என் மலர்tooltip icon

    இந்தியா

    • பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, ​​கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?.
    • பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-வது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது டி. ராஜா கூறியதாவது:-

    இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் மிகவும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 100 வருடங்களில், கட்சி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று பிளவு பட்டு உள்ளது. இது எவ்வளவு நாளைக்கு தொடர முடியும்?. இடதுசாரி இயக்கம் பிளவு பட்டு நிற்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நாம் போரிட்டு கொண்டிருந்தபோது, ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எவ்வளவு காலம் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இவ்வாறு இருக்கும்.

    ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் இடதுசாரி ஒற்றுமைக்கு வேண்டுகோள் விடுத்து, தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் ஒன்றிணைப்பிற்கு அழைப்பு விடுக்கும்போது, மற்றவர்களும் தீவிர சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

    பாசிச சக்திகள் அரசியல் அமைப்புகளைப் பிளவுபடுத்தும்போது, கம்யூனிஸ்டுகளால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்?. பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். நாம் சாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும்

    இவ்வாறு டி. ராஜா பேசினார்.

    • உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது.
    • ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது.

    திருப்பதியில் நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அறிவியலுக்கும் ஆன்மீகம் அல்லது தர்மத்திற்கு இடையில் முரண்டுபாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மோகன் பகவத் கூறியதாவது:-

    தர்மம் மதம் அல்ல. இது படைப்புகள் இயங்குவதற்கான விதியாகும். இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு வெளியே யாராலும் இயங்க முடியாது. தர்மத்தில் உள்ள சமநிலையின்மை அழிவுக்கு வழிவகுக்கும்.

    அறிவியல் ஆய்வில் தர்மத்திற்கு இடமில்லை என்ற அனுமானத்தின் காரணமாக, அறிவியல் வரலாற்று ரீதியாக தர்மத்திலிருந்து விலகியே இருந்தது. அத்தகைய நிலைப்பாடு அடிப்படையில் தவறானது.

    அறிவியலுக்கும் தர்மத்திற்கும் அல்லது ஆன்மீகத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அணுகுமுறைகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு ஒன்றேதான். அது உண்மையை அறிவது.

    உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது. ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது. நேரடி அனுபவத்தை வலியுறுத்துகிறது. மேலும், அனுபவிக்கப்படும் எதுவாக இருந்தாலும், அது அனைவராலும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

    • பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.
    • பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல.

    ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், தங்களுடைய கட்சி ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் சேவையாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

    நவீன் பட்நாயக்கின் தந்தையும், ஒடிசா முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கால் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சியின் 29-வது தொடக்க நாளான இன்று நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள், தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பிஜு ஜனதா தளம் கட்சி பிளவு படும் என்று சிலர் மற்றும் சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இதுபோன்ற வதந்திகள் பரவி வருகின்றன. பிஜு ஜனதா தளம் ஒன்று அல்லது இரண்டு தலைவர்களை பற்றியது அல்ல. இதை நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். ஒடிசாவின் விருப்பம் மற்றும் பெருமையில் வேரூன்றிய மக்கள் இயக்கம். பிஜு ஜனதா தளம் ஒடிசா மக்களுக்காக அடுத்த 100 ஆண்டுகள் குரல் கொடுக்கும்.

    தேர்தல் தோல்வி ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அரசியலில் அமைதி காப்பது மிகவும் முக்கியமானது. கட்சி தொண்டர்களின் கடின உழைப்பு, கமிட்மெண்ட் ஆகியவற்றில் நான் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன். வலுவான ஒடிசாவை எழுப்ப இன்றைய சவால்களை நாளையை வாய்ப்புமாக மாற்ற எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

    • பாக்ஸ்கான் 30 ஆயிரம் பெண்களை பணிக்கு அமர்த்தியதை ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
    • மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டியதாக ராகுல் காந்திக்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார்.

    கர்நாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கர்நாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கர்நாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் சித்தராமையா, "மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கர்நாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஐ-போன் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.

    • சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என ரேவந்த் ரெட்டி சபதம்.
    • கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சபதம் எடுங்கள் எடுங்கள் என கே.டி. ராம ராவ் பதில் கொடுத்துள்ளார்.

    தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தான் அரசியலில் இருக்கும் வரை கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் செய்தார்.

    இதற்கு சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராம ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-

    நீங்கள் (ரேவந்த் ரெட்டி) கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் எடுத்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமை இருந்தால், ஏழை பெண்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஒரு டோலா தங்க திட்டம் அமல்படுத்தப்படும் என சபதம் எடுங்கள். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறாக பேசுவது முதல்வருக்கு பொருத்தமற்றது.

    இவ்வாறு கே.டி. ராம ராவ் தெரிவித்தார்.

