, மண்டலம்–I (திருவள்ளூர்) மண்டல அலுவலர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார். அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் காட்சி விளக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பை பாதுகாப்பாகவும் முறையான மற்றும் சுகாதாரமான முறையிலும் மேற்கொள்ள உதவும் களவழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பயிற்சி அமர்வின்போது வெளியிடப்பட்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பணியிடங்களில் ஏற்படும் பொதுவான ஆபத்துகள், பாதுகாப்பு நடைமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பயன்படுத்துவதின் அவசியம், முதலுதவி மற்றும் அவசர கால நடவடிக்கைகள், உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–I திருவள்ளூர்) டி. எம்.தனியரசு மற்றும் மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–II மணலி) ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர், நகர்ப்புற வெள்ளத்தடுப்பில் தூய்மைப் பணியாளர்கள் வகிக்கும் முக்கியப்பங்கை எடுத்துரைத்தனர். மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிப்பது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, பணியாளர்களின் நலனையும் சேவைத்தரத்தையும் உயர்த்தும் என பேசினர்.

    நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கி, ISRC குழுவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரின் டேவிட் உரையாற்றினார். தூய்மைப் பணியாளர்களுக்கான தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், இத்தகைய எளிய மற்றும் நடைமுறை சார்ந்த பயிற்சி புத்தகங்களும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, சென்னை நகரின் வெள்ள அபாயத்துக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

    பயிற்சி நிகழ்ச்சியில், வெள்ளநீர் வடிகால் பராமரிப்பு, கழிவுகளை முறையாக அகற்றுதல், பராமரிப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக பயன்படுத்துதல், பணியிடங்களில் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியின் நிறைவாக, ISRC திறன்மேம்பாட்டு வல்லுநர் ஆபிரகாம் லிங்கன் நன்றி உரையாற்றினார். பயிற்சியில் கலந்துகொண்ட பணியாளர்களின் ஆர்வமான பங்கேற்பையும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த ஆதரவையும் அவர் பாராட்டினார்.

    இந்த பயிற்சியில், சென்னை மாநகராட்சி மண்டலம்–I மற்றும் மண்டலம்–II ஆகியவற்றைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த முயற்சி, பணியாளர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதோடு, மழைநீர் வடிகால் மேலாண்மையை வலுப்படுத்தி, சென்னை நகரின் நகர்ப்புற வெள்ளத்தடுப்புத் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று முதல் 12-ந் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

    2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தே.மு.தி.க. இன்று தொடங்கியது.

    தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு செய்தார்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

    மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.
    • மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற திராவிட கழக தலைவர் கி.வீரமணி, 'இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி' என்ற தலைப்பில் மேலும் பேசியதாவது:-

    தமிழகத்தில் திராவிட இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லை என்றால், நாம்யாரும் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.

    குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார்.

    அதேபோல திருநங்கைகள், பெண்களுக்கான அங்கீகாரத்தை அளித்தது திராவிட மாடல் ஆட்சிதான். எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் சமூக நீதி வேண்டும் என்பதற்கு தான் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார்.

    தமிழக்தின் கவர்னர் எதிர்க்கட்சிகளை போல வெளிநடப்பு செய்கிறார். இவை சட்டப்படி தவறு. எனவே தான் அடுத்த ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கவர்னர் உரையே இருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், பா.ஜ.க.வால் ஏதும் செய்ய இயலாது. மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்றார்.

    • ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை?
    • தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    செந்தில் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்- இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.

    இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ?

    தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.

    உயிரிழந்த செந்தில் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    செந்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்! என்று கூறியுள்ளார். 



    • த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
    • பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் த.வெ.க. விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.

    விருப்ப மனு திருப்பி அளிக்கும்போது பொதுத்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

    மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது.

    திருப்பூர்:

    சைவம், அசைவம் என எந்த வகை உணவுகள் தயாரித்தாலும் முதன்மை இடத்தை தக்காளிகள் பெறுகின்றன. இதனால் தக்காளியின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

    இதைக்கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு சாலையோரங்களில் வீசும் அவலமும் ஏற்பட்டு வந்தது.

    தற்போது திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வீதிகளில் வீசப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருப்பூரை பொறுத்தவரை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தரத்துக்கு ஏற்ப 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி அழுகி விடுகின்றன.

    விலை வீழ்ச்சியை சந்தித்ததால் அந்த தக்காளிகளை கூடை, கூடையாக மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இன்னும் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.
    • நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    'ஆனைக்கு அறம்' என்றால் 'குதிரைக்கு குர்ரம்' என்று சொல்வதையும், 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்' வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் 'பொம்மை முதலமைச்சர்' மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.

    2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த விடியா அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் 'திமுக-வின் உருட்டுக்கடை அல்வா' ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கினோம்.

    மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர வக்கற்ற ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, ஒன்றிய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

    * கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை; ரெயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது.

    * ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.

