என் மலர்tooltip icon

    இந்தியா

    • சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
    • மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    அதில் அவர்," சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.

    அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும், கொரோனா தொற்று போல இந்த நோய் பரவாது, நீர் நிலையங்களில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • பாஜக குற்றவாளிகளுக்கு ஆளுநர் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு.
    • குற்றவாளிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர், தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார்.

    ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

    • ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும்.
    • இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்காக, 72 ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    யாத்திரையின்போது வழியில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இந்தப் புதிய திட்டத்தை முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.

    சபரிமலை கோவில் நடை, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக நேற்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து, யாத்திரையின் முதல் கட்டமாக இந்த 72 சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் தொகுப்புகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்கீழ் 1,600 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வடக்கு மாவட்டங்களில் இருந்து தொடங்கும் பயணங்கள் பெரும்பாலும் இரண்டு நாள் சேவைகளாக இருக்கும். ஆலப்புழா, பத்தனம்திட்டா போன்ற சபரிமலைக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து தொடங்கும் பயணங்கள் ஒரு நாள் சேவையாக இருக்கும்.

    ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடா்புடைய, வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் வலிய கோய்க்கல் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோவில்கள் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. வட மாவட்ட பக்தா்களுக்கான திட்டங்களில் குருவாயூா் கோவிலும், தென் மாவட்ட பக்தா்களுக்கு கொட்டாரக் கரை கணபதி கோவிலும் இடம்பெறும்.

    இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். உதாரணமாக, திருச்சூா் போன்ற இடங்களில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.500 முதல் 700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும். இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    குழு முன்பதிவை ஊக்குவிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் முன்பதிவு செய்தால் குழுத் தலைவருக்கு 3 சதவீதமும், வார நாள்களில் முன்பதிவு செய்தால் 2.5 சதவீமும் கமிஷன் வழங்கப்படும்.

    இந்தத் திட்டங்களில் பயணம் செய்வோருக்கு, பம்பை கேஎஸ்ஆா்டிசி பணிமனையில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். சந்நிதானத்தில் பக்தா்களுக்கு நேரடியாக உதவ (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். கூடுதல் தகவல்களுக்கு, பத்தனம் திட்டா(91889 38524), செங்கனூா்(91889 38525) கே.எஸ்.ஆர்.டி.சி. சுற்றுலாப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    • ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார்.
    • இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

    முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு தூங்கிய காலம் போய், தற்போது செல்போன் பார்த்து விட்டு தான் தூங்கும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைக்கு பாடம் புகட்ட தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழத் தொடங்குகிறது. இனிமேல் செல்போன் பார்ப்பியா? என தாய் கேட்கும் போது, குழந்தை அழுதபடி தலையசைத்து மறுக்கிறது. மேலும் குழந்தை எனது கண்கள் சிவப்பாகுமா? என கேட்கும் போது அவரது தாய், இல்லை… கருப்பாகும் என கூறுகிறர்.

    இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் சிலர், இது சூப்பர் ஐடியா, எல்லா அம்மாவும் இதை முயற்சி செய்ய வேண்டும் என்று பாராட்டி பதிவிட்டனர்.

    • அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    • புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
    • ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

    தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

    இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.

    தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.

    பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.

    அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

    நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    • மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.

    காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள நம் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    நம் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார் பழுதாவது தொடர் கதையானது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கடே. இவர் சமீபத்தில் புதிதாக ஒரு கார் வாங்கினார். ஆனால் அந்த காரில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தான் கார் வாங்கிய ஷோரூம் நிறுவனத்தினரிடம் புகார் செய்தார். ஆனாலும் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

    எனவே கார் பழுதாவது தொடர் கதையானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் சம்பவத்தன்று நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது புது காரை மேள தாளங்கள் முழங்க கழுதைகளை வைத்து இழுத்து வந்து ஷோரூம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான்.
    • ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

    பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த ஒற்றை இலக்க வெற்றி அமைந்தது.

    இத்தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணிக்கே இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொண்டர்கள் மட்டுமின்றி பீகாரில் வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மனநிலையும் தற்போது சற்று மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் காங்கிரசில் பயணித்தால் தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

    இதனால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாமா? என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஐக்கிய ஜனதாதள முக்கிய தலைவரிடம் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்களும் ஒரு வேளை கட்சி தாவி விட்டால் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே என கட்சி மேலிடம் கருதுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது.

    • தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
    • பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.

    இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

    தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.

    அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.

    இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
    • தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.

    இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.
    • தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

     ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனியைச் சேர்ந்தவர் நூத்தி பூஜா (வயது 24), ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.

    அவர் நள்ளிரவு வரை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த 'கோவிந்த கோடி' திட்டத்தைப் பற்றி அறிந்தார். பூஜா, ஏழுமலையானின் பெயர்களை எழுத முடிவு செய்தார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் பெயர்களை எழுத விரும்பினாலும், அதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சியுடன் அவர் தொடர்ந்து 10 லட்சம் தடவை எழுதி முடித்தார்.

    மொத்தம் 10,01,116 கோவிந்த நாமங்களை எழுதியுள்ள அவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தை சிறப்பாக வழங்கியது.

    தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    சுவாமியின் ஆசியுடன் முதல் கடபத்திலிருந்து அவரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    ×