விஜய் கருப்பு பணம் வாங்கவில்லை என்பதை நிரூபிக்கட்டும் - திண்டுக்கல் சீனிவாசன்

ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.
விஜய் கருப்பு பணம் வாங்கவில்லை என்பதை நிரூபிக்கட்டும் - திண்டுக்கல் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர். அமைச்சர் இ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விடுதலையான வழக்கை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அமைச்சர் இ.பெரியசாமி தனது முதுகில் உள்ள அழுக்கை பார்த்து விட்டு மற்றவரை குறை கூற வேண்டும். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.

தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கனவே புஸ்வானமாகிவிட்டது. இந்நிலையில் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி ஏதாவது ஒன்றை நிறைவேற்றவில்லை என தெளிவாக கூறாமல் அமைச்சர் இ.பெரியசாமி குறை கூறி வருகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அண்டா, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். அதில் 10 சதவீதம் கூட தரமான பொருள் கிடையாது. 100 வீடுகள் என்றால் 10 வீடுகளுக்கு மட்டுமே தரமான பொருள் இருக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும், பரிசு பொருள் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு கெட்டபெயர்தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

விஜய் திரைப்படங்களில் நடித்ததற்காக கருப்பு பணம் வாங்கியது உண்மைதான். இதை நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்போம். நாங்கள் மட்டுமல்ல தி.மு.க.வினரும் இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் செங்கோட்டையன் எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி வருகிறார். தனது சம்பளம் முழுவதையும் வெள்ளை பணமாக மட்டுமே வாங்கினேன் என அவரால் சொல்ல முடியுமா?

நிர்மலா சீதாராமன் மக்களவையில் தமிழ் குறித்து என்ன பேசினார் என எனக்கு தெரியாது. அதற்கு கமல்ஹாசன் என்ன பதில் அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com