    * 'பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்' என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

    வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

    'சேற்றிலும், அசிங்கத்திலும் கல் வீசினால் அந்த சேறும், அசிங்கமும் தன்மீதுதான் படும்' என்பதையும்; 'மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது தன் மார்பில்தான் விழும்' என்பதையும் உணராமல், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவத்தையும், மரியாதையையும், தகுதியையும் எண்ணிப் பார்க்காமல் உளரித் திரிவதை, ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * தமிழக மக்களை, தேர்தல் களத்தில் நெஞ்சுரத்தோடு தலை நிமிர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்திக்கும்.

    * எங்களுடைய ஆட்சியின் மாட்சிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கும் வல்லமை எங்களுக்கு உண்டு.

    * நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள்.

    கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் '0'தான் என்று கூறியுள்ளார். 

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    திருமுடிவாக்கம்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஷ்ட் சாலை, நடுவீரப்பட்டு.

    காரம்பாக்கம்: மகாலட்சுமி நகர், புத்தர் காலனி, கமலா நகர், ஆற்காடு சாலை, ராஜேஸ்வரி நகர், திரு முருகன் நகர், தேவி நகர்.

    அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: மகாத்மா காந்தி சாலை 4, 5, 6, 11 மற்றும் 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ரெயில்வே ஸ்டேஷன் சாலை 5, 6 மற்றும்7வது தெருக்கள்.

    பெருங்களத்தூர்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கை அம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்எம்கே நகர், குண்டுமேடு, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், கணேஷ் நகர், சத்யமூர்த்தி நகர், எம்கேபி நகர், ஸ்ரீ ராம் பார்க் 63 அபார்ட்மெண்ட், எஸ்வி நகர், காமராஜர் நகர், மேப்பேடு, புத்தூர், பெருமாள்புரம், அமுதம் நகர், விஷ்ணு நகர், குறிஞ்சி நகர், கண்ணன் அவென்யூ.

    முடிச்சூர்: பாலாஜி நகர், முல்லை நகர், நவாப் ஹபீபுல்லா நகர், புருஷோத்தமன் நகர், லக்ஷ்மி நகர், நேதாஜி நகர், பார்வதி நகர், வரதன் நகர், ராயப்பா நகர், அஷ்டலக்ஷ்மி நகர், அன்னை இந்திரா நகர், ரங்கா நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், காமராஜர் நெடுஞ்சாலை.

    ஸ்டான்லி: கத்திப்பாரா, பி.பி. அம்மன் கோவில், சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், ஆனந்தநாயகி நகர், சி.பி. சாலை, ஓல்டு கிளாஸ் பேக்டரி, ஹரி நாராயணபுரம், பழைய ஜெயில் சாலை, பென்சனர் தெரு, டி.ஹெச். சாலை, லாலகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துளுக்காணம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர் விஜயராகவலு சாலை, அசீஸ் எம்.டி. தெரு, சிமெட்டரி சாலை, கவுசிங் போர்டு, பி.பி. சாலை.

    விருகம்பாக்கம்: பெருமாள் கோவில் 1மற்றும் 2வது தெரு, சாரதா நகர், காமராஜர் சாலை, செரஸ் அப்பாசாமி அபார்ட்மென்ட்ஸ், ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏ.வி.எம் அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திருநகர், அபிலாஷா அபார்ட்மென்ட்.

    மாதவரம்: ராகவேந்திர நகர், ரிங் சாலை, தேவகி நகர், எலிசபெத் நகர், பத்மாவதி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல்கலாம் நகர், சி.எம்.டி.ஏ., தட்டான் குளம் சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 வரை.

    • புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
    • பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அவலாஞ்சி, தலைகுந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான உறைபனி காணப்பட்டது. தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடும் குளிரும் நிலவியது.

    இன்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.

    இதுதவிர சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் அனைத்தும் உறைபனியால் மூடப்பட்டு காணப்பட்டன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

    கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

    • நாளுக்கு நாள் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது.
    • எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, பிரதமர் பதில் உரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளது இதுதான் முதல் முறை.

    எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளும் கட்சியினர் மட்டுமே கூடி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

    நாளுக்கு நாள் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-இந்திய பிரதமருக்கும் இடையான, உறவுகள் குறித்தும் இன்னும் பல பிரச்சனைகள் குறித்தும், பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவார்கள் என்பதால், எதிர்கட்சியினரை பேச விடாமல் தடுக்கும் யுக்தியை, ஆளும் கட்சியினர் கையாண்டனர்.

    பிரதமர் பதில் உரையை ஆற்றாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டு உள்ள தலைகுனிவு. இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டுவதாக கூறி, தனது உரையில், பிச்சை எடுக்க கூட பயன்பாடாத மொழி தமிழ் என்று தனது, காழ்ப்புணர்வை கக்கி உள்ளார். இதுதான் பா.ஜ.க.வினரின் மனநிலை. தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், எதிரான மன நிலையை கொண்டவர்கள் என்பதற்கு, இதை விட சான்று தேவையில்லை.

    நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி தந்ததற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

    நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததை, தமிழினமே பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. ஆனால் வானதி சீனிவாசன் போன்றவர்கள், பா.ஜ.க.வினர் வயிற்று எரிச்சலில், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அதைப் போல் வாக்குச்சாவடி பணிக்குழு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×