என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
- கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
- ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மோசடியானது. அரசு ஊழியர்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டம் கூட திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாது என்று தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடியான திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அதனால், ஏற்படும் பலன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் என்று பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. அதனால் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று அஞ்சிய அரசு ஊழியர்களில் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, திட்டத்திற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று வினா எழுப்பியது. அதற்கு 2 வாரங்களில் அரசாணை வெளியிடப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்படி நேற்றைய தேதியிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தான் இப்போது அரசாணையாக வெளியிடப்பட்டது. ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் எழுப்பிய எந்த வினாவுக்கும் அதில் விடை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; ஏமாற்று வேலை; யாருக்கு பயனளிக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் 01.01.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விதிகள் தனியாக வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 40 நாள்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இதற்கான விதிகள் வகுக்கப்பட வாய்ப்பில்லை.
எனவே, திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்பதை அரசாணையில் திமுக அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம் ஆகும். இதற்கான தண்டனையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு தருவார்கள்.
- ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
- ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும்.
தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்றும், இதனைத் திறம்பட மேற்கொள்ள மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய
ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்திட வேண்டுமென்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவின் மூலமாக, விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போவதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, இந்தக் கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவானது, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூகநீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதி செய்வதாகவும் உள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளதால், இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியுமென்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இல்லாவிடில், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும் எனவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே,
1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவும்.
2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை ( pilot study) உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
- இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடம், முடிவெடுக்கட்டும். பொது வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று ஒரு தரப்பு பேசி வருகிறது.
காங்கிரசுக்குள் இப்படி 2 பிரிவாக செயல்பட்டு வரும் நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஜனநாயகன் பொங்கல்' என்ற பெயரில் காங்கிரசில் ஒரு பிரிவினர் இன்று மாலை கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்த கோரிக்கையை விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வர வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது. இது காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனியாக இவ்வாறு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோயம்பேட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதில் கூட்டணி விவகாரங்கள் பற்றி பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக தொண்டர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பேசுவது கூட்டணிக்குத்தான் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.
இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஏற்கனவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது சென்ஷார் போர்டையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து உள்ளது. இதைத்தான் காங்கிரஸ் கண்டிக்கிறது.
கடலூர் மாநாட்டில் விஜயபிரபாகரன், விஜய்க்கு ஒரு ஆலோசனை சொல்வதாக சொல்லி காங்கிரஸ் பற்றி பேசியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் கொல்லை புறமாக செயல்படாது. இதைப்புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், ராம் மோகன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
- திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.
திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும்.
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
- அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சதவீத கணக்கைக் கூறி வருகிறார். ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை அவருக்கு நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 2016 தேர்தலிலேயே, பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்கள் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவளித்த அப்போது எதிர்க்கட்சியாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, 10% வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், அடுத்த தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க, தனது தங்கை தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தமிழக மக்களை எத்தனை ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது.
- அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்க இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
- எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோவை:
பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.
கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.
அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.
தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார்.
- நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.
- திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பொங்கலுக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழக அரசு ரூ.3 ஆயிரம் அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் இந்த பொங்கல் மக்கள் பொங்கலாக இல்லாமல் அரசியல் பொங்கலாக மாறி இருக்கிறது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதுதான் மக்கள் அரசியலாகும்.
சட்டமன்ற தேர்தலில் பணபலத்துடன் இருப்பவர்கள் ஒரு பக்கமும் மக்கள் பலம் உள்ளவர்கள் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தோடு தனித்து களம் காண இருக்கிறோம்.
இந்த தேர்தலில் நிச்சயம் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
ஜனநாயகன் படத்தை போன்று இதற்கு முன்னர் எனது படங்கள் உட்பட பல படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே அதனைப் பற்றி இப்போது பெரிதாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
அதைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன அதையெல்லாம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராட்டம், நர்சுகள் போராட்டம் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜனநாயகன் பட விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீது குற்றம் சாட்டி இருக்கிறார்.
பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ரூ. 6,800 கோடியை செலவிட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் 4½ ஆண்டுகளில் 4 லட்சம் கோடியையும் கடன் வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தல் திராவிடருக்கும் தமிழருக்கும் ஆன தேர்தலாக இருக்கும். திராவிடத்தை வீழ்த்தி பொங்கல் வைப்பதே எங்கள் முதல் வேலையாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதனை நிச்சயம் செய்து காட்டுவோம் என்றார்.






