என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
- பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அவலாஞ்சி, தலைகுந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான உறைபனி காணப்பட்டது. தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடும் குளிரும் நிலவியது.
இன்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
இதுதவிர சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் அனைத்தும் உறைபனியால் மூடப்பட்டு காணப்பட்டன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- நாளுக்கு நாள் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது.
- எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, பிரதமர் பதில் உரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளது இதுதான் முதல் முறை.
எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளும் கட்சியினர் மட்டுமே கூடி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
நாளுக்கு நாள் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-இந்திய பிரதமருக்கும் இடையான, உறவுகள் குறித்தும் இன்னும் பல பிரச்சனைகள் குறித்தும், பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவார்கள் என்பதால், எதிர்கட்சியினரை பேச விடாமல் தடுக்கும் யுக்தியை, ஆளும் கட்சியினர் கையாண்டனர்.
பிரதமர் பதில் உரையை ஆற்றாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டு உள்ள தலைகுனிவு. இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டுவதாக கூறி, தனது உரையில், பிச்சை எடுக்க கூட பயன்பாடாத மொழி தமிழ் என்று தனது, காழ்ப்புணர்வை கக்கி உள்ளார். இதுதான் பா.ஜ.க.வினரின் மனநிலை. தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், எதிரான மன நிலையை கொண்டவர்கள் என்பதற்கு, இதை விட சான்று தேவையில்லை.
நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி தந்ததற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததை, தமிழினமே பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. ஆனால் வானதி சீனிவாசன் போன்றவர்கள், பா.ஜ.க.வினர் வயிற்று எரிச்சலில், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அதைப் போல் வாக்குச்சாவடி பணிக்குழு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில்குமார் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
- செந்தில்குமாரின் டீக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம். அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார்.
அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர்.
இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரின் டீக்கடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தததாக கூறப்படுகிறது. இதனை செந்தில்குமார் கண்டித்து இங்கு மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளார். இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் போதை கும்பல் செந்தில்குமாரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்ப டுத்தி உள்ளனர்.
கொலையான செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி துணை தலைவராக இருந்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகனிடம் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
- தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். இந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவில்லை என்று கூறிவந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் கட்டிடம் எழுந்து நிற்கிறது. இதற்கு அடிக்கல் நாட்டிய இடத்திலேயே பிரதமர் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்றால் இந்த கூட்டம் பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1-ந்தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அன்றைய தினம் மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் வீர வணக்கம், வீரவணக்கம் கார்ல் மார்க்சுக்கு வீர வணக்கம் என்று கையை உயர்த்தி முழக்கமிட்டனர்.
- கார்ல் மார்க்ஸ் சிலையை வடிவமைத்த சிற்பி கார்த்திகேயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
சென்னை:
சென்னை கன்னிமாரா பொது நூலகம் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85 லட்சம் செலவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது.
உலக வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான பொதுவுடமை சிற்பி கார்ல்மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.
அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பி.சண்முகம், பாலகிருஷ்ணன், ராம கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கார்ல் மார்க்ஸ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் வீர வணக்கம், வீரவணக்கம் கார்ல் மார்க்சுக்கு வீர வணக்கம் என்று கையை உயர்த்தி முழக்கமிட்டனர்.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் பற்றிய புகைப்பட கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். அங்கு வீடியோ தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் பார்வையிட்டனர்.
கார்ல் மார்க்ஸ் சிலையை வடிவமைத்த சிற்பி கார்த்திகேயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், பிரபாகரராஜா மற்றும் இந்து ராம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- தி.மு.க. அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.
- தி.மு.க.வின் துரோகங்களுக்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தரப்போவது உறுதி.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வந்த நிலையில், அவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தான் மிகச்சிறந்த சான்றுகள் ஆகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களில் முதன்மையானது ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கத் திட்டங்கள் ஆகும். ஹூண்டாய் மகிழுந்து ஆலை விரிவாக்கம் தொடர்பாக அந்த நிறுவனம் தமிழக அரசுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.05.2023-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய் மகிழுந்து ஆலையை விரிவுபடுத்துவது, மின்சார மகிழுந்துகளை தயாரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இரண்டாவது ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது. ரூ.6180 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தமும் ஹூண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் விரிவாக்கம் தொடர்பானது தான். மொத்தம் 26,180 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; இதில் உறுதியளிக்கப்பட்டிருந்த தொகையில் ரூ.500 கோடி கூட இன்னும் முதலீடு செய்யப்படவில்லை என்பதை பல முறை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நான் வெளியிட்ட 'தி.மு.க. அரசின் பொய் முதலீடுகள்' என்ற தலைப்பிலான ஆவணத்திலும் இது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், 80%க்கும் கூடுதலான முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக தி.மு.க. அரசு மீண்டும், மீண்டும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்தது. ஆனால், ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீடுகளுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே, அந்த நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான முதலீடுகள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரை தி.மு.க. தொடக்கம் முதலே பொய்களைத் தான் கூறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் இரு தொழில் முதலீடுகளை செய்ய இருப்பவை கெயின்ஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம், சென்னையைச் சேர்ந்த இராதா எஞ்சினியரிங் நிறுவனம் ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் முறையே ரூ.4,995 கோடி, ரூ.1500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 04.08.2025-ஆம் நாள் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டன.
