என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் உயர் நீதிமன்றம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2020 பிப்ரவரி மாதம் தொண்டியில் போலி டாக்டர் ராஜலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அப்போதைய தொண்டி டி.எஸ்.பி. புகழேந்திகணேசுக்கு எதிராக நான் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.
இதனால் கோபம் அடைந்த டி.எஸ்.பி. என்னை பழிவாங்கும் நோக்கோடு. போலி டாக்டருக்கு உதவியதாக அந்த வழக்கில் என்னையும் சேர்த்தனர். இந்த வழக்கில் என்னை கடுமையாக தாக்கி சட்ட விரோத காவலில் வைத்தா்.
இதனால் காவல் நிலையத்தில் நான் வாக்குவாதம் செய்தேன். அப்போது காவல் நிலைய ஆய்வாளர்கள் மேலும் உன் மீது வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்கள். பிறகு என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்து, மனித உரிமை கமிஷனில் புகார் செய்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து, என்னை தாக்கி, போலீசார் தங்கும் அறைக்கு இழுத்து சென்று அடைத்து தாக்கியதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் ராஜலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் சாதியை சொல்லி திட்டியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்கும் பொய் வழக்கு. இதனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன். இரண்டையும் விசாரணை செய்து உயர் நீதிமன்றம் என் மீதான வழக்கை ரத்து செய்தது.
எனவே பொய்யான வழக்கு பதிந்து சட்டவிரோத காவலில் வைத்தும் வழக்கறிஞர் சமூகத்திலும் எனது சமூகத்திலும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா ராணி, திருவாடானை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், ஜோதி முருகன், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் என் மீது பொய் புகார் கொடுத்த முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது.
எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து தற்போதைய செங்கல்பட்டு உட்கொட்ட டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளார்.
- பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன்.
- நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் இன்று 3-வது நாளாக நடைபெற்ற நேர்காணலில் விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
விருப்பமனு அளித்தவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றனர். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி நேர்காணலில் பங்கேற்றார்.
பின்னர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல வருடங்களாக என் மனதில் நெருக்கமாக உள்ள ஊர் ராஜபாளையம். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு அளித்தேன். நல்ல முடிவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று நம்புகிறேன்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் நானும் செய்வேன், என்னுடன் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் செய்வார்கள் என்ற உறுதி எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
பல வருடங்களாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். அத்தொகுதியில் உள்ள பெண்களோடும், இளைஞர்களோடும், விவசாயிகளோடும் இத்தனை வருடங்களாக இருந்து கொண்டு வருகிறேன்.
தமிழ்நாடு முழுவதுமே என் ஊர் தான். 7 வருடங்களுக்கு முன்பாக ராஜபாளையம் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால் அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன்.
கேள்வி:- ராஜபாளையம் தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும்.
கேள்வி:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- அறிவுரை என்பதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கான பாதை என்பது அவரவர்களுக்கு என அமையும். அவரவர் ஆலோசனைப்படி அவரவர் பாதை அமையும். சினிமாவோ, அரசியலோ இரண்டுமே பொதுவாழ்வில் கடினமான பாதை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல முயற்சி மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் வாக்குகளை விஜய்யால் அறுவடை செய்ய முடியாது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது பயணம் தற்போது தான் தொடங்கி உள்ளது. மேலும் ராஜபாளையத்தில் போட்டியிட்டால் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்.
2026 சட்டமன்ற தேர்தலில் புதியவர்களும் வர வேண்டும். அதைவிட மக்களுக்கு யார் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்களோ, மக்களுக்காக உழைக்கிறார்களோ, அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
- மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.
நாகர்கோவில்:
தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.
அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.
வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.
கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.
- தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
* வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம்...
* வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
* மொழிப்பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது.
* 4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது.
* நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
* நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.
* தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு.
* எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார்.
- இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
- இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்
ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.
பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.
தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
- வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.
- மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
* நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.
* திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
* வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள்.
* வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை.
* நம்மை யாராலும் எதனாலும் பிரிக்கமுடியாது. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம், இன்னும் பல ஆண்டுகள் தொடரும் சொந்தம்.
* வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழுமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
* வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
* மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க.
* தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
- நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார்.
- கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
மதுரை:
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
அப்போது வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விஜய் அரசியலில் சாதித்து விடலாம் என மணல் கோட்டை கட்டுகிறார். ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எத்தனை தொகுதியில் போட்டி என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தனது 82 வயதில் நடைபயணத்தை அறிவித்தார். இதற்கு டாக்டர்கள் மறுத்தபோதிலும் அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் போது அவர் சிரமப்பட்டார். ஆனாலும் அவரின் சுயநலத்திற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. வைகோவின் தியாகத்தை கொச்சைபடுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல என்றார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். மாட்டுத் தாவணியில் அவருக்கு கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண் டார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார். அதனை தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
- ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான்.
- ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி வருகிறது. அப்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி ரூ.100 அல்லது ரூ.200 கட்டணக் குறைப்பு செய்ய வைப்பது, அதையும் மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.
ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பது தான். திமுக அரசு மக்களின் பக்கம் நிற்கிறது என்றால், சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பக்கம் நின்று அவை மக்களை சுரண்டுவதற்கு துணை போவதையே திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாக வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
- பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.
மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.
ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!
தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?
இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான், அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.
அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?
"அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
- நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
- சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது.
அதன் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் பேருந்தில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000
7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-1-2026- ஒரு கிராம் ரூ.275
10-1-2026- ஒரு கிராம் ரூ.275
9-1-2026- ஒரு கிராம் ரூ.268
8-1-2026- ஒரு கிராம் ரூ.272
7-1-2026- ஒரு கிராம் ரூ.277






