என் மலர்tooltip icon

    இந்தியா

    • பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அதானி பவர் லிமிடெட் அமைக்கிறது.
    • பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதானி பவர் லிமிடெட் நிறுவனம் பீகாரில் ரூ.27 ஆயிரம் கோடியில் 2,400 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. இந்தத் திட்டத்திற்காக, பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி கிராமத்தில் 25 வருடங்களுக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தில் மின்சாரம் பீகார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.

    இந்நிலையில், பீகார் அரசுக்கும் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான மின்சார ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    பீகார் அரசு அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்ற அதிகமான விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    2017-2024 க்கு இடையில் ஆர்.கே. சிங் மத்திய மின்சார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
    • மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு 8 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்பவர் ஆண் நண்பரை விரட்டிவிட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

    இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளதாக கூறி இருந்தார்.

    அண்ணாமலை இப்படி பேசியதை வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்று பேட்டி அளித்ததாகவும், ஆனால் அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆதாரங்களை வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அனைத்து ஆதாரங்களையும் பெற்று விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

    இதுதொடர்பாக நீதிபதி, நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதுபோன்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டுமா? இப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் தினமும் 100 வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டி வரும். இதற்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். ஞானசேகரன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

    இதையடுத்து வழக்கறிஞர் எம்.எல்.ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார். மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர்.

    அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.

    விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்ததால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை.

    சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜீராவால மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.

    கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.

    கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இது குறித்து தொழிலதிபர்கள் கூறுகையில்:-

    ஏழைகளுக்கு உதவி செய்ய தங்களது தாய் தூண்டியதாகவும் விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானது என தெரிவித்தனர்.

    • அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.
    • மனுதாரர்களை முழுமையாகக் கேட்ட பிறகு, மத்திய அரசு இந்த மனுவை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற அனுமதிக்க முடியாது.

    புதுடெல்லி:

    பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சீரான சேவை நிபந்தனைகளை வகுத்துள்ள தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசாரிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

    மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, சர்வதேச நடுவர் மன்றத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தது. மனுதாரர்களின் வாதங்களை முடித்த பிறகு, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு நள்ளிரவில் தாக்கல் செய்த மனுவை ஏற்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பி.ஆர். கவாய் கூறுகையில்,

    * அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.

    * மத்திய அரசு திட்டமிடப்பட்ட விசாரணைக்கு முன்னதாக நள்ளிரவில் ஒரு மனுவை தாக்கல் செய்வதன் மூலம் இதுபோன்ற தந்திரோபாயங்களில் ஈடுபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    * மனுதாரர்களை முழுமையாகக் கேட்ட பிறகு, மத்திய அரசு இந்த மனுவை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

    • குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
    • வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    பெங்களூரு பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஷி பூஜாரி. இவர், கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். ராஷி பூஜாரி தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஜீகுகூவா என்ற இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார்.

    அதாவது அந்த நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை புஷ்பலதா செய்து வந்தார். அதன்படி, கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி ராஷி பூஜாரியின் 2 நாய்களையும், புஷ்பலதா நடைபயிற்சிக்கு தனித்தனி கயிறுகளில் கட்டி அழைத்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து புஷ்பலதா வீட்டுக்கு சென்றார்.

    அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு நாய் இறந்து விட்டதாக ராஷி பூஜாரியிடம் புஷ்பலதா கூறினார். தான் ஆசையாக வளர்த்த நாய் செத்து விட்டதால் ராஷி பூஜாரி மிகுந்த வேதனை அடைந்து கண்ணீர்விட்டு அழுதார். இருப்பினும், புஷ்பலதா மீது சந்தேகம் அடைந்த அவர், காவலாளியிடம் தனது நாய் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பார்த்தீர்களா? என்று ராஷி பூஜாரி விசாரித்தார். அப்போது நாய் எதுவும் கீழே விழவில்லை என்று காவலாளி தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ராஷி பூஜாரி, குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாயை லிப்டில் வைத்து புஷ்பலதா கையில் பிடித்து தூக்கி கீழே ஓங்கி அடித்தார். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்து போய்விட்டது. இதையடுத்து செத்துப்போன நாயை கயிற்றுடன் தரதரவென இழுத்து செல்வதும், மற்றொரு நாயை அவர் அழைத்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதை பார்த்து ராஷி பூஜாரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வேலைக்கார பெண் தனது நாயை கொடூரமாக அடித்துக் கொன்று விட்டதாக கூறி, அந்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    அதே நேரத்தில் புஷ்பலதா மீது பாகலூர் போலீஸ் நிலையத்தில் ராசி பூஜாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதாவை அதிரடியாக கைது செய்தனர். கைதான புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாய் இல்லாத ஜீவனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற புஷ்பலதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



    • நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது.
    • பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல-மகர விளக்கு சீசன் முதல் அடுத்த ஆண்டு (2026) மண்டல சீசன் வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் தேதி குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

    நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

    இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
    • கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    'குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில், "அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். குடும்ப ஆட்சியிலிருந்து இந்தியா விலகி தகுதி அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டும்.