அதேபோல், எவர்வான் கோத்தாரி நிறுவனம் ரூ.5000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 26.02.2025-ஆம் நாளும், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.1300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் 25.11.2025-ஆம் நாளும் கையெழுத்திடப்பட்டன. இவற்றின் முதலீட்டுத் திட்டங்களுக்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த முதலீடுகளும் இன்னும் செயலாக்கம் பெறவில்லை என்பதை தி.மு.க. அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றாலும் கூட, அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடுகள் மட்டுமே செயலாக்கம் பெற்றுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பில் இது வெறும் 8.20% மட்டும் தான். ஆனால், ஒட்டுமொத்த தொழில் முதலீடுகளும் வந்து விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வந்தது. தி.மு.க. அரசின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தவொரு உருப்படியான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. ஐந்தாண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் 8.20 விழுக்காட்டை மட்டுமே தி.மு.க. அரசால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது வெறும் 13% மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. அரசின் இந்த படுதோல்விகளை பல்வேறு காலகட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது.
படித்த இளைஞர்களுக்கு 5.50 லட்சம் அரசு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றுதல், மாதந்தோறும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து அதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், பேருந்துக் கட்டணத்தைக் குறைத்தல், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்தல், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுதல் என உறுதியளித்திருந்த அனைத்து சத்தியங்களையும் நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு தோல்வியடைந்து விட்டது.
ஆனால், இந்த தோல்விகள் அனைத்தையும் வெற்று விளம்பரங்களின் மூலமாகவும், வெறும் ஜோடனைகள் மூலமாகவும் மூடி மறைக்க தி.மு.க. அரசு முயன்றது. ஆனால், அவை அனைத்தும் இப்போது அம்பலமாகி விட்டன. இவை அனைத்தும் தி.மு.க.வின் தோல்விகள் மட்டுமல்ல... தி.மு.க.வின் துரோகங்கள். இவற்றை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். தி.மு.க.வின் துரோகங்களுக்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் படுதோல்வியை பரிசாகத் தரப்போவது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
- அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர்திறக்கப்பட்டு காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதற்கிடையே மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 82 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர். அமைச்சர் இ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விடுதலையான வழக்கை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அமைச்சர் இ.பெரியசாமி தனது முதுகில் உள்ள அழுக்கை பார்த்து விட்டு மற்றவரை குறை கூற வேண்டும். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.
தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கனவே புஸ்வானமாகிவிட்டது. இந்நிலையில் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி ஏதாவது ஒன்றை நிறைவேற்றவில்லை என தெளிவாக கூறாமல் அமைச்சர் இ.பெரியசாமி குறை கூறி வருகிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அண்டா, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். அதில் 10 சதவீதம் கூட தரமான பொருள் கிடையாது. 100 வீடுகள் என்றால் 10 வீடுகளுக்கு மட்டுமே தரமான பொருள் இருக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும், பரிசு பொருள் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு கெட்டபெயர்தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.
விஜய் திரைப்படங்களில் நடித்ததற்காக கருப்பு பணம் வாங்கியது உண்மைதான். இதை நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்போம். நாங்கள் மட்டுமல்ல தி.மு.க.வினரும் இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் செங்கோட்டையன் எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி வருகிறார். தனது சம்பளம் முழுவதையும் வெள்ளை பணமாக மட்டுமே வாங்கினேன் என அவரால் சொல்ல முடியுமா?
நிர்மலா சீதாராமன் மக்களவையில் தமிழ் குறித்து என்ன பேசினார் என எனக்கு தெரியாது. அதற்கு கமல்ஹாசன் என்ன பதில் அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
- மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் விவரம் வருமாறு:
* ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ.42.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்களை தொடங்கி வைக்கிறார்.
* நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி முதல் கொடமலை வரை ரூ.34.12 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை தொடங்கி வைக்கிறார்.
* ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
* தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,238.19 கோடி மதிப்பீட்டில் கட்டிய 9,696 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.
* கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் கடல் ஆமை மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை 2026ஐ வெளியிடுகிறார்.
* பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.348.59 கோடியில் கட்டப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கிறார்.
* மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
* கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி முதலீட்டில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிட்சுபிஷியின் குளிர்சாதன இயந்திரம், கருவி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-02-2026- ஒரு கிராம் ரூ.300
04-02-2026- ஒரு கிராம் ரூ.320
03-02-2026- ஒரு கிராம் ரூ.300
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
01-02-2026- ஒரு கிராம் ரூ.320
- கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பா.ஜ.க.வினர் வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றம் பெற்றது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் பாராளுமன்றத்தில் கமல்ஹாசனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒரு மனநிலையை கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட ஒரு சான்று தேவையில்லை.
நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழினமே அவரை பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. பா.ஜ.க.வினர் அந்த வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் வேல்முருகன் பாடலுக்கு மேடையில் ஆடியது தொடர்பான கேள்விக்கு,
இதில் கருத்து சொல்ல எதுவுமில்லை. அவர்கள் அப்படித்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