    2023 சட்டசபை தேர்தலின்போது, ஏழை பெண்களுக்கு ஒரு டோலா தங்கம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

    தற்போதை காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தோலை உரித்துவிடுவதாக சந்திரசேகர ராவ் மிட்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி கடுமையாக வகையில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் கே.டி. ராம ராவ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

    • மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
    • டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன

    டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.

    புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

    டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,

    "கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார். 


    • காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது.
    • அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த 13-ந்தேதி வெளியாகின. அதில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    மாநகராட்சிகளில் கொச்சி, திருச்சூர், கொல்லம், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மாநிலத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கூட்டணி கோழிக்கோட்டிலும், மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க.வும் கைப்பற்றியது.

    45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை இந்த முறை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இங்குள்ள 101 வார்டுகளில் 50-ல் பா.ஜ.க.வும், 29-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 19-ல் காங்கிரசும், 2 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.

    இந்தநிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், கொல்லம், திருச்சூர் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் 2 சுயேட்டைகள் இணைந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யலாம் என்ற நிலை நிலவியது. இந்த நிலையில் சுயேட்டை வேட்பாளர்களின் ஒருவர், பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவை வழங்கியதால் தனிப்பெரும்பான்மை பெற்று ராஜேஷ் மேயராக தேர்வானார்.

    கொச்சி மாநகராட்சியின் மேயராக வி.கே. மினி மோல், கண்ணூர் மேயராக இந்திரா, திருச்சூர் மேயராக டாக்டர் நிஜி ஜஸ்டின், கொல்லம் மேயராக ஹபீஸ் ஆகியோர் தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆவர். புதிய மேயர்களாக தேர்வானவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

    • பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
    • தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

    இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பெண் மேலாளர், போலீசில் புகார் செய்தார்.

    அதில் தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • மன்மோகன் சிங் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார்.
    • அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்திய கொள்கைகள் மற்றும் நாட்டின் உலகளாவிய நிலையை வலுப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மன்மோகன் சிங் என்று அவர் தெரிவித்தார்.

    மன்மோகன் சிங் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவர் தனது தொலைநோக்கு தலைமையின் மூலம், அவர் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்படுத்தினார். நாட்டின் நலிந்த மற்றும் ஏழை மக்களுக்காக அவர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகளும், துணிச்சலான முடிவுகளும் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தன.

    அவரது பணிவு, கடின உழைப்பு மற்றும் நேர்மை எப்போதும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வி நிறுவனங்களில் இத்தகைய மத ரீதியான கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர்.
    • பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், நல்பாரி காவல்துறையினர் உடனடி நடவடிக்கை.

    அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் புனித மேரி பள்ளிக்குள் புகுந்து கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சூறையாடிய விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நல்பாரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித மேரி பள்ளியில் மாணவர்களுக்காக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. டிசம்பர் 25-ஐ ஒட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் வண்ண விளக்குகளை விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரெனப் பள்ளிக்குள் புகுந்து அடித்து நொறுக்கியது.

    பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிய அந்த கும்பல், கல்வி நிறுவனங்களில் இத்தகைய மத ரீதியான கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், நல்பாரி காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சூறையாடல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 முக்கிய நபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பண்டிகைக் காலங்களில் இத்தகைய மோதல்கள் நடப்பதைத் தவிர்க்கக் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.

    • முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.
    • முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன.

    இந்தியாவின் வாகன எரிபொருள் விற்பனை நிலையங்களின் (Petrol Pumps) எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,00,266 எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகிலேயே அதிக பெட்ரோல் பங்குகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.

    2015-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 50,451 பெட்ரோல் பங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் கிராமப்புறங்களுக்கு எரிபொருள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிக அளவில் இருந்த எரிபொருள் நிலையங்கள், தற்போது கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த பங்குகளில் கிராமப்புறங்களின் பங்கு 22% ஆக இருந்தது. தற்போது அது 29% ஆக உயர்ந்துள்ளது.

    இந்திய எரிபொருள் சந்தையில் அரசு நிறுவனங்களே பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துகின்றன. 90% மேற்பட்ட பங்குகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

    தனியார் நிறுவனங்களான நாயாரா எனர்ஜி, ரிலையன்ஸ்-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள பங்குகளைக் கொண்டுள்ளன.

    தற்போதைய பெட்ரோல் பங்குகள் வெறும் பெட்ரோல், டீசல் விற்பனையுடன் நில்லாமல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளையும் கொண்ட 'எரிசக்தி மையங்களாக' மாறி வருகின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு நிலையங்களில் மாற்று எரிபொருள் வசதிகள் உள்ளன.

    • விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 6 பேர் காரில் திருப்பதி வந்தனர். திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு நேற்று இரவு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நல்லகட்லா-பட்டலூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கார் சென்று கொண்ருடிந்தது.

    அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி எதிர் திசையில் சாலையில் கார் அந்தரத்தில் பாய்ந்தது. ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பஸ் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நந்தியால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×