    குடும்ப அடிப்படையிலான அரசியல் பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.

    இத்தகைய குடும்பங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிதி ஆதாயங்களை ஈட்டியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    149 அரசியல் குடும்பங்கள் மாநில சட்டமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்றும், 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒன்பது முதலமைச்சர்கள் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாக தரூர் சுட்டிக்காட்டுகிறார்.

    மேலும் தனது கட்டுரையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்யை தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட வாரிசுகளின் செல்வாக்கு, அரசியல் தலைமை என்பது மரபுரிமையாகக் கிடைத்த ஒரு உரிமை என்ற கருத்தை வளர்த்துள்ளது.

    காங்கிரஸ் மட்டுமின்றி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக மற்றும் பாரத ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் இதற்கு சான்று என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சிகளில் வெளிப்படையான உள்கட்சித் தேர்தல்கள், சட்டப்பூர்வ கால வரம்புகள் மற்றும் தகுதி அடிப்படையிலான தலைமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் தேவை என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ளார். இந்த கட்டுரை காங்கிரசார் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.
    • சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    பீகாரில் இருந்து பல வருடங்களுக்கு முன் குஜராத்திற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் குடியேறியது.

    கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றிய தந்தை, கோவிட் காலத்தில் இறந்தார். அதன் பிறகு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து தனது தாயையும் பதினைந்து வயது தம்பியையும் மூத்த மகன் கவனித்துக் கொண்டார். மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

    தனது அண்ணன் தன்னை அடிக்கடி அடிப்பதால் அவர் பதினைந்து வயது தம்பி வெறுப்புடன் இருந்து வந்தான். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று வீட்டில் வைத்து அண்ணனை இரும்புக் கம்பியால் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொன்றான்.

    பின்னர் 6 மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அவரையும் சிறுவன் கொடூரமாக படுகொலை செய்தான். அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.

    அண்ணனும் அண்ணியும் பீகாருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லி, அக்கம்பக்கத்தவரை தாயும் மகனும் நம்ப வைத்துள்ளனர்.

    தீபாவளி நேரத்தில் பீகாரில் உள்ள உறவினர்கள் அண்ணன்-அண்ணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது பதில் இல்லை. சிறுவனைத் தொடர்புகொண்டபோது அவன் சரியாகப் பேசவில்லை.

    பின்னர் தாயைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். விபத்து குறித்த புகைப்படங்களை உறவினர்கள் அனுப்ப சொன்னபோது தாயும் மகனும் மறுத்துள்ளனர். 

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜுனாகடில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சுற்றியுள்ள பகுதிகளில் எந்த விபத்தும் இல்லை என்றும், கணவன்-மனைவி யாரும் இறக்கவில்லை என்றும் போலீசார் கூறினர்.

    இதனால் அவர்களை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரை ஏற்று, தாயையும் மகனையும் காவல்துறையினர் கண்காணித்த போது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலை வழக்குப் பதிவு செய்து, தாயையும் மகனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
    • ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள், சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தாக்கப்பட்டதால், அந்தச் சிறுவனின் காதில் இரத்தம் வந்துள்ளதுடன், செவிப்பறையும் சேதமடைந்துள்ளது என்று சிறுவனின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    இதோடு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவனது காற்சட்டைக்குள் ஒரு தேளைப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களை வெளியே சொன்னால், கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாலோ வாழ்க்கையையே தொலைத்துவிடுவீர்கள் என மிரட்டப்பட்டுள்ளனர். 

    பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும், ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

    • கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியது.
    • லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோர சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.

    நேற்று மதியம், ஜெய்ப்பூரில் லோகாமண்டி பகுதியில் உள ஹர்மதா என்ற இடத்தில், வேகமாக வந்த ஒரு காலி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

    இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்து நடந்ததும் உள்ளூர் மக்கள், போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனி கூறியுள்ளார்.

    விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மற்றொரு விபத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் அதில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

    • இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது.
    • இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

    விவசாயிகளின் பயிர்களுக்கு அரசு உதவியுடன் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக இந்த காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், சேதமடைந்த பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், 20 ரூபாய் இழப்பீடு தந்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    விவசாயிகள் புகாருக்கு சிவராஜ் சிங் சவுகான் அளித்த பதில் பின் வருமாறு:-

    இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இந்த செயல் விவசாயிகளுடன் நகைச்சுவைக்காக விளையாடுவது போன்றது. இது நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிடுகிறது. PMFBY திட்டத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், தேவையான மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.
    • ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.

    சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    ×