என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
    • குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.

    சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.

    30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

    அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.

    அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.

    பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.

    "எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.

    மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.

    அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

    • 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
    • அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.  

    நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.

    ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.

    • ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 400 கோடி கொள்ளை சமைப்பவத்தில் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சந்தீப் பாட்டில் என்ற லாரி ஓட்டுநர், கடந்த அக்டோபர் 22 அன்று கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.400 கோடியைக் கொண்டு சென்றபோது, தன்னை ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணத்தைக் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்தார்.

    சந்தீப் பாட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சந்தீப் குறிப்பிட்ட பயண பாதை, சம்பவ நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரம், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    எதுவுமே அவர் சொன்ன விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு, அப்படி ஒரு கொள்ளைச் சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    நேற்று இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிராவின் இகத்புரி நீதிமன்றம், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மேலும், தவறான தகவலைக் கொடுத்து போலீசாரையும் நீதிமன்றத்தையும் திசைதிருப்பிய ஓட்டுநர் சந்தீப் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் பொய் புகார் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  

    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.

    விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

    இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.   

    • கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் தோற்றது.
    • அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது- எம்.ஏ. பேபி

    கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான LDF-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பாஜக சொல்கிறது.

    இந்த நிலையில் இந்த தோல்வி தற்காலிகமானது. பினராயி விஜயன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எம்.ஏ. பேபி கூறியதாவது:-

    கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன்பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆகவே, எங்களுடைய உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு இதேபோல் சென்று கொண்டிருக்கிறது.

    டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் (மணிசங்கர் அய்யர்) பினராயி விஜயன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். பொதுவாக மக்களின் நினைப்பதை அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

    • மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார்.
    • அதே வேளையில் பாஜக மண்ணைக் கவ்வும்.

    மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக-வால் 30 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட தக்கவைத்துக் கொள்ள தவறும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனால் கோஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "வாக்குகளுக்காக மக்களை பாஜக சந்திக்கும்போது, இதுவரை மேற்கு வங்க ஏழை மக்களுக்கான 1.86 லட்சம் கோடி ரூபாயை நிதியை விடுவிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார். அதே வேளையில் பாஜக மண்ணைக் கவ்வும்" என்றார்.

    • இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளது.
    • இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது- நெதன்யாகு.

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி இஸ்ரேல் செல்கிறார்.

    அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாராளுமன்ற உரை விரைவில் நடக்க இருக்கிறது. யார் இங்கே வருகிறார்? இந்திய பிரதமர் மோடி" எனத் தெரிவித்தார்.

    மேலும், "இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளது. அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் பற்றி நாம் விவாதிக்கப் போகிறோம். இப்போது, உங்களுக்குத் தெரியும், இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல. இது 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது" என்றார்.

    • மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை.
    • எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது

    மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியைத் தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன.

    கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

    சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு மாா்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தை நடத்துவதில் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை. பிரச்சினைகளை உருவாக்குவதில் அவர் விருப்பம் காட்டுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நாட்கள் வரும் என்று ராகுல் காந்திக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. அதனால் தான் அவர் அவையை முடக்கி வருகிறார்.

    பாராளுமன்றத்தில் நிலவும் சூழ்நிலையை தணிக்க மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை. பல முயற்சிகள் வீணாகிவிட்டன.

    தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்து உள்ளது. நிலைமையை மாற்ற அவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால் காங்கிரசுக்கான நாட்கள் வராது. அடுத்த தேர்தல்களிலும் அவர்களது எண்ணிக்கை (மக்களவை) மேலும் குறையும்.

    அனைத்து எதிர்க்கட்சி களும் காங்கிரசுடன் இல்லை. சிறிய கட்சிகள் அந்தந்த கட்சி நேரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் ராகுல்காந்தி மீது சிறிய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. அவையை முடக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மீது அழுத்தம் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. அவை செயல்பட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி மக்களவையில் பேசுவதை தவிர்த்தார்.
    • மோடி உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில் இருந்து ஓடிப் போகிறார். ஆனால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு (PTI) பேட்டியளிக்கிறார். இந்த பேட்டி வெற்று வார்த்தைகள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெரிக் ஓ'பிரையன் வெிமர்சனம் செய்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானம் தொடர்பான விவாவதத்தின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை தாக்க இருந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது. இதனால் மக்களவைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

    இதனால் பிரதமர் மோடி விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

    • முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது.
    • தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

    மத்திய கல்வி பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக் கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும் 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது.

    சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.

    தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

    ×