என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்று ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு.
- ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தையொட்டி ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இதயதெய்வம் புரட்சித் தலைவி தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணினத்தை பாதுகாத்திடவும், ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் உயிர்மூச்சு உள்ளவரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் திடலில் நடைபெறவுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டமும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மக்கள் தொண்டாற்றிட புரட்சித் தலைவியின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம். புரட்சித் தலைவரின் கொள்கைகளை காப்பாற்றிடவும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும், எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுத்திடவும் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் உறுதியேற்போம். உரிமை கூட்டமாக ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.
- கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
- அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், உயர்த்த வேண்டும் என்ற வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், கடந்த ஆண்டு அளித்த கட்டண உயர்வு குறித்த வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 13-ஆம் ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின் சரியாக ஓராண்டு நிறைவடைந்து இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி மட்டும் ஓராண்டாகியும் நிறைவேறவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.
கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட வாகன வாடகை, எரிபொருள் செலவு போக அவர்களுக்கு கிடைப்பது சில நூறு ரூபாய் மட்டும் தான். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று வேளையும் உணவு உண்ண முடியவில்லை. வாகனங்களுக்கான காப்பீடு, வரிகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டியிருப்பதால் லட்சக்கணக்கான ஓட்டுனர்கள் கடனாளியாகிவிட்டனர். மேலும் இயல்பை விட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் ஓட்டுனர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஊர்திகளுக்கான வாடகையும் இதுவரை உயர்த்தப்படவில்லை.
வாடகை ஓட்டுனர்கள் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதனால் அந்தக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டாகியும் அந்தக் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறது என்று தான் பொருள். அந்த கொடூர குணத்தைக் கைவிட்டு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ- டாக்சி வாடகைக் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது.
- வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.
வேலூர்:
விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், " ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது.
புதுடெல்லி ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் பி.ராஜேந்திர குமார் சிறப்பு விருந்தினராக காணொலி வாயிலாகப் பங்கேற்று, ஜிஎஸ்டி துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி பேசும்போது, "ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது, மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, வேலூர் கோட்ட ஜிஎஸ்டி உதவி ஆணையர் டி.பி. சுரேஷ் பேசும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது. வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்" என்றார்.
மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள், 1000-க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்கள், 50 பட்டய கணக்காளர் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை முதன்மையர் வி.செல்வம், இணை முதன்மையர் சரிகா குப்தா, வணிகவியல் துறை தலைவர் எஸ்.உஷா ஆகியோர் பங்கேற்றனர்.
- சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
- 2 பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு, பழனி, தாராபுரம், கோவை, பல்லடம், கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளும் திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர் ஊதியூர், குண்டடம், கொடுவாய் ஆகிய பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.
நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விடியல் பேருந்து திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்வதற்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து காங்கேயம் வந்த டி.என். 39 என் 0659 என்ற எண் கொண்ட பேருந்தில் காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெண்கள் சிலர் ஏறி உள்ளனர். பின்னர் கண்டக்டரிடம் மெடிக்கல் ஸ்டாப்பில் இறங்க வேண்டுமென டிக்கெட் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்தப்பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 ஸ்டாப் தானே உள்ளது, ஏன் நடந்து செல்ல முடியாதா? என அந்த பெண்களிடம் பேசியதுடன் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது, நேராக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றோம். அங்கு பயணச்சீட்டு பரிசோதனையாளரிடம் உங்களை விட்டு விடுகிறோம் , நீங்கள் எல்லாம் அபராதம் ரூ.500 கட்டினால் மட்டும்தான் திருந்துவீர்கள் என கூறியதுடன்,நேராக பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
இதனால் கண்டக்டருக்கும், பெண் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக அரசு, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என அறிவித்துள்ள நிலையில், நகரப்பேருந்துகளில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பெண்களிடம் இழிவாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே காங்கயத்தில் பெண் பயணிகளை இழிவாக பேசிய டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 2பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் 2பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வந்தது.
அதன்படி, கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும், 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும், நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-02-2026- ஒரு கிராம் ரூ.260
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
14-02-2026- ஒரு கிராம் ரூ.280
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
- பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் "தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காற்றில் கலக்கும் நுண் துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல். கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதத் தொகையாக ரூ.25 ஆயிரம் அந்த இடத்திலேயே விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராத தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.
சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களையும் மேடையேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் கூட்டணியில் புதிதாக சில சிறிய கட்சிகளை கொண்டு வரவும் தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் வருகிற 22-ந்தேதி தொடங்கும் பேச்சுவார்த்தையை 15 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது.
- மதுரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது.
சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. இதற்காக தேர்தல் பிரசார குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு தொகுதி பொறுப்புகளையும் வழங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது.
மார்ச் 1-ந்தேதி நடக்கும் இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து வேலூர், திருச்சி, தஞ்சையில் பிரசாரம் செய்யவும் பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 7-ந்தேதி வேலூரிலும், 11-ந்தேதி திருச்சியிலும் நடக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தனித்தனி குழு அமைக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 3 முறை தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பது அ.தி.மு.க.-பா.ஜ.க. தொண்டர்களை உற்சாகமூட்டி உள்ளது.
தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மார்ச் மாதத்தில் தொடர் பிரசாரங்களை முன்னெடுக்க இருக்கிறார்கள்.
- தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.
- கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. இதையடுத்து வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான முன்னெடுப்புகளை அந்த கட்சி தொடங்கியுள்ளது. மறுபக்கம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர மாநில நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிகிறது.
இதில் வில்லிவாக்கம் தொகுதியில் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் வேட்பாளராக களம் காண இருக்கிறார்.
இதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரபல தியேட்டர் அதிபரின் மகனும், வாசுதேவநல்லூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறங்க அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், கட்சியின் தலைவரான விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று ஒரு விவாதமே தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. தற்போது விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் களம் காண இருக்கிறார்.
வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஆவார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.
வேதாரண்யம் தொகுதி மீனவர்கள், விவசாயிகள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் இந்த தொகுதியில் உறுதியாக களம் காண்பார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.
- இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.
சென்னை:
கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு செலவுக்கணக்கை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தர விட்டது. அதாவது தமிழ்நாட்டில் 42 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. மனித நேய மக்கள் கட்சி. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி. சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.
அதில், கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் கமிஷன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது. அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷனின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. நடந்து முடிந்த தேர்தல்களில் மனுதாரர் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ரத்து செய்ய முடியுமே தவிர பதிவை ரத்து செய்ய முடியாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் கமிஷன் சார்பில், "தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி இவ்வாறு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது" என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டதாகவும், கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மனுதாரர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் கொடுத்து, விளக்கத்தை பெற்றுத்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், அந்த உத்தரவுக்கு தடை விதித்தால், வருகிற சட்டசபை தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அந்தஸ்தை இந்த கட்சிகளுக்கு வழங்கியது போல ஆகிவிடும். எனவே, தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இடைக்கால தடை கேட்கும் மனுவை நிராகரிக்கிறோம். தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்க்கும் பிரதான வழக்கை, வருகிற மார்ச் 2-வது வாரத்துக்கு விசாரணைக்காக தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.
- கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
- 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது என்றும், கடந்த 5 ஆண்டு களில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்றும் சட்டச பையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தின்போது, மடத்துக்கு ளம் தொகுதி எம்.எல்.ஏ. சி.மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதி, சோழ மாதேவி, குங்குமவள்ளியம்மன் உடனுறை குலசேகரசாமி கோவிலுக்கு தரைத்தளம் அமைத்து சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
இந்த கோவிலுக்கு ரூ.24 லட்சம் செலவில் ஏற்கனவே தரைத்தளம் அமைக்கும் பணி நடக்கிறது. அதனோடு சேர்த்து ரூ.25 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. தரைத்தளம் அமைக்கும் பணி முடிந்ததும் இந்த பணி மேற்கொள்ளப்படும். தரைத்தளப் பணி 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவு பெற்று. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கும்.
அன்னதானம் திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது. 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. ஒரு வேளை அன்னதான திட்டம் 764 கோவில்களில் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ரூ.120 கோடி செலவில் 3.5 கோடி மக்கள் ஆண்டுக்கு பயன் பெறுகின்றனர். திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவில் உள்பட 27 கோவில்களில் அன்னதான திட்டத்தின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்துக்கு 20 நாட்கள் 4 லட்சம் பக்தர்களுக்கும், வடலூரில் 3 நாட்களுக்கு 30 ஆயிரம் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி, அன்னதான பிரபுவாக இந்த ஆட்சியும், முதல்-அமைச்சரும் காட்சியளிக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 130 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆக இந்த மாத இறுதிக்குள் 4,322 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மக்களோடு இறைவனையும், இறைவியையும் மகிழ்ச்சியோடு வைத்து கொண்டிருக்கிற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.






